ரஷ்யாவில் வள்ளல் பெருமானின் அருள் ஆட்சி.
கடந்த 20.6.2008 அன்று ஸ்வேதா என்ற ஒரு அன்பர், ச.மு.கந்த சாமி பிள்ளை அவர்களின் போட்டோவினை அனுப்பி, அவர் வள்ளலாரா ? என்பது குறித்தும் அவரைப்பற்றிய சில தகவல்களையும் கேட்டிருந்தார்.
அவர் அனுப்பிய போட்டோவில் உள்ளது, வள்ளலாரின் படம் இல்லை எனவும், சரியான தகவல் பெறவேண்டுமெனில் www,vallalar.org மற்றும் www.vallalarspace.com ல் பார்க்கும்படிக் கேட்டுக் கொள்ளப் பட்டது.
மீண்டும் அவர்களிடமிருந்து வரப்பெற்ற தகவல் ஆச்சரியமானது.
தகவல் அனுப்பிய ஸ்வேதா, ஒரு பெண்மணி. தாம் வசிப்பது, ரஷ்யாவின் வட பகுதியில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றார். அங்கு தருமஸ்தலம் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தான், ரஷ்ய, அத்வைத மடத்தில் பயிலும் மாணவி எனவும், அங்கு 10 ஆண்டுகளாக துறவிகள் மடம் ( Manestery ) இயங்கி வருவதாகவும் அங்கு உள்ள குருமார்களில் இரண்டு பேர், இந்தியாவிற்கு வந்து, ராமலிங்கரைப்பற்றித் தெரிந்து கொண்டு, சென்றதாகவும், அங்கு, ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டுள்ள ராமலிங்கரின் படத்தினை அனுப்பியிருந்தார்.
www.vallalarspace.com Team, வள்ளல் பெருமானைப் பற்றிய தகவல்கள், www.vallalar.org மற்றும் www.vallalarspace.com ல் இருப்பதாகவும், இந்த இணைய தளத்தில் ரஷ்யாவில் ராமலிங்க வள்ளலார் பற்றி நடைபெறும் செய்திகள் வெளியிடுவதற்கு, இடம் ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தது.
இதுவரை பல ஞானிகள் பற்றித் தெரிந்து கொண்டிருந்தாலும், ராமலிங்க வள்ளலாரின் தத்துவங்களும், கொள்கைகளும், மிகவும் அரியவை என தமது குருமார் தெரிவித்துள்ளதாக மாணவி ஸ்வேதா, கூறியுள்ளார்.
ஒரு சில குருமார்கள், ராமலிங்கரின் தத்துவங்களையும் கொள்கைகளையும் ஆராய்ச்சி செய்வதாகவும், குருவானவர், ஆன்மீகக் கூட்டங்களின் போது, அதற்கான விளக்கவுரையினைத் தெரிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
மேலும், தாம் வசிக்கும் இடத்திலிருந்து, 13 மணி நேர பயணத் தூரத்தில் உள்ள, நிழ்நி நொவ்கொரொடு (Nizhnyi Novgorod Manestery) என்ற துறவியர் மடாலயத்தில், எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில், 8 மீட்டர் உயரத்தில் ராமலிங்க வள்ளலாரின் சிலை அமைப்பதற்கு, துறவிகள் எண்ணங் கொண்டு அதனை செயல்படுத்த உள்ளதாகவும், தெரிவித்தார்.
ராமலிங்க வள்ளலாரின் அருள் நெறியைப் பரப்புவதற்காக ரஷ்யாவில், ஒரு இணைய தளம் துவக்கி ஏற்கனவே செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒளி நெறி பற்றிய பாடல்களை, ஏற்கனவே, ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்திருப்பதாகவும், இந்த ஆண்டு, சத்தியப் பெருவிண்ணப்பத்தை ரஷ்ய மொழியில் மொழி பெயர்ப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலுள்ள எல்லா மக்களும் ராமலிங்க சுவாமிகளின் கொள்கைகளையும், அவரது தத்துவங்களைத் தெரிந்து கொள்வதற்கு 40 குருமார்கள், ரஷ்யத் தலை நகர் மாஸ்கோவிலிருந்து, குழுக் குழுக்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று, இயங்குவதற்கும், பெருமானின் உயரிய கொள்கைகளளயும், கோட்பாடுகளையும், போதிப்பதற்கு, உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
www.vallalarspace.com ல் இடம் கொடுத்ததற்கு நன்றியைத் தெரிவித்து, கூடிய விரைவில் தாம், தமது நாட்டில் வள்ளலார் குறித்து நடைபெறும் விபரங்களையும் இந்த இணைய தளத்தில் தெரிவிப்பதற்குத் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் எல்லை என்ற வரைமுறையினைக் கடந்து, ரஷ்ய மக்களில் பெரும்பாலானோர், தற்போதே ராமலிங்க வள்ளல் பெருமானின் கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள் எனவும் அவர், தமது செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர்கள் ராமலிங்க வள்ளலார் உபதேசித்த அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரத்தை உச்சரித்து, தாம் கூட்டு வழிபாடு செய்வதை இணைய தளம் மூலமும் அனைவரும் கேட்பதற்கு வாய்ப்பாக, ஏற்பாடும் செய்துள்ளனர்.
ரஷ்யாவில் வள்ளல் பெருமானின் அருள் ஆட்சி துவங்கி விட்டதைப்போல, அனைத்து நாடுகளிலும், பெருமானின் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டால், நாடு கடந்த, மொழி கடந்த, ஜாதி கடந்த, ஆண் பெண் இருபாலார் என்ற வேற்றுமை கடந்த, ஒரு ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுள்ள உலகம் உருவாகி விடும்.
அது நாள் விட்டு எண்ணப்படும் தூரத்தில் உள்ளது என்பதற்கு, இந் நிகழ்ச்சி, ஒரு எடுத்துக்காட்டு என்பதில் ஐயப்பாடில்லை.
வள்ளலார் ஸ்பேசின் மூலம், கிடைத்த இத் தகவல் ஒரு அரிய தகவலாகும்.
Write a comment