அருள் ட்ரள்ட் மாதாந்திரக் கூட்டம்
நாள் 12.7.2008 சனிக்கிழமை.
.
அருள் ட்ரஸ்டின் மாதாந்திரக் கூட்டம், 12.7.2008 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணியளவில் நடைபெற்றது.
மாலை 6.30 மணி
வந்திருந்த அன்பர்கள், பக்தியுடன் பாடிய, திருவருட்பா பாடல்களுடன், கூட்டம் துவங்கியது.
6.50 மணி
புருவ மத்தியின் கண் மனத்தைச் செலுத்தி, தியானம் செய்யப்பட்டது.
7.00 மணி
தலைவர் திரு முரளீதரன்,
வரும் 19.7.2008 (சனி) மற்றும் 20.7.2008 (ஞாயிறு) ஆகிய நாட்களில், வேலூர் மாவட்ட சன்மார்க்க சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆர்க்காட்டில், நடைபெறுவதைத் தெரிவித்தார்..
இம் மாநாட்டில் விழுப்புரம் தவிர, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்காவணம் (வள்ளல் பெருமான் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊர்) முதலான இடங்களிலிருந்து சன்மார்க்க அன்பர்கள் வருகை தர இருப்பதையும், சன்மார்க்கச் சான்றோர் பலரின் முன்னிலையில் இது நடக்க இருப்பதையும் தெரிவித்தார்.
மேலும், 26.7.2008 (சனி) மற்றும் 27.7.2008 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில், சன்மார்க்க சங்கங்களின் எழுச்சி மாநாடு நடைபெறுவதையும் அவர் தெரிவித்தார். திருக்கண்டீஸ்வரம் சன்மார்க்கப் பெரியவர் ஐயா சாது சிவராமன் அவர்களின் முன்னிலையில் இம் மாநாடு நடைபெறுவதைத் தெரிவித்தார்
இவை தவிர, 1.8.2008 (வெள்ளி), 2.8.2008 (சனி) மற்றும் 3.8.2008 (ஞாயிறு) ஆகிய நாட்களில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில், சாது சிவா சுவாமிகளின் ஆசிரமத்தில் (1) சென்னை புத்தகத் திருவிழா (2) தொலைக்காட்சியில் வள்ளல் பெருமான் வரலாறு (3) வடலூரில் பூச விழா முதலானவை குறித்து சன்மார்க்க அன்பர்களுடன் கலந்துரையாடுவதற்கு ஒரு வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார். நபர் ஒருவருக்கு ரூ.50/- அனுமதிக் கட்டணம் செலுத்தி, (3 நாட்களுக்கும் உணவு தங்குமிடம் உள்பட) அதில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளதையும் அவர் தெரிவித்தார்.
விருப்பம் உள்ள அன்பர்கள் மேற்காணும் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும், மலாயா நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் திரு அருட்பா அமுதம் திட்டத்தை சுவாமி தர்மலிங்கம், பாடகர் மழையூர் சதாசிவம் மற்றும் முக்கியமான பாடகர்களின் மூலம், தயாரிக்கப்பட்ட - சிங்கப்பூர் அன்பர் திரு சிவக்குமார் அவர்கள் மூலம் வெளியிடப்பட்ட - திரு அருட்பா சி.டி. விற்பனைக்கு வந்துள்ளதையும், கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் உழைக்கக் கூடிய உலகத் தரம் வாய்ந்த சி.டி களில் அப் பாடல்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், இசையமைப்பு, பாடல் பாடகர்களின் ஊதியம் மற்றும் தயாரிப்புச் செலவு முதலானவை ரூ.150/- வரை இருந்தாலும், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் எல்லா இடங்களுக்கும் பரவ வேண்டும் என்ற எண்ணத்தில், மேற்படி ஆடியோ சி.டி. ஒன்றின் விலை ரூ.50/- என விற்கப் படுவதாகவும், சன்மார்க்க அன்பர்கள் அதனை வாங்கி, கேட்டு, திருஅருட்பா அமுதத்தில் திளைக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
மதுரை அன்பர் திரு ராமானுஜம், வள்ளலார் ஸ்பேஸின் மூலம், திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளும், நெறி முறைகளும், பல் வேறு இடங்களுக்கும், குறிப்பாக வெளி நாடுகளில், ரஷ்யாவிலும் பரவி வருவதைத் தெரிவித்தார்.
