SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலார் வந்தார்.

. வள்ளலார் வந்தார்.
1823 அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 -54 மணியளவில் சிதம்பரத்தை அடுத்த மருதூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த இராமையா பிள்ளை சின்னம்மை என்ற தம்பதிகட்கு ஐந்தாவது குழந்தையாய் இராமலிங்க அடிகளார் பிறந்தார். அவர் எந்த ஆசிரியரிடத்தும் கல்வி கற்கவில்லை. எல்லாக் கலைகளையும் ஓதாமலே உணர்ந்திருந்தார். ஒன்பது வயதிலேயே இறைவன் மீது பக்திப் பாடல்களை எழுத ஆரம்பித்தார். தமது பன்னிரண்டாவது வயதில் தவம் செய்ய ஆரம்பித்தார்.
இந்த உலக மக்கள் மூன்று விதமாக இருக்கின்றார்கள். நல்லதையே நினைத்து , நல்லதையே பேசி, நல்லதையே செய்யும் நல்லவர்கள் முதல் தரம். மனதிலே தீய எண்ணங்கள் இருந்தாலும் மேலுக்கு நல்லவர்கள் போல நடிப்பவர்கள் இரண்டாம் தரம். மனதிலேயும் தீய எண்ணங்கள் , சொல்வதும் தீய சொற்கள். செயலும் தீயவையே செய்பவர்கள் மூன்றாந்தரம். இவர்களில் முதல் தர மக்களைத் திருத்த வேண்டிய அவசியம் இல்லை . மூன்றாம் தர மக்களைத் திருத்தவே முடியாது. இரண்டாம் தர மக்களைத் திருத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த மக்களைத் திருத்தும் பணியை இறைவன் வள்ளலாருக்கு அளித்து அவரை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தான். வள்ளலார் இறைவன் கட்டளைப்படியே நமக்கெல்லாம் நல்வழியைப் போதித்தார்.
இறைவன் மனிதனுக்கு மட்டும் மன அறிவாகிய ஆறாவது அறிவை அளித்திருக்கின்றான் ஏன் தெரியுமா? எந்தக் காரியத்தையும் நன்கு சிந்தித்துப் பார்த்தே செயல் படுத்த வேண்டும் என்பதற்காக. மற்ற ஜீவர்களுக்கு இல்லாத ஓர் அற்ப சுதந்தரத்தை மனிதனுக்கு மட்டும் இறைவன் அளித்திருக்கின்றான். மனிதர்களாகிய நாம் அந்த அற்ப சுதந்தரத்தைப் பயன்படுத்தித்தான் எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். நாம் செய்யக்கூடிய செயல்களால் வரும் வினையை நாமே அனுபவித்தே ஆகவேண்டும். எல்லோரும் மனிதர்கள்தான். ஆனாலும் எல்லோர் வாழ்க்கையும் ஒரே மாதிரி இல்லை. ஏன்.? அவரவர்கள் முன் செய்த வினைக்கேற்பவே ஒவ்வொருவர் வாழ்க்கையும் அமைந்துள்ளது என்பதை நாம் நன்றாக உணர வேண்டும் .நாம் முன் செய்த வினையினால் வரும் துன்பங்களை எவ்வாறு நீக்குவது? இறைவன் மீது நாம் கொள்ளும் பக்தியினால் நீக்கிக் கொள்ளலாம். இதற்குப் பின் நாம் நல்ல காரியங்களையே செய்தோமானால் எதிர்காலத்தை வளமானதாகச் செய்து கொள்ளலாம். நாம் துன்பமில்லாமல் வாழ்வதற்கு வள்ளலார் காட்டியுள்ள வழியைப் பின் பற்றுவோமாக.
1 நாம் பிறரால் நல்லவர்கள் என்று மதிக்கப்படுவதும் மற்றவர்களால் பழிக்கப் படுவதும் நம்முடைய மனதின் செயல்பாடுகளால்தான். எனவே நம்முடைய மனதைத் தூய்மைப் படுத்துவோம் . பிற உயிர்களுக்கு நாம் தீமை செய்தால் நாம் பாவத்திற்கு ஆளாகிறோம். பிற உயிர்களுக்கு நாம் நன்மை செய்தால் நாம் புண்ணியம் செய்தவர்கள் ஆகிறோம். . . நம்முடைய குணங்களுக்கு நாம் உண்ணும் ஆகாரமே முதற் காரணமாக ஆகின்றது . ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணுவோமானால் நாம் கொடிய பாவத்திற்கு ஆளாகிறோம். மாமிச உணவினால் நம் உடம்பில் சேரும் கொழுப்பினால் மாரடைப்பு ,பாரிச வாய்வு. சக்கரை வியாதி போன்ற கொடிய நோய்களைச் சந்திக்கவேண்டி வருகிறது . இறைவன் அருளைப் பெற வேண்டுமானால் நாம் பிற உயிர்கள் மீது கருணை காட்ட வேண்டும். ஜீவகாருண்யம் ஒன்றினால் மட்டுமே இறைவனின் அருளைப் பெறமுடியும் என்றும், வேறு எதனாலும் அவன் அருளை நாம் பெற முடியாது என்றும் கூறுகிறார் வள்ளலார் . விரதங்களில் தலை சிறந்தது கொல்லாமையே ஆகும். உயிர்க் கொலை செய்து மாமிசம் உண்ணுபவர்களை இறைவன் அணைத்துக் கொள்வதில்லை என்றும் கொல்லாமையை விரதம் எனக் கொண்டார் தமை ஆண்டவன் தள்ளுவதில்லை என்றும் வள்ளலார் கூறுகின்றார்
உள்ளானைக் கதவு திறந்து உள்ளே காண உளவு எனக்கே
உரைத்தானை உணரார் பாட்டைக்
கொள்ளானை என் பாட்டைக் குறிக் கொண்டானைக்
கொல்லாமை விரதம் எனக் கொண்டார் தம்மைத்
தள்ளானைக் கொலை புலையைத் தள்ளாதாரைத் தழுவானை
யான் புரிந்த தவறு நோக்கி
எள்ளானை இடர் தவிர்த்து இங்கு என்னை ஆண்ட எம்மானைக்
கண்டு களித்து இருக்கின்றேனே.
.(பாடல் எண் 669 )

மனமும் எண்ணங்களும் :
எண்ணங்கள் எல்லாம் மனதின் செயல் பாடுகளே ஆகும் . மனதில் உதிப்பவைதான் எண்ணங்கள். எனவே மனதைப் பார்த்தால் எண்ணங்களைப் பார்க்கலாம் .எண்ணங்களைப் பார்த்தால் மனதைப் பார்க்கலாம்.
நமக்குப் பகைவர்கள் வெளியே இல்லை. நமக்குள்ளேயே இருக்கின்றார்கள்.
காமம்
i எவ்வளவு வயதானாலும் கொஞ்சம் கூடக் குறையாமல் நம்மை ஆசையின் வசப்படுத்தி நம்மை அலைக்கழிப்பது காமமே.தேவலோகத்து இந்திரனே காம வசத்தனாகிப் பூலோகத்திற்கு வந்து ஒரு ரிஷி பத்தினியின் மீது ஆசைப் பட்டதால் தன் உடம்பெல்லாம் புண்ணாக்கிக் கொண்ட கதையைப் படித்ததில்லையா?கைலை மலையையே தூக்கிவந்த வனும், ராவணேஸ்வரன் என்ற புகழ் வாய்ந்த இலங்கை மன்னன் சீதை மீது கொண்ட ஆசையினால் அழிந்து போன இராமாயணக் கதையைப் பலப்பல ஆண்டுகளாக நாம் படித்தும் கேட்டும் வருகிறோமே இதையெல்லாம் நமது முன்னோர்கள் என் எழுதி வைத்தார்கள். நாம் உணரவேண்டாமா?.
கோபம்
ii. நமது ஆயுளைக் குறைத்து நம்மைச் சீக்கிரம் மரணமடையச் செய்வது கோபமே. அந்தக் கோபத்தை வள்ளலார் இரண்டாகப் பிரிக்கின்றார். அதாவது சினம் என்றும் வெகுளி என்றும் பிரிக்கின்றார் . சினம் என்பது உள்வேக்காடு. வெகுளி என்பது கண் சிவத்தல் , மேல் விழுந்து கூவுதல் ,போன்றவை. இவை இரண்டும் நமது வயதைக் குறைக்குமாம். திரு வள்ளுவப் பெருமானாரும் "தன்னைத்தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம் என்று அன்றே கூறியுள்ளார். இரத்த அழுத்தம், சக்கரை வியாதி, போன்ற நோய்களைத் தந்து நம்மைச் சீக்கிரமாக மரணமடையச் செய்வது இந்தக் கோபமே ஆகும்.
தியானம் ,தவம் முதலியவற்றில் ஈடுபடுவோர் சினத்தை அடியோடு ஒழிக்க வேண்டும்.பல ஆண்டுகள் தவம் செய்தோர் ஒரு முறை சினத்தின் வசப்பாட்டால் போதும் இதுவரை தவத்தினால் சேர்த்து வைத்த அத்தனை சக்தியையும் அடியோடு இழந்து விடுவாராம் . தவத்தை அழிக்கும் சினத்தை ஒழித்து என்று பாடியுள்ளார்.
உலோபம்:
உலோபம் என்பது யாதெனில் வறுமை என்னும் ஏழ்மையினால் பிறர் துன்பப்படுவதைக் கண்டும் மனதிலே கொஞ்சம்கூடக் கருணை இல்லாமல் எந்த வித உதவியும் செய்யாமல் இருப்பதே ஆகும். .வசதி இருந்தும் உதவி செய்யாமல் பிறர் துன்பப்படுவதைக் கண்டும் காணாமல் இருக்கும் செய்கையே உலோபம் என்பது . பிறருக்கு உதவி செய்தால் நம்மிடம் இருக்கும் பணம் குறைந்து விடுமே பிற்காலத்தில் நாம் என்ன செய்வது என்று அந்த உலோபத்தனத்தை நமது மனம் சரி என்று சமாதானம் செய்து கொள்ளும். நிலையில்லாத வாழ்க்கையிலும் தர்ம சிந்தனையை இல்லாமல் செய்வதே இந்த உலோபம் ஆகும். இந்த லோபத்தை வள்ளலார் முழுமையான மூடத்தனம் என்கிறார்.:
என்றைக்கோ எழுதி வைக்கப்பட்ட மகா பாரதத்திலே ஒரு நிகழ்ச்சி தண்ணீர் எடுக்க தருமர் ஒரு குளத்திற்குப் போகிறார்.
அங்கே ஒரு யட்சினி தருமரிடம் ஒரு கேள்வி கேட்கிறது.அந்தக் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்று யட்சினி கூறியது. தருமாறும் என்ன கேள்வி என்று கேட்டார். இந்த உலகில் மிக மிக அதிசயமானது எது? இதுதான் கேள்வி. உடனே தருமர் சொன்னாராம் மலைபோல் இருப்பவரும் கணத்தில் மாண்டுபோவதைக் கண்டும்கூட வருங்காலத்தில் உதவும் என்று பொருளைச் சேர்த்து வைக்கின்றார்களே அதுதான் அதிசயம் என்றாராம் தருமர்.
லோபியாய் இராதே தருமம் செய் என்று அன்றே மகாபாரதம் கூறியிருக்க
இன்றும் லோபிகள் இருக்கின்றார்களே என்ன செய்வது.?
கடு மோகம்;
முதலில் ஒரு பொருளின் மீது ஆசை வரும். அந்த ஆசையின் காரணமாக அந்தப் பொருளை அடைய வேண்டும் என்று முயற்சி செய்வோம். அந்தப் பொருள் கிடைக்காமல் போகுமேயானால் அதை எப்படியாவது , எப்பாடு பட்டாவது அடைந்தே தீருவது என்று முழு மூச்சாகத் தவறான வழியிலும் போய் அதை அடைவதே செயலாகும் .இப்படிப் பட்டவர்கள் வீணானவர்கள் ஆவர்.ராமாயணத்தில் ராவணன் சீதையை அடைய
எப்படி எல்லாம் முயற்சி செய்தான் அதுதான் கடுமோகம்.மகா பாரதத்திலே பாண்டவர்கள் ராஜ்ஜியத்தைத் தானே அடையவேண்டும் என்று துரியோதனன் என்ன வெல்லாம் செய்தான் .மண்ணாசை யாலே வந்த மோகம் அது. அவன் அடைந்தானா? வீணாகத்தானே போனான். இதையெல்லாம் நாம் மறந்துவிடலாமா?
கொடு மதம்.:
என்ன வந்தாலும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார் வள்ளலார். ஒருவனுக்கு மதம் பிடித்துவிட்டால் யாரையும் மதிக்கவே தோன்றாது . யாருடைய சொல்லையும் கேட்கமாட்டான். தனக்கே எல்லாம் தெரியும் என்ற ஆணவம் வந்து விடும் . அதனால் அறிவு வளர்ச்சி குன்றும்.மதம் பிடித்தவர்கள் கண் கெட்ட குருடர்கள் போல் வாழ்வார்கள்.பத்மாசூரன் சிவபெருமானிடம் ஒரு வரம் வாங்கினான்.சிவன் வரம் தந்ததில் சூரனுக்குச் தந்தேகம் வந்துவிட்டது. யாரிடம் சோதித்துப் பார்ப்பது?வரமளித்த சிவன் தலையிலேயே கை வைக்கத் துணிந்தான்.எதிரே இருப்பது யார் என்றுகூட உணராமல் அவனுடைய மதமானது அவன் கண்ணை மறைத்துவிட்டது. மோகத்தின் விளைவு இது.

பொறாமை:
அடுத்தவனின், செல்வாக்கைப் பார்த்தும், வசதியான வாழ்க்கையைப் பார்த்தும், அவனுடைய புகழைக் கண்டும் மற்றவனுக்குப் பொறாமை வரும். அந்தப் பொறாமை வந்தால் யாருக்குப் பொறாமை வந்ததோ அவனிடம் உள்ள பொருளே போய்விடுமாம் . நம்மிடம் எவ்வளவு உள்ளதோ அதுவே போதும் என்ற மனத் திருப்தியே மனதிற்குச் சாந்தம் தரும். பொறாமை தோன்றி விட்டாலோ நிம்மதியே இல்லாமல் போய்விடும் . நிம்மதியான வாழ்க்கையும் போய்விடும்.மகா பாரதத்திலே குந்தியைக் கண்டு பொறாமைப்பட்ட காந்தாரிக்குப் பிறந்தவர்கள்தான் கொடிய கௌரவர்கள். அழிந்து போனார்கள்.
கொலை:
புலால் உணவின்மீது உள்ள ஆசையினால் கொஞ்சங்கூட மனதிலே இரக்கமின்றி மீன், நண்டு, கோழி முதலிய ஜீவன்களை நம் வீட்டில் நாமே கொலை செய்கிறோம்.
உணவிற்காக மற்ற உயிர்களை க் கொன்று அந்த உயிர்களின் மாமிசத்தை உண்பது. இது மகா பாதகமான செயல். இதற்கு மன்னிப்பே கிடையாது.
தன் ஊன் பெருக்கிற்குத் தான் பிறி தூன் உண்பான் எங்கணும் ஆளும் அருள் என்று வள்ளுவப் பெருந்தகையே சொல்லி யுள்ளார். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுக்கோல் என்று வள்ளலாரும் கூறியுள்ளார் . இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஜீவகாருண்யம் ஒன்றே வழி என்றும் வேறு எந்த வழியாலும் பெறமுடியாது என்றும் வள்ளலார் திட்டவட்டமாக அறிவிக்கின்றார்.
ஆக,. காமம், கோபம் ,லோபம் ,மோஹம் ,மதம் ,பொறாமை, கொலை ஆகிய ஏழும் இவற்றுடன் வரக்கூடிய எதுவும் எனைப் பற்றிடாமல் அருள்வாய் என்று வேண்டுகிற பாடலைப் பார்ப்போம்.

