Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பரமான்மபதி (Universal Soul) 6.பிறவிகளின் உண்மை.

பரமான்மபதி
(எங்கும் நிறை இறை)
தயாஜோதியில் கண்ட விளக்கம்.
Universal Soul
சுவாமி சரவணானந்தா.
6. பிறவிகளின் உண்மை
உயிர், உடம்பு இரண்டும் கூடி, உள்வளர்ச்சி பெற்று, உலகில் வெளிப்பட்டு விளங்குதலே, பிறப்பாகக் கூறப்படுகின்றது. ஓர் ஆன்மாவில், திருவருளால், உயிர் விளக்கம் உண்டாகின்ற போதுதான், அவ்விளக்கம் விளங்குவதற்காகவே தக்க தேகம் ஒன்று வளர்த்துக் கொள்ளப்படுகின்றதாம். உடல் வளர்ந்தோங்க உயிர் ஆதாரமாயிருக்கின்றது. உயிர் விளங்க உடல் ஆதாரமாயிருக்கிறது. ஆகையால், இரண்டும் இணைந்தே ஒன்றுக்கொன்று துணை நின்று பயன் கொள்ளச் செய்கின்றதாம். அந்தப் பயன் யாதெனில், அறிவின் விளைவேயாகும்.
இவ்வறிவு, முதலில், கீழான பிறப்பு வடிவங்களில் புலன் உணர்வு மாத்திரமாய், அதன் அதன் சுபாவத்தன்மையாக விளைவு கொண்டிருக்கும். பின்பு, மனிதப் பிறப்பு உருவில் மனோ பகுத்தறிவாகத் தோன்றி வளர்ச்சியுறும். மனிதனில் இப்பகுத்தறிவு வளர்ச்சிதான், இதுவரை நடைபெற்று வந்தது.. இந்நிலையினின்றே கடவுள் உண்மையை, அவரது அருள் உண்மையை, கண்டுகொள்ள முடிகின்றது இத்தருணம்.
அந்த உண்மையைப் பூரணமாக அறிந்து கொள்ளப்படாத காலத்திலேயே, அது பலவாகிய மனோ கற்பனைகளால் அனுமானிக்கப்பட்டு, பலப்பலவாக வர்ணிக்கப்பட்டு விட்டனவாம். அவைகளில் எல்லாம், உண்மையே கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஓரளவு உண்மை இருக்கின்றது. அதுவும் கற்பனைச் சூழலால் நன்கு மறைப்புண்டு கிடக்கின்றதாம். அப்படியே அனுமானப் பிரமாணத்தால், ஆண்டவர் உண்மை ஏகதேசம் அறிந்து கொள்ளப்பட்ட போதிலும், மெய்யன்பு காரியப்படாதிருந்ததால், அருள் உண்மை அனுபவப்படவில்லையாம். இவ்வருள் விளைவின் பொருட்டே, அறிவு கொண்ட மனிதன் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பிறந்து பிறந்து வாழ்ந்து கொண்டேயுள்ளான்.
இதிலிருந்து ஒரு முடிவுக்கு வரலாம்: கடவுள் அருள் உண்மையைத் தன்னுள் இயற்கையில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஓர் ஆன்மா, தன் ஞானம் (Self Knowledge) உற்று, அக்கடவுள் மய அருட்பெரும் வாழ்வு எய்தவே எல்லாப் பிறவிகளிலும் சென்று சென்று வாழ்ந்து வாழ்ந்து வருகின்றதாகத் தெரிந்து கொள்ளுகின்றோம்.
தொல்லைப் பிறப்பு ஏன்?
கடவுள் அருட்பெரும் பதி ஆகவும், சர்வ ஜீவதயாபரராகவும், கருணை வள்ளலாகவும் கூறப்படுகின்றாரே, அப்படிப் பட்டவர், மக்களின் இனத்தை ஏனோ, வறுமை, நோய், பயம், கவலை, துன்பம், அழிவு முதலியவற்றால் கஷ்டப்படுத்துகின்றார் என்று கேட்கின்றார்கள் அறிவுடைய பலரும் கூட. உண்மையை உள்ளவாறு அறிந்து கொண்டால் அப்படிக் கேட்க மாட்டார்கள் அவர்கள். உலகில் பலவாகக் கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாக்கள் இன்று ஏன் அப்படிப் படுகின்றார்கள்? ஏன் கடவுள் அருள் அவர்களுக்கு உதவுகின்றதில்லை போல் தோன்றுகின்றது? இவற்றைப் பற்றி சற்று ஆழ்ந்து விசாரிப்போம்.
ஒவ்வொரு ஆன்மாவிலும், அருட்பெரும்பதியே அகமிருந்து ஆள்கின்றார். அவ்வக ஆட்சிக்குத் தகவே புறத்தும் சூழ்கின்றார் - எல்லா வடிவாயும், சக்தியாயும், செயல்களாயும். ஆகவே, ஓர் ஆன்மாவின் அகத்தே அருள் நிறைவோடு என்றும் நிலைத்து விளங்கிக் கொண்டும், அவ்வருள் உண்மை அனுபவம் வெளிப்பட, புறநிலையில் சதா மாற்றங்களை உண்டு பண்ணிக் கொண்டும் இருக்கின்றார் நமது ஆண்டவர்.
ஒரு சொல்லாம் ‘ஓம்’ என்னும் ஆன்மாவுக்கு அகத்தில் அருட்பரம் பொருளாயும், புறத்தில் மாயாபிரபஞ்சப் பொருளாயும் உள்ளார் நம் பதி. இதுவே ஓம் என்னுஞ் சொல்லின் அகப்பொருள், புறப்பொருள் என்றும், அருட்பெரும்பதியின் இரு திருவடிகள் என்றும் கூறப்படுவதாம். ஆன்ம வடிவினின்றுதான், புறப்புலன் வாழ்வால், தொல்லையுலகில் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றதும், அக அருள்நிலையில், ஆனந்தானுபவம் பெறுகின்றது மாயுள்ளதாம்.
அருள் அல்லது தயவு விளங்காத புலபோக இச்சை அதிகரிப்பால்தான் புற உலக வாழ்வில் எல்லாத் துன்பங்களும் குறைகளும் நேருகின்றன. அருள் நாட்டமுண்டாகி உண்மை ஒழுக்கத்தில் ஓங்கும் போது திருவருளாணையால் இன்பமான வாழ்வே சூழும். இப்பொழுதுள்ள தீமையொன்றும் சூழாது. ஆகையால், இன்று உலகில் கடவுள் கருணை விளங்கக் காணோம் என்றால், மனிதர்கள் கருணையொழுக்கம் பூண்டு நடக்கவில்லை என்பதே காரணமாம். கருணை ஒழுக்கம் ஓங்க ஓங்க உலகில் கள்ளமற்ற உள்ளமுடையவர்கள் நிறைந்திட உண்மைச் சமதர்ம வாழ்வே எங்கும் விளங்குவதாம்.
மேலும் ஓர் ஆன்மா இயற்கையில் ஆணவம் என்னும் மூல மல மறைப்போடு இருக்கின்றதாம். அருள் அனுபவமுறும்போது அவ்வாணவமே பிரணவமாக விளங்கக் காண்போம்.
“ஆ” என்ற ஆன்மாவைச் சூழ்ந்திருக்கும் நவநிலைப் பேதமே அகப் புறத்தில் ஆணவமாயும், பக்குவத்தில் பிரணவமாயும் இருக்கின்றதாம். உண்மையில் அருட்பெரும்பதியே அகம் புறம் முற்றும், நிரம்பி, பூரணமாகச் சூழ்ந்திருக்கின்றார். இந்த அகத்திற்கும் புறத்திற்கும் இடைவெளி என்பது ஒன்றுமில்லை. அப்படி இருப்பது போல் தோன்றுவது அருட்பக்குவம் அடையாததே. மாயாதிரை மறைப்பாக இருக்கின்றதாம். இம்மறைப்பால்தான் புறத்து உழல்கின்ற மனிதன் துன்பமே மிகுதியாகக் கண்டு வருந்துகின்றான்.
