Vallalar Universal Mission Trust   ramnad......
95. ஆமயத் தடைதவிர் ஓமயத் திருவுரு


189. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்

190. காமயத் தடைதவிர் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) என்பது பசுவாம் ஆன்மாவாக மொழியப்படும். இந்ததா ஆன்மாவோ எங்கும் நிறை பரம்பொருளாம் பராமான்மாவின் பூரண இயல் கொண்ட சிற்றணுவாக இருக்கின்றது. அதாவது, கடவுளே பூரணானந்த அனுபவம் வெளிப்பட இந்த ஆன்மாவில் உட்பொதிந்து நிலவுகின்றதாம். ஆனந்தானுபவம் கிடைக்கப்பெறாதவரையும் அவ்வான்மாவுக்குத் திருவருள் நியதிப்படி முறையாக ஒவ்வொரு உயிரின வடிவங்கள் வந்து வந்து சென்று கொண்டே யிருக்கும். இந்த வடிவ ஆக்கமும் நீக்கமும்தான் பிறப்பும் இறப்புமாக ஒருவனுக்கு விளங்குகின்றதாம். இவ் அல்லல் பிறாவித் தொடர்பால், வாழ்வும் மரணமும் உண்டாவதால், பலவாகிய சுக துக்கங்கள் ஒவ்வொரு பிறவியிலும் சூழ்ந்து வருத்துகின்றனவாம். இத் தொல்லைப் பிறவித் தளை நீங்க வேண்டி மனிதன் திருவருளை வேண்டி நிற்கின்றான். இதுவே ஆமயத் தடையாகக் கருதப்படுகின்றதாம். ஆமயம் என்பது ஆன்ம இயல்பாம் இயற்கைநிலை என்பர். இது ஆன்மாவின் சுபாவமாகிய இயற்கை மல பாசத்தளையாக, மூலமலமாக மொழிகின்றனர்.

மேற்படி ஆன்மாவின் பிறவிக்குக் காரணம் ஆன இயல்பை அல்லது ஆமயத்தை மாற்றத், தடையைத் தவிர்க்க நம் அருட்பெருஞ்ஜோதி உதவுகின்றதாம். எப்படி என்பதைக் காண்போம். இந்த அருட்பெருஞ்ஜோதியே ஒவ்வொரு ஆன்மாவின் கண்ணும் இயல்பாகப் பொருந்தி நின்று சூழ் உரு எதுவும் தோன்றவும் மறையவும் ஆணை செய்கின்றதெனத் திருவருளால் இன்று அறிகின்றோம். இதனால் ஆன்மாக்களுக்குத் தேகம் வருவதும் போவதும் ஆண்டவரின் அருளியற்செயலே என்பதுதான் உண்மையாம். எனவே, அருட்பெருங் கடவுள்தானே ஆன்ம அணுமயமாய் இருந்துகொண்டு, தன் அருளையேதான் ஐஞ்சக்திச் சூழ் வண்ணங்களாய்க் கொண்டு அனாதி காலமாகத் திகழ்கின்றார் என்றறிகின்றோம். இந்த உண்மை அறிந்து கொள்ளப்படுவதற்கு அடுத்த நிலையாய் இருப்பதுதான், மனிதன் தன் உள், தன்னினும் வேறாய்ச் சிறந்திலங்கும் ( கடவுள்) மெய்ப்பொருள் விளங்கக் காண்கின்ற நிலையாம். இந்த நிலையில்தான், இந்த ஆன்மா வேறு, பதிவேறு, பாசம் வேறு எனவும், திருவருளால் ஆன்மப்பசுவானது பாசத்தை யொழித்துவிட்டுப் பதி யோடு கலந்து ஒன்றி மறைதல் முடிவு என்றும் கருதினான்.

இன்றோ சுத்த அருள் அடைவதால், ஒன்றான அருட்பெரும் பதியே யாவுமாய்ப் பசு பாசம் எல்லாமாய் விளங்கக் கண்டு, தான் ஆகிய பசு வேறாக இல்லை, தன்னைச் சூழ்ந்த பாசம்கூட அருளேயன்றிப் பிறிதல்ல எனக் காண்கின்றான். இதனால் எல்லாம் சிவமயமே என்பது அருட்பெருஞ்ஜோதிமயமேஎன்பதும் தெளிவாகின்றதாம். இத் தெளிவோடுதான் நம் வள்ளலார், அக நின்று அனக அருள்வாழ்வு மேற்கொள்ளுகின்றார். இதனால் அவர் அருட்பிரகாசராகிப் பரணவ தேக நிலையிலிருந்து கொண்டு, சுத்த ஞான தேக சித்தியும் உடன்கொண்டு விளங்குகின்றார். இந்தப் பிரணவ தேக நிலையே ஓமயத் திருவுரு எனப்படுகின்றதாம். என் உடல் உயிர் ஆதியவெல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன் உடல் உயிர் ஆகியவெல்லாம் உவந்தெனக்கே அளிபாய்” என்று வேண்டியாங்கு, இவ் ஓமயத் திருவுருவை உவப்புடன் வழங்கி , அவ் ஆமயத் தடையெல்லாம் தவிர்த்து விட்டாராம். ஆதலின், அருட்பெருஞ்ஜோதித் திருமுன் வம்மின், ஆமயம் தீர்ந்து ஓமய மந்திர வடிவொடு வாழலாம்.

தயாநிதி சரவனானந்தா

அகவல் உரைவிளக்கம்

vallalarspace.com/vumt