HyperLink HyperLink

பாபநாசம் கூட்டம் 1.8.2008 முதல் 3.8.2008 வரை நடைபெற்ற விழா நிகழ்ச்சி

 

 

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், தூத்துக்குடி
 
தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழா
 
1.8.08 – 3.8.08 (மூன்று நாள் நிகழ்ச்சிகள்)
 
      தூத்துக்குடி நகரில் மில்லர்புரம் நீச்சல்குளம்  அருகே “வள்ளலார் நந்தவனம்” என்னும் இடத்தில் சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நடத்தும் அன்பர்கள் வருடா வருடம், சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் நடத்தும் வழக்கத்தினை கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தொடங்கி, நடத்தி வருகின்றனர்.
 
2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சி (முதலாம் ஆண்டு நிகழ்ச்சி)
 
             கடந்த ஆண்டு, இந் நிகழ்ச்சி, 11.8.2007 மற்றும் 12.8.2007 ஆகிய நாட்களில், தூத்துக்குடி மில்லர்புரம் திருமந்திர நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அப்போது சென்னையில் வசித்த  ராமானுஜம் மற்றும் மதுரையில் இருந்து தயவு விஜயராமன் ஆகியோர் இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வந்து சுத்த சன்மார்க்க உரை நிகழ்த்தினர்
 
        இந் நிகழ்ச்சியில் சுமார் 60 சன்மார்க்க அன்பர்களும், வள்ளலார் நந்தவனத்திற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்துப் பயன்பெற்றனர். 2 நாட்களும் கலந்து கொண்டோருக்கும், ஏழை மக்களுக்கும், சிறப்பாக அன்னம் பாலிக்கும் பணி நடைபெற்றது.
 
         அந்த வகையில், நடப்பு 2008ஆம் ஆண்டில்  இந்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த அலுவல் சார் குழுவினர், 1.8.2008 (வெள்ளிக்கிழமை மாலை) முதல் 3.8.2008 (ஞாயிற்றுக்கிழமை) வரை தயவு இறை இயல் உண்மை சித்திப் பெருவிழாவினை (இரண்டாம் ஆண்டு தொடக்க விழா) அதே போன்றதொரு கூட்டத்தினை நடத்துவதற்குத்  திட்டமிட்டனர். இவ் விழாவினை, அருகில் உள்ள திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் உள்ள சாது சிவா சுவாமிகள் ஆசிரமத்தில் நடத்துவதற்கு முதலில், முடிவு செய்தனர். அதையே எண்ணி. அனைவருக்கும் தகவல் தந்து விட்டனர்.
 
          ஆனால், பாபநாசத்தில், ஆண்டு தோறும் ஆடி அமாவாசை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருவதால், அதில் கலந்து கொள்வதற்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான அன்பர்கள் அங்கு வரும் சூழ்நிலையில், இந் நிகழ்ச்சியை சாது சிவா சுவாமிகள் ஆஸ்ரமத்தில்,  சிறப்பாக நடத்த முடியாது எனக் கருதி, பின்னர், பாபநாசம் நகருக்கு வெகு அருகாமையில் (நடை தூரத்தில்) உள்ள விக்கிரமசிங்க புரம் உலகாம்பிகை திருமண மண்டபத்தில் நடத்துவதற்கு முடிவு செய்தனர். அனைத்து அன்பர்களுக்கும், முன்கூட்டியே, இத் தகவலையும் தெரிவித்து விட்டனர்.
 
        சாது சிவா சுவாமிகள், வருடந்தோறும் அவர்களது ஆஸ்ரமத்திற்கு வருகை தரும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னம் பாலிக்கும் பணியை இந்த ஆடி அமாவாசை நாளில், மேற்கொள்வதால், அவர்கள் தமது பணியை செய்வதற்கு வசதியாக, அவர்களிடமும் தெரிவித்து விட்டு,  குறிப்பிட்ட இந் நிகழ்ச்சியை அருகே உள்ள உலகாம்பிகை திருமண மண்டபத்தில் மேற்கொண்டனர்.
 
1.8.2008 (வெள்ளிக்கிழமை)
 
        இந் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதற்கெனதஞ்சாவூர், திண்டுக்கல், வடலூர். சின்னாளப்பட்டி, விழுப்புரம்,  கும்பகோணம் கோயம்புத்தூர், நாராயணபுரம் (மதுரை), ஐயர் பங்களா (மதுரை)  திருப்பரங்குன்றம், திருப்பூர், பெங்களூர் (அன்பரசன்),  பட்டி வீரன்பட்டி (திண்டுக்கல்), பெருங்குடி (மதுரை),  சென்னை,  புதுச்சேரி மாநிலம் சாகாக்கல்வி பத்திரிகை நடத்தும் ஆசிரியரின் குழுவில் உள்ள அன்பர், தூத்துக்குடி, திருநெல்வேலி முதலான இடங்களில் இருந்தும் அன்பர்கள் பெருமளவில், மாலை சுமார் 4.00 மணி முதலே திருமண மண்டபத்தில் குவியத் தொடங்கினர்.
 