காம உட் பகைவனும் கோப வெங்கொடி யனும் கனலோப
முழு மூடனும் கடு மோக வீணனும் கொடு மதமெனும்
துட்ட கண் கெட்ட ஆங்காரியும்
ஏம மறு மாச்சர்ய விழலனும் கொலை என்று இயம்பும்
பாதகனுமாம் இவ்வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய்
சேமமிகு மாமறையின் ஓம் எனும் அருட்பதத் திறன் அருளி மலய
முனிவன் சிந்தனையின் வந்தனை உவந்த மெய் ஞான சிவ
தேசிக சிகா ரத்னமே
தாமம் ஒளிர் சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலம் ஓங்கு
கந்த வேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே

மனம்

மனம் என்பது ஓர் அறிவில்லாத சிறுவன். அறிவு என்கின்ற குருவை மதிக்கமாட்டான். இறைவனின் திருவடிப் பெருமையை விளக்குகின்ற புத்தகங்களைப் படிக்கவே மாட்டான். எந்த நேரத்திலும் சும்மா இருக்கவே இருக்காது. அது ஒரு குரங்கு போல். ஏதாவது சேஷ்டை செய்து கொண்டுதான் இருக்கும். அதாவது எண்ணங்கள் ஏதாவது தோன்றிக் கொண்டே இருக்கும். தினம் எண்பது கோடி நினைக்கும் தொழிலை நிமிடமும் மறக்காது.
காமம் என்ற ஆழமான மடுவிலே வீழ்ந்து சுழல்வான்.
சினம் என்ற வெம்மையான சுரத்திலே உழலுவான்.
உலோபம் அதாவது ஈயாத்தனம் என்ற சிறிய குகைக்குள்ளே புகுவான்.
மோகம் என்ற இருளிலே செல்வான்.
மதம் என்ற மலைமேல் ஏறி அங்கிருந்து விழுவான்.
பொறாமை என்கின்ற குழியிலே இறங்குவான்.
அவன் நம்முடைய சொல் கேளான். நமது வசம் நிற்கவும் மாட்டான். இதுவே மனதின் இயல்பு
வள்ளலாரின் பாடலைப் பாருங்கள்.
மனமான ஒரு சிறுவன் மதியான குருவையும் மதித்திடான் நின் அடிச் சீர்
மகிழ் கல்வி கற்றிடான் சும்மா இரான் காம மடுவினிடை
வீழ்ந்து சுழல்வான்
சினமான வெஞ்சுரத்து வுழலுவான் உலோபமாம் சிறு
புகுவான் செறு மோக இருளிடைச் செல்குவான் மதம்
எனும் செய்குன்றில் ஏறிவிழுவான்
இனமான மாச்சர்ய வெங்குழியின் உள்ளே இறங்குவான் சிறிதும் அந்தோ
என் சொல் கேளான் எனது கைப்படான் மற்றிதற்கு ஏழையேன் என் செய்குவேன்
தன நீடு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உள்முகச் சைவமணி சண்முகத் தெய்வ மணியே

மனம் எப்படிப்பட்டது?

இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்களில் அநேகர், மண்ணாசை, பெண்ணாசை. பொன்னாசை, புகழாசை போன்றதில் மனதைச் செலுத்தி அதைச் சேர்ப்பதற்கே தங்கள் வாழ்நாட்களைச் செலவு செய்து கொண்டிருக்கின்றனர். இருப்பதே போதும் என்ற மனநிறைவு யாருக்கும் இருப்பதில்லை. உலகியல் மக்கள் ம ட்டுமல்ல பெரிய பெரிய சாமியார்களும் கூட பொன்னுக்கும் பெண்ணுக்கும் அலைந்து அலைந்து அசிங்கப் படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இது மிக மிகச் சாதாரண விஷயம். எல்லாச் செல்வங்களையும்விட ஒரு மனிதனுக்கு மன அமைதிதான் பெரும் செல்வமாகும் .எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்வது வாழ்க்கை அல்ல. இப்படித்தான் வாழவேண்டும் என்று வரையறை செய்து அப்படி வாழ்வதே வாழ்வு ஆகும். இந்த மனித வாழ்க்கை நிலையானது அல்ல .அடுத்த கணத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப் பட்ட நிலையற்ற வாழ்வில்தான் நாம் அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ளவேண்டும்.
வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த மலக்கூடு
என்று அறிஞரெல்லாம் வருந்தக் கேட்டும்
அருகணைத்துக் கொளப் பெண் பேய் எங்கே ,மேட்டுக்கடைத்திட
வெண் சோறெங்கே ஆடை எங்கே
இருகணுக்கு வியப்பு எங்கே வசதியான இடம் எங்கே என்று
திரிந்து இளைத்தேனல்லால்
ஒரு கணத்தும் உனை நினைந்ததுண்டோ என்னை
உடையானே எவ்வகை நான் உய்யுமாறே
(மகாதேவமாலை பாடல் எண் 91 )

எந்த ஆசை நம்மைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இரவும் பகலும் இடைவிடாமல் தூங்கக்கூட விடாமல் நம்மை ஆட்டிப் படுத்துகிறதோ அதை வள்ளலார் பந்தம் என்கிறார். எது நமது மனதைப் பற்றுகிறதோ அதுவே பந்தம். அந்தப் பந்தத்தை அறுத்துவிட்டால் அதுவே நமக்கு வீடு பேறாகும். வேதங்கள் கூறும் விளக்கமே இதுவாகும். பண்பாளர்கள் மேன்மை மிக்கவர்கள் இதனைத் தெரிவித்திருந்தும் இந்தப் பாவி மனம் இந்த உலக விடயங்களைத் தூக்கிக் எறியாமல் அந்த நினைப்பிலேயே எழுவதும் , வீழ்வதும் ,இறங்குவதும் ஏறுவதும். வீணாக எண்ணுவதும் ,அதனையே நண்ணுவதும் ,இவ்வுலக போகங்கள் அனைத்திலும் சென்று சென்றே சுற்றுவதும் கொஞ்சங்கூட அறிவு என்பதே இல்லாமல் சுழல்கின்றதே இறைவா உன் அருள் இல்லாமல் இந்தச் சுழல் மனம் அடக்க வருமோ வராது,. நாம் முதலில் இறைவனின் அருளைப் பெறவேண்டும். அதற்கு எளிய வழியோ ஜீவகாருண்யம் ஒன்றுதான். ஏழைகளின் பசி போக்குவோம். இறைவனின் அருளைப் பெறுவோம்.
பற்றுவது பந்தம் அப் பற்றறுதல் வீடு இதுபரம
வேதார்த்த மெனவே
பண்புளோர் நண்பினொடு பகருவது கேட்டும் என் பாவி
மனம் விடய நடையே
எற்றுவது செய்யாமல் எழுவதொடு விழுவதும் இறங்குவதும்
ஏறுவதும் வீண்
எண்ணுவதும் நண்ணுவதும் இப்புவன போகங்கள்
யாவினும் சென்று சென்றே
சுற்றுவதும் ஆகி ஓர் சற்றும் அறிவில்லாது சுழல்கின்றது என் செய்குவேன்
தூய நின் திருவருளின் அன்றி இவ்வேழை
அச்சுழன் மனம் அடக்க வருமோ

கற்று வழுவற்றவர் கருத்தமர் கருத்தனே கண்ணுதற் கடவுண் மணியே
கனக அம்பலநாத கருணையங் கணபோத
கமலகுஞ்சித பாதனே (திரு வண்ணப் பதிகம் பாடல் எண் 7 )
வள்ளலாரின் மனம் எப்படி இருந்தது?

இந்தப் புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும் நான் எண்ணி எண்ணி நடுங்குகின்றேன். அது மட்டுமல்ல வன் புலால் உண்ணும் மனிதரைக்கண்டு உள்ளே நடுங்கி என் என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் நீ அறிவாயே என்று இறைவனிடம் முறையிடுகின்றார். மனதிலே இறக்கம் சிறிதுமின்றி புலால் உண்போரைக்கண்டு அவ்வளவு வேதனைப் பட்டிருக்கின்றார்.

வள்ளலார் தரும் அறிவுரை .
1 நம்மால் எந்தெந்தப் பொருட்களைக் கண்ணால் காண முடிகிறதோ அந்தப் பொருட்கள் அத்தனையும் என்றாவது ஒருநாள் அழியக்கூடியதே ஆகும்.
கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருக்கும் சந்திர சூரியர் உட்பட அனைத்தும் அழியக்கூடியதே. இதை உணராமல் உலகியலில் காணப்படும் அந்தப் பொருட்கள்மீது ஆசைப்பட்டு அவற்றை அடைந்து அதனால் ஏற்படும் சிற்றின்பத்திலேயே அழுந்திக் கொண்டிருக்கின்றோம்.
௨. எவ்வளவோ பெரியவர்கள் , பண்புள்ளவர்கள், நல்லவர்கள் எவ்வளவோ சொல்லக்கேட்டும் அவர்களது நல்ல கருத்துக்களைப் பின்பற்றாமல் விட்டதனால் நம்முடைய கேள்வி ஞானம் அத்துணை யும் பழுதாகப் போய்விட்டன.
3 நாம் கற்ற நூல்கள் அனைத்தும் பொய்யானவையே. கற்பனைக் கதைகளையும் ,பொய் நூல்களையுமே படிக்கிறோம். நம்மை என்றென்றும் சாகாமல் வாழவைக்கும் உண்மையான நூல்களைப் படிப்பதில்லை.
4 நாம் இதுவரை அனுபவித்த இன்பங்கள் எல்லாம் சிற்றின்பங்களே ஒழிய நிலையான இன்பங்கள் அல்ல. அவைகள் எல்லாம் வீணானவையே.
5 நாம் உண்டது அனைத்தும் மலமாகத்தான் போயின.
6 நமது மனதிலே ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. மன நிறைவு அடைவதே இல்லை. கொண்டதெல்லாம் குறையே.எவ்வளவுதான் நாம் பெற்றிருந்தாலும் இன்னும் கிடைக்காதா என்ற ஏக்கமே மேலோங்கி நிற்கின்றது.
நமது வாழ்க்கை இப்படித்தான் போகிறது என்று வள்ளலார் சுட்டிக் காட்டுகிறார். நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்கிறார். மேலே கூறியுள்ள அத்தனை குறைகளுக்கும் எது மூல காரணம்? நம்முடைய மனம்தான்.அது அருளியலை நாடாது உலகியலிலேயே நாட்டம் கொள்கிறது. நாம் இனி என்ன செய்யவேண்டும்?
இதோ வள்ளலார் பாடல் வருகிறது.
கண்டதெல்லாம் அனித்தியமே கேட்டதெல்லாம் பழுதே
கற்றதெல்லாம் பொய்யே நீர் களித்ததெல்லாம் வீணே உண்டதெல்லாம் மலமே உட் கொண்டதெல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலீரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க மெய் நெறியைக்
கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருளை அடைமின் இறவாத
வரம்பெறலாம் இன்பம்உறலாமே (ஞான சரியை பாடல் எண் 4 }
நாம் எப்படி வாழ்ந்தால் இறைவனின் பிள்ளைகள் ஆவோம்.?
நாம் பின் பற்ற வேண்டிய குணங்கள் ஆறே ஆறுதான். அவையாவன
1 .கொல்லாமை.
2 பொறுமை.
3 சாந்தம்
4 அடக்கம்
5 இந்திரிய நிக்கிரகம்.
6 ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம்.
இதன் விவரம் நன்கு அறிவோம்.
கொல்லாமை:
எந்த உயிரையும் நாம் கொல்லக்கூடாது எந்த உயிரும் கொல்லப்படுவதற்கும் நாம் காரணமாக இருக்கக்கூடாது. அதாவது நாம் மாமிசம் உண்போமானால் நமக்காக ஆடு ,மாடு, கோழி போன்ற உயிர்கள் கொ ல்லப்படுவதற்கு நாம் காரணமாகிறோம். அதனால் நமக்குக் கொலை பாவம் சேர்கிறது.
அதனால் நாம் பல துன்பங்களை அனுபவிக்க நேருகிறது. . விதி யாரையும் விடாது. நாம் செய்த பாவங்களை நாமே தான் அனுபவித்து ஆக வேண்டும் காது குத்தல் போன்ற மங்கலச் சடங்குகளிலும் சிலர் அமங்கலமாக உயிர்ப் பலி கொடுக்கின்றார்கள். இது அறியாமையே ஆகும். எந்தக் கடவுளும் உயிர்ப்பலி கேட்பதில்லை. அங்காள பரமேஸ்வரி ,திரௌபதி அம்மன், ரேணுகா அம்மன் போன்ற ஆலயங்களிலும் உயிர்ப்பலி கொடுக்கின்றார்கள். இது தவறு. கருணையே உருவான இந்தத் தெய்வங்கள் உயிர்ப் பலி கேட்குமா என்ற விளக்கம் இல்லாமல் அந்த ஆலயங்களில் உயிர்களைக் கொல்லுகிறார்கள் இறைவன் பெயரால் உயிர்ப்பலி தருவது மகா பாவம். பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களைக்கூட வள்ளலார் கொல்லக்கூடாது அவைகளை வெளியே கொண்டு விட்டுவிட வேண்டும் என்கிறார். கொசு வைக்கூட நாம் அடிக்கக்கூடாது. ஆக எந்த உயிரையும் கொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை.
ஒவ்வொரு நாளும் இந்த நாட்டிலே உணவிற்காகக் கொல்லப்படும் உயிர்களின் எண்ணிக்கை கோடிக் கணக்கில் இருக்கும்.ஆனால் அதற்காக யாரும் தண்டிக்கப் படுவதில்லை.காரணம் மனித உயிருக்குத் தரும் உயர்வை மற்ற உயிர் களுக்குத் தருவதில்லை.மனித உயிர்மட்டுமே உயர்வானது மற்ற உயிர்கள் தாழ்வானவை என்பதே மனிதர்களின் திடமான முடிவு.எல்லா உயிர்களும் சமம் என்று வள்ளலார் எடுத்துக் கட்டினாஎல்லா உயிர்களையும் தம் உயிர்போல் யார் பாவிக்கின்றார்களோ அவர்கள் உள்ளத்தில்தான் இறைவன் இருக்கின்றார். என்றும் வள்ளலார் பாடியதோடு நில்லாமல் மனுமுறை கண்ட வாசகம் என்ற உரைநடை நூலையும் வள்ளலார் எழுதி உள்ளார். இந்த நூலில் பசுவின் கன்றை அரச குமாரன் கொன்றான் என்பதற்காக பசுவின் கன்றுக்கு ஈடாகத் தன் மகனையே அவனுடைய தந்தையாகிய மனுநீதி சோழன் மரண தண்டனை விதித்துக் கொலை செய்கிறான். பசுவின் கன்றின் உயிரையும் அரச குமாரனின் உயிரையும் சமமாக எண்ணுவதே சரியானது என்று வள்ளலார் போதிக்கிறார். இந்த நிலை என்றைக்கு வருமோ? .
பொறுமை:

யார் என்ன செய்தாலும் நாம் கோபித்துக் கொள்ளாமல் அமைதியாக இருப்பதே பொறுமை ஆகும். மனதிற்குள்ளே வேகம் இருந்தாலும் அதை வெளிப் படுத்தாமல் உள்ளுக் குள்ளேயே அடக்கிக் கொள்வதே பொறுமை. இது மேல் விளைவு உண்டு பண்ணாது . நம்மீது ஒருவர் கோபித்துக் கொண்டு ஏதாவது செய்தால் நாம் திருப்பி அவர்கட்கு ஏதாவது செய்தால் வீணாகப் பகைதான் வளரும் . நாம் பொறுமையோடு இருந்தால் நம்மீது கோபித்துக் கொண்டவர்களே திரும்பி வந்து நம்முடன் சமாதானம் செய்வார்கள். எனவே பொறுமை முதற்படி.மகா பாரதத்திலே தருமரை பொறுமைக்கு இலக்கணமாகக் காட்டி உள்ளார்கள்.பாரதம் படிக்கின்றோம் கேட்கின்றோம் ஆனால் எதையும் பின்பற்றுவதில்லை.

