Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தீபாவளித் திருநாள்-சன்மார்க்க விளக்கம்.

தீபாவளித் திருநாள்
சன்மார்க்க விளக்கம்
கண்புருவப்பூட்டு என்ற தலைப்பின் கீழ், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பா 6-ஆம் திருமுறையில் வரும் பாடல் இங்கு குறிக்கப்படுகின்றது.
(கையறவி லாதுநடுக் கண்புருவப் பூட்டு .. ..
ஈசனரு ளால்கடலில் ஏற்றதொரு ஓடம்
ஏறிக்கரை ஏறினேன் இருந்ததொரு மாடம்
தேசுறும்அம் மாடநடுத் தெய்வமணி பீடம்
தீபஒளி கண்டவுடன் சேர்ந்ததுசந் தோடம்.
சுவாமி சரவணானந்தா, திண்டுக்கல்.
வெளியீடு நாள் 19.10.1960
நவராத்திரியின் அடுத்த நாளாகிய விஜய தசமியால் பரஞான வெற்றி உண்டாக – வழிபாட்டு முறை தொடரப் பெறுகின்றதாம். அதாவது அருள் விசாரத்தில் ஓங்க, ஓங்க இத் தசமிக்கு அடுத்து வரும் பெளர்ணமியில் அகத்தே ஞான பூர்ண ஜோதி வடிவம் கண்டு கொள்ளப்படுகின்றதாம். விசார வசத்தால் இம் மேனிலையில் பொருந்தி நின்று சிறிது சிறிதாகத் தேகப் பற்று ஒழிக்கப்பட வேண்டியுள்ளதாம்.
சந்திர அம்சமாகிய இத் தூலதேகப் பற்று அருகிப் போவது, தேய்பிறை நாட்களாக அமைந்துள்ளன.
ஐப்பசி அமாவாசையின் தொடக்கத்தில் சரீர பந்தம் முற்றும் நீங்குவதும். அக ஒளி வடிவம் அனுபவப்படுவதும் உண்மையாம்.
இந்த அக ஜோதி அனுபவம் பெறும்போது, அந்த ஆன்மா நித்தியமாய் விளங்கி, முன் பலவேறு தேகங்களிலும் தொடர்ந்து வரிசையாக வந்துள்ள உண்மையும் அறிந்து கொள்ளப்படும்.
நித்தியமாகிய ஆன்ம தீபத்திற்கு, அநித்தியமாகிய தேகக் கூடுகள் வரிசையாக தொடர்ந்து கொண்டேயுள்ளன முத்திகாலம் பரியந்தம்.
ஆதலின். இத் தேகப்பற்று நீங்கும், பந்தம் அறும் அந் நாளே ஆன்ம விடுதலை நன்னாளாகும். இந் நாளே தீபாவளியாக புனைந்து உரைக்கப் படுகின்றதாம்.
தேகம் என்னும் நரகாசுரனை. அன்று அமுத காலையில், அருட் சக்தியால் நீக்கிக் கொண்டு, தீப + ஆவளி (விளக்கு வரிசை) மயமான ஆன்ம ஆனந்தம் அடைவதாகும். இவ் வுண்மை அனுபவம் கூடுவதே லட்சியமாகக் கொள்ள வேண்டும்.
தந்திர முறையாக, மேற்படி அமுத வேளையில் தீப அலங்காரம் செய்து, எண்ணெய் முழுக்குக் குளிப்பு முடித்து, புத்தாடை புனைந்து இன்சுவை உண்டி அருந்தி, உற்றார் நண்பர் உடன் கூடிக் களித்திருக்கின்றனர் சாதாரண மக்கள்.
அறிவிற் சிறந்த சன்மார்க்க நன்மக்கள், அருள் ஞான ஒளி விளக்கைக் கண்டு கொண்டு, அதன் வரிசை பெற்ற அருட்பெருஞ்ஜோதித் தீபாவளியாக ஏற்றுப் பேரின்ப வாழ்வு பெறல் வேண்டும்.
29.10.1970 அன்று வெளியிட்டது கீழ்க்கண்ட விளக்கம்.
தீபாவளி என்ற சொல் தீபம் + ஆவளி என 2 ஆகப் பிரிந்து நின்று, விளக்கின் வரிசையினின்று பொருள் பட்டு விளங்கும்.
நாம் மெய்யறிவு பெற்று நம்மையும், நம்மை சூழ்ந்துள்ள எவரையும் அருட்தீப விளக்கங்களாகக் கண்டு கொண்டு அன்போடு ஒத்து வாழப் பழகுதல் வேண்டும்.
1. கடவுள் ஒளி அருள் விளக்காக உள்ளதை உச்சிக்குக் கீழே தலை உள் நடு இடத்தே இருப்பதாக உணர்ந்து, கொள்ளுதல், பல நாள் பழக்கத்தால் பெறலாம்.
2. அப்படி, விளக்கும், விளக்கின் சுடரே. அருளால் நமது உடலாய் வளர்ந்துள்ளதை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.
3. இந்த அருட் சுடர் தனக்கென வாழாது. பிறர்க்கு உதவி செய்து வாழ்விப்பதால்தான் நலம் பெற்று ஓங்கும்.
4. ஆகையால், ஒருவன், அருள் விளக்காய் இருந்து, அருட் சுடராய் விரிந்து தன் முன் வருகின்ற தீப வரிசையான மக்களுக்கு அன்பால், இன்பு செய்து கொண்டிருத்தல், திருவருட் சம்மதம் ஆம்.
5. இப்படி உலகிலுள்ள மக்கள் பலரும் அருள் ஒளி விளக்கா, உணர்த்தப் பெற்று, அருட் பணியால் ஒளி செய்து, சூழ்நரை வாழ்வித்தல் கடவுள் ஆணையாகும்.