இத் துன்பங்களுக்கெல்லாம் தயாவொழுக்கமின்மையே காரணம் என்றறியாத மக்கள், விதி என்றும், கன்ம வினை என்றும், பாவ கிரக தோஷங்கள் என்றும் கூறிக்கொண்டு, அவற்றைச் சரிக்கட்டப் பலவகையான தந்திர, மந்திர பரிகார வழிகளில் மிக பிரயாசைப்பட்டு முயன்று பார்க்கின்றார்கள்.
சிலர் வேதாந்திகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்கள், தாம் சுத்த ஆன்ம சொரூபி என்றும், தேகாதி பிரபஞ்சம் எல்லாம் தமக்கு அன்னியமான மாயையே என்றும், அந்த மாயையின் செயலாகத் தோன்றுகின்ற சுக துக்கானுபவங்கள் தமக்கு இல்லை என்றும் கூறிக் கொள்ளுகின்றார்கள். இதனால், மக்களினத்தில் துன்ப நிலை கண்டு சிறிதும் இரக்கப்படாது கடின சித்தர்களாய் இருந்து அருள் அடையாது அழிந்து போகின்றார்கள். ஆன்மாவுக்குப் பேரின்ப வாழ்வு நல்க, அகம் புறமுஞ் சூழ்ந்துள்ள அருட்பெரும் பதியின் உள்ளம் அறியாது, அருள் வாழ்வு பெறாது போவது அறியாமையேயாம்.
ஓர் ஆன்மாவுக்கு, அருளனுபவம் உண்டாக வழியாயிருப்பது உயிர் உடம்பேயாகும். தயவோடு உயிருடம்பைக் காத்து ஜீவ உணர்வும், அறிவு விளக்கமும் குன்றாதிருக்கச் செய்வது ஜீவ காருண்யச் செயலாகும். இதனால், கடவுட் கருணையே வெளிப்பட்டு துன்பமில்லா இன்பச் சூழலையே அமைத்துக் கொடுக்கும். அப்படிச் செய்யாது, பற்றின்மையாலும், சகிப்புத் தன்மையாலும், வேறு தந்திரங்களாலும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் உபாய மார்க்கம், தன்னைத் தான் ஏமாற்றிக் கொள்ளுவதும், தலைவன் ஆணையை, அறியாது புறக்கணித்தலுமாம்.
ஜீவகாருண்ய முறையால், தான் ஆன்ம நிலையில் இருந்து கொண்டே தன் விளக்கம் குன்றாமலும், பிறர்க்கு உயிர் விளக்கமும், அறிவு விளக்கமும் செய்து கொண்டேயிருத்தலும் முறையாகும். அப்படித்தான், கடவுளும் சுத்த தயவால் ஆன்மாக்களுக்கு ஜீவ தேகாதி பிரபஞ்சத்தை எல்லாம் கொடுத்து இடையறாது விளங்கஞ் செய்து கொண்டேயுள்ளார். சுத்த நிலையில் அவரே ஆக விளங்கும் நாமும் இயன்ற மட்டில் தயவு செய்து கொண்டிருத்தல் இயற்கையாம். நமக்கு தயவு நிறை கிடைத்து அவரோடு அத்துவைத நிலை சித்திக்கும் போது சுத்த தயா இன்ப வடிவோடே திகழுவோம்.
மனிதப் பிறப்பில் மூன்று நிலைகள்
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களுக்கு, மூன்று நிலையான வாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.. அம்மூன்றும் சேர்ந்தே முழுமையாகும். ஒன்று குறைந்தாலும் பயனில்லையாம். அருள் நிறைவின்கண் அம்மூன்றுமே முத்தேக சித்தி நிலையாகத் திகழ்வதாம். அம் முந்நிலைகள் யாவையெனில், ஆன்மா, சூக்கும தேகம், தூல வடிவம் ஆம். இவையே முடிவில், ஞான, பிரணவ, சுத்த உருவாகி விளங்கும்.
மனிதப் பிறப்பு வாழ்வில்தான், அருள் வளர் ஆன்மானுபவம் அடையப்பெறுவது. அது, முந்நிலை கொண்டு, தயா வொழுக்கத்தோடு வாழ்வதால் ஏற்படும். இத்தூல தேக வாழ்வில் நிகழுகின்ற தவற்றால், அபக்குவ வசத்தால் அத்தேகஹானி நேரிடுவதை அறிவோம். இது கடவுள் தயவுச் செயலே. அக்கடவுட் சித்தம் நாம் அருட்பெரு நிலைக்கு ஏற வேண்டு மென்பதுதான். அப்படி ஏறந்தவறுந்தோறும், தவறுந்தோறும் நம் பதி திருவுள்ளம் இரங்கி மேலும் மேலும் தக்க தேகபோகச் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கின்றார். அவைகளின் துணை கொண்டு நாமும் மேனிலைக் கேறுகின்றோம்.
பிறப்பும் இறப்பும் எதற்கு?
இக்கேள்விக்குள் இருவிதமான கருத்துக்கள் அமைந்துள்ளன: ஒன்று, பிறப்பும் மற்றொன்று இறப்பும் எந்தக் காரணத்திற்காக ஏற்பட்டுள்ளன என்பது. இரண்டாவதாக பிறப்பும் இறப்பும் ஆன்மாவுக்கா, தேகத்திற்கா மற்ற எதற்கோ என்பதாம். முன் கருத்துப்படி பார்ப்போம்.
பிறப்பும் இறப்பும் இவ்வுலகத்தில் பண்டே தொட்டு நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. தோன்றின ஒவ்வொன்றும் மாற்றமடைவதும், கெட்டு அழிந்து போவதும், பின்னர் புதிய ஒன்று தோன்றுவதுமாகவே இருக்கின்றதாம். ஆகையால் இச்செயல் அருள் நியதியால், கடவுட் செயலாக என்றும் தடையுறாது நடந்து கொண்டே யிருப்பதாய் அறிகின்றோம். நம் பரமபதியும் அவருடைய அருட்செயலும் நித்தியம் என்பது, மேலோர் கருத்து. அவர் இவ்வருட் பெருஞ்செயல் புரிந்து கொண்டுள்ளது, அவ்வருட்பேருண்மை வெளிப்பட்டு விளங்கற்கேயாகும். ஆண்டவர் ஆடும் அருள் நடனமாகவும் இதனை அணிந்து கூறுவர். இந்த ஆனந்த நடன இரகசியம் வெளிப்படத்தான், ஆன்மாவின் மீது ஜீவ தேகங்களின் வரவு போக்கு தொடர்ந்து நடந்து கொண்டேயுள்ளதெனத் தெளிவுறுவோம்.
ஆன்மாவுக்கு இப்படித் தடைபடாத தேகத் தோற்றமும் மறைவும் நேர்ந்துதான் முடிவில் ஆனந்த அருட்ஜோதி வடிவம் சித்திப்பதாக அறிகின்றோம். ஆகவே பிறப்பு இறப்பு எதற்கு என்ற வினாவிற்கு, முடிவில் நித்தியானந்தக் கடவுள் நிலை பெறுவதற்கே என்று விடை கூறலாம்.
இனி, இரண்டாம் கருத்தை நோக்குவோம். தேகம்தான் கருவில் உருவாகிப் பிறக்கின்றது. இறப்புற்று மண்ணில் மறைகின்றது. ஆகையால் தேகத்திற்கே பிறப்பு இறப்பு என்று கூறுவர். இது சரியே. ஆனால், இத்தேகமே உண்மை மனித நிலை அல்ல என்பது பாமர மக்கள் அறிகின்றதில்லை. ஆகையால், ஒருவனுடைய தேகத்தோற்றமும் மறைவுமே, அவனுடைய பிறப்பும் இறப்புமாகக் கொள்ளப்பட்டு விடுகின்றன. இது தவறே, இதனால் பலவிதமான கருத்துக் குழப்பங்கள் நேர்ந்து, வீண் வாத, விவாதங்களுக்கு இடமேற்பட்டுள்ளனவாம். ஆகையால் இவ்விஷயத்தை நன்கு தெளிவு படுத்திக் கொள்வது சாலச் சிறந்ததாம்.
இனி விஷயத்திற்கு வருவோம். ஆன்மா - கடவுள் வண்ணமான ஒன்று. அது நித்தியமானது.. அதற்கு பிறப்பாகிய படைக்கப்படலும், இறப்பாகிய அழிக்கப்படலும் கிடையாது என்பது உண்மையாம். அப்படிப்பட்ட நித்திய ஆன்மாவில் மறைந்து கிடக்கின்ற அருட்பெருங் கடவுள் விளக்கம் வெளிப்பட வேண்டியே அவ்வான்மாவில் கடவுட் கருணைச் செயல் நிகழ்ந்து கொண்டுள்ளதாம். இச்செயல் நிகழ்ச்சியே, அவ்வான்மாவின் மீது தேகம் ஒவ்வொன்றாக தோன்றுவதும், மறைவதுமாக உள்ளதாம். இவைகளை பிறப்பு இறப்பாக மொழியப்படுகின்றன.
எனவே, ஆன்மாவே மனிதனின் உண்மை வடிவம் என்றும், அது ஒரு உடலை ஏற்றுப் பிறப்பதாயும், அதனைவிட்டு இறப்பதாயும் கொள்ள வேண்டும். ஈதறியாது, பிறவா இறவா ஆன்மாவுக்கு பிறப்பும் இறப்பும் எப்படியுண்டாம் என்று கூறுதல் அறியாமையே. மேலும், தேகத்தையே ஒருவனின் மெய்யுருவாய்க் கருதிக் கொண்டு, இறந்து போனவன் மறுபடியும் எப்படி இன்னுமொரு பிறப்பு எடுப்பான் என்று கூறுதலும் அறியாமையேயாம்.
இன்னும் ஒன்று, ஆன்மாவும், உயிர் என விளங்கும் ஜீவ சுவாசக் காற்றும் ஒன்றல்ல. ஆன்மாவிலிருந்து ஜீவ சக்தி காரியப்பட்டுப் புறக்காற்றை, உச்சுவாச, நிச்சுவாசமாகக் கொண்டுள்ளதாம். அந்த ஜீவ சக்தி உள் ஒடுங்கினால், உயிர்ப்பும் நீங்கி விடும். பிராணன் போய்விட்டதாகக் கூறப்படும். அநேகமாக இவ்வுயிர் நீங்கி விட்டால், மறுபடியும் உண்டாவதில்லை. இக்கருத்தை விளக்கவே, முட்டையிலிருந்து வெளிப்பட்ட பறவைக்குஞ்சு உட்புகுவதில்லை, கறந்த பால் முலை புகுவதில்லை, கடைந்த வெண்ணெய் மோர் புகுவதில்லை, வீழ்ந்த காய் மரத்தில் இணைவதில்லை என்றெல்லாம் உதாரணங் காட்டப்படும். இவ்வுதாரணங்கள் உண்மையாகலாம்; ஆனால் நம் ஆன்மா சம்பந்தப்பட்ட உயிருக்குச் சில விசேஷ சக்தியும் உண்டென்று அறிய வேண்டும்.
ஓர் ஒரு சந்தர்ப்பத்தில் ஆன்மாவில் ஒடுங்கின உயிர் முற்றும் ஒழிந்தே போய்விடாமல், ஏதோ ஒரு காரணத்தால், மறுபடியும் மலர்ச்சியுறுவதும் உண்டு. அப்போது மறுபடியும் உயிர்ப்பு இயக்கம் உண்டாகி விடுகின்றது. இறந்தவர் பிழைத்து விட்டதாகத் தோன்றுகின்றது. இவ்வண்ணம் இறந்தார் உயிர் பெற்று எழுதல் விசேஷ சித்து காரணமாகவும் நிகழலாம். இப்படி இறந்தவர் உயிர்த்தெழுந்து விட்டால் மட்டும் போதாது. நிலையான நல்லின்ப வாழ்வு வந்துவிடுவதில்லையாம். அப்படி உயிர்த்தெழுந்தவர்களும் மறுபடியும் இறந்தே போவது நிச்சயம்.
ஐம்பூதங்களால் உருவான தேகம், சிதைந்து கரைந்து அப்பூதங்களாகவே அருகிப்போவதும் இயற்கையே. இந்த நிலையற்ற உடல் வாழ்வையும், இதில் நிகழ்கின்ற, தயா உண்மை விளங்காத சம்பவங்களையும் ஆதாரமாய்க் கொண்டு பெரிய பெரிய வரலாறுகளையும், சரிதங்களையும், கதைகளையும் வரைந்து வரைந்து குவிக்கின்றதால் பெரு நன்மை உண்டாகுமோ? உண்மை அறிந்த நம்மனோர் இவற்றிற்கு மதிப்பு கொடுத்ததில்லை.
ஆன்மாவே மனிதனின் உண்மை வடிவமாயுள்ளது. அது இத்தேகத்தில் வாழ்கின்ற காலையில், புலனின்பத்தில் மயங்கிக் களித்திருந்த நிலையை மதிக்காது விட்டுத் தன் ஞானம் பெற்றுத் தயை விளங்க வாழ்ந்த வரலாற்றை மட்டும் பரோபகார நிமித்தம் வெளியிடல் நன்றாம். ஒருவருடைய தோற்றமும் மறைவும், அந்த ஆன்மாவின் விளக்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லையாகக் கொண்டு, அதில் நிகழ்ந்த தயவுக் காரியத்தைப் போற்றிக் கொண்டு, அத்தயவை நம்மில் வளர்த்து பூரணப் படுத்தல்தான் நமது கடமையும் திருவருள் ஆணையுமாம். மற்றபடி உண்மையைப் பற்றாது, புறவடிவை மட்டும் மனத்தில் இருத்திக் கொண்டு, புலன் வழி பற்றி ஒழுகினால் பெருநலம் விளையாது. அழிந்து கெடவே நேரும்.
உண்மைப் பிறப்பு
மனிதனின் உண்மை, கடவுள் மய ஆன்மாவாயிருக்கின்றதாக அறிந்து கொண்டுள்ளோம். இந்த ஆன்மா அனாதி காலமாகவே பலபல தேகங்களில் தங்கித் தங்கி வாழ்ந்து வாழ்ந்து இறந்து பிறந்து கொண்டே வந்திருக்கின்றதாகவும் அறிகின்றோம். இப்பொழுது ஆன்மாவே நமது இயற்கை வடிவம் என்று அறிந்து கொண்டுள்ளதால், புறதேக நிலையைப் பற்றாது உள்ளிருந்து ஆன்ம இயற்கை வாழ்வு கொண்டு விளங்குவதே உண்மை வாழ்வாகவும் அறிகின்றோம்.