சாந்தம்
சாந்தம் என்பது பொறுமைக்கு அடுத்தப் படி ஆகும். யார் எந்தத் தவறு செய்தாலும் நம்முடைய மனதிலே எந்தவித சஞ்சலமும் இல்லாமல் ,மன எழுச்சி இல்லாமல் இருப்பதே சாந்தம் ஆகும். பொறுமையிலே உள்வேக்காடு இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் சாந்தத்திலே அதுவும் கிடையாது. மன அமைதி நிலைக்கும்.சாந்த நிலைக்கு வந்தவர்களே உண்மையான சாதுக்கள் ஆவர்.

அடக்கம்

அடக்கம் எவ்வளவுதான் நாம் கற்று அறிந்திருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் ஒன்றும் அறியாதவர்போல் அமைதியாக இருப்பது அடக்கம்தான். தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்கவேண்டும் என்றார் வள்ளலார். அடுத்தது நமக்கு எந்த ஆசை வந்தாலும் அதை அடக்கிக்கொள்வதும் அடக்கமாகும் .ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்து அந்த ஆசைக்கு இடம் கொடாதிருப்பதே அடக்கம்.

இந்திரியங்களும் கரணங்களும் ;
ஒரு பொருளை நமது கண்களால் காணும்போது அது என்ன என்றே உணராமல் பார்பது இந்திரியக் காட்சி ஆகும்.
அந்தப் பொருளின் நாம ரூபத்தை உணர்வது கரணக் காட்சியாகும்
அந்தப் பொருளின் பயனை அறிவது ஜீவக் காட்சியாகும்.
அந்தப் பொருளின் உண்மையை அறிவதே ஆன்மக் காட்சியாகும். .
ஒரு பொருளின் உண்மையோ,பயனோ,நாம ரூபமோ இல்லாமல் காண்கின்ற இந்திரியக் காட்சியால் நமக்கு அந்தப் பொருளின் மீது ஆசை ஏற்பட வாய்ப்பே இல்லை. இதைத்தான் இந்திரிய நிக்கிரகம் என்றார் வள்ளலார்.

ஆன்ம இயற்கைக் குணமாகிய ஜீவகாருண்யம்
:
பிற உயிர்கள் மீது கருணை காட்டுவதற்கு எந்த விதத் தடை வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது கருணை காட்டவேண்டும் .யார் தடுத்தாலும் பிற உயிர்கள் மீது தயவு செய்தே வாழவேண்டும். இறைவன் அருளைப் பெறுவதற்கு இதை விட வேறு மார்க்கம் இல்லை என்று வள்ளலார் கூறியுள்ளார் .அதிலும் பசி யாற்றுகின்ற அன்னதானத்தின் பெருமைக்கு அளவே இல்லை. தானத்தில் சிறந்தது அன்னதானமே. அன்னதானம் செய்வோர் இறைவனின் செல்வப் பிள்ளையாக நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் செல்வச் சிறப்புடன் வாழ்வார்கள்.

ஜீவகாருண்யமே தெய்வவழிபாடு

திரு அருட்பிரகாச வள்ளலாரின் தலையாய கொள்கை மரணமிலாப் பெரு வாழ்வு.
அந்தப் பெரு வாழ்வைப் பெறுவதற்கு முதற் படியாகவும் அடிப்படையாகவும் நிற்பது ஜீவகாருண்யமே. ஜீவகாருண்யம் என்றால் உயிர் இரக்கம். உயிர் இரக்கம் என்றால் எல்லா ஜீவன்களையும் தன்னைப்; போலப் பார்த்து அவைகட்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் நாம் விரைந்து சென்று அத் துன்பத்தை நீக்குவதே ஆகும். ஜீவன்களுக்கு நாம் நன்மை செய்வதால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்? எல்லா ஜீவன்களின் உள்ளும் இறைவன் இருப்பதால் நாம் ஜீவன்களுக்குச் செய்யும் உபகாரம் இறைவனுக்கே செய்தது ஆகும். அதனால் இறைவனின் அருள் கிடைக்கும். இறைவனின் அருளை அடைவதற்கு ஜீவகாருண்யம் தவிர வேறு வழி இல்லை என்று வள்ளலார் திட்டவட்டமாக அறிவிக்கிறார். .
மனதிலே இரக்கம் இல்லாமல் பிற உயிர்களைக் கொன்று அவற்றின் மாமிசத்தை உண்பவர்கட்கு இறைவனின் அருள் நிச்சயமாகக் கிடைக்காது என்றும் வள்ளலார் அறிவிக்கின்றார். மாமிசம் உண்பவர்கட்கு அருள் கிட்டாமல் போவது மட்டுமல்ல கொலை பாவமும் கிட்டும். அதற்குரிய தண்டனையையும் அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும். நாம் யார் யாரையோ ஞானிகள் என்று கூறிக்கொண்டு அவர்களைப் போற்றிப் புகழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஓர் ஆணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில் கண் விழித்து அந்தப் பெண்ணை மீண்டும் ஆணாக்கி , இறந்த பிணத்திற்கு உயிர் கொடுத்து எழுப்புகின்ற உருவானாய் இருந்தாலும் ஓர் உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணும் எண்ணம் உடையவனாய் அவன் இருந்தால் அவனை ஞானி எனக் கூற வொண்ணாதேஎன்கிறார்.
மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில் கண் விழித்து
வயங்கும் அப்பெண்
உரு ஆணை உருவாக்கி இறந்த வரை எழுப்புகின்றஉருவனேனும்
கருவாள் நையுறஇரங்காது உயிர் உடம்பைக் கடிந்துண்ணும் கருத்தனேல் என் குருவாணை சிவக் கொழுந்தாணை ஞானி எனக் கூறொணாதே

மாமிசஉணவை ஏன் உண்ணக்கூடாது?

மாமிச உணவை உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பானது நம் இரத்தத்தில் சேரும். அப்படிச் சேரும் கொழுப்பானது பலவிதமான நோய்களுக்குக் காரணமாகிறது.
1 மாமிசம் உண்பவனின் கை கால்கள் செயலற்றுப் போகக்கூடிய பாரிச வாயு என்ற நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு.
2 தீராத வியாதியாகிய நீரிழிவு அதாவது சக்கரை வியாதி உண்டாகலாம்
3 நாற்பது வயதில் இருந்து ஐம்பது வயதிற்குள் மாரடைப்பு நோய் வந்து அகால மரணத்தை உண்டாக்கலாம்.
இந்த வியாதிகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் மாமிச உணவை அறவே வெறுக்க வேண்டும்.
மாமிச உணவினால் தான் பலம் உண்டாகிறது:
இது தவறான கருத்து. மிருகங்களில் மிகவும் பலம் வாய்ந்த யானை மாமிசம் உண்ணுவதில்லை. மாமிசமே உண்ணாத யானைக்கு எவ்வாறு அவ்வளவு பலம் வந்தது. மாமிசம் உண்ணாத எவ்வளவோ பேர் பலசாலிகளாக உள்ளனர். மாமிசமே பலம் தரும் என்பது தப்பு தப்பே.

மாமிச உணவே ருசியானது:

இதுவும் தவறான கருத்தே. உண்மையில் மாமிச உணவு சுவை உடையது என்றால் சமையல் செய்யும்போது அதில் மசாலா பொடி எல்லாம் ஏன் சேர்க்கவேண்டும்?வாங்கினவுடனே அப்படியே பச்சையாகவே சாப்பிடவேண்டியதுதானே? எனவே அது சுவையானது என்பதும் தப்பே தப்பே.
மாமிச உணவு சாப்பிடாவிட்டால் ஆடு மாடுகள் முதலியன பெருத்துவிடும்:
இதுவும் ஒரு தவறான கருத்தே. காட்டில் வாழ்கின்ற புலி, சிங்கம் முதலியவற்றை யாரும் சாப்பிடுவதில்லை. அவைகள் பெருத்தா விட்டன? இல்லையே. படைப்பது ஆண்டவனின் செயல் . எவ்வளவு படைக்கவேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான். நாம் அது பற்றிக் கவலைப்படவேண்டாம்.
ஆடு மாடுகள் கோழிகள் முதலியவற்றைப் பலி கொடுத்தால் இறை அருள் கிட்டும்:

இது மிக மிக மோசமான கருத்து. இறைவன் கருணையே வடிவானவன். அவன் எதிரில் ஓர் உயிரைக் கொன்றால் அவன் மகிழ்வானா? கிடையவே கிடையாது. இது பூசாரிகள் போன்றோர் செய்த ஏமாற்று வேலை .பலி கேட்கும் தெய்வம் எதுவும் கிடையாது. எனவே எக்காரணம் கொண்டும் எந்த தெய்வத்தின் பெயராலும் எந்த உயிரையும் பலி கொடுக்காதீர்கள். ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் வள்ளலார் .அது எப்படி?
இறைவன் அருளைப் பெறுவதற்கு ஜீவகாருண்யமே வழி என்றும் வேறுயில்லை என்றும் வள்ளலார் கூறியுள்ளார் .இறைவன் நம்மிடம் இரக்கம் ஒன்றை மட்டுமே எதிர்ப்பார்க்கிறான். நம்மால் அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றுமே கிடையாது. மோட்ச வீட்டின் திறவுகோல் ஜீவகாருண்யமே என்று திட்ட வட்டமாக வள்ளலார் கூறினார். இதை நமது மனதில் பதிய வைக்க ஒரு சிறு கற்பனைக்கதை கீழே காணலாம்.
தமிழ் நாட்டிலிருந்து மூன்று பேர் சிங்கப்பூர் சுற்றுலா சென்றனர். சிங்கப்பூரில் ஒரு லாட்ஜினில் ஓர் அறை எடுத்துத் தங்கினர். அவர்கட்கு நூறாவது மாடியில்தான் அறை கிடைத்தது .அவர்கள் கடை வீதிக்குச் சென்று சில பொருட்கள் வாங்கிக்கொண்டு தாங்கள் தங்கி இருந்த அறைக்குத் திரும்பினர். அவர்களுடைய துரதிஷ்டம் அப்போது மின்சாரம் இல்லாமல் இருந்தது. அவர்கள் நூறு மாடி ஏறி அல்லவா தங்கள் அறைக்குச் செல்ல முடியும். என்ன செய்வது என்று திகைத்தனர். நான் ஒரு ஐடியா சொல்கிறேன் என்று ஒருவன் சொன்னான். என்ன என்று கேட்டார்கள். ஒவ்வொருவரும் அவரவர்களுக்குத் தெரிந்த கதையைச் சொல்லவேண்டும். கதை கேட்டுக்கொண்டே மாடி ஏறி விடலாம் என்றான். மற்றவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள் . ஒருவன் கதை சொல்ல ஆரம்பித்தான் .தனக்குத் தெரிந்த கதைகளை எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தான் . ஐம்பது மாடிகள் ஏறி விட்டார்கள். இது வரை கதை சொல்லி வந்தவன் எனக்கு இதற்கு மேல் கதை தெரியாது என்று சொல்லிவிட்டான். அடுத்தவன் நான் சொல்கிறேன் என்று தொடங்கினான். அவனும் நிறைய கதைகள் சொல்லிக்கொண்டே வந்தான் .நாற்பத்து ஒன்பது மாடிகள்
ஏறியாகிவிட்டது. இதற்கு மேல் எனக்குக் கதை தெரியாது என்று சொல்லிவிட்டான். மூன்றாவது ஆளைப் பார்த்து நாங்கள் இருவரும் கதை சொல்லி நாற்பத்து ஒன்பது மாடிகள் ஏறியாகிவிட்டது .நீ ஒரு கதை சொன்னால் போதும் .இன்னும் ஒரு மாடிதா ன் ஏறவேண்டும். நீ சொல் என்றார்கள், .அவன் சொன்னான் என்னைக் கதை சொல்லச் சொல்லாதீர்கள், அது நல்லதல்ல என்றான். நீ என்ன சொல்கிறாய் என்று கேட்டார்கள். நான் நம்முடைய அறைக் கதவின் சாவியை நாம் படி ஏறத் தொடங்கினோமே அந்த இடத்திலே வைத்து மறந்து வந்து விட்டேன் என்றானாம். என்ன நடக்கும். ? ஏறிய தொண்ணூற்று ஒன்பது மாடிகளையும் கீழே இறங்கி அந்தச் சாவியை எடுத்துக் கொண்டு மறுபடி நூறு மாடி மேலே ஏறி வரவேண்டும். இந்தச் சாவிதான் ஜீவகாருண்யம் . இந்தச் சாவி இல்லாமல் என்னதான் பக்தி முதலியவற்றால் எந்த அளவு மேலே ஏறினாலும் ஜீவகாருண்யம் என்ற சாவியை எடுக்கக் கீழேதான் இறங்கி வரவேண்டும். எனவே இறைவன் அருளை ஜீவகாருண்யத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.
முடிவு
புலால் மறுத்து எந்த உயிருக்கும் தீங்கு நினைக் காமல் வாழ்வோர் இறைவனின் அருள் பெற்று மனைவி மக்களுடன் நிறைந்த சொத்து சுகத்துடன் நீண்ட நாட்கள் வாழ்வார்கள்.


