Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
துணைவன்


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


துணைவன்


உலக வாழ்க்கைக்குத் தேவையான கல்வியைக் கற்பதால் மட்டும் ஒருவன் பிறவிப்பயனைத் தீர்த்துக்கொள்ள முடியாது. சந்தைக்கல்வி மூலம் சாகாக் கல்வியைக் கற்க முடியாது. இக வாழ்க்கைக்கு மட்டுமே சந்தைக் கல்வி துணைப்புரியும். பர வாழ்க்கைக்கு குருவின் வழிக் காட்டுதல் மிகவும் அவசியம்.

வினைப்பயனால் மாய வலையில் தாமே சிக்குண்டு, நீர்க் குமிழியாம் உலகியல் இன்பங்களில் மூழ்கி, வந்த காரியத்தையும் மறந்து, வினைக்கு மேல் வினை சேர்ந்து பிறப்பு, இறப்பு என்னும் புதை குழியில் எல்லை இல்லாக் காலம் துன்புறுவர் யாவரும் குருவருள் கிடைக்காதவர்கள் என்று அறிக.

ஆகவே பகுத்தறிவைக் கொண்டு உயிரை மாயை எவ்வாறு பந்தப் படுத்துகிறது? அதிலிருந்து மீளும் வழி எது? என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமாம்.

முன் ஊழ்ப் பயனாய் மானிடாய்ப் பிறப்பெடுத்து, சிறு வயது முதலே பெற்றோர்களிடம் நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் நல்ல வாய்ப்பினைப் பெற்ற ஒருவன் பிறப்பறுக்கும் வழியினை அறிந்துகொள்ள விழைவானாகில் இறைவன் அவனுக்கு தகுந்த காலத்தில் தன்னை குருவாக வெளிப்படுத்துவான்.

மாயை வயப்பட்ட மனிதன் உயிரில் கலந்துள்ள இறைவனைக் காண முயற்சிகள் எடுப்பதில்லை என்பதே உண்மை. தான் படைத்த எல்லா உயிர்களிலும் அவன் உள்ளான். ஆனால் இதனை ஒரு சிலர் மட்டுமே உணர முடிகிறது. பலர் உணர மறுக்கிறார்கள் அல்லது மாயை அவர்களை உணரச் செய்வதற்கான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் அளிப்பதில்லை. ஆகையினால் பிறவியும் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது.

இதுமட்டுமல்ல! இறவாமை வேண்டும் என்கிற எண்ணம் கூட ஒரு சில ஆன்மாக்களுக்கு மட்டுமே எழும்பும். மாயைவயப்பட்ட மனித வாழ்க்கையில் (காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் மற்றும் அகங்காரம் மமங்காரம்) உயிர்க்குத் துணையாய் இருக்கிற இறைவனை எளிதாக யாவரும் உணர்த்துக் கொள்ள முடியாது.

உதாரணத்திற்கு, இன்றையக் காலக்கட்டத்தில் நிறைய விரதங்கள் இருக்கிறார்கள். உண்ணாநோன்பு இருக்கிறார்கள், பல மைல்கள் நடந்துச் சென்று இறைவனைத் தரிசனம் செய்கிறார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று இறைவனை தரிசனம் செய்கிறார்கள். தியானம், யோகம் செய்கிறார்கள். ஆனால் உலகியல் வாழ்க்கையில் அவர்களுடைய எண்ணம், சொல், செயல்களுக்கு சம்பந்தம் ஒன்று கூட இருப்பதில்லை. மேடையில் சாதியை எதிர்த்துப் பேசும் பேச்சாளர் வீட்டில் சாதி, இனம் பார்க்கப்படுகிறது. எல்லாம் ஒன்றே! இறைவன் எல்லா உயிர்களிலும் இருக்கிறான் என்று பேசும் பேச்சாளர் தன்னையறியாமல் ஆணவத்தைச் சேர்ந்துக்கொள்கிறார். நானே எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்கிற எண்ணம் யோகிகளுக்கும் எழும்புகிறது. விளைவு யோக மார்க்கத்தில் தடம் புரளுகிறார்கள். எனவே மகாமாயை பேச்சாளர்களையும், யோகிகளையும்,ஏன் சித்தர்களையும் கூட விட்டு வைப்பதில்லை.

நொடிக்கு நொடி இறைவனையும் செயலையும் மறைத்து எல்லாம் தன்னால் மட்டுமே நடக்கிறது என்ற போலி எண்ணத்தை உருவாக்கி விடும். என்ன விந்தையான வாழ்க்கை பாருங்கள்! அப்படியானால் இதற்கெல்லாம் முடிவு என்பதே இல்லையா?

உண்டு. யாரது?

‘உனக்கு மிகவும் வேண்டியப்பட்டவன்’,

உங்களுக்கு இதற்கெல்லாம் பதில் தெரியுமா?

‘தெரியும்’

அப்படியாயின் மாயையிலிருந்து எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது?

