Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
தெய்வ ரகசியம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
தெய்வ ரகசியம்

*********************************************************************
சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் வித்தியாசம் தெரியாத இன்றையக் கல்வியறிவால் ஒரு போதும் சாகாக்கல்வியைக் கற்க இயலாது. சத்தியத்தை சத்தியத்தின் வாயிலாக மட்டுமே உணர வேண்டும்.

*********************************************************************

முன்னுரை:

மண்ணுலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் இன்புறவும், அவர்களெல்லாம் பிறவிப்பெருங்கடல் கடந்து எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பாதாரவிந்தத்தில் கலந்து மரணமில்லாப் பெருவாழ்வு வாழவும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவுள்ளம் கொண்டார். திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்றார்.
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்....
இவையாவும் உலகம் அறிந்ததே!
வள்ளல் பெருமானின் மெய்ந்நெறி

திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் உலக நன்மைக்காவும், உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் மாயை என்கிற வலையிலிருந்து விடுபடவும் தெய்வ ரகசியத்தை மக்களுக்கு நேரடியாகவே எடுத்து வியம்பினார்.
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப் பொருளை நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தையருளடைமின்.........
சஞ்சிதம், பிராப்தம் மற்றும் ஆகாமியம் என்கிற கர்மவினைகளை எளிதாக மாற்றி அமைக்கலாம் என்ற உண்மையையும் கூறினார். ஆனால் மாயைவயப்பட்ட ஆன்மாக்கள் கர்மவினைகளை நீக்குவதற்கான எந்த ஒரு முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்த முடியாத மாயைவலையில் சிக்கிக்கொண்டிருக்கின்றன.
வினைப்பயனைத் தீர்க்கும் மாமருந்து
வினைப்பயனை நீக்கிக்கொள்ள சுத்த சன்மார்க்கம் ஒரு சிறந்த மாமருந்தாகும். இம்மருந்து தொடக்கத்தில் கசப்பை ஏற்படுத்தினாலும் இதில் பழக, பழக சுவையெலாம் திரட்டிய தூயதீம் பதமாக விளங்கும்.
(அமைதியான வாழ்க்கையையும், ஆன்ம விடுதலைக்கான வாழ்வையும் விரும்பி இன்றைய உலகில் பல ஆன்மாக்கள் தியான மையங்களையும், யோக மையங்களையும் சார்ந்து வாழ விரும்புகின்றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு சில போலி ஆசாமிகள் அவர்களையெல்லாம் அடிமைகளாக்கி, மாயை வலையில் தாங்களும் சிக்கி, அவர்களையும் சிக்க வைத்து போலித்தனமான ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்).
இதுவும் ஒரு வகையில் மாயையின் திருவிளையாடலாம். சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் வித்தியாசம் தெரியாத கல்வியறிவால் ஒரு போதும் சாகாக்கல்வியைக் கற்க இயலாதாம்.

சாகாக்கல்வி

அறிவிற்கும் அறிவாக விளங்கும் சாகாக் கல்வியை உலகில் இருக்கும் அனைத்து உயிர்களும் உணரும் பொருட்டு;

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே
உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே
உலகத்தில் இருக்கும் அனைத்து அணுக்களிலும் வியாபித்து இருக்கும் இறைவனை உலக மக்கள் யாவரும் உணர வேண்டும். எல்லாம் ஆன்மாக்களும் ஆன்ம விடுதலை அடைய வேண்டும் என்பதற்காகவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜொதி ஆண்டவர் திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் மூலம் இந்த தெய்வ ரகசியத்தை அனைவருக்கும் எடுத்துரைக்கச் செய்தாராம்.
வள்ளல் பெருமானின் மாபெரும் குறிக்கோள் ( இறையின் திருவுளம்)
உலகுயிர்த் திரளெல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை
வள்ளல் பெருமானின் அவதார நோக்கம் உலகில் இருக்கும் அனைத்து ஆன்மாக்களும் கர்மவினையில் இருந்து விடுபட்டு சுத்த சன்மார்க்க சுகநிலையான மரணமில்லாப் பெருவாழ்வைப் பெறுவதற்கானத் தகுதியை ஏற்படுத்துவதாம். இந்நிலையை அனைவரும் அடைவதற்காகவே சன்மார்க்கத்தைத் தானே நடத்துகிறாராம்..

மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும்.....
கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்.......
எவ்வுலகமும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்......
உலகமெலாம் மருள்நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்தியிடல் வேண்டும்........
நானே சன்மார்க்கம் நடத்திகின்றேன் நம்பெருமான்
தானே எனக்குத் தனித்து.
(இந்த மாபெரும் இறைப்பணியை நிறைவேற்றுவதற்காக அவரே சன்மார்க்கத்தை நடத்துகின்றாராம்.)
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவுளம் யாதெனில்: அன்பு என்கிற அருள்நெறியாகிய மதமும் ஆன்ம நேயம் என்கிற இனமும் உருவாக்குவதாம்!

முடிவுரை

வள்ளல் பெருமானார் தானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்று கூறியதற்கு காரணம் அவர் மண்ணுலகத்தில் உள்ள ஆன்மாக்களுக்கும், விண்ணுலகில் இருக்கும் ஆன்மாக்களுக்கும் ஆன்ம விடுதலையை அளித்துக்கொண்டிருக்கிறாராம். இதுவே அவருடையப் பணியாக இருக்கிறதாம்.
எவ்வுலகமும் எத்தேவரும் எவ்வுயிரும் சுத்த
சிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்.....
அருள்நெறியைக்காதலித்து ஒருமையில் கலந்தே
உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று
ஓங்குதல் என்றுவந்து உறுமோ
வள்ளலே அதுகண்டு அடியனேன் உள்ளம்
மகிழ்தல் என்றோ எனத் துயர்ந்தேன்
ஒள்ளியோய் நினது திருவுளம் அறிந்தது....
எனவே இவ்வுண்மையை -தெய்வ ரகசியத்தை உணர்ந்து வள்ளல் பெருமானார் காட்டிய அருள்நெறியைக் காதலித்து - அவ்வழியில் நின்று- எவ்வுயிரையும் தம்முயிராக பாவித்து- ஒருமையில் கலந்தால் ஜீவனை சிவமாக்கும் வித்தையைக் கற்கலாமாம். மரணமில்லாப் பெருவாழ்வு இதுவாம்.
தகவல் உதவி:
ஞானகுரு சிதம்பரம் ராமலிங்க சுவாமிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
.