-உடம்பு

பிருதிவி ,அப்பு ,தேயு ,வாயு ஆகிய நான்கும் பெண்ணிடத்தில் உள்ளன. ஆகாசம், பிரகுரிதி , ஆன்மா என்ற மூன்றும் ஆணிடத்தில் உள்ளன. இவை ஏழும் ஒன்று கூடி சப்த தாது வாய் சிருஷ்டிக்குக் காரணமாயின. ஆண் பாகம் சேராது பெண்ணுருவப் படாது .பெண் பாகம் சேராது ஆண் உருவப் படாது . மேலும் ரூப பேதத்தைப் பெண் ஆண் என்பது அறியாமை. மேலும் அறிவின் உயர்ச்சி தாழ்ச்சியாலும் ,சிருஷ்டிக்குக் காரணமான விந்து தங்குவதற்கு ஷேத்திரமான தாலும் ஒருவாறு உருவத்தால் கொள்ளலாம். அனுபவத்தில் கொள்ளப்படாது.
இந்தத் தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் ஐந்து . அதில் முக்கியச்தானம் இரண்டு/ அவை யாவை. கண்டம், சிரம் . சிரத்தில் உள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன் .இது இறக்காது . கண்டத்தில் உள்ளது ஜீவாத்மா என்னும் விஷேச ஜீவன். இது இறந்துவிடும். மேற்படி தேகத்தில் ஆன்மா தனித்து இருக்கும். ஜீவன் மனம் முதலிய அந்தக் கரணக் கூட்டத்தின் மத்தியில் இருக்கும்.
மனித தேகத்தில் புருவம் முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றி நெற்றி முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றாதிருப்பதற்கு நியாயம் யாதெனில் இத் தேகம் பாதாதி பிரமரந்திரம் வரையில் வாயுவால் ஆகிய தேகம். மேற்படி வாயுவினுடைய பிருதிவி காரியமே தேக வடிவம். வாயுவின் வர்ணம் செம்மை, கருமை நிற உரோமம் பிருதிவியின் கூறு. நரை உண்டாவது தத்துவக் கெடுதி;
நெற்றியில் உரோமம் தோன்றாதிருப்பது. மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷம் உள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்து ஸ்தானம் என்றும் அறிவிடம், என்றும், லலாடம் என்றும் , முச்சுடரிடம் என்றும், முச்சந்தி மூலம் என்றும், நெற்றிக்கண் என்றும் ,மகா மேரு என்றும், புருவமத்தி என்றும் ,சித் சபா அங்கம் என்றும் பெயர் .ஆன்மாவிற்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம். ஆதலால் விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்கு நுனியாகிய புருவமத்தி . இதற்கு அனுபவ சித்திகள் திரயோத சாந்தம் வரையிலும் உண்டு. (பக்கங்கள் 258 ,259 262 267 ),,
உயிர்

மனித உயிர்கள் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொருவர் வாழ்க்கையும் வெவ்வேறு விதமாக இருக்கின்றது. இதற்குக் காரணம் உயிர்கள் முன் தேகத்தில் செய்த வினைக் கேற்பவே . இந்த ஜன்மத்தில் வாழ்க்கை அமைந்துள்ளது. ஜீவர்கள் முன் தேகத்திலே செய்த புண்ணிய பாவ கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி என்று அறிய வேண்டில் ஒரு சமுசாரி முன் குடித்தனம் செய்திருந்த வீட்டில் துன்மார்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகி இருந்தானானால் , அந்தச் சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டுக்குக் குடி வந்த காலத்திலும் அந்தத் துன்மார்க் கர்கள் அந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கம் செய்வார்கள். அது போல ,ஒரு ஜீவன் முற்பிறப்பில் குடி இருந் த முன் தேகத்தில் பாவ கர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால் , அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோது அந்தப் பாவ கர்மங்கள் அந்தத் தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேரும் என்றும் புண்ணிய கர்மங்களும் இப்படியே என்றும் அறியவேண்டும்.
ஜீவர்களுக்குப் பசி, கொலை, பிணி முதலியவற்றால் வருந்துன்பங்கள் எல்லாம் மனம் ,கண், முதலிய கரண இந்திரிய அனுபவங்களே அல்லது ஆன்ம அனுபவங்களல்ல என்பார்க்கு உத்தரம் யாதெனில் -இந்தத் தேகத்தில் ஆன்மாவும் அறிவுக்கறிவாக இருக்கிற கடவுள் விளக்கம் தவிர கரணம் இந்திரியம் முதலிய மற்றத் தத்துவங்கள் எல்லாம் மூடமாகிய கருவிகளே அல்லது அறிவாகிய ஆன்மாக்கள் அல்ல.....ஆகலில் சுக துக்கங்களை அறிவாகிய ஆன்மாக்கள் அனுபவிக்குமே அல்லது மூடமாகிய தத்துவங்கள் அனுபவிக்க அறியா. மனம் முதலாகிய கரணங்களும் ,கண் முதலாகிய இந்திரியங்களும் ஜீவ வாழ்க்கைக்கு கடவுள் அருளால் கட்டிக் கொடுக்கப்பட்ட சிறிய வீட்டின் கருவிகளாகும் ன்ப துன்பங்களை வீட்டிலிருக்கின்றவன் அனுபவிப்பானே அல்லது வீட்டின் கருவிகளாகிய மண், கல், மரம், கால், தீ , நீர் முதலியவைகள் அனுபவிக்க மாட்டா. (உரைநடை பக்கம் 84 ஊரன் அடிகள் பதிப்பு_)
அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன?
புத்தி தத்துவத்தால் நன்மை, தீமையை விசாரித்து ,நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணை கொண்டு ,அவரால் கட்டளை இடப்படும் திருப்பணியைக் கைக்கொண்டு இடையறாது செய்யில் அவ்வருளைப் பெறலாம்

நன்மை தீமை என்பவை யாவை?
நன்மை, தீமை என்பவை புண்ணிய பாவம் .புண்ணியம் என்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவம் என்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.
புண்ணிய பாவம் என்பவை நம்மை எவ்வாறு அடைகின்றன?
மனம் ,வாக்கு ,காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும் , மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால் வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும் ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை அடையும். அவையாவன:

மனத்தினால்:வரும் பாவங்கள்

பரதார கமனம் பண்ண நினைத்தல்
அந்நியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல்
அன்னியருக்குத் தீங்கு செய்ய னைத்தல்.
முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமை அடைதல் . இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள்.

வாக்கினால் செய்யும் பாவங்கள்:
பொய் சொல்லல்,
கோள் சொல்லல்.,
புறங்கூறல்
வீணுக்கழுதல்
இவை நான்கும் வாக்கினால் செய்யும் பாவங்கள்.

தேகத்தினால் செய்யும் பாவங்கள்:

பிறர் மனைவியைத் தழுவுதல்
புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல்
அந்நியர்களை இம்சை செய்தல்
தீங்கு செய்கின்றவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரம் செய்தல்
.இவை நான்கும் தேகத்தினால் உண்டாகும் பாவங்கள்.

மனதால் வரும் புண்ணியங்கள்;
. அந்நியர்களுக்கு நன்மை உண்டாக நினைத்தல்
பொறாமை அடையாதிருத்தல்
அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாது இருத்தல்
தனது மனைவி தவிர அந்நியமான பெண்களைத் தாய் ,சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல்
இவை மனத்தால் வரும் புண்ணியங்கள்.

வாக்கினால் உண்டாகும் புண்ணியங்கள்:''

பொய் சொல்லாமை
கோள் சொல்லாமை
இன்சொல்லாடல்,
தோத்திரம் செய்தல்
. இவை நான்கும் வாக்கினால் வரும் புண்ணியங்கள்.

தேகத்தால் உண்டாகும் புண்ணியங்கள்

அன்னியர்களுக்குத் தீங்கு உண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்கள் எல்லாம் தேகத்தினால் உண்டாகும் புண்ணியங்கள்
அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்?
அறிந்த பாவங்கள் செய்த பின் ,தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின் ,"நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும் மோகத்தாலும் ,மறதியாலும், அபிமானத்தாலும் ,அகங்காரத்தாலும் ,செல்வச் செருக்காலும், தாட்சண்ய உடன் பாட்டாலும் உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே என்று பச்சாதாபப்பட்டுப் பெரியோர்களை அடுத்து ,அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச் சித்தங்களைக் கைக்கொண்டு அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் ,விரதத்தாலும் ,இளைக்கச் செய்வது மன்றி, யாத்திரை யாதிகளை மேற்கொண்டு புண்ணிய ஸ்தலங்களில் வசித்து ,இயன்ற அளவில் அன்ன விரயம் செய்தால் நீங்கும்.

அறியாது செய்த பாவங்கள்:

நடக்கும் காலத்திலும் நீராடும் காலத்திலும் ,சயன காலத்திலும், தனக்குத் தோன்றாது நேரிடும் பாவங்கள் ஆகும். இவைகள் யாவும் தினம் செய்யும் ஜபத்தாலும் பாராயண த் தாலும் , தோத்திரத்தாலும், விருந்து உபசரித்தலாலும் தெய்வம் பராவலாலும் நீங்கும்.
பிராயச் சித்தம் முதலியவை செய்யாவிட்டால் பாவங்களால் அடையும் கதி என்ன?
மனத்தால் செய்யும் பாவங்கட்குச் சண்டா ளாதி சரீரம் உண்டாகும் .வாக்கால் செய்த பாவங்கட்கு மிருகம் முதலான சரீரம் உண்டாகும் தேகத்தால் செய்யும் பாவங்கட்கு மரம் முதலான சரீரம் உண்டாகும்

கடவுள் அருள் துன்பம் செய்யுமா?

ஒரு கிராமத்தில் ஒரு வயதான பாட்டி தனது பேரனுடன் வசித்து வந்தாள் ஒரு நாள் அவள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி திடீரென வந்து விட்டார். பாட்டி அவருக்கு உணவு கொடுக்க வேண்டுமே என்று தனது பேரனிடம் சிறிது ரவையைக் கொடுத்து மாடிக்குப் போய் இந்த ரவையில் உள்ள புழுக்களைப் பொறுக்கிப் போட்டுவிட்டு வா என்று சொல்லி அனுப்பினாள். பையனும் மாடிக்குப் போய் அந்த ரவையில் உள்ள புழுக்களைப் பொறுக்கிக் கீழே போட்டான். அந்தப் [ புழுக்கள் வெய்யலின் வெப்பம் தாளாமல் சுருண்டு சுருண்டு இறந்து போயின. அது மார்கழி மாதம். அந்த வெய்யில் அந்தப் பையனுக்கு மிக மிக இதமாக இருந்தது, காய்ந்தது ஒரே வெய்யில்தான். அந்த வெய்யில் அந்தப் பையனுக்கு இதமாகவும் அந்தப் புழுவிற்கு எமனாகவும் இருந்தது அல்லவா? அதேபோல் இறைவனின் அருளும் நல்லவர்கட்கு நன்மையையும் பாவம் செய்கின்ற பாவிகட்கு தீராத துன்பத்தையும் தரும் என்று புரிந்து கொள்ளவேண்டும். நாம் செய்கின்ற நன்மைக்கும் தீமைக்கும் உள்ள பலனை நாம் கட்டாயம் அனுபவித்தே தீரவேண்டும் . இது ஆண்டவனின் தீர்ப்பு . இதனிடம் இருந்து யாரும் தப்பிக்கவே முடியாது, எனவே நாம் நல்லதையே நினைப்போம், நல்லதையே போசுவோம், நல்லதையே செய்வோம்.

அடுத்த பிறவி எது என்று யாருக்கும் தெரியாததாகையால் இந்தப் பிறவியிலேயே இறைவனை அடைய முயற்சி செய்ய வேண்டும்
நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாயுடம்பை
உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தால் பின்னர்
உலகத்தே
வயத்தால் எந்த உடம்பு வருமோ என்ன உடம்பு வருமோ
என்கின்ற
பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின்றேன் எம்பரம் சுடரே.
(அருட்பா)
இந்த உடம்பினுள்ளே உயிர் எப்படி வந்தது,? எங்கே உள்ளது?, எப்படிப் பிரிகின்றது? அதனைப் பிரியாமல் எப்படி வைத்துக் கொள்வது ?என்பதை வள்ளலார் அறிவார்.
நாமும் அந்த விளக்கங்களை திரு அருட்பா மூலம் தெரிந்து கொண்டு இந்தப் பிறவியிலேயே மரணத்தை வென்று இறைவனுடன் கலந்து என்றென்றும் வாழ்வோமாக .
ஆன்மீகம் விஞ்ஞானமே
ஆகாய விமானத்தில் பறந்து பார்த்தோம் கைலாயம் எங்கும் காணப்படவில்லை. கப்பலில் கடல் எல்லாம் தேடிப் பார்த்தோம் திருப்பாற்கடலைக் காணவில்லை சொர்க்கமும் நரகமும் எத்தனையாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளன? விக்ஞானத்தால் நிரூபிக்க முடியாத ஆன்மீகத்தை எப்படி ஒப்புக் கொள்ளமுடியும்? மேலே உள்ள வினாக்களுக்கு ஆன்மீக வாதிகளின் விடை என்ன? உண்மையிலேயே ஆன்மிகம் விக்ஞானத்திற்குப் புறம்பானதுதானா? இராமாயணத்தில் சீதையை இராவணன் ஆகாய மார்க்கமாகத் தூக்கிக்கொண்டு போனான் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவிலிருந்த ரைட் சகோதரர்கள்தான் ஆகாய விமானத்தைக் கண்டுபிடித்தார்கள் என்கிறது விக்ஞானம். சீதை ஒரு பயணி. இராவணன் விமான ஒட்டி. ஆகாயமார்கமாக ஒருவரை அழைத்துச் செல்லமுடியும் என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டு எழுத முடிந்திருக்கின்றது என்றால் ஆன்மீக அறிவு எவ்வளவு உயர்ந்தது .இதை மறுக்கமுடியுமா?
2. ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களைப் பார்த்தால் சூரியன் மத்தியில் இருக்கும். அதைச் சுற்றி ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு திசையைப் பார்த்துக் கொண்டிருப்பது போல் காணலாம். இதன் பொருள் என்ன? அண்டத்தில் சூரியனும் அதைச் சுற்றி சந்திரன், செவ்வாய் , புதன், வியாழன், வெள்ளி, சனி முதலிய கிரகங்கள் வெவ்வேறு பாதையில் சுற்றி வருவது உண்மைதானே. நெப்டியூன், ப்ளூட்டோ என்ற இரண்டு கிரகங்களையும் இந்த நூற்றாண்டில்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்கள். ஆனால் ஆன்மீகத்தில் ஒன்பது கிரகங்கள் என்று முன்பே காட்டப்பட்டுள்ளது (ராகு, கேது என்று பெயர் வைத்திருந்தார்கள்) ஆன்மீக அறிவானது விஞ்ஞான அறிவை முந்திக்கொண்டதே. மேலும் ஆண்டு தோறும் பஞ்சாங்கம் எழுதும் ஐயர் விஞ்ஞானக் கருவிகள் வைத்துக்கொண்டா சூரிய கிரகணம் இந்த நாளில் இத்தனை மணி நேரத்தில் பிடிக்கும் இந்திந்த ஊர்களில் தெரியும் என்று எழுதுகிறார்? எல்லாம் ஆன்மீக அறிவு ஐயா
3 வானத்தில் சந்திரன் ஒவ்வொரு நாளும் உதயமாகும் போது வெவ்வேறு நட்சத்திரத்தின் பக்கத்தில் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இன்று கிருத்திகை என்றால் அன்று வானத்தில் சந்திரனைப் பாருங்கள். பன்னீர்சொம்பு போல் ஆறு நட்சத்திரக் கூட்டத்தின் பக்கத்தில் சந்திரன் இருக்கும், அடுத்த நாள் V போன்ற நட்சத்திரக் கூட்டத்தின் பக்கத்தில் சந்திரன் இருக்கும். அதை ரோகிணி என்பார்கள். 27 நாட்கள் கழிந்ததும் சந்திரன் முதல் நட்சத்திரமாகிய அஸ்வினி பக்கத்தில் வந்துவிடும். பன்னிரண்டு மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும் . இருபத்து ஏழைப் பன்னிரண்டால் வகுத்தால் இரண்டே கால் ஆகும், இந்த இரண்டேகால் நட்சத்திரத்தையே ராசி என்றார்கள். இது. சூரியனின் போக்கு ஆகும். இது ஆன்மிகம் இல்லையா?
4 கிராமங்களில் வாசலில் காலையில் சாணம் தெளிப்பார்கள். ஏன் தெரியுமா? காலில் செருப்பு இல்லாமல் நடந்தால் எந்த வெய்யிலும் சுடாது. அதுமட்டுமல்ல சாணம் ஒரு கிருமி நாசினி. அதேபோல் வாயிற்படியில் மஞ்சள் பூசி குங்குமம் இடுவார்கள். ஏன் ? இவை இரண்டும் கிருமி நாசினி. எந்த வியாதிக் கிருமியும் வீட்டினுள்ளே வராது. ஆன்மீகம் மூட நம்பிக்கை அல்ல முழுக்க முழுக்க விஞ்ஞானமே