இந்த இணைய தளத்தில் இதுவரை கிட்டத்தட்ட 17 சங்கங்கள் மற்றும் தனி நபர்கள் இணைந்துள்ளனர் என்றும், இன்னும் சேராத சங்கங்கள், தமது சன்மார்க்க செயல்பாடுகளைத் தெரிவித்து, இந்த இணைய தளத்தில் இணைவதற்கு விண்னப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார். தவிரவும், வந்திருந்த அன்பர்கள், தமக்குத் தெரிந்த சங்கங்களின் பொறுப்பாளர்களிடம், இது குறித்து, தெரிவித்து, இன்னும் சேராத சங்கங்களைச் சேர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுமாறும், கேட்டுக் கொண்டார்.
மேலும், இந்த் இணைய தளத்தில் இணைந்தபின், தத்தமது சங்கங்களில் நடைபெறும் கூட்டங்கள், சன்மார்க்கச் சான்றோர்களின் சொற்பொழிவு, ஆடியோ மற்றும் வீடியோ முதலானவற்றையும், இந்த இணைய தளத்தில் வெளியிடுவதற்கு தக்க நபர்களைக் கொண்டு, ஒரு பயிற்சி முமாமும் நடத்தப்பட உள்ளதையும் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை மையமாக வைத்து, அதனைச் சுற்றியுள்ள மாவட்ட சன்மார்க்க சங்கங்களுக்கு, கூடிய விரைவில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதையும் அவர் தெரிவித்தார்.
திரு முரளீதரன், வள்ளலார் ஸ்பேஸ் குறித்த செய்தி,.2 மாதங்களாக ஞான தீபம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டு வருவதைச் சுட்டிக் காட்டினார்.
வெளி நாடுகளைப் பொறுத்த மட்டில் – கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக, செக்கோஸ்லொவேக்கியா நாட்டைச் சேர்ந்த தம்பதியர் இருவர், தம்மிடம், சுத்த சன்மார்க்கத்தைப் பற்றியும், திருவருட்பிரகாச வள்ளற் பெருமானின் உயரிய கொள்கை கோட்பாடுகளைப் பற்றி கேட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார்.
விழுப்புரம் மாநாட்டில், சன்மார்க்க முறையில் திருமணம் நடத்துவது குறித்து, கலந்துரையாடுவதற்கு ஒரு மணி நேரம் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்கென வடிவமைக்கப்பட்ட விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா எனவும், இல்லையாயின், எவ்விதம் நடத்துவது என்பது குறித்து, அன்பர்கள், தமது கருத்துக்களைத் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
சங்கர்லால், மதுரை
வள்ளல் பெருமான் வகுத்த நெறிமுறையில் நடத்துவதே உசிதம் என்று கூறினார்.
ராமானுஜம், மதுரை.
வள்ளற் பெருமானார், உபதேசப் பகுதியில், இல்வாழ்வானுக்கு ஞாயம் என்ற முறையில் விதி முறைகளை வகுத்துள்ளார் என்றும், சமூகத்துடன் ஒட்டிய வகையில், சன்மார்க்க முறையில் திருமணங்கள் நடத்தப் படலாம் எனவும், இரு பாலாருக்கும் சமூகப் பாதுகாப்பு அதனால் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதனையே, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள், அகத்திலே இருக்கும் ஆன்மாவே ஆணாகவும், புறத்திலுள்ள பெண் கூறாகிய இந்தப் புறவுடல் பெண் தன்மை வாய்ந்ததால், ஒரு வகையால், அனைவருமே, அகமிருந்து வாழ்வதே இல்வாழ்க்கை என சுத்த சன்மார்க்க முறையில் விளக்கம் தந்துள்ளதையும், அவர் கூட்டத்தினருக்குத் தெரிவித்தார்.
இந்த வகையில் பார்த்தால், மனிதப் பிறவி கிடைத்த அனைவருமே பிறப்பிலேயே, திருமணம் ஆனவர்கள்தான் என்பதை அவர் கூறினார். ஆனால் துறவு நிலையில் முற்காலங்களில், கான் முழைகளில் பெரியவர்கள் எல்லாம், தவம் செய்ததன் மூலம், புற உலகை வெறுத்துள்ளனர் எனவும் தெரிவித்தார். த்+உறவுடன், இறை நினைவுடன் வாழ்வதையும், அகமிருந்து வாழ்வதையும், இல்வாழ்க்கை என சான்றோர் கணித்துள்ளதையும் அவர் தெரிவித்தார்.