முன்பு, ஆன்ம ஞானம் வெளிப்பட்டும், அந்நிலையைப் பற்றிக் கொண்டு தேகாதி பிரபஞ்சத்தை வெறுத்து ஒழித்த காரணத்தால், தேகமும் அத்தோடு வாழ்வும் முடிந்து விட்டதாம். ஆனால் இப்பொழுதோ, ஆன்மாவிலிருந்து பரமான்ம பதியின் பேரருட் பெருஞ்ஜோதி வெளியுறுகின்றதால், அந்த ஆன்ம அகநிலையினின்றே அனக முற விரிந்து நிறைந்து அவ்வொளியாலே தேகமும் அதுவாகி விளங்கக் கொண்டு என்றும் வாழ வல்லவனாகின்றான். இந்த அனக வாழ்வு விளங்கும் ஆன்மப் பிறப்பே உண்மைப் பிறப்பாக அறிந்து கொள்ள வேண்டியுள்ளதாம்.
ஆன்மாவுக்கு இவ்வுண்மைப் பிறப்பு இவ்வளவு காலம் உண்டாகவே இல்லை. பழைய வேத காலத்தில், ஆன்ம பாவனைதான் இருந்தது. ‘தான்’ ஆன்மாவென்று அறிந்து கொள்வதே துவிஜன்மாவாக, மறுபிறப்பாக, ஞானப் பிறவியாக எல்லாம் புனைந்து கூறிக்கொண்டிருந்தான் அந்த வேதாந்தி. எனவே இதுநாள் வரை உண்மை ஆன்மப் பிறவி உலகில் தோன்றி விளங்கினதில்லை என்றே அறிய நேருகின்றது. அதனால், அவ்வான்மா, கரு நிலையிலே இருந்ததாகவோ, இறந்த நிலையில் கிடந்ததாகவோ தான் கொள்ளப்படும். இத்தருணமே, ஆன்மா உண்மைப் பிறவி எடுக்கின்றதாகும். அருட்பிறவி ஏற்கின்றதாகும். நித்திய ஜீவன் பெற்று எழுப்பப்படுகின்றதாகும். இது இனி எக்காலமும் இறந்து படாது, அழிவற்று விளங்க வல்லதாகும்.
இவ்வுண்மை தான் நம் திருவருட்பிரகாச வள்ளலார், இறந்தார் எழுதல், செத்தவர்கள் எழுதல் என்றெல்லாம் திருவருட்பாவில் ஓதியுள்ளார். சாதாரணமாய் இறந்த ஒருவனுக்கு, உயிர் வழங்கி பிழைப்பித்தல், அருளளாளனுக்கு ஒரு பெரிய காரியமல்ல; அற்பச் செயலேயாகும். அதனை உலகம் வியந்து கொள்ளக்கூடும்; அவ்வளவுதான். திருவருளாலே, ஓர் ஆன்மாவை எழுப்பிவிட்டால், அது அவ்வருட்பிறப்பால் நித்தியானந்த வாழ்வில் ஓங்கும்.
என்னே உலகில் இறந்தார் எழுதல்மிக
அன்னே அதிசயமென்(று) ஆடுகின்றார்-இன்னே
திருஅம் பலவன் திருநோக்கம் பெற்றார்க்(கு)
உருஅம் பலத்தேயென்(று) உன்.
என்று வெண்பாவில் குறிக்கப்பட்டுள்ளது. அருளான்மப் பிறப்பு உண்மையேயாகும். திரு அம்பலவன் திருநோக்கம் பெற்றவர்க்கு ஏற்படுகின்ற இயல் வடிவம், அவ்வம்பலத்தே விளங்குவதாம். அதாவது, ஆன்மாவாகிய கடவுள் நிலையம், ஆலயம், அம்பலம் ஆதலின் அந்நிலை வாழ்வு திருவருளால் இன்னே, இப்பொழுதே கிடைத்து விடுகின்றதாம்.
ஓர் கரு, தாயின் சராயுவில் பூர்ண வளர்ச்சி பெற்றுள்ள நிலை பத்து திங்கள் எனப் பகர்வர். அதுபோல, இந்த ஆன்மாவும், அருட் பிறப்பெடுத்து இவ்வுலகில் வரத்தயாராய் இருக்கின்ற காரணத்தால் தசமதி நிறைவாகித் திகழ்கின்றதாகக் கொள்ளப்படும். இத் தசமதி என்பது நம் ஆன்ம உண்மை வடிவேயாம். இதனால் நம் தமிழ் எண்ணில், பத்து என்பது ‘ய’கரமாகக் குறிக்கப்படுவது. மேலும், இது, அகர வண்ண பதிவடிவாகிய எட்டும், உகர வண்ண அருளாகிய நாமும் கலந்து யகர வண்ணக் கடவுளான்மாவாய் உள்ளதாம். அன்றியும், இவ்வான்மாவில் கடவுள் ஒன்றுபட்டு நிற்கும் உண்மையை உணர்த்தவே யகர எழுத்தைப் பதினொன்றாவது மெய்ந்நிலை வரிசையில் வழங்கியுள்ளனர்.
ஆகவே யகரத்தால் குறிக்கப்பட்ட நம் ஆன்ம வடிவம், பரமான்ம பதியோடு ஒன்றியுள்ளது என்பதும் தெளிந்து கொள்ளப்படுகின்றதாம். இந்த யகர ஆன்மக் கருவுருவில் இத்தனை காலமும் பக்குவப்பட்டு பூர்ண வளர்ச்சி பெற்றுள்ளோம் என்பது சத்தியம்.
“சிற்சபையும் பொற்சபையும் சொந்தமென தாச்சு
தேவர்களும் மூவர்களும் பேசுவதென் பேச்சு
இச்சமய வாழ்விலெனக்கு என்னையினி ஏச்சு
என் பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சி”
என இசைக்கின்றார், நம் திருஅருட்பிரகாச வள்ளலார். அருளான்மப் பிறவியால் அந்நிலை நின்று, சிற்சபையாகிய ஞான தேகத்தையும், பொற்சபையாகிய சுத்த தேகத்தையும் தம் முழு உரிமையாகக் கொண்டு சித்தாட இசைந்துள்ளார்.
அவதாரங்களின் உண்மை
பொதுவாக, அவதாரம் என்ற சொல், பிறத்தல் என்று பொருள்படுவதாம். தெய்வ விளக்கம் விசேஷமாய்க் கொண்டு, இவ்வுலகில் பிறந்து, லட்சிய புருஷர்களாய் வாழ்ந்திருந்தவர்களையே அவதார புருஷர்களாகக் கொண்டனர் ஆன்றோர். அவர்களுடைய வரலாறுகளையும், அவர்கள் வகுத்துத் தந்துள்ள வழிமுறைக் கொள்கை கோட்பாடுகளையும், அவர்கள் தாமே வாழ்ந்து காட்டிய வாழ்க்கை நிலைகளையும் புறநிலை நின்றே ஆய்ந்து கொண்டனர், அவர்களைப் பின்பற்றினோர்கள் எல்லோரும், அப்படிச் செய்ததால் ஏதோ ஒரு சில நன்மைகளும் பெற்றார்கள். எனினும், அவர் அவர்களின் ஆன்ம அக உண்மையைத் தெளிந்து கொள்ளாததினால், உலகியற் சிறுபயன்களே பெறப்பட்டனவாம்.
நாம், இப்பொழுது சுத்த சன்மார்க்க நிலையிலிருந்து, எல்லா அவதார புருஷர்களையும் முழுமையாக நோக்குவோம். ஒன்றான நம் பரமான்மபதிதானே, அவ்வெல்லா ஆன்மாக்களாயும் இருப்பதாகக் காண்கின்றோம். அப்பரமபதியின் திருவருள் ஏகதேசமே அவ்வொவ்வொரு ஆன்மாவிலும் வெளிப்பட்டிருந்து சிலபல வியத்தகு செயல்களையும், விளக்கங்களையும் அருளிவிட்டு மறைந்து போனதாகவும் அறிகின்றோம். அப்படியெல்லாம் தோன்றித் தோன்றி மறைந்த மகாத்மாக்களின் உள் நின்று, அவர் அவர்களாய் விளங்கியும் அற்புத காரியங்களை நிகழ்த்தியும், பின்னர் உள் ஒடுங்கி என்றும்போல் பூர்ணமாகவே விளங்குகின்றவர் நமது பரமான்மபதி ஒருவரே என்பது சத்தியம்.