5.அதி காலையிலும் மாலையிலும் பலர் சாலையில் கையை வீசிக்கொண்டு வேகமாக நடந்து செல்வதைப் பார்க்கிறோம். ஏன் என்று கேட்டால் டாக்டர் நடக்க வேண்டும் என்று சொன்னார் .அதனால் நடக்கிறோம் என்கிறார்கள். இது நோய் வந்த பின் செய்வது. .ஆனால் நம்முடைய முன்னோர்கள் ஆலயத்தில் நவக் கிரகத்தை 108 சுற்று சுற்றிவா என்றார்கள். இது நோய் வருமுன் காத்தது. இந்தச் செயல் ஆன்மீகத்தில் விஞ்ஞானம்.

6.கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் , ஏகாதசி விரதம் போன்றவை ஏன் தெரியுமா? விரதம் இருந்தால் நம் உடம்பிலுள்ள தேவையற்ற கொழுப்பெல்லாம் கரைந்து போகும் அதற்காக விரதம் .இருக்கச் சொன்னார்கள் இந்த நாட்களில் பட்டினி கிடப்பதால் புண்ணியம் வந்துவிடுமா? இல்லை இல்லவே இல்லை. அப்படியானால் என் இப்படி ஒரு பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். நாம் விரதம் என்ற பெயரால் சாப்பிடாமல் இருந்தபோது பசியினால் நாம் அடையும் துன்பத்தை மனதில் கொண்டு நம் வீட்டு வாசலில் ஒருவன் பசியோடு வந்து பிச்சை கேட்டால் அவன் மீது இர க்கம் கொண்டு அவன் பசிக்கு உணவளிக்கும் எண்ணம் வரும்.அப்படிச் செய்வதால்தான் புண்ணியம் வரும்.
7 ராக்கெட்டில் மனிதனை சந்திர மண்டலத்திற்கு அனுப்பியதாகப் பெருமை பேசுகிறது விஞ்ஞானம். திரிசங்கு என்ற மன்னனை இந்திர லோகத்திற்கே விசுவாமித்ரர் என்ற முனிவர் அனுப்பியதாக ஆன்மிகம் சொல்கிறதே .இந்திர லோகம் உண்டா இல்லையா என்பதல்ல ; மனிதன் இந்த பூமியிலிருந்து வேறு மண்டலம் செல்ல முடியும் என்ற ஆன்மிகம் விக்ஞானத்திற்கு எவ்வளவோ காலம் முந்தியது.

8. ரஷ்யா அந்தரத்தில் ஒரு ஆராய்ச்சிக் கூடம் அமைத்துள்ளதாக விக்ஞானம் பெருமைப் படலாம். திரிசங்கு மன்னனை அந்தரத்தில் நிறுத்தியதாக ஆன்மிகம் சொல்கிறதே. மனிதன் அந்தரத்தில் நிற்பது ஆன்மீகத்திற்குப் புதியதல்ல.
9. பூமியிலிருந்து வேறு கிரகத்திற்குச் செல்வதும் வருவதும் விக்ஞானத்திற்குப் பெருமையாக இருக்கலாம். கேவலம் சிற்றின்பத்திற்காக தேவேந்திரன் மேல் லோகத்திலிருந்து பூலோகம் வந்தது ஆன்மீகத்தின் அறிவு விளக்கம்.
10. எங்கோ நடப்பதை இன்று தொலைக் காட்சியில் பார்க்கிறோம் .மகா பாரதத்தில் அஸ்தினாபுரத்து மாளிகையில் துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவுகிறான். அவள் வேறு வழியின்றி கண்ணா என்று குரல் கொடுக்கிறாள். துவாரகையில் கண்ணன் அந்தக் காட்சியை அங்கிருந்தே கண்டது மட்டுமல்ல அங்கிருந்தே திரௌபதிக்குத் துகிலும் கொடுக்கிறான். டி வி வந்துவிட்டது ஆனால் துன்பப் படுவோற்கு நாம் இருக்கும் இடத்தில் இருந்தே எதையும் தரும் நாள் வரவில்லையே. விக்ஞானம் இன்னும் வளர வேண்டும் வள்ளலாரும் வடலூர் தருமச் சாலையில் ஒரு திரை இட்டு சிதம்பர ஆருத்ரா தரிசனத்தைக் காட்டியுள்ளாரே இது ஆன்மீகத்தின் உயர்வு.
11 .தஞ்சாவூர் கோபுரத்தின் மீதுள்ள விதானம் 72 டன் எடை உள்ளதாம். இப்போது உள்ள நவீன எந்திரங்கள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் எப்படி அந்த விமானத்தை மேலே ஏற்றினார்கள். இது ஆன்மீகத்தின் சாதனை அல்லவா ?
12. எத்தனையோ வியாதிகட்கு இன்னும் விஞ்ஞானம் மருந்து கண்டுபிடிக்கவில்லை ஆனால் திருநீறு கொடுத்தே வள்ளலார் மற்றும் ஆன்மீகப் பெரியார்கள் தீராத வியாதி எல்லாம் தீர்த்து வைத்திருக் கின்றார்களே. எனவே விஞ்ஞானம் வளரட்டும். ஆன்மிகம் எதற்கும் குறைந்ததல்ல.
பேய் என்பது உண்டா?

இந்தக் கட்டுரை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்துடன் எழுதப் படவில்லை. எனது கருத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஏற்புடையதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள். நன்றி.
பேய் என்பது உண்டா ? ஆண் பேய் பெண்களையும் பெண்பேய் ஆண்களையும் பிடித்துக்கொள்ளுமா? மந்திரவாதிகள் பேய் ஓட்டுவது உண்மையா?
பேய் என்பது எது? தூக்குப் போட்டுக் கொண்டோ, கிணற்றிலோ அல்லது குளத்திலோ விழுந்து அகால மரணம் அடைந்தவர்களின் ஆவியானது அவர்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் வாழ்ந்திருந்தால் எவ்வளவு காலம் வாழ்ந்திருப் பார்களோ அவ்வளவு காலம் வரையில் இந்த பூமியில் அலைந்து கொண்டிருக்கும். அதுதான் பேயாக மற்றவர்களின் உடம்பினில் புகுந்து கொண்டு ஆட்டுகிறது . இது உண்மையா?
இந்த உடம்பில் உள்ள உயிரின் அளவைத் திருமூலர் கூறுகிறார், ஒரு பசு மாட்டின் உடம்பில் உள்ள ஒரு ரோமத்தை எடுத்து அதனை ஒரு லட்சம் துண்டு போட்டால் அந்த ஒரு துண்டின் அளவுதான் உயிரின் அளவாகும். எந்த உயிரும் உடம்பைவிட்டுப் பிரிந்தால்,, தானே இயங்க முடியாது என்கிறார் வள்ளலார். மேலும் அந்த உயிரானது எந்தக் கல்ப காலத்தில் நஷ்டம் அடைந்ததோ அந்தக் காலம் வரையில் மண்ணில் மறைந்திருந்து பின்னர் செய்த வினைக்கே ற்ப மறு பிறவிதான் எடுக்கும் என்கிறார் . எந்த உயிரும் எந்த உடம்பிலும் தானே நுழைய முடியாது. எனவே பேய் என்பது இல்லை இல்லை இல்லவே இல்லை.
சரி பேய் பிடித்ததாக சொல்லப்படும் பெண்களின் சேஷ்டைகளுக்கு என்ன காரணம்? மன நிலை கோளாறுதான் காரணம். அவர்களைத் தயவு செய்து மன நல மருத்துவரிடம் கொண்டு காட்டுங்கள். மந்திர வாதியிடம் கொண்டு காட்டி அடி வாங்க வைக்காதீர்கள், .
இந்த உடம்பினால் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறமுடியுமா?
இந்தப் பிறப்பிலே யாராலும் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறமுடியாது. வள்ளலார்போல் ஞானப் பிறவி எடுத்திருக்க வேண்டும் . திருமணம் செய்துகொண்டு சுக்கிலத்தை வீணாக்கி கொண்ட எவராலும் வள்ளலார் அடைந்த நிலையை அடைய முடியாது . இது பெரியவர்கள் பேசுகின்ற மேடைப் பேச்சு ஆகும். இந்த உடம்பு மல உடம்பு. பிணியினால் தாக்கப் படும் உடம்பு. இந்த உடம்பு புழுத்துப் போகும் உடம்பு. இந்த உடம்பால் மரணமிலாப் பெருவாழ்வை அடையவே முடியாது. சன்மார்கத்தில் உள்ளவர்கள் உட்பட எல்லா மக்களின் கருத்து இதுதான். வள்ளலார் கருத்து என்ன? அவருடைய அழியாத பாடலைக் கவனியுங்கள்;

பொத்திய மலப்பிணிப் புழுக் குரம்பைதான்
சித்தியல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்தியமாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் ஜகத்துள்ளீர்களே( பாடல் எண் 1695 )

புனைந்து உரையேன், பொய் புகலேன் , சத்தியமே சொல்கின்றேன் என்றெல்லாம் கூறியுள்ள வள்ளலார் சொல்லை நாம் ஏற்பதா? அல்லது எந்த முயற்சியும் செய்யாமல் மரணமிலாப் பெரு வாழ்விலேயே நம்பிக்கை இல்லாத வர்கள் சொல்வதை ஏற்பதா? என் வாய் வீண் வார்த்தை சொல்லாது என்ற வள்ளலார் வாக்கை நம்புவதா வீண் பேச்சே பேசுபவர்கள் பேச்சை நம்புவதா? சிந்தியுங்கள். இந்த உடம்பு மல உடம்புதான், பிணி காணும் உடம்புதான், புழுக்கின்ற உடம்புதான் ஆனால் சுத்த சன்மார்க்கம் இந்த உடம்பில் சேர்ந்தால் சத்தியமாக இந்த உடம்பு நித்திய தேகமாக மாறும் என்கிறார் வள்ளலார். அவர் வாக்கை நம்புவோம். சுத்த சன்மார்கத்தில் அதி தீவிரமாக ஈடுபடுவோம் இந்த உடம்பை நித்திய தேகமாக மாற்றிக்கொள்வோம் பாடுபடும் உங்களோடு தயவு செய்து என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றி வந்தனம்
தவம் செய்தால் என்னென்ன அனுபவங்கள் ஏற்படும்?

நமது நெற்றியில் ஒரு கதவும் பூட்டும் உள்ளதாக அருட்பாவில் சொல்லப்பட்டுள்ளது .ஓர் ஆச்சாரியனைக் கொண்டு அதைத் திறந்து கொள்ளவேண்டும் என்று வள்ளலார் வழி காட்டியுள்ளார் .வள்ளலாரே வந்துதான் திறக்க வேண்டும் என்ற உறுதி மிக்கோர் அவ்வாறே பெறட்டும். மற்றவர்களில் தவம் செய்தால்தான் உடல் மாற்றம் பெற முடியும் என்று உணர்ந்தோர் நம்மில் ஓரளவிற்குச் சிறந்தவராக நமக்குத் தெரிந்த ஒருவரிடம் நம்முடைய நெற்றிக்கண்ணைத் திறந்து கொள்ளப் பெற வேண்டும் .மனம் செயல் பட்டால் இறை அனுப வம் ஏற்படாது என்று வள்ளலார் திட்ட வட்டமாக அறிவிக்கிறார். சான்று அகவல்.