தமது தந்தையார், திரு அய்யாத்துரை அவர்கள், சன்மார்க்க அன்பர்கள் பலருக்கு, சன்மார்க்க முறையில், திரு அருட்பா ஓதி, திருமணம் நடத்தியுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். அதற்கு நிதர்சன சாட்சியாக, மதுரை அன்பர் திரு விஜய ராமன் இங்கே வருகை தந்துள்ளதையும் அவர் தெரிவித்தார். சன்மார்க்க முறையில் திருமணம் நடைபெற்ற பின் தம்பதிகள், தமது வாழ்க்கையில், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் , கொள்கை கோட்பாடுகளையும் கடைப்பிடித்து நடப்பது சிறந்தது எனவும் கூறினார்.
ஜாம்பியா நாட்டில், லுஸாக்கா நகரில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணி புரியும், திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த திரு. ராஜேந்திர திருவாளர் என்ற சன்மார்க்க அன்பர், தமிழ்நாடு அரசு, (சித்திரை மாதத்திற்குப் பதிலாக) தை மாத முதல் தேதியில், புத்தாண்டு பிறந்துள்ளது என நடைமுறைப்படுத்துவதற்கு சட்டம் இயற்றியுள்ளதைத் தெரிவித்து, பழனியிலும், வடலூரிலும், தைப் பூச நன்னாள் கொண்டாடப் படுவதை வைத்து, அனைத்து சன்மார்க்க அன்பர்களும், தைப் பூச நாளுக்கு, அரசு விடுமுறை விடவேண்டும் என்பதை தமிழ் நாடு அரசுக்குக் கோரிக்கையாக வைக்க வேண்டும் என அவர் தெரிவித்ததாகக் கூறினார்.
திரு விஜயராமன், மதுரை.
தமக்கு 1991ஆம் ஆண்டு, திருவாடானையைச் சேர்ந்த சன்மார்க்கப் பெரியவர், திரு அய்யாத்துரை அவர்கள்தான், முன்னின்று, சன்மார்க்க முறைப்படி, திருப்பரங்குன்றத்தில் மணம் முடித்து வைத்ததாகவும், முதலில் திருமணம் செய்து கொள்ளத் தயங்கிய தாம், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களிடம், உரிய அறிவுரை பெற்று, அக நிலை பொருந்தி நின்று, திருமண வாழ்க்கை நடத்துவதன் மூலம், தயவுச் செயல் பெருகுவதைக் காரணங் கொண்டு, திருமணம் செய்து கொள்வது முறையானது தான் என அவர்களிடம் ஆசி பெற்று, தாம் திருமணம் செய்ததாகத் தெரிவித்தார். தமக்கு 2 குழந்தைகள் உள்ளன என்றும் தமது குடும்பத்தினர் அனைவருமே புலால் மறுத்து, சுத்த சன்மார்க்கத்தில் முழு ஈடுபாட்டுடன் வாழ்க்கை நடத்தி வருவதையும் தெரிவித்தார். பழைய சம்பிரதாய முறைகளைத் தவிர்த்து, புரோகிதர்கள் இன்றி, சன்மார்க்க முறைப்படி, தமது திருமணம் நடைபெற்றதையும் அவர் கூறினார். தமது உறவினர்கள் மிக வலியுறுத்தியும், குல தெய்வ வழிபாட்டைத் தவிர்த்து (சிறு தெய்வ வழிபாடு) வள்ளல் பெருமானின் ஓளி வழிபாட்டினைத் தொடர்ந்து செய்து வருவதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம், தமது வாழ்வில், எந்த இடையூறும் வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும், மாவட்டத் தலைநகரங்களில், சத்திய ஞான சபை கட்ட வேண்டும் என அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.
திரு ஜெயராமன், வடலூர்.
திருக்குறளில், திருவள்ளுவர் பெருந்தகை “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” எனக் கூறியுள்ளதால், அதன் பிரகாரம் இல்வாழ்க்கை நடத்தப்பட வேண்டும். மேலும், புலால் மறுத்து, பிறர்க்கு உதவி செய்து, தயவு உணர்வினைப் பெருக்கிக் கொண்டு, இல்வாழ்வு நடத்துதலே முறையானது என்றார்.
திரு கே.எஸ்.மாரியப்பன், தலைவர், சன்மார்க்க சங்கம், சோளவந்தான்.
வள்ளல் பெருமான், உபதேசப் பகுதியில், கணவன் இறந்தால், மனைவியிடமிருந்து, தாலியை வாங்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்.
சங்க கால நூல்களான குறுந்தொகை, ஐங்குறுநூறு அகநானூறு முதலானவற்றின்படி, அக் காலத்திலெல்லாம், திருமணத்தின் போது, தாலி ஏதும் அணிவிக்காமல், சான்றோர் பெரியோர் ஆகியோரின் வாழ்த்தொலி முழங்க, மனமொத்து திருமணங்கள் நடைபெற்றுள்ளன.
