கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் ஒரு சன்மார்க்க சங்கம்.
கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ஸ்டால்.எண் 103ல் திரு அருட்பிரகாச வள்ளலாரின் திரு அருட்பா, உபதேசப் பகுதி, மற்றும் திண்டுக்கல் தயவு சரவணானானந்த சுவாமிகளின் நூல்கள் மற்றும் திரு அருட்பா ஆடியோ (brought out by Thiru Arutpa Amutham Project, Singapore) ஆகியவை, கோயம்புத்தூர் அன்பர்களின் பெரு முயற்சியால் விற்பனை செய்யப்பட்டன.
கோயம்புத்தூரிலிருந்து சுமார் 8 கி.மீ,தூரத்தில் பேரூர் என்ற பேரூராட்சி அமைந்துள்ளது.
இங்கு உள்ள அருள்மிகு பட்டீஸ்வரர் ஆலயம் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருமை பெற்றது. மேலும், இங்கு, உள்ள சிற்பங்கள், மிகவும் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. இன்றளவும், அவற்றின் பழைமை மாறாமல் காக்கப்பட்டு வருகின்றது.
கோயம்புத்தூரிலிருந்து பேரூருக்கு செல்லும் வழியில், (1 கி.மீ முன்னதாக) வடபுறத்தில் S.M.S. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. அதனருகே மாணவர் விடுதி ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.
அதற்கு வெகு அருகில், சன்மார்க்க சங்கம் ஒன்று பன்னெடுங் காலமாக நடைபெற்று வருகிறது.
24.8.2008 அன்று மாலை சுமார் 5.15 மணி அளவில் அந்த சன்மார்க்க சங்கத்திற்கு, தயவு குழு உறுப்பினர் சென்ற போது, அந்த சங்கத்தை நடத்தி வரும் கீழே குறிப்பிட்டுள்ள அன்பர்கள் இருந்தனர். மதிய அன்னம் அளிப்பு பணி முடிவுற்ற நிலையில் அவர்கள், இந்த சன்மார்க்க சங்கம் குறித்த கீழ்க்காணும் செய்திகளைச் சொன்னார்கள்.
இந்த சன்மார்க்க சங்கத்தை நிறுவியவர் திரு தேவராஜ் நாயக்கர் என்பவர். பின்னர் பராமரித்தவர் (லேட்) திரு முத்தானந்த சுவாமிகள் @ பச்சை சுவாமிகள் ஆவார். திரு கணபதி மற்றும் திருப்பதி ஆகியவர்கள், இதற்குப் பெரிதும் உதவினார்கள்.
இந்த சங்கம் நடத்துவதற்காக. ஆங்கிலேயர்கள் காலத்தில், திரு ராமசாமி நாயுடுவிடம் சுமார் 2.40 ஏக்கர் தானம் பெறப்பட்டுள்ளது. ஊருக்கு வெளியில் மயானத்தின் அருகில், இந்த சன்மார்க்க சங்கம் அமைந்துள்ளது. வேறு குடியிருப்பு ஏதும் அருகில் இல்லை.
பிரதி ஞாயிறு தோறும், காலையில் அகவல் பாராயணம் செய்யப்பட்டு, சுமார் 75 முதல் 100 ஏழைகளுக்கு, காலை உணவு வழங்கப்படுகிறது, மதியம் 11 முதல் 12 மணி வரை திரு அருட்பா பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, பின்னர் ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணி நடைபெறுகின்றது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும், 20 படி அரிசி போட்டு, உணவு தயாரித்து, ஏழை எளிய மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது, மற்றும் ராகி கூழும் வினியோகிக்கப் படுகிறது.
இந்த சன்மார்க்க சங்கம் கட்டிடம் கட்டியதற்குரிய பழங்காலத்துக் கல்வெட்டு சன்னதிக்கு வெரு அருகாமையில், தரையில் பாதி புதையுண்ட நிலையில் உள்ளது. அதனை அங்கிருந்த அன்பர்கள் காண்பித்தனர். அதில் கண்ட விபரப்படி, 1970ஆம் ஆண்டு, சங்கக் கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருப்பதை அது காண்பிக்கிறது.
கட்டிடம் கட்டி முடித்தபின் “ராமலிங்க சுவாமி திருக்கோயில்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இக் கட்டிடத்திற்கு ஒரு பக்கமாக, பெரிய கிணறும் உள்ளது. இன்றளவும், புழக்கத்தில் அது உள்ளது. சன்மார்க்கக் கட்டிடம் போக எஞ்சிய சுமார் 2 ஏக்கர் நிலத்தில், மரங்களும், ஏற்கனவே, இந்த சன்மார்க்க சங்கத்தில் பணிபுரிந்த ஆரம்ப கால அன்பர்களின் சமாதிகளும் உள்ளன.
இந்தச் சன்மார்க்க சங்கத்தை தற்போது, கீழ்க்காணும் நபர்கள் பராமரித்து வருகின்றனர்.
1) திரு ஏ.முத்துக்குமார் (45 வயது) பேரூர்.
2) திரு வெங்கடேசன் (35 வயது) வேடபட்டி, பேரூர்
3) திரு கணபதி ஐயர் (65 வயது)-இவர் பச்சை சாமியின் சிஷ்யர்.
இந்த சங்கத்தில், திரு எஸ்.சின்னசாமி என்ற (69 வயதுள்ள) பெரியவர், பாதுகாவலராகப் பணி புரிகிறார். அவர் எப்போதும், இங்கு தங்கி உள்ளார்.
இந்த சன்மார்க்கச் சங்கத்தை, சிலர் அகற்ற நினைக்கின்றனர் என்ற ஆதங்கத்தை அங்கிருந்தவர்கள் வெளியிட்டனர்.
மேலும், பிரதி ஞாயிறு தோறும், இந்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர்கள், அருகிலுள்ள பழங்குடியினர் வாழும் (Tribals residence) முள்ளங்காடு பதி என்ற இடத்திற்குச் சென்று அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு 7 கிலோ தக்காளி சாதமும், 2 கிலோ சர்க்கரை சாதமும் கொண்டு சென்று வினியோகிக்கின்றனர். சீனிவாசபுரம் செந்தில் சுவாமிகள் (45 வயது)பழங்குடி இன மக்களுக்கெல்லாம் பட்டத்துக் காளியம்மன் கோவிலில் திரு அருட்பா உபதேசங்கள் முதலான கற்பித்துக் கொடுத்து அது முடிவுற்றபின் இந்த வினியோகம் நடைபெறுகிறது.
பேரூர் சன்மார்க்க சங்கத்தைப் பார்வையிட்டு முடித்தவுடன், அங்கிருந்த அன்பர்கள், முள்ளங்காடு பதியை நோக்கி, மேற்காணும், உணவு வகையுடன் சென்று கொண்டிருந்தனர்.
ஊரை விட்டு ஒதுக்கப்புறமாக, ஒரு மயானத்தின் கரையில், இந்த சன்மார்க்கச் சங்கம் அமைந்திருந்தாலும் வள்ளல் பெருமானின் பெருங்கருணையினாலும், இங்கு இந்தச் சங்கத்தை நடத்தி வரும் அன்பர்களின் மன உறுதியினாலும், தங்கு தடையின்றி நடந்து வருவது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்.
Daeiou Team, Madurai
(on camp at Coimbatore 24.8.2008)