உரை மனம் கடந்த ஒரு பெரு வெளிமேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்சோதி .
ஜபம் ,தியானம் இரண்டிலும் மனம் இயங்கும். இவை இரண்டும் சன்மார்கத் திற்கு ஒத்ததல்ல .மனம் செயல்படாது நிற்கும் நிலையே தவம் எனப்படும் .வள்ளலார் தவம் செய்தே எல்லா அனுபவங்களையும் பெற்றார் என்பதற்கு ஆயிரக் கணக்கான பாடல்கள் அருட்பாவில் சான்றாய் நிற்கின்றன.
தவம் செய்ய ஆரம்பித்தால் முதலில் புருவ மத்தியில் ஓர் உணர்வு ஏற்படும். .இதுவே வானத்தின்மீது மயில் ஆடக்கண்டது.
கரண ஒழுக்கத்தில் மனதை எந்தவித ஆபாசத்திலும் செலுத்தாமல் முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் .இதுவே தவத்தின் ஆரம்பம்.
அங்கே கவனத்தைச் செலுத்தினால் ஒரு சிறிய ஓசை கேட்க ஆரம்பிக்கும். இதுதான் மயில் குயில் ஆச்சுதடி என்ற வரியின் அனுபவம்.
அந்த சத்தத்தை உற்றுக் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டும். நாளடைவில் முரசு , சங்கு , வீணை போ ன்ற பலவித நாதங்கள் கேட்கும், நம் உடம்பிலே மலர் மனம் வீசுமாம். இதற்கு பரநாத நிலை என்று பெயர். இந்த நிலையில் அண்ட பகிரண்டம் தோற்றறியாப் பெருஞ்சோதி தோன்றும். இதுவே சிற்சபை அனுபவம், இதனைத் தொடர்ந்து அமுதம் உண்ணக் கிடைக்கும். தூல தேகம் சுத்த தேகமாக மாறும்.
இதை அடுத்து அப் பேரொளி நடுவே பொன்னொளி தோன்றும், இது பொன்னம்பல அனுபவம். சுத்த தேகம் பிரணவ தேகமாக மாறும்.
இறுதியாக அப் பொன்னொளி நடுவே உள்ளொளியின் அசைவு காட்சியாகும் .அதுதான் இறைவன், அதுதான் நடராசன். அந்த உள் ஒளிதான் இந்த உடம்பிலே கலந்து பிரணவ தேகத்தை ஞான தேகமாக மாற்றும். இதுவே வள்ளலார் பெற்ற அனுபவம். உள் ஒளி கலந்ததைத்தான் ஆண்டவன் என்னோடு கலந்தான் என்று வள்ளலார் பாடியுள்ளார். .பேரொளி அதன் நடுவே பொன்னொளி ,பொன்னொளி நடுவே உள் ஒளி.a
ஜோதியுட் ஜோதியுட் ஜோதி என்ற கீர்த்தனைப் பாடலின் விளக்கமும் இதுவே. இதுதான் .அனுபவ மாலைப் பாடல்களும் குறிப்பாக 54 வது பாடல் அனுபவமும் இதுவே. i l
ஈற்றறியேன் இருந்து இருந்து இங்கு அதிசயிப்பது என்நீ
என்கின்றாய் நீதான் எனை விட்டு ஏகுதோறும் நான்தான்
காற்றறியாத் தீபம் போல் இருந்திடும் அத்தருணம் கண்ட பரிசு
என் புகல்வேன் அண்ட பகிரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலை பரநாதத் தே தோன்றியது ஆங்கு
அதன் நடுவே தோன்றியது ஒன்று அதுதான்
மாற்றறியாப் பொன்னொளியோ அவ்வொளிக்குள் ஆடும் வள்ளல்
அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே (பாடல் 54)


வள்ளலார் காட்டிய வாழும் நெறி

கிடைத்தற்கு அரிதாகிய மானிட தேகத்தைப் பெற்றுக்கொண்ட நாம் பெறற்கரிய பெரும் பேறுகள் ஆகிய ஏம சித்தி,சாகாக் கல்வி, தத்துவ நிக்கிரகம் செய்தல்,கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல். இந்நாங்கினையும் பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வில்,வாழ வழி வகுத்துத் தந்தவர் வடலூர் வல்லார் பெருமானாகிய இராமலிங்க அடிகளாவார் ஆவார்.
பக்தி என்பது ஒழுக்கத்தை மனிதனிடம் நிலை நிறுத்த வந்தது. தீய செயல்களினின்று ஒருவனைத் தடுத்து நிறுத்தவே நரகம் என்ற ஒன்றைக் கூறிவைத்தனர் முன்னோர். தீயவை செய்யாது இருப்பின் மட்டும் போதாவே-நல்லதையும் செய்யவேண்டுமல்லவா-நல்லதைச் செய்யத் தூண்டுவதற்காகவே சுவர்க்கம் என்ற ஒன்றைச் சொல்லி வைத்தார்கள். ஆசை, பழக்கம்,வறுமை, முதலிய ஏதோ ஒரு காரணத்தால் ,மனிதன் தவறு செய்ய முனைவானேயானால் நரகம் என்ற பயம் அவனைத் தீய செயல் செய்ய வொட்டாது தடுக்கும். வறுமையால் வாடிநிற்போருக்கு பொருள் உள்ள யாராவது உதவி செய்யவேண்டுமல்லவா? உதவி செய்யத் தூண்டுவதற்காகவே சொர்க்கம் என்ற ஒன்றைச் சொல்லி வைத்தார்கள். இருப்பவனால் செயுயப்பைடுகின்ர தானம்,தர்மம் இல்லாதவனை வாழ வைக்கின்றது.
தெய்வ பக்தியும்கூட நல்லொழுக்கத்திற்கு மனிதனை வரவழைக்கவே ஏற்படுத்தப்பட்டது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எவ்வளவு அஞ்சுகிறான் என்பதை எண்ணிப்பார்த்தால் அவன் வாழ்வில் பயம் எவ்வளவு அதிகம் என்பது புரியும் .வறுமையில் வாழும் ஏழை,பசிக்கு அஞ்சுகிறான்,பொழுது புலருகின்றதே -நாம் நமது பசியைத் தாங்கிக்கொண்டாலும் நம்மை நம்பி உறங்கும் இந்தக் குழந்தைகள் பசியை எப்படி நீக்குவது என்று பயப்படுகின்றான்.உறக்கம்கூட வருவதில்லை. -வறுமையாலே அச்சம்-படிப்பு வராத குழந்தைக்குப் பெற்றோரைக் கண்டாலும் சரி ஆசிரியரைக் கண்டாலும் சரி பயம் வருகின்றது. பிறருக்குப் பெரிய நோய் வந்தது என்று கேள்விப்பட்டு அந்த நோயாளியை விசாரிக்கின்ற ஒருவன் தனக்கு ஒரு சிறிய நோய் வந்துவிட்டாலும் அப்படிப் பயப்படுகின்றான். -இருட்டிலே போகப் பயம். வேலை செய்வோர் தனக்கு அதிகாரியாய் உள்ளவரைக் கண்டு பயப்படுகின்றான். வலி யோரைக் கண்டு எளியோர் அஞ்சுகிறார்கள். ஆகாய விமானத்தில் செல்லவும் பயம்-ரயிலில் செல்லவும் பயம்.-ஏன் நடைபாதையில் நடக்கக்கூட இப்போதெல்லாம் பயப்படவேண்டி இருக்கின்றது. இந்தக் காலத்திலே நம்முடைய வாழ்க்கையில் பயமே நம்மை ஆட்டிப்படைக்கின்றது என்பதை எண்ணிப்பார்த்தால் புரியும். அந்தப் பயத்தைப் போக்கக்கூடிய ஒரு பெரிய சக்தி உண்டென்றால் அது தெய்வ நம்பிக்கை ஒன்றுதான் என்பதே உண்மை. உண்மை. முக்காலும் உண்மை. எவ்வளவுதான் பக்திமான்களை மற்றவர்கள் பழித்தாலும் உண்மையான பக்தி உள்ளவன் பயம் அற்றவன்தான் நம்மை ஆண்டவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை நிறைய உடையவன் பக்திமான். வள்ளலார் போன்ற ஞானிகளும் .மகான்களும் தன் உடல் ,பொருள், ஆவி அனைத்தினையும் ஆண்டவரிடம் பரிபூரணமாக ஒப்படைத்துவிட்டு என்ன நடந்தாலும் எல்லாம் அவன் செயல் என்று மன அமைதியுடன் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள். எனவே பக்தி ஒன்றுதான் பயம் போக்கி .நாம் வீடு கட்ட ஆரம்பிக்கிறோம்.அது நல்லபடியே முடியவேண்டுமே என்று மனை பூஜை போடுகிறோம். வியாபாரம் செய்ய ஒரு கடை திறக்கிறோம். பூஜை போடாமல் திறப்போமா?திருமண வேலை ஆரம்பிக்குமுன்னும் தெய்வ வழிபாடு செய்கிறோம். இவை எல்லாம் ஏன் செய்கிறோம். பயம். பயம்தான் காரணம். பயத்தைப் பக்தியால் போக்கிக்கொள்ள முனைகிறோம். ஒரு குழந்தைக்குக் காய்ச்சல் வருகிறது. தாய் என்ன செய்கிறாள்.ஒரு மஞ்சள் துணியில் ஒரு காசை முடிந்து அந்தக் குழந்தையின் கையில் கட்டிவிட்டு மன நிம்மதி அடைகிறாள் அந்தத் தாய். ஆண்டவன் மீது அவள் கொண்ட பக்தி அவளது பயத்தைப் போக்கியது.தெய்வ நம்பிக்கை என்பது நம்முடைய உரிமைச் சொத்து. அதனாலே ஏற்படும் பெரிய பலன் -அச்சம் நீங்குவது மட்டுமல்ல. நல்லதொரு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் ஏற்படுகின்றது. எனவேதான் பக்திநெறியை மிக மிக ஆழமாகப் பயிரிட்டுச் செழுமையாக நம்முன்னோர் வளர்த்து வருகின்றனர். பக்தி உடையவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் யாரிடமும் பயம் கொள்ளத் தேவை இல்லை. உள்ளும் புறமும் வள்ளல் துணை இருக்க வாட்டம் ஏன் என்று கேட்கிறார் வள்ளலார். -மன நிம்மதியைவிடப் பெரும் செல்வம் வேறு ஒன்று உண்டா? அதைப் பக்தி தரும் என்றால் பக்தியின் மேன்மையை, சிறப்பை என்னென்பது?திரு முல்லைவாயில் ஆலயத்திற்கு வள்ளலார் சென்றார். ஆண்டவன் அவரிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையாம். வருத்தப் பட்டார் வள்ளலார்.
தேன் என இனிக்கும் திருவருட்கடலே
தெள்ளிய அமுதமே சிவமே
வானென நிற்கும் தெய்வமே முல்லை
வாயில் வாழ் மாசிலாமணியே
ஊனென நின்ற உணர்விலேன் எனினும் உன்
திருக்கோயில் வந்தடைந்தால்
ஏனெனக் கேளாதிருந்தனை ஐயா ஈது
நின் திருவருட் கியல்போ ?
நாமும்தான் ஆலயத்திற்குச் செல்கிறோம். நம்மிடமும் ஆண்டவன் பேசியதே இல்லை. அவன் பேசவில்லையே என்று ஒரு நாளாகிலும் நாம் வருத்தப்பட்டிருக்கிறோமா?என்னதான் தெய்வம் என்று வெளியிலே நாம் பேசிக்கொண்டிருந்தாலும் அது நம்மிடம் பேசாது அது கற்சிலை தான் என்ற ஓர் எண்ணம் நமது மனதின் அடித்தளத்திலே இருப்பதால் ஆண்டவன் நம்மிடம் பேசவேண்டும் என்று எதிர்பார்த்ததே இல்லை. நாம் நம்முடைய குறைகளை அந்த இறைவனிடம் முறையிட்டுவிட்டு வந்துவிடுகிறோம். வள்ளலார் காட்டிய பக்தி நெறியோ ஆண்டவனிடம் தஞ்சமடைவது.

படமாட்டேன் துயர் சிறிதும் படமாட்டேன் இனி நான்
பயப்படவும் மாட்டேன் உன் பாதத் துணையே பிடித்தேன்
விடமாட்டேன் ஏமாந்துவிடமாட்டேன் கண்டீர் மெய்ம்மை இது
நும்மானை விளம்பினேன் நும் அடியேன்
கெடமாட்டேன் பிறர் மொழிகள் கேட்டிடவும் மாட்டேன்
கிளரொளி அம்பலத்தாடல் வளர் ஒளி நும்மல்லால்
நடமாட்டேன் என்னுளத்தே நான் சாக மாட்டேன்
நல்ல திரு அருளாலே நான் தான் ஆனேனே/