தாலி கட்டிக்கொள்ளாமல், மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு ஜாதி, மதம் முதலானவை பார்க்கத் தேவையில்லை. சிறு தெய்வ வழிபாடும் கூடாது.
திருமணங்களின்போது, ஜாதி பார்த்துத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அந்தக் காலத்தில் அவரவர்கள் பார்க்கும் தொழிலை வைத்து, ஜாதியை உருவாக்கி விட்டார்கள்.
தவிரவும், பெண்கள் யாரும் தமது பெயரின் பின்னர் ஜாதிப் பெயரைக் குறிப்பிடுவதில்லை. ஆண் சமுதாயம் மட்டும்தான் தங்களது பெயரின் பின்னால், ஜாதிப் பெயரைக் குறிப்பிடுகின்றனர்.
ஈஷா யோகத்தின் அடிப்படையில், சக்தி வாய்ந்த யோகியர், சூரியனே விலகு என்றதும், சூரியன் விலகியது, சூரியனுக்குப் பின்னர் வெறும் ஒளிதான் தெரிந்தது.
வள்ளல் பெருமான், அருட்பெருஞ் ஜோதியின் முன்னிலையில் ஆண்டவர் இருப்பதாக பாவித்து வழிபடச் சொன்னார்.. ஒளி வழிபாடுதான் சிறந்தது.
2 மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில், ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியாகியது. அதில், அவர்களும், ஒளி வழிபாட்டினையே சிறந்தது எனக் கூறுகின்றனர்.
திரு சந்திர மோகன், ஊமச்சிகுளம்.
திருமணம் நடைபெறுவதற்கு, சடங்கு சம்பிரதாயங்கள் என ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும் ? சப் ரிஜிஸ்திரார் ஆபிசில், சட்டப்படி, பதிவுத் திருமணம் செய்து கொள்வதே நல்லது என்பதுடன் தமது உரையினை முடித்தார்.
திரு சொக்கலிங்கம், மேலூர், மதுரை மாவட்டம்..
சுத்த சன்மார்க்கம் குறித்து மட்டும் பேசுவேன் என்று முடித்துக் கொண்டார்.
திரு கதிரேசன், சிவரக்கோட்டை, திருமங்கலம் தாலுகா. மதுரை மாவட்டம்.
சன்மார்க்கம் என்பது 6 அந்தங்களுக்கும் மேற்பட்டது என வள்ளலார் கூறியுள்ளார். திருமணம் என்பது, சந்ததி விருத்திக்காகப் பண்ணும் சடங்கே ஆகும். இது இக லோக விசார நிலைதான். சன்மார்க்கத்தில் திருமணம் என்பது கிடையாது. எல்லோரும் சகோதரர்களே. இந் நிலையை உணர்ந்தவர்கள்தான் சன்மார்க்கிகள்.
பொய்யான உடம்பை மெய்யான பொருளாக்குவது எப்படி ?
தத்துவ நிக்கிரகம் செய்தல் என வள்ளலார் கூறியுள்ளார். நமது தத்துவங்களை எல்லாம் எப்படி தன் வசமாக்குவது. உயிரை எப்படி அறிவது ? உயிரனுபவத்தை – ஆன்மாவைப் பற்றி எப்படி விசாரம் செய்வது ? சன்மார்க்கிகள் எல்லாம், ஆசையை ஒழிக்க வேண்டும்.
தற்போதைய நடைமுறையில் சன்மார்க்கிகள் அனைவருமே, உண்கிறோம் உறங்குகிறோம் போகப் பொருட்களின் மேல் இச்சையுடன் வாழ்கிறோம்.
ஆனால் யோக மாந்தருக்கென வள்ளலார் சொல்லியது வேட்கையை ஒழிக்கப் பழக வேண்டும் என்பதுதான். இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம ஒழுக்க நிலைகளில் அனைவரும் தெளிவு பெற வேண்டும். நாம் உண்ணும் உணவில் முதலில் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சன்மார்க்கம் சார்ந்தவர்களில் பெரும்பாலோர், அன்னதானம் அளித்தல் ஒன்றே சன்மார்க்கம் என நினைத்துள்ளனர். அப்படி சோறு போட்டவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள். கடையெழு வள்ளல்களே இறந்து விட்டார்கள்.
சன்மார்க்கம் என்பது, ஒரு அதீத நிலையாகும். கடவுளைக் காண வேண்டுமெனில், இந்த அதீத நிலை நின்று சன்மார்க்கிகள் அனைவரும் காண வேண்டும் என்றார்.
இரவு 8.25 மணி.
இறுதியில் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.
அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.