விழுப்புரத்தில் நடைபெற்ற மாவட்ட சன்மார்க்க சங்க நிகழ்ச்சித் தொகுப்பு
Ramanujam
posted 25 months ago
30 Jul 2008 11:55:48 GMT 11:55:48 AM
979 views
விழுப்புரம் மாவட்ட சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு.
நாள் 26.7.2008 (சனிக் கிழமை) ஆடி 11ம் நாள்
27.7.2008 (ஞாயிற்றுக் கிழமை) ஆடி 12ம் நாள்
இடம் – கரும்பு விவசாயிகள் சமுதாயக் கூடம், விழுப்புரம்.
விழுப்புரம் மாவட்டத் தலை நகரில், சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு சீரோடும், சிறப்போடும் கடந்த 26.7.2008 மற்றும் 27.7.2008 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
அதன் முன் நிகழ்ச்சியாக, தெருக்கள் தோறும் சன்மார்க்க கொடி தோரணமாகத் தொங்க விடப்பட்டது.
இம் மாநாடு, விழுப்புரத்தில் நடைபெறுவது குறித்த செய்தி, நாலா பக்கங்களிலும் பரவும் வண்ணம் சுவர் விளம்பரங்கள் மூலம் நல்ல முறையில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
விழுப்புரம் நகர் முழுவது, மெயின் ரோட்டில் உள்ள கட்டிடங்கள் குறிப்பாக, ஒயின் ஷாப்கள், பஸ் ஸ்டாப்புகள் அனனத்துமே, இந்த சன்மார்க்க எழுச்சி பற்றிய செய்தியினைத் தாங்கி நின்றன.
“வள்ளலார் அழைக்கிறார்” என்ற வாசகத்துடன், சுவர் விளம்பரங்களும், பிளெக்ஸ் பேனர்களும், போஸ்டர்கள் மூலமும், விழுப்புரம் நகரை அலங்கரித்தன.
{PhotoThumbRefr:655} |
{PhotoThumbRefr:656} |
{PhotoThumbRefr:657} |
{PhotoThumbRefr:658} |
{PhotoThumbRefr:659} |
26.7.2008 (சனிக்கிழமை)
காலை 5.30 மணியளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் படப்பை திரு ஆர். பாலகிருஷ்ணன் அவர்களால் துவக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து வந்த சன்மார்க்கச் சான்றோர் இந்த பாராயண நிகழ்ச்சியில் அதிகாலை முதலே கலந்து கொண்டனர்.
பல மாவட்டங்களிலுமிருந்து வந்த அன்பர்கள் தங்குவதற்கென தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
சுமார் 6.30 மணை அளவில் திரு அருட்பிரகாச வள்ளலாரின் திரு உருவப் படம் விழுப்புரம் திரு பரசு இராம மூர்த்தி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் 7.30 மணியளவில் சன்மார்க்கக் கொடி, திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமனார் அவர்கள் முன்னிலையில் திரு கெடார் சி. பழனிவேல் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.
மூத்த சன்மார்க்க அன்பர்கள் முன்னிலையில் கொடி ஏற்று வைபவம் நடைபெற்றது.
அதன் நினைவாக, ஒரு அடிக்கல்லும், நிகழ்ச்சி நடைபெற்ற கட்டிடத்தின் எதிர்புறம் நடப்பட்டது.
பின்னர், சன்மார்க்க விழிப்புணர்வு நகர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில், பள்ளிக் குழந்தைகள், கோலாட்டம், காவடி, கும்மி ஆகியவற்றுடன் வலம் வந்தனர். குறிப்பாக, இதில், தெள்ளாரம்பட்டு மற்றும் கண்டாச்சிபுரத்திலிருந்து மாணாக்கர்கள் குழு கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ் விழிப்பு நகர்வலம், விழுப்புரம் வள்ளலர் அருள் மாளிகையிலிருந்து புறப்பட்டு, கரும்பு விவசாயிகள் சமுதாயக்கூடம் வரை சென்றடைந்தது. சன்மார்க்கக் கொடியினை ஊர்வலத்தினர் ஏந்தி வந்தனர். இரு சக்கர வாகனங்களில் அன்பர்கள், சன்மார்க்கக் கொடியினை ஏற்றிக் கொண்டு, வலம் வந்தது, ஒரு கண்கொள்ளாக் காட்சியாகும். அதனை அடுத்து, திரு அருட்பா இன்னிசை விருந்து நடந்தது.
காலை சுமார் 9.00 மணியளவில், ஸ்ரீ காகபுஜண்டர் (என்ற)ஸ்ரீ தர்மலிங்க சுவாமிகள், காகாஸ்ரமம், திருவண்ணாமலை, அன்னதான நிகழ்ச்சியினைத் துவக்கி வைத்தார்.
வந்திருந்த அனைவரையும், விழுப்புரம் மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்களின் எழுச்சி மாநாட்டுக் குழுவின் தலைவரும், விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (வடக்கு) யின் தலைவருமான ஆன்ம நேயன் திரு ஜெய.அண்ணாமலை Ex M.C., அவர்கள், வரவேற்றார்.
அறிமுக மற்றும் தொகுப்புரையினை விழுப்புரம் அருட்பா ம. கோவிந்த சாமி அவர்கள் அளித்தார்.
அதன்பின்னர். நிகழ்ச்சி நிரலில் கண்டபடி. அனைத்து நிகழ்ச்சிகளும் அந்தந்த குறிப்பிட்ட அன்பர்களால் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, செங்கல்பட்டிலிருந்து கலந்து கொண்ட செல்வி சரஸ்வதி, இரவு 8.10 முதல், 8.50 வரை, திரு அருட்பாக்களுக்கு, நடனம் ஆடி, அனைத்து அன்பர்களின் உள்ளங்களிலும் இடம் பெற்றார். கிட்டத்தட்ட 6 திரு அருட்பாக்களுக்கு, எந்த இடைவெளியுமின்றி, அடுத்தடுத்து சரஸ்வதி, நல்ல அபிநயத்துடன் பரத நாட்டியத்தை ஆடி, அனைவரையும் ஆட்டுவித்தார்.
இரவு சுமார் 10.00 மணியளவில், வள்ளலார் வாழ்க்கை வரலாறு நாடகம் நடித்துக் காட்டப்பட்டது.
27.7.2008 (ஞாயிறு)
காலையில் அருட்பெருஞ்ஜோதி அகவல் படிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நிரலில் கண்டபடி அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவேற்றப்பட்டன.
இந் நிகழ்ச்சியில், விழுப்புரம் நகரிலிருந்து திரளான மக்கள் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெருவாரியாக வெளி மாவட்டங்களிலிருந்து அன்பர்கள் கலந்து கொண்டதால், அவர்களுக்குப் பசியாற்றுவிக்கும் பணி, 25/7/2008ந் தேதி முதலே துவங்கியது.
இம் மாநாட்டில் கிட்டத்தட்ட 20,000 நபர்கள் கலந்து கொண்டு சுத்த சன்மார்க்க கருத்துக்களை, அனைத்துத் தரப்புச் சான்றோர், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முதலானோர் மூலம் விளக்கம் பெற்றனர்.
வள்ளலார் ஸ்பேஸ் டீம் அன்பர்கள் இணைய தளத்தின் பயன்பாடு குறித்து லேப்டாப் மூலம் பெங்களூர் அன்பர் திரு கார்த்திகேயன், சென்னை அன்பர் திரு சதீஷ் குமார் ஆகியோரால், செய்முறைப் பயிற்சியாக காண்பிக்கப் பட்டது. இணைய தளம் குறித்துத் தெரிந்தவர்களும், அதன் பயன்பாடே ஒன்றும் தெரியாத மக்களும், அதனைப் பார்த்துத் தெரிந்து கொண்டனர். சுத்த சன்மார்க்கச் செயல்பாடுகளைச் செய்து வரும் சங்கங்கள், இந்த இணைய தளத்தில் சேருவதற்கான வழி வகைகள்,. அவர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. இந்த இணைய தளத்தினை, அமெரிக்காவில் வசிக்கும் அன்பர் திரு செந்தில் மருதையப்பனும், சிங்கப்பூரில் வசிக்கும் அன்பர் திரு சிவகுமாரும் தமது கண்காணிப்பில் இயக்கி வருவதை அனைவருக்கும் எடுத்துச் சொல்லப்பட்டது. துவக்கப்பட்ட 4 மாதங்களிலேயே கிட்டத்தட்ட 27,000 அன்பர்கள், இந்த இணைய தளத்தினை வலம் வந்த விபரம் சொல்லப்பட்டது.
குறிப்பாக, இதன் பயன்பாட்டினை, சேலம் டாக்டர் சன்மார்க்கி திரு வெற்றிவேல் அவர்களும், சேலம் சன்மார்க்க அன்பர் திரு குப்புச்சாமி அவர்களும் மிகுந்த ஆர்வமுடன் கேட்டுச் சென்றனர்.
சேலம் சன்மார்க்க அன்பர் திரு குப்புச்சாமி அவர்களின் ஆடியோ பேச்சு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமனார் அவர்களின் அன்பர்கள், மூலிகைக் கண்காட்சியினை ஏற்பாடு செய்து, அதன் பயன்பாட்டினை, தக்க நபர்களைக் கொண்டு, எளிமையாக பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்திருந்தனர். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள், இம் மாநாட்டு அரங்கின் முகப்பில் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. இது, அங்கு வருகை புரிந்த அன்பர்களின் வரவேற்பினைப் பெற்றது.
திருவண்ணாமலை அருள் திரு பாபு சாது அவர்கள், தனது அன்பர்களை அனுப்பி, பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை உறுதுணை செய்தார். அன்பர் திரு ஜானகி ராமன். சரவணன் ஆகியோரும், மற்றும் அவர்களுடன் உடன் வந்திருந்த அன்பர்களும், மாநாடு நடைபெறும் கூட்ட அரங்கிற்கு முன் கூட்டியே வந்திருந்து, பல பணிகளையும் செய்து வைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து, அன்பர் திரு முரளீதரன் நடத்தும் மாதாந்திர இதழான ஞான தீபம், அன்பர்கள் திரு பாலமுருகன் மற்றும் திரு ஜோதி ராமலிங்கம் ஆகியோர் மூலம், அன்பர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமன் அவர்களால் நடத்தப் பட்டு வரும் யோக சாதனை முறைகள், 27.7.2008 அன்று இரவு அன்பர்களுக்குச் செய்து காண்பிக்கப்பட்டன. திரு குணசேகரன் என்ற அன்பர் மூலம், இந்தப் பயிற்சி வகுப்பு பார்வையாளர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. உடல் உபாதைகளில் இருந்து விடுபட வேண்டுமானால், அதனதற்கென உள்ள எளிய வகை யோகப் பயிற்சிகளை, மேற்கொள்ளலாம் என, சாது சிவராமன் அவர்களும், அன்பர் திரு குண சேகரன் அவர்களும் விளக்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மிகச் சிறந்த யோகப்பயிற்சிக் கலையினை செல்வி கல்பனா D/O குணசேகரன் என்பவர், செய்து காண்பித்து அன்பர்களின் பாராட்டுதலைப் பெற்றார். அவர், இதற்கு முன்னர், கேரளாவில் நடைபெற்ற உலகளாவிய சேம்பியன் போட்டியில், 2வதாக பரிசு பெற்றவர். தற்போது, வேலூரில் பட்டப் படிப்பு பயின்று வருகிறார்
யோக சாதனை விளக்கம் பெற வேண்டும் என்ற நோக்கிலும், திருக்கண்டீஸ்வரம் சாது சிவராமன் அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற விதத்திலும் அன்பர் திரு ராமலிங்கம் என்பவர், பெங்களூரிலிருந்து வந்து, அவர்களைப் பார்த்து, உரிய அறிவுரைகளைக் கேட்டுத் தெளிவு பெற்றார்.
அதனைத் தவிர, ஏனைய பார்வையாளர்கள் கேட்கும் சந்தேகங்களும் நிவர்த்தி செய்து வைக்கப்பட்டன.
அரங்கினுள் ஹோமியோபதி மருத்துவரைக் கொண்டு, அங்கு வந்த – தேவைப்பட்ட மருத்துவ உதவி செய்து தரப்பட்டது.
திரு அருட்பா அமுதம் திட்டத்தின் கீழ் சிங்கப்பூரில் அன்பர் திரு சிவக்குமார் அவர்கள் மூலம் தயார் செய்து வெளியிடப்பட்ட திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சிகள் அளவுக்கு அதிகமான அளவில் இருந்ததால் ஓரளவு, மேலே விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் வீடியோ மூலம் ரிக்கார்டிங் செய்யப்பட்டுள்ளதால், இதனைப் படிக்கும் எந்த அன்பருக்கும் உள்ள தாபத்தினை தீர்க்கும் வகையில், அந்த வீடியோ சி.டி.கள், திரு ஜெய அண்ணாமலை அவர்களிடமிருந்து கிடைத்தபின் வள்ளலார் ஸ்பேஸ் டீம் அதற்குரிய வசதிகளை, இணைய தளத்தின் மூலம் வெளியிடும்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. வடலூர் சத்திய ஞான சபையில், வள்ளல் பெருமான் கூறிச் சென்ற வகையில் வழிபாடு முறைகள், இனியும் காலந்தாழ்த்தாது, கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.
2. தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத் தலை நகரங்களிலும், மாநிலத் தலை நகரிலும், வெளி நாடுகள் தோறும், இதற்கென நிலம் வாங்கி, அல்லது ஒதுக்கீடு செய்யப் பெற்று, சத்திய ஞான சபை கண்டிப்பாக வெகு விரைவில் கட்டப்பட வேண்டும்.
3. வள்ளல் பெருமான் சொன்ன கருத்துக்கள் அல்லாமல், இன்னும் பழைமையிலேயே ஊறிப்போய், வள்லலாருக்குத் தேர்த் திருவிழா எடுப்பதும் வள்ளல் பெருமானுக்கு செப்புத் திருமேனி செய்து வைபவம் கொண்டாடுவதும் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
4. வள்ளல் பெருமான் இருந்த காலத்தில், வடலூர்ப் பெருவெளிக்கு இனாமாக பார்வதிபுரம் வாசிகள் கொடுத்த நிலங்களை, அதன் உண்மையான பயன்பாட்டிற்கு கொடுக்காமல், மோசடி நடவடிக்கையின் மூலம், வெவ்வேறு நபர்களுக்கு, சட்டத்திற்குப் புறம்பாக, விற்பனை செய்து கோடிக் கணக்கில் சம்பாதித்த முன்னாள் சத்திய ஞான சபை பூஜகர், திரு சபா நாத ஒளியின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரால் விற்பனை செய்த நிலங்களை, அரசு உடனடியாக மீட்க வேண்டும்.
5. வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, இந்தியப் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். அதன் மூலம், உலகப் பொது நெறியாம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை, உலகிலுள்ள அனைத்து ஜீவர்களுமே அறியச் செய்ய வேண்டும்.
6. உலக அளவில் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் பரவுவதற்காக, வள்ளலார் டி.வி, மற்றும் வள்ளலார் ரேடியோ முதலானவற்றை அரசு உடனே துவக்க வேண்டும்.
7. பள்ளியில் படிக்கும் குழந்தை முதல் கல்லூரி வரை உள்ள பாடத் திட்டத்தில் வள்ளலார் வகுத்த நெறிகளை அரசு, பாடமாக வைக்க வேண்டும். இளமை முதலே சுத்த சன்மார்க்க நெறியில், குழந்தைகளை இதன்மூலம் வளர்க்க வேண்டும்.
8. தமிழ் நாடு அரசு, தமிழ் வருடப் பிறப்பாக, தை மாதத்தை அறிவித்துள்ளது. அந்த மாதத்தில் வரும் தைப்பூச நாளினை, அரசு விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும்.
9. மாநிலத்தின் தலை நகரமான, சென்னைப் பெருநகரில்,. வள்ளலார் கோட்டம் கட்ட வேண்டும்.
10. வள்ளல் பெருமான் காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடங்களான (1) பொன்னேரி, (2) சின்னக் காவணம் (3) சென்னை தங்கச் சாலை அருகே உள்ள எழுகிணறு வீராச்சாமி தெருவில் உள்ள வீடு முதலானவற்றை, வள்ளலாரின் நினைவுச் சின்னம் ஆக்குவதற்கு வசதியாக, அரசு எடுத்துக் கொள்ள வேண்டும்.
11. மத்திய அரசு, வள்ளல் பெருமானின் தபால் தலை வெளியிட்டபோது, அவரை, மதம் சார்ந்தவர் போல், திரு நீறு அணிவிந்தது போன்ற தபால் தலையை வெளியிட்டுள்ளது. இது, எல்லா சன்மார்க்க அன்பர்களின் மனத்திலும், சன்மார்க்க சங்கங்களிலும், எதிர்ப்பையினை உருவாக்கியுள்ளது. ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என்ற நிலையை எல்லாம் தாண்டி, வள்ளல் பெருமான், உலகளாவிய அளவிலே ஆன்ம நேய ஒருமைப்பாட்டினை வலியுறுத்தினார். எனவே, அந்த வகையில், திரு நீறு அணியாத நிலையில் உள்ள வள்ளலார் படத்தினை ஸ்டாம்பில் உடனடியாக வெளியிட வேண்டும்.
12. இஸ்லாம் மற்றும் கிறிஸ்து மதங்களில் உள்ளது போலவே, வடலூர் தெய்வ நிலையங்கள் நிர்வாகத்தை, தனியே நிர்வகிக்க ஒரு வாரியம் துவக்கப்பட வேண்டும். பின்னர் வள்ளலாரின் நெறி பரப்பும் சான்றோர்களின் வசம் அந் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டும்.
13. வள்ளல் பெருமான் காலத்தில், சத்திய ஞான சபை கட்டுவதற்கு இனாமாக நிலம் கொடுத்த நபர்களின் வாரிசுதார்களை, அதில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
14. புதுச்சேரி “ரூபம்” தொலைக்காட்சி வள்ளலார் கொள்கைகளை இடை இடையே ஒளி பரப்பி, சன்மார்க்க நெறியினை, பொது மக்கள் அறியும் வண்ணம் செயப்பட்டு வருகிறது. அதே போன்று, தமிழ் நாட்டிலும், பெருமானாரின் கொள்கைகளை, ஒளி பரப்ப வேண்டும்.
15.
இந்த மாநாடு நடத்துவதற்கு மூல காரணமாக அமைந்தது, புதுச்சேரியில் 2008 ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சுத்த சன்மார்க்க கூட்டமைப்பு நிகழ்ச்சி ஆகும்.
இம் மாநாட்டில் கலந்து கொண்ட விக்கிரவாண்டி சன்மார்க்க அன்பர் திரு ஜெய அண்ணாமலை, இதனைக் காட்டிலும், சிறப்பு மிக்க ஒரு மாநாட்டினை, விழுப்புரம் மாவட்டத் தலை நகரிலேயே நடத்த வேண்டும் என்ற உத்வேகம் பெற்றார்.
எனவே, வள்ளல் பெருமானின் அருளாசியின் பிரகாரம், பல்வேறு சன்மார்க்க சங்கங்களை முன்கூட்டி கலந்து ஆலோசித்து, தமக்குள்ளே ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளார். இம் மாநாடு துவங்க வேண்டுமென முதற்கட்ட நடவடிக்கைகளில், இவர் ஈடுபட்ட போது உடனிருந்த நபர்கள அனைவருமே ஒரு கால கட்டத்தில் பின் வாங்கினர். திரு ஜெய அண்ணாமலை, துவண்டு விடாமல், வள்ளல் பெருமானின் அருளால், தீவிர முயற்சி மேற்கொண்டு, இம் மாநாட்டினை நடத்தி முடித்துள்ளார்.
திரு ஜெய அண்ணாமலை, தற்போது, விழுப்புரம் (வடக்கு) மாவட்ட காங்கிரஸ் தலைவராக உள்ளார். விக்கிரவாண்டி பேரூராட்சியில் Ex M.C யாக இருந்தவர்.
ஒரு கட்சியை சார்ந்திருந்தாலும், இவரது இலகுவான சகோதர பாசமானஅணுகுமுறை, எல்லா கட்சியிலும் உள்ள முக்கியமான தலைவர்களை, இம் மாநாட்டில் பங்கு பெறச் செய்துள்ளது.குறிப்பாக, மாண்புமிகு அமைச்சர்கள், சன்மார்க்கச் சான்றோர் அனைவரும் இந்த 2 நாள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
அவரது கூற்றின்படியே, உள்ளூரிலும், சரி, விழுப்புரத்திற்கு அருகிலுள்ள பெரும் பெரும் நகர்களிலுமிருந்தும், தமது இச் செயலுக்கு, எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
வள்ளல் பெருமானின் உறுதுணை ஒன்றினையே ஊன்ரிப் பிடித்து, அவர் வழி காட்டுதலின்படி, ஒரு மாவட்ட மாநாட்டை, இவ் விதமாக, வெகு சிறப்பாக செய்து முடித்த திரு ஜெய அண்ணாமலை, பல சன்மார்க்க அன்பர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.
பொருளாதார வசதியில், இந் நிகழ்ச்சியினை நடத்தியதன் மூலம், மிக மிகப் பின்னோக்கித் தள்ளப்பட்டாலும், இவர் மனம் தளரவில்லை.
ஏனையோரால் இவ்விதமாக ஒரு சன்மார்க்க சங்க மாநாடு நடத்த முடிகிறதோ இல்லையோ, அதனை விழுப்புரம் மாவட்டத் தலைநகரில் சாதித்துக் காட்டியுள்ளார்.
சன்மார்க்க விழிப்புணர்வு மாநாடும், வாழ்வியல் பயிற்சி முகாம்களை பல்வேறு மாவட்டங்களில், சன்மார்க்க சங்கங்கள் மேற்கொண்டாலும், தனியே நின்று, இதனை சாதித்த ஜெய அண்ணாமலையை, சன்மார்க்க உலகம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
ஆன்ம நேய சகோதர உணர்வுடன், அவரது செயல்களைப் பாராட்டி, அவரது அயராத முயற்சியின்போது உடனிருக்க இயலாவிடினும், பொருளாதாரம் என்ற நிலையில் அவர் தாழ்ந்திருப்பதை, அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒலிம்பிக்கிலும் சரி, விளையாட்டுப் போட்டிகளிலும் சரி நல்ல விளையாட்டு வீரர்களை, அரசு ஊக்கப்படுத்தி, கெளரவிக்கிறது. பொருளாதார வசதி செய்து கொடுக்கிறது. இதனை அனைத்து நாட்டு மக்களும் அறிவர்.
ஆனால், சகல ஜீவர்களும் சுத்த சன்மார்க்க நெறியினைப் பற்றித் தெரிந்து கொண்டு, , வாழ்வில் உயர் பயன் அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கில், வள்ளல் பெருமானின் வழி நின்று, பெருவாரியான பொருட் செலவில், ஒரு சாதனையைச் செய்து காட்டிய, இந்த ஜெய அண்ணாமலையினை சன்மார்க்க உலகம் கண்டு கொள்ளாமல் இருந்தால், அது, நல்லதா ?
அருட் செயலால் இமாலயமாக உயர்ந்து நிற்கும், திரு ஜெய அண்ணாமலை, சன்மார்க்க அன்பர்களாலும், சன்மார்க்க சான்றோர்களாலும், சன்மார்க்க சங்கங்களாலும், எந்த வகையில் கண்டு கொள்ளப்பட வேண்டுமோ அந்த வகையில் கண்டு கொள்ளப்பட வேண்டும்.
ஈதல்லாமல், வள்ளல் பெருமான் காட்டிய பேரிரக்கம், பெருந்தயவு, பெருங்கருணை என்று வெறும் வாய் வார்த்தையால், சொல்வதால், சன்மார்க்க அன்பர்களுக்கு, என்ன கிடைக்கப் போகிறது ?
ஒரு தயவுக் கோரிக்கையாக அன்பர்கள் இதனை ஏற்க வேண்டும்.