அவருடைய பேரருளால் நாம் என்ற ஆன்ம தற்போதம் ஒழிந்து, அத்துவிதமாகத் திகழ்கின்றோம். இதுமுதலாக, அவரே இப்பொழுது நமக்கு வேண்டுவனவெல்லாம் நேரடியாக வழங்கி வாழ்விக்கின்றார். எல்லா அவதார இரகசியங்களையும், பயன்களையும் வேண்டும் அளவுக்கு அப்போதைக்கப்போது தந்து கொண்டேயிருக்கின்றார். பக்குவமுறுகின்ற காலையில் பேருண்மையை எல்லாம் வழங்கி பெரும்பயன் கொள்ளச் செய்வார். இது அவரது ஆணை.
இனி எந்தவித அவதார புருஷர்களைப்பற்றியும் புறநோக்காக ஆய்ந்து கொண்டிருப்பதை விட்டுவிட வேண்டாம். அப்படி விட்டுவிட்டுப் பரமபதியையொன்றிக் கொண்டிருந்தால்தான், பிற எவராலும், எதனாலும் வழங்கப்படற்கரிய பேரின்ப சித்திப் பெருவாழ்வை எய்தலாம்.
பிறவித்தொடர்
ஓர் ஆன்மாவுக்குப் பேரின்ப சித்திப் பெருவாழ்வு எய்துவதே குறிக்கோளாகத் திருவருளாலே ஆணை செய்யப்பட்டுள்ளது. அந்நிலையை நோக்கியே ஒவ்வொரு ஆன்மாவும் செலுத்தப்பட்டுக் கொண்டேயுள்ளது. அது ஒரு நெடும் பயணமாக இருக்கின்றதாம். இப்பயணத்தில் சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டேதான் இருக்கின்றது ஒவ்வொரு ஆன்மாவும். ஆனால், எத்தனை விதமான சோதனைகள், இடையூறுகள், சோர்வுகள், தடங்கல்கள், வழித்தவறல்கள் ஏற்படுகின்றன. திருவருளே அத்தடைகளையெல்லாம் தவிர்த்து தவிர்த்து மேற் செலுத்திக் கொண்டேயிருக்கின்றதாம்.
மனிதப் பிறப்பென்னும் எல்லை வரை கடந்து வந்து விட்ட ஆன்மாக்கள் நாம் எல்லோரும். இந்தப் பிறவிப் பிரதேசத்தில் எவ்வளவோ காலமாக சஞ்சரித்துக் கொண்டுள்ளோம். இதன் முடிந்த எல்லைக் கோட்டையும், அடுத்துள்ள அடைய உள்ள நித்தியானந்த அருட்பெருஞ்ஜோதிபதி நாட்டையும் காண்கின்ற பாக்கியமும் பெற்றுவிட்டோம். அவ்வருட் பெரும்பதியே நம்மை எதிர்கொள்ள முற்படுகின்றார். விழைவுடன் சென்று சேர்ந்து கொள்வோம்.
“மனிதப் பிறவி கொண்டு விளங்குகின்ற ஆன்ம நேயர்களை, அருளின்பப் பெருவாழ்வு பெற வம்மின்கள் வீண்பொழுது கழித்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்த அருமையான சந்தர்ப்பத்தில், அருள் உண்மையை அறிந்து அடைய முந்திக் கொள்ளுங்கள். பழையனவற்றில் பற்று வைத்துக் கொண்டு, அருள் ஒளிபரவாத மருள் நெறிகளிற் சென்று கொண்டிருந்தால் இச் சந்தர்ப்பம் நழுவி விடும். வாழ்க்கைப் பயன் கிட்டாது போய்விடும்.
மேலும், இதுவரை நாம் செய்துள்ள அறச்செயலாலும், பாவச்செயலாலும் பிறவித் தொடர், சுற்று வழியாக நீண்டு போய்க் கொண்டேயிருக்கும். இப்பொழுது காண்கின்ற உண்மையைப் பின்னர் எந்தப் பிறப்பில், எந்தக் காலத்தில், எந்த இடத்தில் காண்போமோ அறியோம்! நல்ல அறச்செயல் காரணமாக அடுத்து மனிதப் பிறப்பே வந்து எய்தினாலும் கூட இப்பொழுதைய மாதிரி உண்மை விளக்கம் பெறத்தக்க சூழ்நிலை எங்ஙனம் அமையுமோ அறியோமே!
அன்றி, நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவவினைக்கீடாய், சில காலம் கீழான பிறவித் தேகங்களில் அடைபட்டுக் கிடக்கவும் நேர்ந்து விடக்கூடுமே, என் செய்வோம்! இன்னமும் அத்தேகங்களில் தங்கி எவ்வளவு அவஸ்தைகளைப் பட்டுப்பட்டு மீளப் போகின்றோமோ அறியோமே! அத்தண்டனைக் காலம் முடிந்து விடுதலை பெற்று மறுபடியும் இம்மானுட யாக்கை வழங்கப் பெறலாம். பெற்றும் இன்று காணும் உண்மையை மறுபடியும் காணவும், அடையவும் எவ்வளவு அவஸ்தைகள் பட வேண்டியிருக்குமோ! எப்படியாகுமோ!
ஆகையால், ஏன் அந்தப்பாடுகள் எல்லாம்? இப்பொழுதே நேர்ந்துள்ள நல்லதொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு விடுதல் அறிவுடைமையன்றோ! அல்லல் தரும் தொல்லைப் பிறப்பு இறப்புக்களை நீக்கிக் கொண்டுவிட, மேல் பிறவித் தொடர்பு அற, அருட்பெரும் பதியின் சார்புறுதல் ஒன்றே கதியாகும். வம்மின். வம்மின்.”
அக வளர்ச்சியின் பொருட்டே பிறவித் தொடர் ஏற்படுகின்றது. அறிவு விளக்கமும், அன்பின் விளைவுமே அக வளர்ச்சியாக மொழியப்படும். இதுவே, ஓர் ஆன்மாவுக்கு ஒவ்வொரு பிறவியிலும் அதிகரித்து வருகின்றதாம். ஓரான்மா, ஒரு தேகப்பிறப்பில் பெற்ற அக அனுபவத்தோடே மறுபிறவியிலுற்று வளர்த்துக் கொள்ளுகின்றது. அப்படித் தேக மாற்றம் உண்டாகும்போது, முன்னதான தூல தேகத்தை மண்ணில் விட்டும், அதிற் கலந்திருந்த சூக்கும வடிவை விண்ணில் விட்டும் புத்துருவேற்கச் சென்று விடுகின்றது அவ்வான்மா.
ஆகையால் அவ்வான்மாவுக்கு அக வளர்ச்சிக்கான சூழ்நிலை அருள் நியதிப்படியே எப்படியும் வந்து சேர்ந்து கொண்டேயிருக்கும். ஆன்ம உண்மை அறியப்படாததால், தூலதேகமே மெய் என்றும், அதன் புறநிலை வரலாறே உண்மை என்றும் அவற்றையே போற்றி வழிபட்டுக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இன்னுஞ் சிலரோ, தூலதேக நீக்கத்தின் பின் வெளிப்பட்டுலவும் சூக்கும ஆவி வடிவமே புகழ்ச்சிக்கும், வந்தனை வழிபாட்டிற்கும் உரியதென்றும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் சன்மார்க்கத்தில், அருட்ஜோதி முன்னிலையில் உண்மையைக் கண்டு கொள்ளுவார்கள்.
