DAEIOU - தயவு
தேனி மாவட்டம் வீரபாண்டி 45-வது உலக உயிர்கள் மாநாடு-கூட்டம் நடைபெற்ற விவரம்

45-ஆம் ஆண்டு உலக உயிர்கள் மாநாடு.
தேனி மாவட்டம் – வீரபாண்டி
தேனி மாவட்டம் வீரபாண்டியில் 9.8.2008 மற்றும் 10.8.2008 ஆகிய நாட்களில், 45ஆம் ஆண்டு உலக உயிர்கள் மாநாடு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நடைபெற்ற இடம் – ஸ்ரீ ராமராஜ லட்சுமி திருமண மண்டபம்
ஸ்ரீ மாரியம்மன் கோவில் சமீபம், வீரபாண்டி.
9.8.2008 சனிக்கிழமை சர்வதாரி வருடம் ஆடி மாதம் 25ந் தேதி
தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், பன்ருட்டி மற்றும் மதுரை மாவட்டங்களிலுமிருந்து அன்பர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கென வந்து குவிந்தனர்.
http://www.vallalarfiles.com/image/jt,$,2bchLXvF5tuAlHEwguJXQ,$,3d,$,3d/sz-tn650/vee1.jpg14200000.jpg
மாலை சுமார் 5.00 மணியளவில் சன்மார்க்க அன்பர்கள், வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து, புறப்பட்டு வள்ளல் பெருமானின் சன்மார்க்கக் கொடியினை ஏந்தி, நகர் வலம் வந்தனர். வள்ளற் பெருமான் சொன்ன அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரம், நகர் முழுவதும் விழாக் குழுவினரால் ஒலிக்கப்பட்டது, அது தவிர, அனைவரும் கொல்லாமை தவிர்க்க வேண்டும் என்ற செய்தியையும், ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், பொது மக்களிடம் பரப்பினர். இவ்வூர்வலத்தில், ஆண், பெண்கள் சுமார் 500 பேருக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்ததாக போடி மீனாட்சிபுரம் திரு என்.சிவகுமார் தெரிவித்தார்.
ஊர்வலம் முடிந்து ஸ்ரீ ராமராஜ லட்சுமி திருமண மண்டபத்திற்கு வந்த பின் ஓடைப்பட்டி, திருமதி டி. ராமுத்தாய் மற்றும் திருமதி மலர் ஜோதி ஆகியோர், திரு விளக்கேற்றினர்.
அதன் பின் இரவு, மூத்த சன்மார்க்கச் சான்றோர்களை வைத்து, சொற்பொழிவு நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில், வடலூர் அருட்சுடர் ஆசிரியர் திரு குரு பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். தலைவர் போடி மீனாக்ஷிபுரம் திரு என். சிவக்குமார் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை நடத்தினார்.
10.8.2008 ஞாயிற்றுக் கிழமை-சர்வதாரி வருடம் ஆடி மாதம் 26ந் தேதி
காலை சுமார் 5.00 மணியளவில் அருள் விளக்கேற்றி, அருட்பெருஞ்ஜோதி அகவல், வந்திருந்த அன்பர்கள் அனைவராலும் படிக்கப்பட்டது. அகில உலக சகோதரத்துவம் வேண்டி, உறுதி மொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், மதுரை அன்பர் திரு ஹரிகோவிந்தன் அவர்கள், திரு அருட்பா பாடல்களை இசையுடன் பாடி, அதற்குப் பொருள் விளக்கமும் அளித்தார்.
அதன் பின்னர், மதுரை யானைக்கல்லைச் சேர்ந்த திரு எம். சாமி அவர்கள்,. திருஅருட்பா பாடல்களை, உள்ளமுருகப் பாடினார்.
பின்னர், அன்னஞ்சி வழக்கறிஞர் திரு ஜெயப்பிரகாஷ் B.A.,B.L., அவர்கள் ஜீவகாருண்யம் மற்றும் இரக்க உணர்வு பற்றி உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சாராம்சம் வருமாறு
வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினைக் கடைப்பிடிப்பவர்கள், முதலில், சைவம் சார்ந்திருக்க வேண்டும்.
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிதூனுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – என்பார் திரு வள்ளுவர்.
இந்த மாநாட்டுக்கு வரும் வழியில், திரு ராஜூ ஒரு பெரியவர் சைவம் என்றாலு என்ன ? அசைவம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி விசாரம் செய்து கொண்டு வந்தார். சைவம் என்றால் ஆன்மாவைக் கருதுபவர்கள் என்று பொருள். அசைவம் என்றால், இந்த அநித்திய உடலைப் பற்றிச் சிந்திப்பவர்கள் என இலகுவான பொருள் சொன்னார். சைவமாக இருந்தால்தான் ஜீவகாருண்யம் பெருகும்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தன்னுயிர்போல் .. திரு வருட்பா
விருப்பில்லான் போல் … திரு அருட்பா.
சுந்தர மூர்த்தி நாயனார், நான் உனை மறவேன். என்ன வேலை செய்தாலும், என் நாவு நமச்சிவாயம் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் என்று சொல்லுவார். இது நாப் பழக்கம் ஆகும்.
வள்ளல் பெருமான் – பெற்ற தாய் தனை மக மறந்தாலும் என்ற திரு அருட்பாவில், நமச்சிவாயத்தை நான் மறவேனே .. .. என்று கூறுவார். இது உயிர்ப்பழக்கம்.
வான் கலந்த மாணிக்க வாசகா .. என தனக்கு முன் வாழ்ந்த ஞானிகளை எல்லாம் வாழ்த்தி வள்ளற் பெருமான் திரு அருட்பாவிலே பாடி வைத்துள்ளார்.
திருவெம்பாவையில் முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேற்றுமப் பெற்றியனே என சொல்லப்பட்டுள்ளது.
வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவன் அன்றோ – என தம்மை வள்ளற் பெருமான் அன்பர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார்.
இரக்க உணர்வு என்பது, நம்மிடையே இயற்கையாய் வரவேண்டும்.
உயிரற்று அசையாமல் இருக்கும் கற்சிலைக்கு உயிருள்ள ஆட்டினைப் பலி கொடுக்க வேண்டுமா என ப்ளெக்ஸ் பேனரில் எழுதி, உயிரின் உயர் நிலையினை இங்கு விளக்கியுள்ளீர்கள்.
திரு அருட்பாவினை நூல் வடிவாக, சத்திய ஞான சபையினை, வழிபடு கோவிலாக, எதிலும் ஒரு முன்னோடியாக வள்ளற் பெருமான் ஏற்படுத்தி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
ஈயென்று பிறரிடம் கேளாத இயல்பும் … திரு அருட்பாவில் சொல்லப்பட்டுள்ளது.
காற்றாலே புவியாலே ககனம் அதனாலே .. .. (இசையுடன் பாடினார்) இறுதியில் இந்த திரு அருட்பாவில் ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே என யாரைச் சுத்த சன்மார்க்கத்தினர் சார வேண்டும் என அருமையாக விளக்கியுள்ளார்.
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும் என ஜீவகாருண்யத்தைப் பற்றி அருட்பாவில் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
கண்ணில் கலந்தான் .. என் கருத்தில் கலந்தான் .. திரு அருட்பா
கருவில் கலந்த துணையே (இசையுடன் பாடினார்).
தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தேன் அந்தோ காலமெல்லாம்..
வெம்புமுயிர்க்கோர் உறவாய் … …
இனித்தடை ஒன்றும் இல்லை கண்டாய் மனமே .. .. .
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி .. நாங்கள் நம் பாவைக்குச் சார்த்தி நீராடினால் .. திருவெம்பாவை
நீருண்டு பொழிகின்ற காருண்டு விளைகின்ற … ..
அபிராமி பட்டரின் பாடல் ஒன்றினையும் பாடினார்.
வருமுன் வந்ததாகக் கொள்ளல் எனக்கு வழக்கம் .. .
.
நாமெல்லாம் கடைப்பிடிக்க வேண்டியவை –
சைவம் .. அடிப்படைக் கொள்கை
ஞானம் .. உண்மை நெறியைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஞான சபை .. கோவில்
ஆன்மப் பிரகாசம் .. லட்சியம்
ஆன்ம விஞ்ஞானம் .. சன்மார்க்கக் கொடி
அடக்கம், பண்பு, எளிமை, உண்மை, செய்தி, இயற்கை எல்லோருடனும் சமமாகப் பழகுதம் (universal brotherhood) எனப் பல பழக்கங்களைக் கைக்கொண்டு. இந்த சுத்த சன்மார்க்க நெறியில் பயின்று வரவேண்டும். குறிப்பாக, வள்ளற் பெருமான் சொன்ன ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நாள் தோறும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வாழ்த்தி உரையினை அவர் முடித்தார்.
சோழவந்தான் திரு மாரியப்பன், சன்மார்க்கத் தலைவர்.
இதற்கு முன் மேனாட்டு அறிஞ பலர் ஜீவகாருண்யத்தை பேசியுள்ளனர்,. உதாரணமாக எமெர்சென், இங்கர்சால் என்று பலரும் பேசியுள்ளச் சென்றுள்ளனர். வள்ளல் பெருமான், 4 வகை ஒழுக்கத்தை வலியுறுத்தினார். புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றார்.மனம் வாக்கு காயம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.உடலுக்கு ஒழுக்கம் தேவைப்படுவதே போல் ஜீவனுக்கும் அதன் பின்னர் ஆன்மாவுக்கும் ஒழுக்கம் அவசியம் என்றுள்ளார் வள்ளலார்.
http://www.vallalarfiles.com/image/Nt6faY,$,2b4F0CJHX7FEKpjbQ,$,3d,$,3d/sz-tn650/vee2pg.jpg14220000.jpg
இதிலே ஜீவ ஒழுக்கம் மிக மிக அவசியத் தேவை என்பது, சமீபத்தில் பல இடங்களில் நடந்துள்ள வன்முறைச் செயல்கள், செய்திப் பத்திரிக்கை மூலம் அறியக் கிடைக்கின்றன. வள்ளல் பெருமான் சொன்ன நெறியினைக் கடைப்பிடித்திருந்தால், இந் நிலை ஒருக்காலும் ஏற்பட்டிருக்காது.
அதிலே, பர ஜீவகாருண்ய ஒழுக்கம், அபர ஜீவகாருண்ய ஒழுக்கம் என வள்ளல் பெருமான் வகைப்படுத்தியிருக்கிறார்.
புலால் மறுத்தல், கொல்லாமையை அவர் மிகவும் வலியுறுத்தியிருச் சென்றிருக்கிறார். அதில் புலால் உண்ணாமை என்ற விரதத்தை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஒருமுறை ஜார்ஜ் பெர்னாட்ஷா-வை, வின்ஸ்டன் சர்ச்சில் விருந்திற்கு அழைத்தார். பெர்னாட்ஷா சைவ நெறி கடைப்பிடிப்பவர் எனவே அவர், செல்லவில்லை. பின்னர், ஏன் வரவில்லை என்றும் சர்ச்சில் கேட்டதற்கு பெர்னாட்ஷா அவர்கள், நான் புலால் உண்ணுபவர்கள், பிணந்தின்னுபவர்களை ஏற்பதில்லை. எனவே வரவில்லல என்றார்
பெர்னாட்ஷாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டபோது, ஆஸ்பத்திரியில், அசைவ உணவினை ஏற்கும்படி வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவர் ஏற்கவில்லை. புலாலை ஏற்பதற்கு, இறப்பதே மேல் என்றார்,. மேலும் அவர் சொன்னார், நான் இறக்க நேரிட்டால், என் சவப்பெட்டிக்குப் பின் தனவான்களோ, மேட்டுக் குடிமக்களோ யாரும் வரவேண்டாம். ஆடு, மாடு, கோழிகள் மட்டும் வரட்டும். என்றாராம்.
புலால் மறுத்தலை ஒரு வேள்வியாக, யக்ஞமாகக் கொள்ள வேண்டும். உயிர் இருக்கும் வரை, அந்த உடலை, கலெக்டர் என்றும் உறவினர் என்றும் மாமா என்றும் வகைப்படுத்திக் கூறும் நாம், உயிர் உடலை விட்டு நீங்கியதும், பிணம் என்று மட்டுமே சொல்கிறோம். அப்போது, உறவினர் என்றோ என்றோ அதிகாரி என்றோ நாம் சொல்வதில்லை.
ஒரு முறை G.T. நாயுடு அவர்கள், கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் இடைவழியில் கவிழ்ந்து விட்டது. அதில் பயணம் செய்த பலரை, கடலில் உள்ள மீன்கள் கடித்துத் தின்று விட்டன. கரை சேர்ந்த பின் அவரிடம் சிலர் பேட்டி கண்டபோது, பெரும்பாலானோர் கடலில் மீன்களிடம் சிக்கி உயிரை இழந்த போது, நீங்கள் மட்டும் எப்படித் தப்பிப் பிழைத்தீர்கள் எனக் கேட்டுள்ளார்கள். அவர் சொன்னார் மீன் தரையில் இருந்த போது, நான் அதனை உண்ணவில்லை. அதேபோல் நான் கடலில் இருந்த போது அது என்னைத் தின்கவில்லை என்றாராம். இதனைத் தான் வள்ளல் பெருமான் வலியுறுத்திகிறார்.
முன்பு, சுலைமான் சேட் என்று ஒருவர் இருந்தார்,. அவர், உலகத்திலுள்ள எல்லா ஜீவ ராசிகளையும் மரம், செடி, விலங்கு, மனிதன் என எல்லா வகை ஜீவ ராசிகளையும் கொல்லக் கூடாது என்று சொல்லியுள்ளார். அவர், இறந்த பின், மோட்சம் செல்கிறார். அங்கு சென்றபின், நீதி தேவனைப்பார்த்து, ஏன் என்னை மோட்சத்தில் சேர்த்தீர்கள் என்று கேட்டுள்ளார். நீ தினமும் ஆண்டவரைத் தொழுகின்றாய். தின சரி, 5 வேளை குர்ரான் படிக்கிறாய்
. ஷார்ஜா சென்றேன் .. வட்டி வாங்கவில்லை இஸ்லாத்தில் என்ன விதி சொல்லப்பட்டுள்ளதோ, அதனை அப்படியே கடைப்பிடித்தேன். அப்படி இருந்தாலும் எனக்கு ஏன் மோட்சம் கொடுக்கப்பட்டது ? என்று மீண்டும் கேட்டுள்ளார்
மார்கழி மாதத்தில், அதிகாலையில் குர்ரான் படித்தபோது, ஒரு சின்ன பூனைக் குட்டி மிகவும் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தது. உடனே, உங்கள் மடியில் அதனைப் படுக்க வைத்து, அதற்கு கதகதப்பு ஏற்படுத்தினீர்கள். இந்த ஜீவகாருண்யம் தான் உங்களுக்கு மோட்சத்தைத் தேடிக் கொடுத்தது என்றாராம் நீதி தேவன்.
http://www.vallalarfiles.com/image/q7uBWYtuCn9exoOWmkwzYQ,$,3d,$,3d/sz-tn650/vee.3.jpg14180000.jpg
ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தால், ஆன்ம லாபம் கிடைக்கும். அதற்கு, இது ஒரு இணைப்பு. சங்கிலித் தொடர் போல. நீ சேர்த்து வைத்த ஆன்ம லாபம்தான் உனக்கு, உயிர்த்துணையால இருக்கும். புண்ணியம் தான் உன்னை மோட்ச வீட்டில் சேர்க்கும்.
ஈதல் இசைபட வாழ்தல் .. .. என வள்ளுவர் கூறியிருக்கிறார்.
பாரதப் போரில் பல அம்புகளால் துளைக்கப்பட்டு கர்ணன் கீழே சாய்கின்றான். அவனை அர்ஜூனனிடம் கொண்டு வந்தனர். ஆயிரம் அம்புகள் கர்ணனின் மேல் பாய்ந்தும் அவன் இறக்கவில்லை. இது ஏன் என அர்ஜூனனுக்கு விளங்கவில்லை. உடனே, கிருஷ்ண பரமாத்மாவிடம் அவன் இதற்கான காரணத்தைக் கேட்டான், அதற்கு, கிருஷ்ன பரமாத்மாவானவர், அவன் ஜீவ காருண்யத்தைக் கடைப்பிடித்து, ஆன்ம லாபத்தை ஈட்டி வைத்திருக்கின்றான். எனவே உயிர் வதை படாது. நாந்தான் வாங்க முடியும். என்று சொல்லி, ஒரு வயோதிக பிராமண வேடம் புனைந்து கர்ணனிடம் சென்றார். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கர்ணன் கேட்க, இமயமலையிலிருந்து வருகிறேன். யாசகம் வேண்டி வந்துள்ளேன் என்றார். இப்போது என்னிடம் உள்ளதைக் கேளுங்கள் என்று கர்ணன் சொல்ல, உனது உயிரை கொடு என்றார் கிருஷ்ண பரமாத்மா. மார்பில் பாய்ந்திருந்த ஒரு அம்பை எடுத்தவுடன், உதிரம் கர்ணனின் மார்பினிலிருந்து கொட்டியது. அதன் மூலம், தனது உயிரை அவர், கிருஷ்ண பரமாத்மாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். பகவான் அதனைத் தன் கைகளால் பிடித்தார். அனைத்தும் புண்ணியம். நான் வாங்கிக் கொண்டேன். சரி. கர்ணா .. உனக்கு இப்போது என்ன வேண்டும் என கிருஷ்ண பரமாத்மா கேட்டார். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். ஆனால், எந்தப் பிறவி எடுத்தாலும் உன்னன மறவாதிருக்க வேண்டும் என கிருஷ்ண பரமாத்மாவிடம் கர்ணன் சொன்னார்.
வள்ளலார், ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றுள்ளார். எனவே, வந்திருக்கும் அனைத்து அன்பர்களும், இதனைத் தவறாமல் தமது வாழ்க்கையில் கடைப்பிடித்து, மேலேற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
வீரமணி, வீரபாண்டி.
அரிது, அரிது, மானிடராய்ப் பிறத்தல் அரிது .. ஒளவையார் கூறிச் சென்றுள்ளார்.
புல்லாகிப் பூடாகி .. .. திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பிறப்புக்களுக்குப் பின் இந்த மனிதப் பிறப்பு கிடைத்துள்ளது. மனிதன் ஒருவனால்தான் இறைவனை அறிய முடியும். அவன் ஒருவனுக்குத்தான் இறவா நிலை அடைய வழியுள்ளல்து. அதற்குக் கடும் முயற்சி தேவை.
வையத்துள் வாழ்வாங்கு வானுறையும் … திருக்குறள் சொல்கிறது.
மனித குலத்தை நல்வழிப்படுத்த வள்ளற் பெருமான் அவதரித்தார். அகத்தே கறுத்துப் புறத்தே .. .. திரு அருட்பா. மனித உடலில் தீய எண்ணங்களை மாற்றுவதற்கென்றே, வள்ளற் பெருமான் வருகை புரிந்தார்.
இறைவனை அடைய சுருக்க வழி, ஜீவகாருண்யம் கடைப்பிடித்தல் ஆகும்.
பசியை ஆகாரம் கொடுத்துக் காப்பாற்றுதல் ஜீவகாருண்யம் கடைப்பிடித்தல் ஆகும்.
நோய் தீர்த்தல் ஜீவகாருண்யம் கடைப்பிடித்தல் ஆகும்.
இயற்கைச் சீற்றங்களில் மனிதர்களைக் காப்பாற்றுதல் ஜீவகாருண்யம் கடைப்பிடித்தல் ஆகும்.
உயிருக்கு வரும் எந்தத் துன்பத்தையும் போக்குதல், ஜீவகாருண்யம் கடைப்பிடித்தல் ஆகும்.
எந்த வகையாலும் இதனைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். அதுவே மோட்ச வீட்டின் திறவுகோல்.
ஜீவனென்ன .. சிவனென்ன .. திரு மூலர்.
எந்த வகையிலும் ஜீவர்களுக்கு பசிப்பிணியை தீர்க்க வேண்டும். அன்பு வழியில் தொண்டு செய்ய வேண்டும். அப்போது மேலான நிலையை அடையலாம். பசித்திரு – தனித்திரு – விழித்திரு என்று வள்ளற் பெருமான் சொல்லிச் சென்றுள்ளார்.
