DAEIOU - தயவு
கோயம்புத்தூர் அருகே துடியலூரில் சன்மார்க்க சங்க செயல்பாடு
கோயம்புத்தூர் அருகே துடியலூரில் சன்மார்க்க சங்கம்.
கோயம்புத்தூர் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில், உள்ளது துடியலூர் என்ற ஒரு பகுதி. 10 கி.மீ. தள்ளி இருந்தாலும், நகரத்தின் சாயல் இங்கு உண்டு.
இந்த இடத்தில், ஒரு சன்மார்க்க சங்கம் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில், கோயம்புத்தூரைச் சேர்ந்த மில் ஓனர் திரு வி.சி. சுப்பையா கவுண்டர், வார வழிபாடு செய்து வந்துள்ளார். இந்த சங்கம் 1983-84ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் வார வழிபாடு நடத்தி, அன்னதானம் செய்யப்பட்டு வந்துள்ளது.
பின்னர், 8 ஆண்டுகளுக்கு முன்னர் ஞான சபை கட்டப்பட்டுள்ளது. சத்திய ஞான சபை தனிக் கட்டிடமாகவும், அன்பர்கள் அமர்ந்து திரு அருட்பா படிப்பதற்கும், சன்மார்க்கச் சான்றோர்களின் சொற்பொழிவுகளைக் கேட்பதற்கு வசதியாகவும், கல் கால் போட்ட ஓட்டுக் கொட்டகை போடப்பட்டு, தனியே ஒரு இடம் இங்கு உள்ளது. திரு அருட்பா பாடல்கள்:, மதிற் சுவரில் எழுதப்பட்டுள்ளன.
சுமார் 4 ஏக்கர் பரப்பளவில், தனியே சமையல் அறை, கொடிமரம் முதலான அமைப்புக்களுடன் நடுவில் காலி இடத்துடன், இந்த சன்மார்க்க சங்கம் நெடுங்காலமாக இயங்கி வருகிறது,. . இந்த சங்கத்தை, இங்குள்ள பொது மக்கள், “தவசி கோயில்” என்று அழைக்கின்றனர்
200 ஆண்டுகளுக்கு முன்பாக, வட இந்தியாவிலிருந்து, இந்தப் பகுதிக்கு 2 ரஜபுத்திர ஆன்மீகச் சான்றோர்கள் வந்துள்ளனர். இந்த இடத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ள மலையில், ஒரு ரஜபுத்திர சான்றோர் அடங்கியுள்ளார்.
அவருடன் வந்த மற்றொரு ரஜபுத்திர சான்றோர், இந்த இடத்தில் அடங்கியுள்ளார். அவ்ரது ஜீவ சமாதி, இந்த சன்மார்க்க சபை ஏரியாவிற்குள் அமைந்துள்ளது. அந்த ஜீவ சமாதிக்கு தினசரி பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுகின்றன. ஒரு சிறு கோயிலாகவும் அது வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது,
இந்த சன்மார்க்க சங்கத்தில், 81 வயதான திரு சுந்தரம் என்பவர், தலைமைப் பொறுப்பில் உள்ளார். அவருடன் கோபால கிருஷ்ணன் (E.B. Retired) அன்ன பூரணி அம்மா, கனகராஜ், செல்வராஜ், மாணிக்கம், ஏ.மணி, (இரண்டு) மருதாசலங்கள் ஆகியோர் முக்கிய பங்கு வகித்து இந்த சன்மார்க்க சங்கத்தை நிர்வகித்து வருகின்றனர். ஆனாலும், இந்த சங்கத்தில், தலைவர், செயலாளர், பொருளாளர் என்று யாரும் பதவி வகிக்கவில்லை. எல்லோரும் அவரவர்களுக்கு இயைந்த பணிகளை தமது மன நிறைவுடன் செய்து வருகின்றனர்.
கடந்த 24.8.2008 அன்று காலை சுமார் 9.30 மணியளவில் கோயம்புத்தூர்-மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த தயவு அன்பர் திரு பிரபாகரன், மதுரையிலிருந்து சென்ற தயவுக் குழு உறுப்பினரை, இந்த சங்கத்தைப் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றிருந்தார்.
அன்றைய தேதி, ஞாயிற்றுக் கிழமையாக இருந்ததால், அங்கு காலையிலேயே வந்திருந்த சன்மார்க்க சங்க அன்பர்கள் அனைவரும், தாமே ஒவ்வொருவரும், ஒவ்வொரு வேலையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். வயோதிகர்களும், இளையவர்களும், காய்கறி நறுக்கிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
இந்த ஞான சபையில், உள்ள ஒரு சிறப்பு, அருட்பெருஞ் ஜோதிக்கு மேற்புறம் உள்ள மேற்கூரை, தாமிரத் தகட்டினால் வேயப்பட்டுள்ளது என்று, தலைமைப் பொறுப்பு வகிக்கும் திரு சுந்தரம் அவர்கள் தெரிவித்தார்.
மிகச் சிறப்பாகப் பல காலம் இயங்கி வரும், இந்த சன்மார்க்க சங்கம், கோயம்புத்தூரிலிருந்து காரமடை செல்லும் வழியில், மெயின் ரோடில் உள்ளது. அனைவரும் காணத்தக்க ஒன்றாக இது இயங்கி வருகிறது.
Daeiou Team, Madurai
Thudialur Camp (24.8.2008)
Coimbatore District.