www.vallalarspace.com/durai
ஆறாம் திருமுறை / 070. சிவபுண்ணியப் பேறு
ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
070. சிவபுண்ணியப் பேறு
sivapuṇṇiyap pēṟu

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த
வாழ்விலே வரவிலே மலஞ்சார்
தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது
தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது
காலிலே ஆசை வைத்தனன் நீயும்
கனவினும் நனவினும் எனைநின்
பாலிலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

2. மதத்திலே சமய வழக்கிலே மாயை
மருட்டிலே இருட்டிலே மறவாக்
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது
கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம்
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும்
பரிந்தெனை அழிவிலா நல்ல
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

3. குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே குமைந்துவீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
நிற்கின்றார் நிற்கநான் உவந்து
வலத்திலே நினது வசத்திலே நின்றேன்
மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம்
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

4. கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த
கொழுநரும் மகளிரும் நாண
நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
நீங்கிடா திருந்துநீ என்னோ
டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற்
றறிவுரு வாகிநான் உனையே
பாடவும் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

5. உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ்
வுலகிலே உயிர்பெற்று மீட்டும்
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான
நாட்டமும் கற்பகோ டியினும்
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே
வழங்கிடப் பெற்றனன் மரண
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

6. நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி
நாதனை என்உளே கண்டு
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
கூடிடக் குலவிஇன் புருவாய்
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான்
அம்பலம் தன்னையே குறித்துப்
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

7. துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர்
சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள்
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார்
விழித்திருந் திடவும்நோ வாமே
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க
மன்றிலே வயங்கிய தலைமைப்
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

8. புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம்
புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து
கருத்தொடு வாழவும் கருத்தில்
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம்
துலங்கவும் திருவருட் சோதிப்
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

9. வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க
வெம்மையே நீங்கிட விமல
வாதமே வழங்க வானமே முழங்க
வையமே உய்யஓர் பரம
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய்
நன்மணி மன்றிலே நடிக்கும்
பாதமே பிடித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

10. கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன்
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்
பண்ணிய தவம்பலித் ததுவே.

Audio: