சிவகங்கையில் சன்மார்க்க அன்பர்களின் பணி
Ramanujam
posted 42 months ago
14 Jul 2008 11:06:17 GMT 11:06:17 AM
2030 views
சிவகங்கை சன்மார்க்க அன்பர்களின் ஜீவகாருண்யத் தொண்டு
குறித்த செய்தி.
மதுரை அருகில் உள்ள சிவகங்கையில் பிள்ளைவயல் காளியம்மாள் கோவிலில், வருடந்தோறும் பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. சுற்று வட்டாரங்களிலிருந்து, இவ் விழாவில் சுமார் 5 லட்சம் மக்கள் கலந்து கொள்கின்றனர். இப் பூச்சொரிதல் திருவிழா, கடந்த 54 ஆண்டுகளாக இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அனைவருமே, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், கொள்கை கோட்பாடுகளையும், முழுமையாக அறிந்து தமது வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடித்து, துன்பம் நீங்கி, வாழ்வில் நலம் பெற்று, அவர்கள் இன்பமாக நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், சிவகங்கை வாழ் சன்மார்க்க அன்பர்கள், இந்த வருடம். 11.7.2008 அன்று நடைபெற்ற பூச்சொரிதல் விழாவை வாய்ப்பாகப் பயன்படுத்தி, சன்மார்க்க அன்பர்கள் தமக்குள்ளும், மற்றும் சிவகங்கை வாழ் பொதுமக்களிடம், பொருளாகவும், மற்றும் இதர உதவிகளாகவும் பெற்று, பூச்சொரிதல் திருவிழாவில் கலந்து கொண்ட - சுமார் 10,000 ஏழை எளியவர்களுக்கும் பக்தர்களுக்கும் உணவு வழங்கியும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, அனைவரும் அறியும் வண்ணம் ப்ளெக்ஸ் பேனர்கள் மூலம் விழாவில் அதிகமான அளவில் பொதுமக்கள் கூடுமிடங்களில் அனைவரும் தெரிந்து கொள்ளும்படியாக வைத்தும், ஜீவகாருண்யத்தாலும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணிகள் செய்வதால் ஏற்படும் நன்மைகள், புலை, கொலை தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்த தகவல்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வினியோகமும் செய்தனர்.
சிவகங்கையில், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தையும், தர்மச்சாலையையும் நடத்திக் கொண்டிருக்கும் சன்மார்க்க அன்பர்கள், திரு விஜயகுமார், மற்றும் காளிதாசன், மேலூர் அன்பர், சொக்கலிங்கம் சிவரக்கோட்டையில் சன்மார்க்க சங்கம் நடத்தி வரும் திரு கதிரேசன் ஆகியோருடன், சிவகங்கையைச் சேர்ந்த சன்மார்க்கத் தொண்டர்களும் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக இப் பணியைச் செய்தனர்.
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, சன்மார்க்கம் குறித்த விழிப்புணர்வினை, இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியது.
இது போன்ற திருவிழாக்கள் நடைபெறும் போது, மக்களை, வள்ளல் பெருமான் அறிவித்த உண்மையான சுத்த சன்மார்க்க வழியில் கொண்டு சென்று நல்வாழ்வு வாழ வைப்பதையே, நோக்கமாகக் கொண்டு, இதனை சிவகங்கை சன்மார்க்க அன்பர்கள் செயல் படுத்தி வருகின்றனர்.
இனி நடைபெறும் எல்லாத் திருவிழாக்களிலும் இதனை நடைமுறைப்படுத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இப் பூச்சொரிதல் திருவிழாவில் சிவகங்கை சன்மர்க்க அன்பர்களின் தன்னலங் கருதாத இத்தகைய ஜீவகாருண்யப் பணி, விழாவில் கலந்து கொண்டோரின் பாராட்டுதலைப் பெற்றது.
செய்தி கொடுத்தவர் – திரு பால முருகன், மதுரை சன்மார்க்க அன்பர்.