இவ் விழாவிற்கு வருகை தந்திருந்த அன்பர்கள், தங்குவதற்கு திருமண மண்டபத்தில் மையப் பகுதியும், பெண்களுக்கு தனி அறைகளும், அந்த திருமண மண்டபத்தில் இருந்த மேல் மாடியில் உள்ள அறைகளும் ஒதுக்கப்பட்டிருந்தன. எனவே, வெளியூரில் இருந்து வந்த அன்பர்கள், எவ்வித சிரமுமின்றித் தங்கி, நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 
 
          விழா அறிவிப்பு பேனர்கள், திருமண மண்டபத்தின் முகப்பில் தொங்க விடப்பட்டன.
 
                    நிகழ்ச்சித் தொகுப்பாளர் மதுரை தயவு விஜயராமன், அனைவரையும் வரவேற்றார்.
 
பின்னர், திரு அருட்பா பாடல்களை, அன்பர்கள் அனைவரும் பாடினர். இதில் குறிப்பாக, அருட்பா திரு ரங்கநாதன் அவர்கள், திரு அருட்பா பாடல்களை நல்ல இசையுடன் பாடினார். அதேபோல், மதுரை திரு ஹரி கோவிந்தன், திருப்பரங்குன்றம் திருமதி அம்மாக்கண்ணு, சங்கீத சிரோமணி, திருமுறை இசைவாணி திருமதி G.S. கோமதி நாராயணன் ஆகியோர், திரு அருட்பா பாடல்களை, மனமுருகப் பாடி, வந்திருந்த அன்பர்களை, மிகவும் பரவசப் படுத்தினர்.
 
சின்னாளப்பட்டி சன்மார்க்கப் பெரியோர் திரு வி.பி.ஷண்முகம் அவர்கள் திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் அருட் கருத்துக்களை, புத்தக வடிவில் ஆக்கம் செய்து, கலந்து கொண்ட அன்பர்கள் அனைவருக்கும் வினியோகித்து, அதனை அனைவரும் அறியும் வண்ணம் வாசித்து, அதன்பின்னர், சத் விசார நிகழ்ச்சி நடத்தி, வந்திருந்த அன்பர்களின் விசார அறிவினைப் பெருக்கும், பெரும் தொண்டினைச் செய்தார்.
 
மலேசியாவில் சுங்கப்பட்டானியில் இயங்கி வரும் அருட்ஜோதி நிலைய அன்பர் டாக்டர் திரு விநாயக மூர்த்தி அவர்களும், இ.மெயில் மூலம் சன்மார்க்க விரிவுரையாளர் திரு தர்மலிங்க சுவாமி அவர்கள், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் பாபநாசம் நகரில், அன்னதானப் பணி மேற்கொண்டிருப்பதைத் தெரிவித்தார். மலேசியாவில் உள்ள சில அன்பர்களுடன் உடன் வந்து, திரு தர்மலிங்க சுவாமி இப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் டாக்டர் திரு விநாயக மூர்த்தி அவர்கள், நாராயணபுரம் சன்மார்க்க அன்பருக்கு இ.மெயில் மூலம் தகவல் தந்திருந்தார். இவ் விபரம், நிகழ்ச்சி நடத்தும் ஒருங்கிணைப் பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
 
. மலேசியாவில், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, வெகு எளிமையாக, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில், சொற்பொழிவு நிகழ்த்தி வரும் திரு தர்மலிங்க சுவாமி அவர்கள்,  பாபநாசத்திற்கு  வந்து இருப்பதால், அவரையும், இந் நிகழ்ச்சியில் பங்கு பெறச் செய்ய வேண்டும் என, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், திரு கலியுக வரதனும் திரு கணேசனும் விரும்பினர்.
 
 எனவே தர்மலிங்க சுவாமி அவர்களிடம் இங்கு 3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்துச் சொல்வதற்கும், இந் நிகழ்ச்சியில் அவரும் பங்கு கொண்டு, வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை கலந்து கொண்டுள்ள அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்தியம்ப வேண்டும் என்பதை எடுத்துச் சொல்வதற்கும், திண்டுக்கல்லில் இருந்து வந்திருந்த தயவு விசுவநாதனையும், மதுரை நாராயணபுரத்தில் இருந்து வருகை புரிந்த சன்மர்க்க அன்பர் ஒருவரையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு கலியுக வரதனும், திரு கணேசனும் அனுப்பி வைத்தனர்.
 
அவர்கள், பாபநாசம் சேனைத்தலைவர் 3வது மண்டகப்படியில் அன்னதானப் பணி மேற்கொண்டிருந்த திரு தர்மலிங்க சுவாமிகளை நேரில் சந்தித்து,  அருகாமையில், தூத்துக்குடி மாவட்ட அன்பர்கள் 3 நாட்கள், சுத்த சன்மார்க்க முகாம் நடத்துவதைத் தெரிவித்து, அம் முகாமில் அவரும் பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும் எனவும் அதன் மூலம் அந் நிகழ்ச்சிக்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். திரு தர்மலிங்க சுவாமிகளும் அக் கோரிக்கையினை ஏற்று, தமக்கு அன்னதானப் பணி தொடர்ந்து இருந்து வரினும், அன்பர்களின் வேண்டுகோளின்படி, மறுநாள் (2.8.2008) அன்று அந் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக உறுதியளித்தார்.
 
இரவு நிகழ்ச்சி நடைபெற்ற உலகாம்பிகை திருமண மண்டப அரங்கில் உலக சமாதானத்திற்காக,  கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அனைவரும் பங்கேற்றனர்.
 
2.8.2008 (சனிக்கிழமை) காலை சுமார் 5.30 மணி.
 
         அதிகாலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் துவங்கப்பட்டது. அனைத்து அன்பர்களும் இதில் கலந்து கொண்டனர்.
     
 
காலை 10.30 மணி.
 
        சுத்த சன்மார்க்கக் கொடியேற்றம் துவங்கியது. அன்பர்கள் அனைவரும் திருமண மண்டப வாயிலில் உள்ள கொடிக்கம்பத்தில், திரு அருட்பாவில் உள்ள சிற்சக்தி துதி கொடிப்பாட்டினைப் பாடி சன்மார்க்கக் கொடியினை விண்ணை முட்டும் அளவில்,  உயரப் பறக்க விட்டனர்.  சன்மார்க்கச் சான்றோர்கள், மதுரை மாவட்ட சன்மார்க்கச் சங்கத் தலைவர், திரு டி.ஆர். ஜவஹர்லால் மற்றும் தூத்துக்குடி தயவுத் திரு அன்பர் கலியுக வரதன், தயவுத்திரு கணேசன், ஆகியோர் இந் நிகழ்ச்சியினை முன்னிலை வகித்து நடத்தி வைத்தனர்.
 
       இந் நிகழ்ச்சி நிரலில், கீழ்க்கண்ட வாசகம் கண்டிருந்தது.
 
        “சில ஆண்டுகளுக்கு முன் அண்ணா, தயவு ஜோதி முருகன் அவர்கள், பாபநாசத்தில், சாது சிவா சுவாமிகள் ஆசியுடன், சுத்த சன்மார்க்க வாழ்வியல் பயிற்சி முகாம் இரண்டு தினங்கள் எல்லோரும் மகிழும்படி சிறப்புற நடத்தி அருளினார்கள்”.      
 
         எனவே, இந் நிகழ்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்த இராமநாதபுரம் வள்ளலார் யுனிவர்சல் மிஷன் ட்ரஸ்ட் நடத்திவந்த திரு ஜோதி முருகன் ஐயாவைப்பற்றியும், அவர் ஆற்றிய சன்மார்க்கப் பணிகளைப்பற்றியும், இவ் விழாவில் பங்கேற்ற அனைவரும் அறிந்து கொள்வதற்கு வசதியாக, அவரது உறவினரான, (மதுரை) நாராயணபுரத்திலிருந்து வந்திருந்த அன்பரைப் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
 
        திரு ஜோதிமுருகனின் சன்மார்க்க பணிகளை அவர் கீழ்க்கண்டவாறு விவரித்தார்.
 
