தயவுப் பாமலர்
இயற்றியவர் - திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள்
தகர ஆகாசத் தனிவெளி நடுவே
யகர ஆன்ம அவிர்வடி வோடு
உகர ஒளிதனை யுலகெலாஞ் செலுத்திப்
பகரரும் பக்குவம் படைத்த வடிவம்
மன்னும் மானிடப் பிறப்புரு வாகும்
இந்நற் பிறப்பில் இறையியல் நிறைபெற
முன்னம் புலனுணர் முடித்து மேலெழ
புன்பிறப் பவையெலாம் போந்து போந்து
ஆறாம் புலனாம் அருமனம் தோற்றி
ஏறா நிலைமிசை இறையருள் ஏற்றிட
அவனோ டதுவாய் அலைவற இருந்து
தவறா தயாவினை சதாவும் புரிந்திட
தயவே நம்மியல் தயவே நஞ்செயல்
தயவே நம்முயிர் தயவே நம்முரு
தயவே நாமெனத் தலைநடு ஒளிரும்
தயவுச் சுடரே தன்தய வாலே
தகர யகர உகரம் மூன்றுமே
பகர மேனின்று பரவுதெவ் வயினும்
இகபர உயிர்க்கெலாம் இன்பு செய்திருப்பது
அகர முதல்வன் ஆணை ஆகும்.
சுகவாழ் விதுவே தொன்னூல் குறித்தது
அகமொடுங் காது அகமிருந்து அனகம்
தயாஞான தேகமேல் தனிச் சுகவடிவம்
இயாவருங் காணும் எழில்சுத்த உருவம்
எனுமுத் தேக இயலுரு நிலைத்திட
வனைந்த தயவுப் பாமலர் இவைகள்
அனைத்துல கவர்க்கும் அன்பருள் இன்பந்
தனைப்பெறச் செய்து தழைக்கவைப் பனவே.
content Ref:: Dhayavup Paakkal written by Swami Saravanananda