முன்பிறப்பு அறிவு பின்பிறப்பு அறிவு
ஆன்மாவுக்குப் பிறவித் தொடர் உண்டென்பது நமக்குத் தெரிந்ததே. அதனால், அவ்வான்மாவுக்கு அக வளர்ச்சி ஓங்குகின்றது என்பதும் நாம் அறிந்தோம். இவ்வக வளர்ச்சி ஒன்றே முக்கிய காரணமாயிருக்கின்றது. இதற்குக் காரணமாயும் ஆதாரமாயும் வந்து சூழ்ந்து நீங்குகின்ற புறத் தேகாதி பிரபஞ்சமும், புறவாழ்வு நிலைகளும் பற்றத்தக்கனவும், நினைவிற் கொள்ளத் தக்கனவும், மிக மதித்துப் போற்றத் தக்கனவும் அல்லவாம்.
ஆகையால் அவை மறைக்கவும் மறக்கவும் செய்யப்படுகின்றனவாம். அப்படி மறைவுற்றவற்றை, மானச விஞ்ஞான முயற்சியால் கண்டும், சோதிட ஞானப் பயிற்சியால் யூகித்தும், உபாசனா முறையால் உணர்ந்தும் ஏகதேச விளக்கம் புறவாழ்வை யொட்டி கூறுகின்றார்கள் ஒரு சிலர். இவை ஒன்றும் அருள் நெறிக்கு வேண்டத் தக்கவை அல்லவாம்.
சிலருடைய சூக்கும ஆவி வடிவங்கள், அவர்களின் ஆன்மா சென்று அடைந்துள்ள புதிய பிறப்புருவில் சென்றடைந்து சிறு வயதிலேயே தன்னைப் பற்றிய முன் பிறவி நிலை வெளிப்படுத்துகின்றது. இதுவே முன் ஜென்ம வரலாறாக வெளிப்படுவது. இது சிறிது காலம் இருந்து மறைந்து விடக்கூடும். அப்படியே முன் பிறவியை அறிந்து கொள்ளுவதால் என்ன பெரும் பயன் அடைந்துவிட முடியும்! ஓர் ஆன்மாவுக்கு, ஒவ்வொரு பிறப்பிலும், ஒரு தூல தேகமும், ஒரு சூக்கும வடிவமும் வந்து வந்து கழிந்திருக்கும். எண்ணிலாப் பிறப்புருக்களில் சென்று வாழ்ந்து வந்துள்ள ஆன்மாவுக்கு எத்தனை தூல தேகங்கள் வந்தொழிந்து கங்காளம் (எலும்புக் கூடு) ஆகி மண்ணிற் கிடக்கின்றனவோ, ஆவிகளாகி விண்ணிற் கறங்குகின்றனவோ யாரே அறிவர்? அறிந்துதான் என்ன பயன்?
நம் பரமபதி ஆன்மாவில் பூர்ணமாக இருந்து கொண்டும், சூக்கும வடிவங்களில் வியத்தகு ஆற்றலாகி விளங்கியும், தூலகங்களாக என்பினுட் ஜோதியாய் மறைந்தும் கொண்டுள்ளாராம். இத் தத்துவ உண்மைகள் எல்லாம், பசுபதியின் கற்பனையிலும், எலும்பும் கபாலமும் அணிந்து பேயோடாடும் உருவத்திலும் மறைக்கப்பட்டுள்ளனவாக அறிய வேண்டும்.
இதனால், தூல தேகத்திலும், சூக்கும தேகத்திலும் ஓர் ஒரு அற்புத சக்தி அமைந்துள்ளதை அறிந்து கொண்டு, அதனைப் பெறவேண்டுமென்ற ஆவல் கொண்டலையாது, ஆன்மபதியின் அருட்சக்தி ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு அடைய முயல வேண்டும். அதற்கு அத்திருவருளே உதவி செய்யும்.
பிறப்பு பேதமை என்பது, ஆன்மாவுக்குத் தூலதேகப் பிறப்பும் இறப்பும் அனாதிகாலமாக ஏற்பட்டுள்ளது என அறிந்து கொண்டுள்ளோம். இது ஆன்மாவுக்கு ஆதி இயற்கையாகத் தோன்றுகின்றது.. ஆன்மா, உண்மையில் பரமபதியின் இயற்கை வடிவமாகவேயுள்ளது. அப்பதிச் சக்திதான் அகத்தில் நித்திய பூர்ணமாயிருக்க, புறத்தில் அநித்திய மாற்றத்தோடு பிறப்பு இறப்பு ஆகி தோற்றிக் கொண்டும், மறைந்து கொண்டும் உள்ளதாம். ஆகவே ஆன்மாவுக்கு ஆதி இயற்கை போல் உள்ள இந்தப் பிறப்பும் இறப்பும் நித்தியமல்ல என்றும், பதி நிலையில் அருளோடு நித்தியமாய்த் திகழ்வதே இயற்கை உண்மை நிலை என்றும் தெளிகின்றோம் இப்பொழுது. இதனால் புதியதோர் முடிவுக்கு வர நேருகின்றது.
அதாவது, மனிதன் பிறப்பதும், இறப்பதும் இயற்கை என்றது போய், இறவாமல் இருப்பதே இயற்கை என்றாகிறதாம். இறப்பது தவறு என்பதாலேயே, இறந்தோனைத் தவறி விட்டான் என்றே சொல்லுதல் சரிதான். ஆகவே இறப்பது, அறியாமை பேதமை. இறவாமையே அறிவுடைமை. இறவாமை எப்படியுறுவது? முன் வந்த புறமார்க்கங்களெல்லாம் இறப்பை முழுமையாக நீக்கிக்கொள்ள முடியவில்லை. ஏதேதோ ஒரு சில தந்திர முறைகளால் ஆயுளை ஓரளவுக்கு மேல் நீளச் செய்து கொண்டிருந்து பின்னர் இறந்து படவே ஆயினர்.
அக மார்க்கிகள், ஆன்மாவே தன்னுருவெனக் கண்டு பற்றிக் கொண்டு தேகத்தை இழந்து விட்டார்கள். அவர்கள் ஆன்ம ரூபிகளாகவே ஆகிவிட்டார்கள் என்பது ஆன்றோர் கருத்து. அதன்படி அவர்கள் பிறவி எடாது சுத்த முக்த ஆன்மாக்களாய் விளங்குவதாக நம்பிக்கை. பிறப்பாகிய பேதமையை செம்பொருள் ஞானத்தால் நீக்கிக் கொண்டார்கள் என்று கொள்ளப்பட்டது. உடம்பினுள் வாசம் பண்ணிக் கொண்டிருந்த ஆன்மாவுக்கு ஒரு புக்கில் அமைந்து விட்டதாக விளங்கினது. தேகத்தளையற்று ஆன்ம ஞானத்தோடு அடங்கிப் போவதே மேல் பிறவி எடுக்காதிருக்க வழி ஆக நவிலப்பட்டது அந்நாள். அது அந் நாளைய முடிவு.
ஏனெனில் ஆன்மாவே நித்தியம், தேகம் அநித்தியம், அநித்திய வடிவை நீத்து நித்திய ஆன்மாவில் நிலைத்து விடுவதே முடிவாயிருந்தது. அப்படிப் பிறப்பொழிந்த நித்திய ஆன்மா, அருகி மறைந்து விடுவதால் ஒரு பயனும் விளங்குகின்றதில்லையே. ஆதலின் அது நித்தியமாக இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான். அது நித்தியமாக இருக்கின்றது என்று சொல்லுவதற்கு சான்று என்ன காட்ட முடியும். ஆகையால் பிறப்பு இனிமேல் உண்டாகாதிருக்க வேண்டுமானால், ஆன்மா விளங்குகின்ற இத்தேகமே அனகபதியின் அருள் நிறைவால் நித்தியத்துவம் கொண்டு விளங்க வேண்டும். இது ஒன்றே இறவாமையும் மேல் பிறவாமையும் நல்குவதாக இன்று தெளிகின்றோம்.