பட்டினி போடாதே என்று சொன்னவர் .. ஏன் பசித்திரு என்று சொன்னார் ? அருள் அடைவதற்கு, அறிவுப் பசியுடன் என்று சொன்னார்.
மனிதன் இறைவனை அடைவதற்கு, தனித்தன்மையுடன் வாழவேண்டும்.
என்பதுதான் தனித்திரு என்பதாகும்.
விழித்திரு – பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதில் மிக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் .. திருக்குறள்.
உமியை நீக்கி, அரிசியைக் காண்பது போல், ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து, இறைவனின் அருளுக்குப் பாத்திரர்களாக வேண்டும். என்றார்.
மற்றொரு சன்மார்க்க அன்பர் சொன்னார்.
மாநாட்டின் மூலமாக, ஒவ்வொருவரும், குறைந்தது, 10 நபர்களையாவது சைவர்களாக்க வேண்டும் என்பதை உறுதி மொழியாக, இங்கு எல்லோரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனிதனின் அழிவுக்கு 4 காரணங்கள் உண்டு. 1. உறக்கம், 2 அறிவு மயக்கம் 3. மதி மயக்கம் 4. பொருள் மயக்கம் என்று அவை வகைப்படும்.
இவைகளில் ஈடுபட்டால் அறிவு வேலை செய்யாது என்பதுதான் அதன் பொருள் ஆகும்.
http://www.vallalarfiles.com/image/SbMfrAtK6gec0m,$,2bWm,$,2fG9jQ,$,3d,$,3d/sz-tn650/vee4.jpg14240000.jpg
ஆசைப்படுவதும் அவத்தைக்குக் காரணம்தான். ஒரு பஞ்சாயத்து மெம்பர் பின்னர் தலைவராக ஆசைப்படுகிறார். பின்னர் M.L.A. ஆக வேண்டுமென்கிறார். அதன் பின்னர். அமைச்சர் ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறார்.
தருமம் தான் மானிடர்க்கு மூல நோக்கம் ஆகும்.
இம் மாநாடு இதுநாள் வரை தேனியிலே நடைபெற்று வந்தது. இம் முறைதான் வீரபாண்டியில் நடத்துகிறோம். பிச்சை எடுக்கக் கூடாது. ஆனால் பசி போக்க வேண்டும் என வள்ளற் பெருமான் சொல்லியுள்ளார். ஏனையோர் காவிஉடை உடுத்தியுள்ளனர். ஆனால் வள்ளலார், வெண்மையான ஆடையையே உடுத்தினார். மக்களை நல் வழிப் படுத்த அரும்பாடு பட்டார். பக்தியைக் கொண்டு முக்தியைப் பெற வேண்டும். அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் சொன்னாலே பக்தி தன்னாலே வரும். வெறும் பூட்டை கையினால் திறக்கலாம். மனப் பூட்டை ஜீவகாருண்யம் ஒன்றாலே மட்டும்தான் திறக்க இயலும். மகா மந்திரத்தை மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும்
இன்று வருமோ அல்லது நாளைக்கே வருமோ … திருவருட்பா
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
அடுத்து, நாராயணபுரத்திலிருந்து வந்த அன்பர் இதற்கு முன்னதாக, 2008 ஜூலை மாதத்தில், விழுப்புரத்தில் ஒரு மாவட்ட சன்மார்க்க மாநாடு வெகு சிறப்பாக நடந்தது என்று தெரிவித்ததர். மேலும் 1.8.208 முதல் 3.8.208 வரை, தூத்துக்குடி மாவட்டச் சன்மார்க்க அன்பர்கள், நெல்லை மாவட்டம், பாபநாசத்திற்கு அருகில், உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் 2ஆம் ஆண்டு இறை இயல் உண்மை மற்றும்,ல் தயவு சித்திப் பெருவிழாவினை வெகு அருமையான முறையில் நடத்தியதைப் பற்றி விவரித்தார். மேலும் அதனை அடுத்து, தேனி மாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறுவது எனக் கூறி, இதற்கென சீரிய முயற்சிகளை மேற்கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பின்னர், பாபநாசத்தில் அன்னதானப் பணி செய்துகொண்டிருந்த மலேசியா அன்பர் திரு தர்மலிங்க சுவாமிகள், தனது வாழ்வில் வள்ளல் பெருமானின் கொள்கைகளில் எவ்வாறு தீவிரம் பெற்றார் எதற்காக, இந்தியாவில் வந்து, பாபநாசத்தில், லட்சம் பேர் கூடும் இடத்தில் அன்னதானப் பணிகளை செய்து வந்தார் என்ற விவரத்தினைப் பர்றித் தெரிவித்ததையும் கூறினார்.
அதன் பின்னர், www.vallalarspace குறித்து விளக்கமாகப் பேசினார். அவர் சொன்னது.

.