1)     திரு ஜோதிமுருகனின் இயற்பெயர் கனகசபாபதி ஆகும்.
2)     அவர், 1937ஆம் ஆண்டு, பரமக்குடியில் பிறந்தார்.
3)     தகப்பனார் பெயர் சாமிநாதன். தாயார் ஆறுமுகம் அம்மாள்.
4)     ஆரம்பத்தில் செட்டில்மெண்ட் துறையில் அவர் பணி புரிந்தார்.
5)     அவருடன் பிறந்தவர்கள், 4 சகோதரர்கள்,  6 சகோதரிகள் ஆவர்.
6)     மதுரையில் ஷெனாய் நகரில் இருந்த செட்டில்மெண்ட் ஆபிசில் பணி புரியும் போது, 1959ஆம் ஆண்டு வாக்கில், அவர், முருகப் பெருமானின் பேராற்றலால் ஈர்க்கப்பட்டு, தமது உத்யோகத்தையே ராஜினாமா செய்துவிட்டு, பெருமானின் பணிகளில் ஈடுபடப் போவதாக தெரிவித்துவிட்டு, அவரது அண்ணன் சங்கரன் கோவிலில் இருந்த திரு அய்யாத்துரை என்பவரிடம் சென்றார். பணியிலே முழு ஈடுபாடு கொண்டு செயலாற்றும் இவரது இந் நிலையைக் கருதி, அப்போது மதுரை செட்டில்மெண்ட் ஆபீசராகப் பணிபுரிந்த திரு சஞ்சீவி ஐ.ஏ.எஸ் அவர்கள், இவரது ராஜினாமா கடிதத்தை ஏற்காமல், ஒரு சில நாட்களில் அவர் நிலை சீர்பட்டபின்பு, அவரது ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக் கொள்ள உதவி செய்தார்.          அதன் பின்னர், தொடர்ந்து செட்டில்மெண்ட் அலுவலகத்திலேயே அவர் பணிபுரியவும், அனைவரும் உதவினர்.
7)                        அவரது நிலைமையை உணர்ந்த அவரது தமயனார் திரு அய்யாத்துரை உடனடியாக பெண் பார்த்து, அவருக்கு ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஷண்முக லெட்சுமியைத் திருமணம் செய்து வைத்தார்.
8)     செட்டில்மெண்ட் துறை ஒரு கால கட்டத்தில், கலைக்கப்பட்ட பின்னர், அவர், தனது பணியை, வருவாய்த் துறையில் தொடர்ந்தார்.
9)     அரசுத் துறையில் பணி புரிந்தாலும், இவருக்கு, ஆன்மீகத் துறையில்   நாட்டம் மிக அதிகம் இருந்தது. ஒரு கால கட்டத்தில், திரு அருட்பிரகாச வள்ளலாரை தனது குருவாகக் கொண்டார். திரு அருட்பாவினை தனது ஆன்மீக வழிகாட்டியாகக் கொண்டார். தொடர்ந்து வடலூர் செல்லும் வழக்கத்தை ஒவ்வொரு தைப்பூசத்திலும் மேற்கொண்டார். முதலில் தாம் மட்டும் சென்றார். ஒரு கால கட்டத்தில், இவருடன் அன்பர்கள் பலரும், வடலூருக்கு செல்லும் வாய்ப்பு இவரால் ஏற்படுத்தப்பட்டது. அங்கு சென்று, அன்னதானப் பணிகளை, பிரதானமாக மேற்கொண்டார். 1970ஆம் ஆண்டில் இவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டார், அந் நிலையிலும், வள்ளற் பெருமானிடமும், திரு அருட்பாவிலும் தீவிர நாட்டங்கொண்டு அதனைப் பயிலலானார். அவர், தனது பெயரை, ஜோதிமுருகன் என மாற்றம் செய்து கொண்டார்.திருவாடானை தேவகோட்டை, கோவில்பட்டி, பரமக்குடி என பல்வேறு இடங்களில் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்தாலும், இராமநாதபுரத்தில் இவர் 1.7.1974 அன்று பணியேற்ற பின், இவரது வாழ்வு புதிய பரிமாணம் பெற்றது. அங்கு எப்போதெல்லாம் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை பரப்பும் வகையில் சொற்பொழிவுகள் நடைபெறுமோ, அதில் எல்லாம்,  தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். முதன் முதலில் ராமநாதபுரம் சிவன் கோவிலில் திரு அருட்பா சத் விசாரம் மற்றும் சொற்பொழிவுகளை மேற்கொண்டார். திருவாடானையில் அப்போது வசித்த இவரது தமயனார் திரு அய்யாத்துரை அவர்களும், இவருக்கு, சன்மார்க்கக் கல்வியிலும், ஒழுக்கத்திலும் இருந்த தீவிர நாட்டம் கருதி, தாமே இராமநாதபுரத்திற்கு வந்து சன்மார்க்கச் சொற்பொழி வாற்றினாராயினர்.  