6. அருள் ஒளி வாழ்வு வாழ்கின்றபோது புலனிச்சையாம் நரக பந்தம் ஒழிகின்றது. இதுவே நரகாசுர சம்ஹாரம் என்பது, முத்தி இன்ப வாழ்வு என்பதும் ஆம்.

3 Comments
P Sujatha
KarunaiMughu Vallalar Spce Friends,
Thank you for Good Information about the Expalanations of DeepaThirunaal.This message Create the feelings of Good Wisdom in my soul
Vallalar Loving
Aruljothisujatha.
Sunday, October 26, 2008 at 17:53 pm by P Sujatha
P Sujatha
கருணைமிகு சன்மார்க்க அன்பர்களுக்கு,
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.தீப திருநாளில் அக அனுபவத்தை பெற்று மகிழ்வோம்.நாம் செய்யும் ஜீவகாருணிய தயவு செயலால் பெறும் அருளை நம்
உடம்பில் தேக்கி வைத்து ஆன்ம தீபத்தை பிரகாசிக்க செய்வோம்.ஜீவகாருணியம் தான் ஆன்மாவை பிரகாசிக்க செய்யும்.அந்த ஆன்ம பிரகாசம் உடலுக்கும்,உள்ளத்துக்கும் பிரகாசத்தை கொடுக்கும்.நாம் இந்த தேகத்தை பெற்றதன் நோக்கத்தை அறிந்து ஜீவகாருணியம் செய்ய இந்த தேகத்தை கருவியாக பயன்படுத்துவோம்.இனி அக அனுபவம் பெற வெளி தேகம் தடையாக இருக்காது.
இன்று முதல் நம் ஒவ்வொருவரின் ஆன்ம ஒளியும் சிறந்த முறையில் வெளி பட போகிறது.சுத்த சன்மார்க்கம் அல்லவா நம்மை வழி நடத்தி கொண்டு இருக்கிறது.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.
Friday, October 16, 2009 at 01:38 am by P Sujatha
KUMARESAN KRISHNAMURTHY
அன்புடையீர்
தீபத்திருநாள் என்றால் என்ன? என்பதை சுவாமி சரவணானந்தா இங்கு விளக்கி கூறியிருக்கிறார், அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு அற்புத விளக்கம்.
நன்றி
Wednesday, November 3, 2010 at 05:06 am by KUMARESAN KRISHNAMURTHY