USA வில் பணிபுரியும் திரு செந்தில் மருதையப்பனும் சிங்கப்பூரில் உள்ள திரு சிவக்குமாரும் இணைந்து, Temple of Grace Light, USA, America & Vallalar.org Foundation, Singapore மூலம் இந்த இணைய தளத்தினை கடந்த 2008 ஏப்ரல் மாதம் முதல், துவக்கிய தகவலை தெரிவித்தார்.
உண்மையில் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கப் பணிகள் செய்யும் சங்கங்கள், தனி நபர்கள் ஆகியோருக்கு இலவசமாக Space directory யில் இடம் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
இதுவரை இந்தியாவில் சுமார் 13 சங்கங்கள் மற்றும் தனி நபர்களும் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை, அமெரிக்கா, போன்ற வெளி நாடுகளில் வாழும் 12 பேரும் இணைந்துள்ளனர்.
அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் இந்த இணைய தளத்தில் ஒலிக்கின்றது
30 தினங்களில் நடைபெற உள்ள தகவல்கள், முன்கூட்டியே இதில் பார்த்துக் கொள்ளலாம். (upcoming events)
வள்ளல் பெருமானின் நெறி, இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த உலகத்தில் உள்ள கிட்டத்தட்ட 25 மொழிகளில் translate செய்து பார்ப்பதற்கு வகை செய்யப்பட்டுள்ளது
திரு அருட்பாவினை பதிக அடிப்படையிலும், பாட்டு முதற்குறிப்பகராதி வகையிலும், உடனே பார்க்க வசதி உள்ளது. இலவசமாக, திரு அருட்பா உபதேசம் மற்றும் விளக்கவுரை நூல்கள் ஆகியவற்றை டெளன்லோடு செய்து கொள்ளலாம்.
சங்கங்களிலே நடந்த நிகழ்ச்சி, போட்டோ, ஆடியோ, வீடியோ முதலானவற்றை இதில் அந்தந்த சங்கங்களே post செய்யும் வசதி உள்ளது.
தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் செய்திகள் / கட்டுரைகள் படிக்கலாம்
சுத்த சன்மார்க்கத்தில் சந்தேகங்களை மூத்த சன்மார்க்கிகளின் மூலமாகத் தெளிவு செய்து கொள்ளும் பகுதி உள்ளது.
Vallalar Space Radio (test) அவ்வப்போது திரு அருட்பாவினை இசைக்கிறது
வெளியிடப்பட்ட செய்தி குறித்த ஐயப்பாடுகளைத் தீர்ப்பதற்கும் வசதி உள்ளது.
எங்கும் சத்திய ஞான சபை கட்டினால் அதற்கென வடலூர் சத்திய ஞான சபை மாதிரி வரைபடம் இவ் விணைய தளத்தில் உள்ளது.(Sathiya Gnana Sabai Model plan blue print)
திரு அருட்பா ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்வதற்கென ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இம் முயற்சிகள் எல்லாம் ஆன்ம நேய ஒருமைப்பாடு (Universal Brotherhood) அகில உலக சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள், உலகில் உள்ள எல்லாத்தரப்பு மக்களிடமும் ஏற்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் தோன்றியதுதான்.
எங்கும் தேடிப் போக வேண்டாதபடி, கணிப்பொறி வீட்டில் இருந்தால், வள்ளல் பெருமானே நேரடியாகவே ஒவ்வொரு வீட்டினுள்ளும் இணைய தளம் வழியாகப் புகுந்து கொண்டு, சன்மார்க்க நெறியினன அனைவரும் இலவசமாகப் படித்து வாழ்வில் கடைப்பிடிக்க வழி செய்வதற்காகவே, இந்த ஏற்பாடு.
திரு அருட்பா ஒரிஜினல்ஆடியோ சி.டி. விற்பனை செய்யும் மையங்களின் பெயர்கள் குறித்த விபரம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு, திருட்டு சி.டி.களை வாங்கி மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதுதான்.
சமீபத்தில் மலையாளத்திலும், ஹிந்தியிலும் மொழிமாற்றம் செய்து விவரங்கள், post செய்யப்படுகின்றன.
வீரபாண்டியில் நடைபெறும் இந்த 45வது ஆண்டு உலக உயிர்கள் மாநாட்டு நிகழ்ச்சியும், 9.10.2008 அன்று மாலையில், தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்ட செய்தியின் அடிப்படையில், உடனடியாக இணைய தளத்தில் post செய்யப்பட்டுள்ளது.

. இந்த இணைய தளம் பற்றியும், இலவசமாக பதிவு செய்யலாம் என்ற வகையில் நோட்டீஸ்களும், அடையாள கார்டுகளும், வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தேனி மாவட்டச் சன்மார்க்க சங்க அலுவல் சார் குழுவினர், தமது சுத்த சன்மார்க்கப் பணி குறித்த விவரங்கள் தெரிவித்தால், இணைய தளத்தில் இடம் பெறலாம் என்றார். மாவட்டச் சன்மார்க்கம் என்ற ஒரு அமைப்பு, தேனி மாவட்டதில் இல்லை என்ற பதில் தெரிவிக்கப்பட்டது.