இப்படிப்பட்ட நம்பிக்கை யுள்ள பரி பூரணமான -அப்பழுக்கற்ற -தூய்மையான பக்தியை ஆண்டவன்மீது வள்ளலார் காட்டுகின்றார். இந்தமாதிரியான பக்தி நெறியில் செழித்து வளருமாறு அறிவுறுத்துகின்றார். திரு அருட்பாவிலே பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம் என்கிறார் வள்ளலார்.
நம்முடைய முன்னோர்கள் மனித உருவிலே இறைவனைக் காட்டினார்கள். உருவ வழிபாட்டிலே தொடங்கிய பக்தியோ நம் உடம்பிலும், மற்றும் எல்லா உடம்புகளிலும் இறைவன் இருக்கின்றார் என்ற உண்மையை ஞானிகட்கு உணர்த்தியது. அவர்கள் நமக்குச் சொன்னார்கள். பிற உயிர்கட்கு நாம் செய்யக்கூடிய உதவியே, நன்மையே அந்த உடம்பிலுள்ள உயிருக்கும் சேரும். அதனால் ஜீவகாருண்யமே தெய்வ வழிபாடு என்று வள்ளலார் கூறினார்.வள்ளலார் பக்தி நெறியில் செழித்து வளர்ந்தார். வடலூர் வந்த அவர் தருமச்சாலை கட்டிப் பசியினால் வருந்தும் ஏழை மக்களுக்குப் பசி நீக்குவதும்கூட இறை வழிபாடே என்றும், உயிர்க்கொலையும், புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் என்றும், ஜீவகாருண்ய ஒழுக்கமே முக்திக்கு முதற்படி என்றும்,பிற உயிர்கட்குக் காட்டப்படுகின்ற இரக்கமே மோட்சவீட்டின் திறவுகோல் என்றும் கூறினார். 1867ம் ஆண்டு மே மாதம் அவர் மூட்டிய தீ இன்றுவரை அணையாமல் வடலூர் வந்து பசி என்பார்க்கு அப் பிணி யைப் போக்கும் அமுத சுரபியாய் இருக்கின்றது.-தருமச் சாலைக்கெனத் தனிச் சொத்து எதுவும் இல்லை. இருந்தாலும் கடந்த 145 ஆண்டுகளாக அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதென்றால அதைத் தொடங்கிய வள்ளர் பெருமானாரின் தூய தவ வலிமையின் ஆற்றலே காரணம். ஜீவகாருண்யம் இல்லாமல் செய்கின்ற பக்தியை, இறைவழிபாட்டை வள்ளலார் ஒப்புக்கொள்ளவில்லை. இரக்கமில்லாமல், மனதிலே தயவும் கருணையும் இல்லாமல் இருப்பவர்களைப் பக்திமான்கள் என்று சொல்வதில்லை. பக்தி என்பது மன உருக்கம், மன நெகிழ்ச்சி என்பதனால் பிற உயிர்கட்கு வரும் தீமையை எவ்விதத் தந்திரத்தினாலேயும் நீக்குவதே ஜீவகாருண்யம் என்றும் ,அந்தப் புண்ணியச் செயலினால் இறைவனுக்கு அதிக மகிழ்ச்சி உண்டாகி நல்ல பலன்களை மிக அதிகமாகவே அருளுவார் என்றும் வள்ளலார் கூறுகின்றார்.
இதை உணர்ந்து இறைவன்பால் பக்தி கொண்டுள்ள நாமும் அவனைத் தஞ்சம் அடைவதுமட்டுமின்றிக் கொல்லாமலும்,புலால் உண்ணாமலும் இருப்பதோடு பிற உயிர்கட்கு எவ்விதத்திலும் நன்மை உண்டாகும்படியான காரியங்களையே செய்யவேண்டும்.
பிற உயிர்கட்கு நன்மை செய்கின்ற நாம், நமக்கு வேண்டியதையும் செய்து கொள்ளவேண்டும் .-இங்கே விசாரணை தேவைப்படுகிறது. ,நாம் யார் எங்கிருந்து வந்தோம்---எப்படி வந்தோம்---நம்மைச் சுற்றிலும் உள்ளவை யாவை ----இந்தப் பூமி--ஆகாயம்---சந்திரன்--சூரியன்--நட்சத்திரங்கள் முதலியன எப்படித் தோன்றின? நமக்கு உடல் எப்படி வந்தது? இந்த உடம்பில் உயிர் எப்படி வந்தது--எங்கே இருக்கின்றது—எப்படி உடலைவிட்டுப் பிரிகின்றது—அதை உடலை விட்டுப் பிரியாமல் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்பதை எல்லாம் அறிவுபூர்வமாய் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இதை சத்விசாரம் என்பார் வள்ளலார். இவை எல்லாம் தேவைதானா? ஒழுங்காக ஒரு வேலை செய்து உற்றார் உறவினரோடு கூடி மகிழ்ந்து தன்னைச் சூழ்ந்துள்ள வர்கட்கு நல்லவனாக வாழ்ந்தால் போதாதா என்று வினவலாம். இது மனித அறிவிற்குக் குறைந்த மற்ற ஜீவர்கட்குப் போதுமானதாக இருக்கலாம். மனிதன் என்கின்ற உயர் பிறப்பு எடுத்துள்ள நமக்குப் போதாது. தன்னை அறிதல் மிக மிக முக்கியம் . இது ஞான நெறி- தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே என்பது போன்ற ஆயிரக் கணக்கான பாடல்களை வள்ளல் பெருமானார் பாடி இருக்கிறார் என்றால் அதை நாம் வீண் என்று எண்ணலாமா? புனைந்துரையேன்-பொய் புகலேன்-சத்தியமே சொல்கின்றேன் –ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் -நீவிரெலாம் புனிதமுறும் பொருட்டே என்று வள்ளலார் தெளிவாகக் கூறிய பிறகும் அந்த ஞான நெறியை உணர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லதா? தருமச் சாலை தோற்றுவித்த வள்ளலார் ஞான சபை கட்டினாரே ஏன்? எண்கோண வடிவமான ஞான சபையில் ஒவ்வொரு கோணத்திலும் மூன்று மூன்று வாயிர்படிகள் வைத்து -முதல் வாயிர்படிக்குப் பின் ஏழு திரைகள் தொங்கவிட்டு அதன்பின் கண்ணாடி வைத்தாரே ஏன் ? ஞானசபைத் தத்துவத்தைப் புறக்கணிக்கலாமா? எண் ஜாண் உடம்பில் உள்ளமே ஞானசபை. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சர்யம், கொலை போன்ற எத்தனையோ குற்றங்களும் மாயை, கன்மம், ஆணவம் என்கின்ற மலங்களும் ஆண்டவனைத் தெரிவிக்காமல் பெற்றால் மனமான கண்ணாடியில் ஜோதி வடிவமான ஆண்டவனைத் தரிசிக்கலாம் என்பதல்லவா ஞானசபை விளக்கம்.? சந்திரன், சூரியன், அக்னி என்கின்ற முச்சுடர்களையும் முப்பாழ் ,லலாடம், சிற்சபை என்றெல்லாம் சொல்லப்படுகின்ற புருவ மத்தியாகிய மூக்கு நுனியில் காண்ப தல்லவா ஞான சபை கூறும் பாடம்
சன்மார்கக் கொடியை வள்ளலார் கட்டினார்கள். அதைக் கட்டிவைத்து என்ன கூறினார்கள்? இந்தக் கொடி உண்மையில் யாதெனில் நமது நாபி முதல் புருவ மத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது. அதன் நுனியில் ஒரு ஜவ்வு தொங்குகின்றது. அதன் கீழ் ஒரு நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது. அதன் அடையாளமாகவே வெளி முகத்தில் கொடி கட்டியது. இனி எல்லோருக்கும் உண்மை விளங்கும் என்று கூறினார்களே. 1873 வது ஆண்டில் முதிர்ந்த ஞானத்தில் கூறிய வாசகங்களைப் புறக்கணிக்கலாமா? எனவே பக்தி நெறியில் வருவோம். ஜீவகாருண்ய நெறியில் வளருவோம். ஞான நெறியில் தன்னை உணர்ந்து தலைவனை நம்முள்ளே அறிந்து அவனை அடைய சாகாக் கல்வியும் கற்போம் .
வள்ளலாருக்குச் சிறப்பே எவரும் கூறாத மரணமிலாப் பெருவாழ்வை கூறியதே. தூல உடம்பை சுத்த உடம்பாக, பிரணவ உடம்பாக, ஞான உடம்பாக மாற்றிக் கொள்வதே ஞான நெறியின் முடிவு. வள்ளலார் முத்தேக சித்தி பெற்றார் என்று அவரைப் போற்றினால் மட்டும் போதுமா?அவர் காட்டிய வழியில் நாமும் நடந்து அவர் பெற்ற எல்லாப் பேறுகளையும், எல்லாச் சித்திகளையும் நாமும் பெற இன்று தொடங்கி முயற்சி செய்வோம். வள்ளல்பெருமானார் நமக்குக் கண் கண்ட தந்தையாய், தாயாய் ,குருவாய், தெய்வமுமாய் ,பதியாய், அரசனாய், அப்பனாய் , , ஐயனாய், வள்ளலாய் துணையாய் இருந்து நம்மையெல்லாம், பிறவிக் கடலில் இருந்து கரையேற்றத் துடித்துக்கொண்டு நம்மருகே எப்போதும் நீங்காது இருக்கின்றார். அவரை அறிந்து அன்பு செய்து அவர் வழி நின்று அவரை அடைவோமாக.

வள்ளலார் மறைந்தது பற்றிய உண்மைச் செய்திகள்.

வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்ற கிராமத்தில் சித்தி வளாகம் என்ற ஒரு வீட்டின் (திரு மாளிகை என்ற பெயரும் அதற்கு உண்டு.) ஓர் அறையில் 1874 வது ஆண்டில் ஜனவரி மாதம் முப்பதாம் நாளன்று இரவு 12 மணி அளவில் வள்ளலார் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டு விட்டார். அவர் அவ்வாறு உள்ளே நுழையும்போது "நான் உள்ளே பத்து அல்லது பதினைந்து தினம் இருக்கப் போகிறேன் , யாரும் கதவைத் திறந்து உள்ளே பார்க்கவேண்டாம்.ஒருவேளை அரசாங்கத்தார் திறந்து பார்க்க ஆக்ஞாபித்தால் ஆண்டவர் அருள் செய்வார். என்னைக் காட்டிக்கொடார்." என்று கூறினார்.
வள்ளலார் உட்கதவைச் சாத்திக்கொண்டார். அன்பர்கள் வெளிக்கதவைச் சாத்திப் பூட்டிக்கொண்டு வழிபாடு செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் கழித்து கடலூர் மாவட்ட ஆட்சியாளர் J H Garstin I.C.S அவர்களும் மாவட்ட காவல் துறை அதிகாரி அவர்களும், மாவட்ட மருத்துவ அதிகாரி அவர்களும், தாசில்தார் ஒருவரும் ஆக நால்வர்களும் வந்து வள்ளலார் மறைந்த அந்த அறையின் கதவைத் திறந்து பார்த்தனர். வள்ளலார் கூறியது போலவே அந்த அறையில் ஒன்றும் இல்லை.அ ந்த ஆட்சியாளர் கடலூர் சென்று அரசாங்கத்தின் மூலமாக ஓர் அறிக்கை (government gazette) வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளது இதுதான்: "{ Ramalinga parades i enbavar disappeared from the eyes of the public c on 30 th January 1874) disappeared என்ற வார்த்தைக்குச் சரியான பொருள் "காணவில்லை" என்பதுதான்.
ஆனால் வள்ளலாரைப் பற்றி 30.1.1874 அன்று அவர் ஜோதி ஆனார் என்றும், அருட்பெருஞ்சோதி ஆண்டவரோடு இரண்டறக் கலந்து விட்டார் என்றும், அவர் எல்லோருடைய உடம்புகளிலும் புகுந்து கொண்டார் என்றும், அவர் காற்றோடு காற்றாகக் கலந்து எங்கும் நிறைந்துவிட்டார் என்றும் பலவாறு பேசியும் எழுதியும் வருகிறார்கள். உண்மைதான் என்ன? தொடர்ந்து படியுங்கள்..

மன் செய்து கொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்து கொண்டது நான் செய்து கொண்டேன் என்று வள்ளலார் பாடி உள்ளார்.
வான் என்ன செய்து கொண்டது? வள்ளலார் என்ன செய்து
கொ ண்டார்?
இதற்கு விடை காண மகாதேவ மாலைப் பாடலைப் பார்க்க வேண்டும். பாடல் எண்கள் 19 & 20
மானாகி மோகினியாய் விந்துவாகி மற்ற வையால் காணாத வானமாகி
நானாகி நானல்லனாகி நானே நானாகும் பதமாகி நான்தான்
கண்ட
தானாகி தானல்லனாகி தானே தானாகும் பதமாகிச் சாகச
ஞான
வானாகி வான் நடுவில் வயங்குகின்ற மௌன நிலையாகி
எங்கும் வளரும் தேவே.
இந்தப் பாடலில் வானமானது மற்றவையால் காணாதது என்று சுட்டிக்காட்டுகிறார். வானம் எப்படி மற்றவையால் காண முடியாதவாறு உள்ளதோ அவ்வாறே நானும் என்னைக் கா ண முடியாதவாறு செய்து கொண்டேன் என்கிறார். ஞான தேகம் தோன்றியும் இருக்கும் அல்லது தோன்றாமலும் இருக்கும். தான் மற்றவர் கண்களுக்கு தோன்றாமல் இருக்கும் நிலையையே வான் செய்து கொண்டதை நான் செய்து கொண்டேன் என்றார்.

அடுத்த பாடல்
மந்திரமாய்ப் பதமாகி வன்னமாகி வளர் கலையாய்த் தத்துவமாய்ப்
புவனமாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவியாகித் தானவராய் வானவராய்த் தயங்கா
நின்ற
தந்திரமாய் இவை ஒன்றும் அல்லவாகித் தானாகித் தனதாகித் தான் நான்
காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப்பாலாய் அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த
தேவே.
இந்தப் பாடலில் அந்தரம் என்றது ஆகாயம் தான். அது தான் என்றும் நான் என்றும் காட்டாது என்றார் . அதுபோல்தான் வள்ளலாரும் தன்னைக் காட்டவில்லை. ஆனால் ஞான தேகத்துடன் இன்றும் இருக்கிறார். அவரைக் காணவேண்டும் என்று உண்மையான விரதம் இருந்தால் மனமிரங்கி அவர் தன்னைக் காட்டக்கூடும். . அல்லது சாதனா சகாயத்தால் கண்ணொளி விஷேசிக்கப் பட்டால் நம் கண்ணாலேயே அந்தக் காரண தேகத்தை காணமுடியும். இது சம்பேடு ஸ்ரீதர நாயக்கருடன் வாதம் செய்த போது வள்ளலார் கூறியது.


வள்ளலாரை வணங்கலாமா?

வள்ளலாரே என்னை வணங்கவேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். அதை மீறி நாம் அவரை வணங்குவது சரியா?

ஆம் இது ஒரு நல்ல கேள்விதான். .முதலில் வள்ளலார் ஏன் இவ்வாறு சொன்னார் என்று சிந்திக்கவேண்டும். அடுத்ததாக வள்ளலார் எந்த நிலை அடைந்தவர் என்று ஆய்வு செய்ய வேண்டும் .பிறகுதான் அவரை வணங்கலாமா வேண்டாமா என்று முடிவு கட்ட வேண்டும்.
வள்ளலார் தன் அடக்கம் கொண்டவர் .தற்போத இழப்பு என்ற தலைப்பில் உள்ள அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் என்று தொடங்கும் பாடலில், உன்னை சிறிது தெரிந்து கொண்டேன் முழுவதும் தெரிந்து கொள்ளும் வரை எவர்க்கும் தெரியாமல் இருப்பம் என சிந்தனை செய்திருந்தேன் . அவ்வண்ணம் இருந் த என்னை பிறர் அறிய தெருவில் இழுத்து விடுத்தது கடவுள் செயலோ அல்லது மாயையின் செயலோ என்று வருந்துகிறார்.
. தன்னை மதியாதிருக்க வேண்டும் என்று நமக்கு அறிவு கூறியவர் அவர் தற் பெருமை விரும்புவாரா.? எல்லாவற்றையும் விட இறைவனை அடையும் முயற்சி செய்யாமல் தன்னை மட்டும் வணங்குவதையும் அவர் விரும்பவில்லை. .நமக்கு அவரே தெய்வம் .நாம் அவரை விடலாமா?
இறைவன் வந்து என்னோடு கலந்துவிட்டான் நான் வேறு அவன் வேறு அல்ல இருவரும் ஒன்றா னேம் என்று எத்தனையோ பாடல்களில் வள்ளலார் கூறியுள்ளார் .நான் உரைக்கும் வார்த்தைஎல்லாம் நாயகன் தன் வார்த்தை என்றால் வள்ளலார்தானே இறைவன்?
வள்ளலாரைப் பற்றிய உண்மையை நாம் முதலில் அறிந்துகொள்வோமாக
வள்ளலார் நாம் பிறந்தது போல் ஒரு தாய் தந்தையர்க்கு ஐந்தாவது மகனாகத்தான் பிறந்தார்; இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர் வாழ்ந்த வாழ்கை நாம் வாழ்கின்ற வாழ்க்கையா? அவர் எந்த ஆசிரியரிடத்தும் கல்வி பயிலாமல் தானே அனைத்தையும் அறிந்தவராக விளங்கினார்; தொல்காப்பியம் ,பாணிநீயம் போன்ற இலக்கண நூல்களையும் சிறு வயதிலேயே மனப்பாடமாகச் சொல்லக்கூடிய நாவளத்தை வள்ளலார் பெற்றிருந்தார் என்று அவரது மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ளார்.
2 சிறு வயதிலேயே அவரிடம் தரப்பட்ட பணத்தைக் கேணியிலும், குளத்திலும், கூரை மேலும் எறிந்தவர் . பொருள் மீது ஆசை அற்றவராக அவர் இருந்தார்.
3 உடையின் மீதோ ,உணவின் மீதோ எதனிலும் பற்றற்றவராக அவர் விளங்கினார்.
4 தனது ஒன்பதாவது வயதிலேயே இறைவன்மீது பாக்கள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.
5 .பன்னிரண்டாவது வயதிலேயே தவம் செய்யத் தொடங்கினார்.
6 தனக்கென ஒரு மனைவி இருந்தும் காமத்தை வென்றவராக விளங்கினார்;
7 வடலூரிலே நூறு ஏக்கரா நிலம் அவருக்குத் தானமாக வழங்கப்பட்டது. அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் மேட்டுக்குப்பம் போய்விட்டார் .மண்ணாசை என்பதும் அவரிடம் சிறிதும் இல்லை.
8 அவர் எழுதிய பாடல்களை அச்சிட அவரது சீடர்கள் முயன்ற போது பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுமதி தரவில்லை. இறுக்கம் இரத்தின முதலியாரின் உண்ணா விரதத்தின் உறுதியைக் கண்டு அனுமதி அளித்தார். ஆனாலும் இராமலிங்கசாமி என்று போடலாமா என்று கேட்டதற்கு அது ஆரவாரத்திற்கு அடுத்தது என்று மறுத்துவிட்டார். புகழ் ஆசையும் அவரிடம் இல்லை.
9 எல்லையற்ற அவருடைய ஜீவகாருண்யம் ஏழைகளின் பசியைப்போ க்கி வருகிறது. அவர் செய்த தவத்தின் முழுப் பலனைத் தருமச் சாலையிலே தான் பெற்றதாக அறிவித்துள்ளார்.
10 இதுவரை வந்த அருளாளர்கள் அத்துணை பேரும் ஆண்டவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் இறைவனோ வள்ளலார் இருந்த அந்தக் குடிசையினுள் நுழைந்து அவரோடு இரண்டறக் கலந்து விட்டான். .இறைவன் வேறு தான் வேறு என்ற நிலை மாறி அவரே இறைவனாக இருக்கின்றார்.
11 வள்ளலார் ஒருவரே முத்தேக சித்தி பெற்று இறவா நிலை அடைந்து இன்றும் என்றும் தனது தேகம் அழியாதவகை செய்து கொண்டு இருக்கின்றவர்.
12 மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை எல்லாம் வில க்க வேண்டும் என்ற உத்தரவை வள்ளலாருக்கே இறைவன் அளித்திருக்கின்றான். மேலும் நமக்கெல்லாம் துணையாக இருக்கும்படி வள்ளலாரை இறைவன் வைத்திருக்கின்றான்.
13 அடக்கமே உருவானவர் தன்னை வணங்க வேண்டாம் என்று சொன்னதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு அவர் காட்டிய தயவு ஒழுக்கம் முதலியவற்றைப் பின் பற்றாமல் அவரை வணங்கினால் எப்படி அவர் அருள் செய்வார்?.
14 அருட்பெருஞ்சோதி அகவலில் தந்தை என்ற பகுதியில் இறைவன் தனக்கு என்னென்ன அளித்தான் என்பதை நன்கு விளக்கியுள்ளார் .தனது செங்கோலையே இறைவன் வள்ளலாருக்கு அளித்திருக்கின்றான் .செங்கோல் என்பது என்ன? ஆட்சி செய்யும் உரிமை அல்லவா?
15 அகவலில் வள்ளலார் கூறியுள்ளதைச் சற்று நினைவு கூறுவோம்.
தங்கோல் அளவது தந்து அருட்சோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே.
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே.
தன் சித்தனைத்தையும் தன் சமுகத்தினில் என் சித்தாக்கிய என் தனித் தந்தையே
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் என் வசம் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே
தன்னையும் தன்னருள் சக்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய என் தனித் தந்தையே.
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித் தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித் தந்தையே.(அகவல் வரிகள் 1133 முதல் 1150 வரை)
இந்த வரிகளில் வள்ளலார் கூறியுள்ளது உண்மை என்றால் வள்ளலார் இறைவன் என்று நிச்சயமாக உணரலாம்.
வள்ளலாரை வணங்குவது சரி என திரு அருட்பாவில் பலப்பலப் பாடல்கள் சான்றாக உள்ளன. அவற்றுள் ஒன்று இரண்டைப் பார்ப்போமாக.

இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்திச்
ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என எனை வைத்து என்னுடைய அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.
இந்த உலகத்தில் உள்ள மக்களால் துதிக்கத் தக்கவனாகவே என்னை இறைவன் வைத்துள்ளான் என்றாரே வள்ளலார் இதைப் படிக்கவில்லையா?

இந்த உலகத்து மக்கள் மட்டுமல்ல வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் செய்யுமாறு வள்ளலாரிடம் இறைவன் வந்து கலந்தானாம்.

நான் செய்த நற்றவம்தான் யாதோ நவிற்றரிது
வான் செய்த தேவரெலாம் வந்தேவல்-தான் செய்து
தம்பலம் என்றே மதிக்கத் தான் வந்தென்னுட் கலந்தான்
அம்பலவன் தன்னருளினால்.
சமயத் தெய்வங்கள் எல்லாம் கற்பனையே என்று வள்ளலார் கூறிய பிறகு அவற்றை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதனையும் வள்ளலாரே கூறி விட்டார்..அருட்பெருஞ்சோதி ஆண்டவரை எப்படி வணங்குவது?அகவலில் அருட்பெருஞ்சோதி என்பது இந்திரியங்களும் கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவமே என்றால் அனுபவத்தை எப்படி வணங்கமுடியும்? மேலும் உருவாய் அருவாய் உருஅருவாய் இவை ஒன்றும் அல்லீர் வாரீர் என்று கீர்த்தனையில் பாடியுள்ளார்.இந்த உலகில் உள்ள எல்லாச் சமயத் தெய்வங்களையும் உணர முயற்சி செய்தால் சமயம் சார்ந்த தெய்வங்கள் இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றில் அடங்கவே செய்யும். அடங்காதது அனுபவம் ஒன்றே .
தெய்வ மணி மாலையில் பதி பூஜை முதலிய நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் அசுத்த பாவனை நீங்கிச் சுத்த பாவனையில் வரும் என்று பாடியுள்ளார். பதி பூஜை முதலியவை நாம் செய்யவேண்டும்.இறைவன் வள்ளலாருடன் கலந்து இருவரும் ஒன்றானதால் வள்ளலார் இறைவனாக விளங்குகிறார்.வள்ளலாரை வணங்கலாம்.
சம்பேடு ஸ்ரீதர நாயக்கருடன் வாதம் செய்தபோது விக்கிரகம் விஷேச தேகம் என்றும் அவற்றை முறையோடு வழிபாடு செய்தால் பிரம்மப் பிரகாசம் வெளிப்பட்டு அனுக்கிரம் செய்யும் என்றும் முற்காலத்தில் நக்கீரர் அருணகிரிநாதர்,குமர குருபரர் போன்றோர் விக்கிரக வழிபாடு செய்து தீராத நோய்களை எல்லாம் .தீர்த்து வைத்திருக்கின்றார்கள் என்று சுட்டிக் காட்டியுள்ளார்.மற்ற எந்த உருவத்தையும் வழிபட முடியாத நிலையில் வள்ளலாரை வழிபடுவது தவிர வேறு வழி இல்லை. வள்ளலாரை வணங்கலாம்.
வள்ளலார் நம்மால் துதிக்கத் தக்கவர் என்பது இறைவன் வாக்கு. இதுபோல் அனேக பாடல்கள் உள்ளன. வள்ளலாரை வணங்குவது சிறந்தது. அருட்பெருஞ்சோதியை அகத்தில் காண அக வழிபாடு செய்யவேண்டும் .ஏன் எனில் அது ஓர் அனுபவமே

சன்மார்கத்தில் திருநீறு அணியலாமா?

இன்றைய தினம் இது ஒரு பெரிய பிரச்சினைக்குரிய வினா . சுத்த சன்மார்கிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்வோர் திருநீறு அணியக்கூடாது என்று ஆணித் தரமாக கூறுவதோடு சமயம் கடந்த சன்மார்கத்தில் சமய சின்னமான திருநீறு எப்படிப் பொருந்தும் என்றும் கேட்கின்றார்கள், திருநீறு என்பது சைவ சமயச் சின்னம் தான், ஒரு சமயச் சின்னம் இருக்குமேயானால் மற்ற சமய மதத்தவர் எப்படி நமது சன்மார்கத்திற்கு வருவர் என்பதும் அவர்களது வினா. சமய மதம் கடந்த சுத்த சன்மார்கத்தில் ஒரு குறிப்பிட்ட சமயச் சின்னம் இருக்குமே யானால் அது எப்படி பொது மார்கமாக விளங்க ,முடியும்? இவர்களது கேள்வியில் ஒரு நியாயம் இருக்கலாம் .ஆனால் இவர்கள் குருவாக ஏற்றுக் கொண்டுள்ள வள்ளலார் அல்லவா மூல புருஷர்? அவர் திருநீறு விஷயமாக என்ன சொன்னார் என்ன செய்தார் என்று நடு நிலையாக நின்று பார்ப்போம். திரு நீற்றைப் போற்றிப் பலப் பல பாடல்கள் உள்ளன. அவை ஆரம்ப காலத்தில் பாடப்பட்டவை என்றாலும் இந்தப் பாடலைப் பாருங்கள்.
"மலங்கு மாலுடல் பிணிகளை நீக்க மருந்து வேண்டினை வாழி என்
நெஞ்சே
கலங்குறேல் அருள் திரு வெண்ணீர் எனது கருத்திருந்தது கண்டிலை
போலும்
விலகுறாப் பெருங்காம நோய் தவிர்க்க விரும்பி ஏங்கினை வெம்புறேல்
அழியா
,நலங் கொள் செஞ்சடை நாதன் தன் நாமம் நமச்சிவாயம் காண் நாம்
பெறும் துணையே"
நோய் தீர்க்கும் மருந்தாகவும் திருநீற்றை பெருமானார் பயன்படுத்தி இருக்கின்றார் என்பதும் நாம் அறிய வேண்டிய உண்மை. இதை ஊர்ஜிதம் செய்வது போல தேவநாத பிள்ளையின் மகன் அய்யாசாமி பிள்ளைக்கு ஒரு காலில் கட்டி வந்து அவதியுற்ற போது நம் பெருமானார் அவர்கள் , தேவநாத பிள்ளைக்குக் கடிதம் எழுதி திருநீறும் உடன் வைத்து அனுப்பி இருக்கிறார் . அவர் எழுதிய கவிதைக் கடிதம் இதோ
:"இறை அருள் நிரம்ப இருத்தலான் மகிழ்ந்து பிறை என வளரும் நம் பிள்ளை மணிக்கு ஊருவிற் கட்டி உடனே உடையும் அது குறித்து நீ அஞ்சலை அஞ்சலை இது குறித்து அருள் நீறு இதற்குள் அடக்கம் செய்து வைத்தனன் அத்திரு நீறு எடுத்து எய்து முப்போதும் இடுக மற்று அதன் மேல் கொவ்வைச் சாறும் கோள் வெடி உப்பும் கவ்வக் கலந்து காய்ச்சிப் பூசுக பாசுரு முருங்கைப்பட்டை சாற்றினில்"
கட்டி உடைந்து குணப் படுவதற்காக பெருமானார் திருநீறு அனுப்பி இருக்கிறார்கள். நோய் தீர்ப்பது என்பது ஜீவகாருண்யச் செயல் .இதை அந்த நீறு செய்யும் என்பதால் தான் அதை கையாண்டார்கள். இந்த வகையில் திருநீறு வள்ளலாருக்கு உடன்பாடே . பின்னால் எழுதிய ஆறாம் திருமுறையிலும் திருநீற்றைப் புகழ்ந்தே பாடி யிருக்கின்றார்கள் .அனுபவமாலை பத்தாவது பாடலைக் கவனியுங்கள்.
"நற்பூதி அணிந்த திரு வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே"
ஆறாம் திருமுறையிலும் திருநீறு மகிமை பெற்றே விளங்குகிறது.
ஒரு பாடலில் பெருமானார் திரு நீறு கேட்க இறைவன் செஞ்சுடர்பூ அளித்ததாக வருகிறது. இதனைச் சுட்டிக்காட்டி சிலர் இறைவன் செஞ்சுடர்ப்பூதானே அளித்தான். திருநீறு தரவில்லையே .எனவே சன்மார்கத்தில் திருநீறு உகந்தது அல்ல என்று வாதிடுகின்றார்கள். அந்தப் பாடல் இதோ நன்கு படியுங்கள்.

"திருவுருக் கொண்டு எழுந்தருளி சிறியேன் முன் அடைந்து திருநீற்றுப்
பையவிழ்த்து செஞ்சுடர்ப் பூ அளிக்கத்
தருவுருக் கொண்டெதிர் வணங்கி வாங்கிய நான் மீட்டும் தயாநிதியே
திருநீறும் தருக எனக் கேட்ப
மருவுருக் கொண்டு அன்றளித்தாம் திருநீறு இன்று உனக்கு
மகிழ்ந்தளித்தாம் இவை என்று வாய் மலர்ந்து நின்றாய்
குருவுருக் கொண்டம்பலத்தே அருள் நடனம் புரியும் குரு மணியே
என்னை முன் ஆட்கொண்ட குணக்குன்றே"

இந்தப் பாடலில் ஆண்டவன் திருநீற்றுப் பை அவிழ்த்து செஞ்சுடர்ப்பூ அளித்ததாகவும் தான் மீண்டும் திருநீறு கேட்டதாகவும் அறிவிக்கின்றார். நமக்குத் தேவை ஆண்டவன் வள்ளலாருக்கு என்ன கொடுத்தான் என்பதல்ல . வள்ளலாருக்குத் திருநீறு உடன்பாடா இல்லையா என்பதே .செஞ்சுடர்ப்பூ பெற்றுக்கொண்ட பின்னும் வள்ளலார் திருநீறு கேட்டதிலிருந்து அவருக்குத் திருநீறு உடன்பாடே என்று தெரிகிறது.
கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் என்பவர் வள்ளலாரைச் சந்தித்து மூன்று நாட்கள் உரையாடினார்.முடிவில் பெருமானாரிடம் திருநீறு கேட்டார் . வள்ளலார் தரவில்லை. இதையும் சான்றாகக் காட்டி வள்ளலாருக்குத் திருநீறு உடன் பாடில்லை என்று சொல்கிறார்கள். .சுந்தர ஸ்வாமிகள் தன் மடியிலிருந்து திருநீறு எடுத்து வள்ளலாரின்\ நெற்றியில் இட்டு மீதத்தை வள்ளலார் தந்ததாகக் கொண்டு தானும் இட்டுக்கொண்டு மற்றவர்க்கும் அளித்தார். இதைச் சற்று சிந்திப்போம் .மூன்று நாட்கள் உரையாடிய சுந்தர ஸ்வாமிகள் . வள்ளலாரிடம் திருநீறு ஏன் கேட்டார் ? ஒன்று வள்ளலாரின் நெற்றியில் திருநீறு இருந்திருக்கவேண்டும் அல்லது அந்த மூன்று நாட்களில் வள்ளலார் யாருக்கேனும் திருநீறு தந்திருக்க வேண்டும் .ஒன்றுமில்லாமல் சுந்தரசாமிகள் வள்ளலாரிடம் திருநீறு கேட்டிருப்பாரா ? வள்ளலார் வெள்ளை வேட்டி அணிந்தவர்.வெள்ளை வேட்டி அணிந்தவர்கள் காவி அணிந்தோருக்கு திருநீறு தரக்கூடாது என்பது சம்பிரதாயம் .அதை ஒட்டியே வள்ளலார் கோடக நல்லூர் சுந்தர சுவாமிகட்கு திருநீறு தரவில்லை.
இவை எல்லாவற்றையும் விட மேலாக ஞான சபையிலே முதன் முதலாகப் பூஜை செய்த ரத்ன ஓதுவார் அவர்கள் சபையில் திரைக்குத் தீபாராதனை முடிந்ததும் எல்லோருக்கும் திருநீறு அளிப்பதே வழக்கம் என்று கூறியுள்ளார்.இது வள்ளலாருக்குத் தெரியாமல் நடந்திருக்க வழியே இல்லை. நன்கு சிந்தித்தால் வள்ளலாருக்கு உடன்பாடாய் இருந்த திருநீறு சன்மார்கத்திற்கும் உடன்பாடே.
வள்ளலார் தரும் கடவுள் விளக்கம்