ஆகவே, ஆன்மாவுக்கு எது பேதமை அல்லது அறியாமையோடு கூடிய நிலை என்று இப்பொழுது, நன்கு தெளிவுறலாம். ஆன்மாவானது மேலும் மேலும் பிறப்பெடுத்துக் கொண்டேயிருப்பது மூடம்தான், பேதமைதான். அங்ஙனம் பிறப்பெடுக்காமல் இருப்பதற்கு செம்பொருள் அறிவு தேவைப்பட்டது. அவ்வறிவால், அச் செம்பொருளாகிய பரமான்மாவோடு இரண்டறக் கலந்து ஐக்கியப்பட்டு விடுவதே ஆன்மாவுக்கு முக்தி முடிவாக, பிறவாப் பெருநிலையாக விளங்கி நின்றதாம்.
அந்தப் பரமான்மாவாகிய செம்பொருள் அறிவு இன்று அருட்பெருஞ் ஜோதியாக வெளிப்பட்டுள்ளது. இது ஆன்மாவைத் தன்னில் மறைத்துக் கொண்டு தேகத்தை விட்டு விடாமல், தானே ஆன்மாவோடு கலந்து நின்று தன் அருட்ஜோதியையே விரித்து தேகத்தையும் தன் வண்ணமாக்கிக் கொண்டு விளங்கலாகின்றதாம். இதனால், மேல் பிறப்பை எடுக்காமல் இருக்க, இறப்பை ஒழித்து விட்டு வாழ்வதுதான் அறிவுடமை என உணர்கின்றோம். சிறப்பென்னும் செம்பொருள் இன்று அகமிருந்து அனகம் விரிகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆகக் காண்கின்றோம். இந்த ஒன்றால்தான் அந்தப் பேதமை முற்றும் ஒழிகின்றதாம். இதுவே, பிறப்பை ஒழித்ததோடு, இறப்பையும் ஒழித்துவிட்டு சுத்த சுகானந்த ஆன்மானுபவத்துடன் என்றென்றும் வாழச் செய்ய வந்துள்ளதாம்.
பிறவிப் பெருங்கடல்
கங்கு கரை காணொணாத கடலில் நடுவில் மிதந்து கொண்டிருக்கின்றான் ஒருவன். அவன் பல வகையான அவஸ்தைகள் பட்டுக் கொண்டும் எப்படி எப்படியோ பிழைத்துக் கொண்டே நீந்திக் கொண்டிருக்கின்றான். அக்கடலில் எத்தனையோ விதமான காற்று, மழை, புயல் முதலியவற்றாலும், சுறா, முதலை, திமிங்கலம் முதலியவற்றாலும், கடற் கொள்ளைக் காரர்களாலும் தாக்கி அலைக்கழிக்கப் படுகின்றான். இவற்றாலெல்லாம் துன்பப்பட்ட போதிலும், கடவுளருளால் நல்ல சூழ்நிலையும் பெற்று சிறிது சிறிது காலம் இன்பமும் அடைந்து கொண்டுதான் இருக்கின்றான். அவன் எத்தனையோ முறை தவறுகிறான், தூங்குகிறான், விழிக்கிறான்: இவையொன்றும் வியப்பல்ல. எத்தனையோ முறை பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றான், இதுதான் அற்புதம். இந்தப் பிறப்பு இறப்பினூடும் அவன் அழியாது அக்கடலில் மிதந்து கொண்டே இருப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இதுவெல்லாம் ஆண்டவர் புரிகின்ற அருள் அற்புதமாம்.
மேலே குறிக்கப்பட்டது வெற்றுக் கற்பனைத் தோற்றமல்ல. நித்திய ஆன்மாவே மனிதனாக புனைந்துரைக்கப்பட்டது. அவ்வான்மா வாழ வந்துள்ள பிரபஞ்சமே கரை காண்பரிய பெருங்கடலாக கற்பித்துக் கொண்டது. அவ்வான்மாவுக்கு மேலும் மேலும் தொடர்ந்து வந்து சூழ்ந்து கொண்டேயிருக்கின்ற இன்ப துன்ப வாழ்வுகளை, கடல் வாழ்வின் காட்சி அனுபவங்களாகப் பகரப்பட்டனவாம். எல்லாப் பிறப்புகளிலும் சென்று சென்று வாழ்ந்து வாழ்ந்து ஒழியாது மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றதுதான் ஆன்ம இயல்பாகக் காண்கின்றோம்.
இன்னும் எவ்வளவு நாள்தான் இவ்வான்மா இப்பிரபஞ்சக் கடலில் மிதந்து கொண்டேயிருப்பதோ! என்று தயங்கிக் கொண்டிருந்த போதுதான், பிறவிப் பெருங்கடல் நீந்துவர், நீந்தார் இறைவனடி சேராதார் எனத் திருவள்ளுவர் தெளிவுரை தந்துவிட்டார். இப்பெருங்கடலை நீந்திக் கரைசேர இறைவனின் திருவடியே ஏற்ற மரக்கலமாகும். திருவடி சேர்ந்து விட்டால் அக்கரை அடைந்து அருட்பதியுற்று ஆனந்தமாய் வாழலாம் என்பது கருத்து. இயல்பாகவே ஆன்மா, கடவுள் திருவடிக்கு அடைக்கலமாக இருக்கின்றது. இருந்தும், இந்நாள்வரை அறிந்து கொள்ளப்படாமலிருந்ததாம்.
கடவுட் திருவடி ஆன்மாவில் இரண்டறக் கலந்து அத்துவிதமாக உள்ளதாலே, அவ்வான்மாவே திருவடி வண்ணமாகவும் இருக்கின்றது. இஃது அருகியும் மறைந்தும் அணுத்துவமாயிருக்கின்ற காரணத்தால், இவ்வான்மா கடவுள் திருவடியின் அங்குரமாக அல்லது முளையாகக் கொண்டு, கான்முளை எனவும் குறிக்கப்படுகின்றது. ஆகவே, ஒவ்வொரு ஆன்மாவும், உண்மை மனிதனாம் கடவுட் கான் முளையாக, கடவுளின் பிள்ளையாக விளங்குகின்றான். இதனை அறிந்துதான், பக்குவிகள் தம்மை அடியான் என்றும், அடிமை என்றும் கூறிக் கொள்கின்றார்கள். தேகப்பற்று நீங்கி இத்திருவடி வண்ணமாகத் தொழுகின்றவர்கள் அடிகள் எனவும் அணிந்துரைக்கப் பெறுகின்றார்கள்.
ஆகவே கடவுள் திருவடியை அறிந்து, அடைந்து அதுவானவர்கள் தேகப் பிறவிக்கடலை கடந்து விட்டவர்கள் என்று கொள்ளப்படுவர். முன்பு இவ்விறைவடி வண்ணமாகி உட்கூடி உடலை நீத்துவிட்டவர்களை பிறவி எடுக்காத நிலை பெற்றுவிட்டார்கள் எனக் கொள்ளப்பட்டது. அதுவும் உண்மைதான். ஆனால், அப்படிப் பிறவிக் கடலை கடந்து அக்கரை சேர்ந்தவர்கள் என்ன ஆனார்கள்! ஒருவருக்கும் விளங்குகின்றதில்லை. பதிக்கலப்போடு இப்பார்மீது வாழற்கு இன்னே திருவருள் புரிகின்றார் நம் வள்ளல்.