அப்படி என்றால், எப்பொழுது ஒரு மாவட்ட அமமப்பு உருவாகிறதோ அப்போது தெரிவியுங்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், இம் மாவட்டத்தில் உள்ள கிளைச் சங்கங்களில், எங்கெங்கு சன்மார்க்கக் கூட்டங்கள் நடைபெற்றாலும், அது குறித்து, சரியான தகவலைத் தெரிவித்தால், இணைய தளத்தில் இடம் பெறச் செய்யலாம் என்ற விவரமும் அவர்களிடமும் தெரிவிக்கப்பட்டது.
உண்மையான சுத்த சன்மார்க்கச் செயல்பாடுகளைச் செய்து வரும் சன்மார்க்க சங்கங்கள், தங்களது செயல்பாடுகளைப் பற்றித் தெரிவித்து, இந்த இணைய தளத்தில் இடம் பெறலாம். இது முற்றிலும் இலவசமாகத் தரப்படுகிறது என அவர் மேலும் கூறினார்.
அதன்பின்னர், மேட்டுக் குப்பத்திலிருந்து வந்து பங்கேற்ற திரு நந்தி சரவணன் பேசினார். அவர் பேசிய விவரங்கள்.
அனைவரும் சைவ நெறியினை தவறாமல் கடைப்பிடிக்க வேந்தும். ஜோதி வழிபாடு, மற்றும் மகா மந்திர உச்சாடனை செய்து கொண்டிருக்க வேண்டும். வள்ளல் பெருமான் சொன்ன மூலிகைகளை, தினந்தோறும் உண்ண வேண்டும். அவை, உடலை நீண்ட நாட்கள் கெடாத வகையில் பாதுகாக்கும் என்றார். தர்மம், தினமும் செய்யவேண்டும்.
அதன் பின்னர், ஒரு சில அன்பர்கள், திரு அருட்பா பாடல்களை இசையுடன் பாடினர்
வடலூரிலிருந்து திரு குரு பக்கிரிசாமி என்ற அருட்சுடரின் ஆசிரியர் மூலிகை மற்றும் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய புத்தக விற்பனை செய்து கொண்டிருந்தார்
அன்னதானம், 9.8.2008 சனிக்கிழமை மதியம் முதலே துவங்கி, 10.8.2008 ஞாயிற்றுக் கிழமை மதியம் வரை நடைபெற்றது. கிட்டத்தட்ட சன்மார்க்க அன்பர்களும், வறுமையில் உழல்வோரும், சுமார் 1,000 பேர் இங்கு நடைபெற்ற வைபவத்தில் வந்து உணவருந்தினர்.
உயிருள்ள ஆட்டினை, உயிரற்ற கற்சிலைக்கு பலியிடலாமா ? மாமிசத்தை உண்டு உமது வயிற்றை சுடுகாடாக மாற்றலாமா ? சிந்திப்பீர் என்ற வாசகங்கள் அடங்கிய ப்ளெக்ஸ் பேனரை கூட்டம் நடைபெற்ற ஹாலில் அனைவரும் பார்க்கும் வகையில் தொங்கவிட்டிருந்தனர். வள்ளற் பெருமானின் கொள்கைகளை, சிறு சிறு அட்டைகளில் எழுதி விளம்பரப்படுத்தி இருந்தனர்.
இந்த ஊருக்குச் செல்கையில், பேருந்தில் இருந்த ஒரு நபரை வீரபாண்டி என்ற ஊரில், ஸ்ரீ ராமராஜ திருமண மண்டபத்தில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. அங்கு செல்ல வழி சொல்லுங்கள் என்றவுடன், தனது ஜோப்புப் பையில் இருந்து வள்ளலாரின் திருவுருவப் படத்தை எடுத்துக் காண்பித்தார். நேற்று (9.8.2008) இதனை அனைவருக்கும் இலவசமாகக் கொடுத்தார்கள். பஸ் ஸ்டாண்டிற்கு வெகு அருகாமையிலேயே இந்த திருமண மண்டபம் உள்ளது என்றார்.
அதிகமான எண்ணிக்கையில், பெண்கள், இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அதேபோன்று, வயோதிக சன்மார்க்கிகள், இந்த மாநாட்டில், பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து, கலந்து கொண்டனர்.
தற்போதெல்லாம், சிறு தெய்வ வழிபாடு நடைபெறும் கோவில்கள் எங்கெல்லாம் உள்ளனவோ, அக் கோவில்களில் ஆடு கோழிகள் பலி வாங்கப் படுகின்றனவோ, அதனதற்கு அருகாமையிலேயே வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்தரங்குகளும், கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
உதாரணமாக, தூத்துக்குடி அன்பர்கள் ஏற்பாடு செய்த பாபநாசம் (அருகே விக்ரமசிங்கபுரம்) அருகே, ஆடி அமாவாசைக்கு லட்சோப லட்சம் மக்கள் கூடி அவ் விழாவினை அந்தப் பகுதியில் கொண்டாடினர். குறிப்பாக மலை மேல் உள்ள “சொரிமுத்து அய்யனார் கோவில்” என்ற இடத்தில், ஆடு, கோழி, உயிர்க்கொலைகள், சர்வ சாதாரணமாக செய்யப்பட்டு வருகின்றன. இந் நிகழ்ச்சி பிரதி மாதமும் அமாவாசையை ஒட்டி செய்யப்படுகிறது.
