தயவு
அருட்பெருஞ்ஜோதி தயவு மலர்.
அருட்பெருஞ்ஜோதி மெய்
2. கடவுள் ஒன்றும் இரண்டும் ஆன நிலை.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
நள குரு மகா தைப்பூச வெளியீடு
3.2.1977.
தனித்தலைமைக் கடவுள் - ஒருவரே அல்லது - ஒன்றே என்பது, மெய்ஞ்ஞானியர் அனுபவம். அந்த ஒன்றாகிய கடவுள், இந்தப் பலவாகிய பிரபஞ்சத் தோற்றம் கொண்டிருக்கின்றதும், உண்மைதான். ஒன்றான கடவுள், அகண்ட வெளி நிறை அருட் பேரொளியாக உள்ளதாம். இவ்வருள் ஒளிநிறை நிலைதான் பிரிவற எங்கும் இருந்து கொண்டுள்ளது. எனினும், அருள்ஞானம் அடையாத மருள் மன அறிவால் அனந்த வண்ண பேத, மாயா காரிய உலகத் தோற்றங்களையே எங்கும் காண்கின்றான் மனிதன். உலகநிறை ஒளியை, இறைபெருஞ் சக்திப் பொருள் வடிவங்களாயும், ஆற்றல் இயக்கங்களாயும், அறிவு விளக்கங்களாயும், ஆன்ம சக்தி சித்திகளாயும், அருள் அனுபவங்களாயும் விளங்கக் காண்கின்றான் பக்குவ மனிதன். இதனால், அருட்ஜோதிக் கடவுள், அகத்தில் அருளும், புறத்தில் ஜோதியின் மாற்ற தோற்றங்களும் கொண்டுள்ளது எனலாம்.
புறக் காட்சித் தோற்றமும், அக அருள் அனுபவமும் இரு வேறு நிலை கொண்டதாயிருப்பதாலும், இரண்டற்ற ஒன்றாய், சர்க்கரையும் அதன் இனிப்பும் போல உள்ளதாம். இந்தச் சர்க்கரையின் சுவை அனுபவத்தை அறிந்து வெளியாக்கிப் பிறர்க்கு அறிவிக்கக் கூட மனித பிறப்பு வாழ்வில் தான் சாத்தியப் படுகின்றது என்றால், அருட்ஜோதிக் கடவுள் அனுபவத்தை வெளிப்படுத்த அருள்நிறை மனித வாழ்வு எவ்வளவு இன்றியமையாதது எனக் கூறவும் வேண்டுமோ !
இப்பொழுது அருபெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த மனிதப் பிறப்புருவில், அகத்தே அருள் ஞான ஜோதி விளக்கமாயும். புறத்தே அருள் ஜோதி வடிவத் தேகமாயும், திகழ்வதாய், திருவருளால் உணர்த்தப் பெறுகின்றோம். இதில் அகஞான விளக்க நிலை ஆணியல் ஆன்ம அம்சமாகவும், புற உயிர் உடம்பு நிலை பெண்ணியல் பொருள் வடிவாயும் கூடியுள்ளனவாம். இப்படி ஒன்றாகிய அருட் ஜோதிக் கடவுள், இந்த மனிதப் பிறவியில், தனிப் பெருங் கருணையோடு அருட்பெருஞ் ஜோதியாய் விளங்குகின்றதையே கண்டு, கடவுள் உண்மையை, “அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை” என்று வெளியிட்டார் நம் வள்ளற் பெருமான். இதுதான் இந்த இரண்டாம் தலைப்பில், கடவுள், ஒன்றும் இரண்டும் ஆன நிலையாகக் குறிக்கப்பட்டுள்ளதாம்.
Thankyou for sanmarga Information. I am very Happy.I like very much to "ARULPERUMJOTHI, THANIPERUMKARUNAI" Thankyou.
With Vallalar Loving,
AruljothiSujatha.