DAEIOU - தயவு
குங்கிலியம் பழ.சண்முகனார்-தயவு விளக்கம்

குங்கிலியம் பழ சண்முகனாரின் “தயவு”.
சாது குங்கிலியம் பழ. சண்முகனார், பெண்ணாடம்.
2000.
தயவு என்பதை விரித்துரைக்குமாறு வள்ளற் பெருமான், பதுமகிரி தயா நேயர், அனகர், சரவணானந்தா அடிகளைப் பணித்தமையால், தயவு பற்றி தயவுக் குறள் முதலான எவ்வளவோ நூல்கள் வெளியிட்டு வருகிறார்கள்.
தயவு என்ற சொல் திருவருட்பாவில் எவ்வளவோ இடங்களில் சொல்லப் பெற்றிருப்பதோடு, உரை நடைப்பகுதியில், தயா வடிவம் என்ற தலைப்பில், “பூர்வ ஞானம் என்பது நெற்றிக் கண்ணால் பார்த்தல். ஒருவன் நெற்றிக் கண்ணைப் பெற்றுக் கொள்வானானால்’ அவனுக்கு எல்லாம் பட்டப் பகல் போல் தெரியும். அவன் தான் சுத்த ஞானி. தயவோடு ஓர் பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில் அந்தப் பிணம் உயிர்பெற்று மீள எழுந்திருக்கும். ஒருவனைக் கோபித்து பார்த்தால் உடனே அவன் பஸ்பமாகி விடுவான். இது தான் நடுக்கண் பெற்ற சுத்த ஞானிக்கு அடையாளம். இந்த நெற்றியிலிருக்கும் நடுக்கண்னுக்கு ஒரு கதவும், பூட்டும் இருக்கின்றன. அந்தக் கதவின் பூட்டை அருள் என்கிற திறவு கோலைக் கொண்டு திறக்க வேண்டும். அருள் என்பது திருப்பெருந் தயவு. ஆகவே, தயவு வடிவாக இருக்க வேண்டியது என்று காணப் பெறுகிறது. இதனை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். திருவருட்பாவின் அடிப்படை வேர் மூலமே தயவு தான்.
தயவு என்பது தான் இரக்கம், கருணை,, அன்பு, அருள் என்று இடத்திற்கு தகுந்தாற்போல் பொருள் படும் மரபு உள்ளது.
அப்பர், திருநள்ளாற்றுத் திருத்தாண்டகத்தில், “தயாமூல தன்மமென்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலம் கொடுக்கும்” என்று திருவாய் மலர்வர். மேலும் திருமழபாடித் திருத்தாண்டகத்தில், “தயா மூல தன்ம வழி யெனக்கு நல்கி மனந்திருந்தும்” என பாடியருளினார்.
தயவுப் பண்பை தொடக்கத்திலே இறைவன் அருளியதைப் போற்றிப் பாதுகாத்து உய்ய வேண்டும். எனவே, தயவு தயவு தயவு என்பதை இன்று தோன்றுந் துணையாக உள்ள அனகர் எடுத்துரைப்பதை நாம் போற்ற வேண்டியது, கடமையாகும்.