அதேபோல், இந்த வீர பாண்டி என்ற (பேரூராட்சி) இயற்கை எழில் பொங்கும் கிராமத்தில் தேனி மாவட்ட அன்பர்கள், விழா எடுத்த இடத்தின் அருகாமையில் ஸ்ரீ கெளமாரியம்மன் ஆலயம் இருக்கின்றது. இங்கும் சிறு தெய்வ வழிபாடு நடைபெறுகிறது. ஆடு, கோழி உயிர்க்கொலையும் இங்கு விழா நாட்களில்,. சர்வ சாதாரணமாகச் செய்யப்படுவதும் இந்த ஏரியாவில் வாழும் மக்களால் பன்னெடுங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது ஒரு வேதனைக்குரிய விஷயம்.
எனினும், ஜீவ காருண்யத்தை வலியுறுத்திய வள்ளல் பெருமானின்சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் குறித்த கலந்துரையாடல்கள், கூட்டங்கள் எல்லாம், சமீப காலத்தில், இந்த விதமான (உயிர்க்கொலைகள் நடைபெறும்) சிறு தெய்வக் கோவில்கள் அமைந்த இடத்தில் நடத்தப் பெறுவதன் மூலமாவது பெருமானாரின் உயரிய உயிர் ஒழுக்க நெறியினை அங்கு வரும் மக்கள் இனியாவது தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
இனிமேலும், இது போன்ற இடங்களில் உயிர்க்கொலை நடைபெறாத விதத்தில், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும், வள்ளல் பெருமான் அருள் பாலிக்க வேண்டும் என்பது இச் செய்தியினைப் படிக்கும் அன்பர்கள் - தாம் மனதால், வேண்டிக்கொள்ள வேண்டிய கோரிக்கையில், ஒன்றாகும்.
உலக உயிர்கள் என்றதொரு அருமையான தலைப்பில் நடைபெறும் இம் மாநாட்டினை நடத்துவதற்கு மூல காரணமானவர், “உயிர்களின் அடிமை – ஜீவரட்சகமணி என்ற வடலூர் சு.முத்துச்சாமி”, பூதிப்புரம், தேனி மாவட்டம் ஆகும் என கூட்டத்தில் கேள்விப்பட்ட வகையில் தெரிய வந்தது. பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் விவரம் அச்சடிக்கப்பட்டு உள்ளது.
அவரது தற்போதைய வயது 85 எனவும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு, (International award for soulful compassion) சர்வதேச விருது, 3 ஆண்டுகளுக்கு முன்னதாக, கோயம்புத்தூரில் அருட் செல்வர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அவர், தற்போது, வ்யோதிகம் காரணமாக, எழுந்து நடமாட முடியாத நிலையில் உள்ளதால், அவரைப் பின்பற்றி, போடி மீனாக்ஷிபுரம் திரு என்.சிவகுமார் என்பவராலும், (Proprietor, Vallalar Milk Society Bodi Meenakshipuram- Co ordinator), திரு I. மொக்கச் சாமி, B.A., L.I.C. முகவர், உத்தமபாளையம் மற்றும், எம். மதியழகன், கம்பம், து. கணேசன், போடி மீனாக்ஷிபுரம் மற்றும் கூ. ராமர், போடி மீனாக்ஷிபுரம் ஆகியோராலும், ஒரு கூட்டு முயற்சியாக, வீரபாண்டி கிராமத்தில் நடத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், தமிழகத்தின் ஒரு கடை கோடியில், தென் மேற்குப் பகுதியில் அமைந்திருந்தாலும், இந்த அன்பர்களின் ஆர்வம், சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, ஏனைய மக்களும், தேனி அல்லாது, வெவ்வேறு இடங்களில் நடத்துவதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு சீரிய கருத்தின் அடிப்படையிலும்தான் வீரபாண்டியில் நடத்தப்பட்டுள்ளது என்பது, அங்கு, சென்று கண்கூடாகக் கண்ட விதத்தில் புலப்பட்டது.
கொடுக்கப்பட்ட தலைப்பு (45-ம் ஆண்டு உலக உயிர்கள் மாநாடு), இம் மாநாடு நடத்தியவர்களுக்கு ஒரு சிறப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஒருவேளை இத் தலைப்பினைத் தேர்வு செய்து, வாழ்க்கையையே அவ் விதமாக மாற்றிக் கொண்டதுதான் திரு சு.முத்துச்சாமிக்கு - ஒரு சர்வதேச விருது பெறுவதற்குக் காரணமாக அமைந்ததோ ?. இருக்கலாம். எனினும் தமிழ் நாட்டில் நடைபெறும் சன்மார்க்கக் கூட்டங்களில் தட்டுப்படாத ஒரு சிறப்பான தலைப்பை இம் மாவட்டம் தேர்வு செய்து அதனை அதே தலைப்பின்கீழ் பல வருடங்களளக நடத்திக் கொண்டிருப்பதும், ஒரு சிறப்புக்குச் சிறப்புத்தானே .. ...
இக் கூட்டத்தில், 2 நாள் நிகழ்ச்சிகளில், கிட்டத்தட்ட 500 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.