“வெளி உலக நாட்டத்தை விடுத்து, உள் முகமாக மனத்தைத் திருப்ப வேண்டும்”

ஏன் உள் முகமாகச் செலுத்த வேண்டும்?’

‘உன்னை முழுமையாக அறிந்துக்கொள்ள’

‘என்னை அறிந்தால்?’

‘முதலில் இதனை அறியத் தொடங்கு’, இப்பசி உனக்கு மிகவும் அவசியமானது. பசித்திரு! ஏன் பிறந்தோம்? நமக்கு துணையாக இருப்பவர் யார்? இதனை அறியத் தொடங்கு....

எப்படி அறிவது?

தனித்து இரு! உனக்கு ஏற்ற ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து உட்கார்ந்துக்கொள். கேள்.. கேட்டுக்கொண்டே இரு....

கேள்வி கேட்பதால் பதில் கிடைக்குமா?

முதலில் கேட்கத் தொடங்கு, பிறகு பதில் வரும்.

பதில் யார் அளிப்பார்கள்?

விழித்திருந்து உணர்ந்துக்கொள்..

இதற்கெல்லாம் குருவருள் வேண்டாமா?

எண்ணம், சொல், செயல் மூன்றும் நன்றாக இருக்கும் பொழுது குரு வெளிப்பட்டு வலிய வந்து ஆட்கொண்டுவிடும்.

யார் அந்த குரு?

‘உனக்கு பிறவிக் கொடுத்தவர்’

எனக்குப் பிறவிக் கொடுத்தவர் ஆட்கொண்டால்?’....

‘பிறவி கொடுத்தவன் ஆட்கொண்டால் பிறவி அறும்’. ‘மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்’.

அவன் என்னை ஆட்கொள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? நான் எவ்வாறு அவனைப் பிரியாதிருப்பது ?

நினைத்துக்கொண்டே இரு! நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து....... !
‘தன்னைப் படைத்தவன் இந்த உலகங்கள் யாவற்றையும் படைத்தவன், ‘பிறப்பறுக்கும் பேராளன்’, என்று நினைத்துக் கொண்டே இரு!

நினைத்துக் கொண்டிருந்தால்?

உள்ளொளி ஓங்கும், உயிரொளி விளங்கும், பேதங்கள் அறுபடும். உயிருக்கு உயிராம் இருக்கும் மெய்யொளியைக் காண முடியும்.

அவர் தான் குருவா?

மெய் உணர்தோர்க்கு குருவும் துணைவனும் அவரே!
புரிந்துவிட்டது ! ஐயா ! புரிந்து விட்டது! வள்ளல் பெருமானின் வாசகமும் புரிந்துவிட்டது! எல்லா உடம்புகளிலும் புகுந்துக்கொள்வேன்......புரிந்துவிட்டது. இவரே அவர்! அவரே இவர்! புறப்படுகிறேன்!

எங்கே புறப்பட்டுவிட்டாய் ?

என் துணைவனைப் பார்க்க!

இப்போதைய இலக்கு உட்காருவதற்கு ஒரு இடம்!

பிறகு பிறவிக் கொடுத்தவனை, துணைவனைப் பிரியாதிருப்பது.

பிரியாதிருப்பேன்! பிரியாதிருப்பேன்! மனதில் சத்தியம் செய்துக்கொண்டான்......

(சிதம்பரம் ராமலிங்கப் பெருமானால் அனுப்பட்ட அவர் தன்னுடைய வேலை முடிவடைந்தது என்று சந்தோஷப்பட்டு அவ்விடத்திலிருந்து தொலை தூரம் போனார்).

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
3 Comments
murthy poongundran
தன்னுடைய வேலை முடிவடைந்தது என்று சந்தோஷப்பட்டு அவ்விடத்திலிருந்து தொலை தூரம் போனார்
Sunday, July 7, 2013 at 10:16 am by murthy poongundran
murthy poongundran
உன் வேலை முடிவடைந்ததாக எண்ணி வெகு தூரம் சென்றுவிட்டாயா குமரேசா.........
Sunday, July 7, 2013 at 10:17 am by murthy poongundran
murthy poongundran
ஆன்மநேய ஒருமைப்பாடும் அன்புள்ளமும் கொண்ட அருமை சான்றோர்களே, காரைக்காலை சேர்ந்த தீவிர வள்ளலார் அன்பர் நம் குமேரேசன் உத்திரகாண்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போய்விட்டார், இன்று வரை குடும்பத்தாருக்கு யாதொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை,,,,,,,அன்பர்களே நண்பர்களே அவர் யாதொரு குறைவுமின்றி நம் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருளால் நலமோடு வீடு திரும்ப வேண்டும் என்று நாம் அனைவரும் அவருக்காக வேண்டிக்கொள்வோமாக.....................
Sunday, July 7, 2013 at 10:22 am by murthy poongundran