சன்மார்க்கத்தில் தமிழ் நாட்டின் பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வந்த, மூத்த அன்பர்களை அழைத்து வந்து,  மற்ற அன்பர்களும் சுத்த சன்மார்க்கத்தின் உயர்வினை அறியும் வண்ணம் அவர்களும், வள்ளல் பெருமான் காட்டிய வழியில், தமது வாழ்க்கையினில் ஈடுபட வேண்டும் என்ற பொது நோக்கில்,  சொற்பொழிவுகளை நிகழ்த்தச் செய்தார். இவரது இப் பணியால், ராமநாதபுரத்திலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சுத்த சன்மார்க்க நெறி, வேகமாகப் பரவியது. பல அன்பர்கள், தமக்கு ஏற்படும் சந்தேகங்களை இவரிடம் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
10)துணை வட்டாட்சியர், பின் வட்டாட்சியர் என்ற பணி உயர்வு அவருக்கு, காலத்தே ஏற்பட்டது. மிகுந்த பொறுப்புனர்வுடன் அவர் வருவாய்த் துறையில் பணி புரிந்ததால், அவருக்கு, தேர்தல் வட்டாட்சியர் பணியிடம் ஒதுக்கப் பட்டது. ஏனைய நிலைகளில் அவர் வட்டாட்சியராக, திருவாடானை மற்றும் பல இடங்களில் பணி ஆற்றியிருப்பினும், தேர்தல் என அரசு அறிவித்து விட்டால், இவரை உடனே, தேர்தல் தனி வட்டாட்சியராகப் பணி மாற்றி, இவர் மூலம், தேர்தல் பணிகளை செவ்வனே ஆற்றுவதற்கு, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
11)துணை வட்டாட்சியர் நிலையில் பணி புரியும் பொழுது, இவர்மேல், திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் அருட் பார்வை விழுந்தது. சுவாமிகளின் நூல்களை, பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று, விற்பதை, தமது தலையாய பணியாக அவர் மேற்கொண்டார். ஒவ்வொரு தைப் பூச நாளின்போதும், வடலூரில் சுவாமி சரவணானந்தா அவர்களின் நூல்களை புக் ஸ்டால் போட்டு, விற்பனை செய்து, அன்பர்கள், பயன்பெற உதவினார். பின்னர்,  ராமநாதபுரம் நகரில், கேணிக்கரை என்ற பகுதியில் 1991ஆம் ஆண்டில், அன்பர்களின் பேராதவுடன்,  ஒரு தயவு ஆலயம் கட்டினார். இவரது சுத்த சன்மார்க்கப் பணியை ஊன்றிக் கவனித்து வந்த தயாநிதி திண்டுக்கல் சரவணானந்த சுவாமிகள், கேணிக்கரையில் கட்டப்பட்ட அந்த தயவு ஆலயத்திற்குத் தாமே  வருகை தந்து, திறந்து வைத்தார்கள். அனாதைக் குழந்தைகள் அங்கேயே தங்கிப் படிக்கும் ஒரு நிலையமாக, கேணிக்கரை தயவு ஆலயத்தினை அவர் மாற்றினார்.
12)வட்டாட்சியர் நிலைக்கு மேல், துணை ஆட்சியர் (Deputy Collector Cadre) என பணி உயர்த்தப்பட்டதும், இவருக்கு, வடலூருக்கு அருகாமையில் உள்ள காடாம்புலியூர் என்ற இடத்தில் இயங்கி வரும் கெம்ப்ளாஸ்ட் என்ற நிறுவனத்தில்,  வடிசாலை அலுவலராகப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெருமானின் அருட்கருணை தான் தன்னை, இந்த இடத்தில் பணி நியமித்தது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் துதித்து, அடிக்கடி வடலூர் செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டார். தனது ஐந்து குழந்தைகளையும் அவர்களின் பரி பக்குவத்திற்கேற்ப, காலத்தே திருமணம் செய்து வைத்தார். பின்னர், இவர் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றார் 1996ஆம் ஆண்டில் இவரது மனைவியார் திருமதி ஷண்முக லெட்சுமி காலமானார்..
13)அதன் பின் இவர் முழுமையாக தன்னை, வள்ளலாரின் சுத்த சன்மார்க்கப் பாதையில் ஈடுபடுத்திக் கொண்டார். தைப்பூச நாட்களுக்கு, வடலூர்ப் பெருவெளியில், ஏழைகளுக்கு அன்னம் பாலிப்புப் பணியினை அன்பர்களின் உதவியினைப் பெற்று,  மிகுந்த சிரமத்துடன் மேற்கொண்டு வந்தார். அடிக்கடி, வடலூர் சென்று வந்ததன் மூலம், வடலூரில், தர்மச்சாலை செல்லும் வழியில், ஒரு தங்கல் மனையினை அன்பர்களின் உதவியுடன் கிரையம் Ī