சத்விசாரத்தால் திருவடி நிலையைக் கண்டு கலந்து கொள்ளுகின்றோம். அப்படிக் கலந்து சமாதியுற்று மறைந்து போகாமல், அகவடிவிலிருந்தே அனகமாக வாழத் திருவருள் பாலிக்கப்படுகின்றோம் இது சமய முதல். இதனால் சூழுருவம் சுத்த வடிவாகி நிலவிட இறப்பும் உண்டாகாது, மேல் பிறப்பும் உண்டாகாதாம். இதுவே பிறவிப் பெருங்கடல் நீந்தி, அக்கரை சேர்ந்து அருள் ஒளியுருவோடு என்றும் வாழ்கின்ற நிலையாம்.
இன்றைய உலகில் ஜன நெருக்கடி அதிகரித்துள்ளது. ஜனன சாகரம் என்னும் பிறவிக் கடலில் ஜனங்கள் மிகுதியாகப் பெருகி, ஜன சமுத்திரமாகவே காட்சியளிக்கின்றனர். இக்கடலில் நிறைந்த நீர்க்குமிழிகளாகத் தோன்றித் தோன்றி மறைகின்றன மக்கள் கூட்டங்கள். இச் சமுத்திரத்தில் பயங்கர சம்பவங்கள் தினமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கடல் முழுவதும் விஷமித்துக் கொண்டேயுள்ளது. மனுக்குலமே அழிந்து போகுமோ என்று கூட அஞ்ச வேண்டியிருக்கின்றது.
இந்தச் சூழலில் நம் பரமபதி எழுந்தருளுகின்றார். அஞ்சேல் என்று அபயமளிக்கின்றார். அருள் அமுதத் திருவடிப் புனையில் சேர்த்துக் கொள்ளுகின்றார். நம்மையெல்லாம் சுத்த வடிவப் பொன்மலராக மாற்றி அணிந்து கொள்ளப் போகின்றார். நாம் இப்பொழுது நீர்க்குமிழிகளாய் மிதக்கின்றோமில்லை. தெய்விகப் பொன் மலர் மொட்டுக்களாகக் கட்டவிழ்ந்து மலரக் காத்துக் கொண்டுள்ளவர்களாவோம். நமது அகவானிலே, அருட்பெருஞ்ஜோதி உதயமானதும் பூர்ண மலர்ச்சியுறுவோம். பதிபதத்து அணிந்து விளங்குவோம். பிறவிக் கடலைக் கடந்தவர்களாகி, திருவடித்தாமரை என விளங்கி, தெய்வ அருள் மணத்தை எங்கும் பரப்புவோம். இவ்வருள் மண ஆற்றல் பிறவிக் கடலின் நச்சுத் தன்மையை முற்றும் மாற்றும். மக்கட்கு, அன்பும் அறிவும் கொண்டு இன்பம் பெறத் துணை நிற்கும்.
பிறப்புகளின் உண்மை என்ற தலைப்பில் ஒரு சில குறிப்புகள் விளக்கப்பட்டுள்ளன. சத்விசாரம் செய்து கொண்டிருந்தால் இதில் குறிக்கப்பட்டதற்கு மேல் அதிகமான விளக்கம் பெறலாம். அழியும் பிறப்பையும் இறப்பையும் ஒழித்து, அழியாமை பெற்றுப் பேரின்ப வடிவொடு வாழற் பொருட்டே இந்த பிறப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டேயுள்ளனவாகவும் கண்டு தெளிந்து அடையப் பெறலாம். நமது ஆண்டவர், பிறவா ஆக்கைப் பெரியோன் எனப் பேசப்படுவதின் கருத்தை விளக்கிவிட்டு அடுத்த தலைப்பை எடுத்துக் கொள்ளுவோம்.
கடவுள் நித்தியமான வஸ்து, அதற்குப் பிறப்புமில்லை. அதுவே பரமான்மாவாக உள்ளதாம். அதனைச் ‘சிவம்’ எனக் கற்பித்துள்ளது சைவம். அருட்பெருஞ்ஜோதியே அந்த சிவம், சியன், சன், சூரியன் ஆகத் திரிந்து வந்துள்ளன. உண்மையான நம் பதி நித்திய பூரணராய் இருக்கிறதால் பிறவாதவர் என்பது பொருத்தமே. மேலும், ஆக்கை என்பது உடம்பைக் குறிப்பதால், அந்த அருட்பெருஞ்ஜோதி பதிக்கு அகண்ட பிரபஞ்சமே தூல உருவாகக் கொள்ளப்படும். அது ஐம்பூதப் பொருட்களாலானது. நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்களால் குறிக்கப்படுவது. இந்தக் கடவுட்குரிய தூல பஞ்சாட்சர தேகம், மாயா (என்றும் அழியாத) பிரபஞ்ச வண்ணமாகிச் சதா மாற்ற தோற்றங் கொண்டு விளங்கிக் கொண்டேயிருக்கின்றதாம்.
நித்தியமாயுள்ள பஞ்சபூத அணுக்கள் கூடிக் கூடி உருவங்கள் பல கொள்வதும், அவ்வுருவங்கள் ஒரு காலத்திற்குப் பின் சிதைந்து கெட்டு அணுக்களாகப் பிரிந்து நிறைந்து விளங்குவதுமே இப்பிரபஞ்சக் காரியப்பாடாம். இயற்கையில் என்றும் உள்ளது, தோற்ற மாற்றம் அடைதலே அல்லாது, என்றும் அழிந்து ஒழிந்து இல்லாது போய் விடுகின்றதில்லை. எனவே நம் நித்திய பதிக்கு உள்ள இந்தப் பிரபஞ்ச ஆக்கை, என்றென்றும் இயற்கையில் உள்ளதேயாம். அதற்குப் பிறப்பு இறப்பு என்பது இல்லையாம். இதனால்தான் ஆண்டவர் பிறவா ஆக்கைப் பெரியோன் எனப் புகழ்ந்து புனைந்து பேசப்படுகின்றார். அயோனிஜர், யோனிவாயில் பிறவாதவர் எனவும் படுவார்.
ஜீவான்மாக்கள் எல்லாமும், நால்வகை யோனி, எண்பத்து நான்கு லட்சம் ஜீவ பேத உருவங்களில் வந்து, பிறப்பதும் இறப்பதுமாய் உள்ளனவேயாம். முக்கியமாக மக்கள், தேவர், நரகர் யோனிப் பிறவிகளை என்று தெரிந்து கொண்டால், சுத்த சிவம் அல்லது, நிஷ்களப் பரப் பிரம்மத்தைத் தவிர, பிரம்மாதி தேவர்கள் எல்லாம் யோனிஜர்களே எனத் தெளிந்து கொள்ளலாம்.
இதனால், திருமாலின் அவதாரங்கள் பத்தும், அதற்கு மேல் குறிக்கப்படுவனவும் யோனிப் பிறவியாக வெளியாக்கப்பட்டனவாம். இந்த உண்மையறியாதவர்களே, அரி பிரமாதிகளைத் தாழ்த்தியும், சிவனை உயர்த்தியும் பேசுவார்கள். இவ்வரி பிரமர்களைக் கூட மேனிலைக் கேற்றி நோக்கும்போது, நிஷ்களாகார, குணரகித மகா விஷ்ணுவாகவும், பரப் பிரம்மாவாகவும் கண்டு கொள்ளலாம்.
பிறவா ஆக்கைப் பெரும் பதிபதம் பணிந்து போற்றுவதும், அந்நிலையுற்று கலந்து பிரிவற்றிருப்பதுவும், அப்படியிருந்து கொண்டு அனக வாழ்வு வாழ்வதும், நம் யோனிப் பிறப்பையே திருவருளால் ஞானப் பிறப்பாக மாற்றிக் கொண்டு, இறவா ஆக்கையில் என்றும் விளங்குவோமாக.