Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
சத்திய வாழ்வு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சத்திய வாழ்வு

_____________________________________________________________________________________________________________________________________
உலகியியலின் நிலையாமையை உணர்ந்து, சத்தியத்தை எங்கும், எதிலும் காண்பதே மனிதப்பிறவியில் நோக்கமாகும். சத்தியத்தை அறியாத வரைக்கும் மறுபிறவியும், இறப்பும் உண்டு. சத்தியத்தை உணருவதற்காகத் தான் இந்த மனிதப்பிறவி. வேறு எதற்காகவும் இல்லை.
_____________________________________________________________________________________________________________________________________

உலகில் தோன்றிய ஞானிகளும், முனிவர்களும், சித்தர்களும் சத்தியத்தை உணர்ந்தார்கள், சத்தியத்தைப் போதித்தார்கள். ஆனால் இன்றைக்கு எது சத்தியம்? எது அசத்தியம்? என்று உணரமுடியாத நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.
இன்றைய மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் மாயையின் பிடியில் இருப்பதால், அவர்களின் (பெரும்பாலானவர்களின்) வாழ்க்கை சத்தியத்தை உணர முடியாமலேயே முடிந்துவிடுகிறது. இறையருளால் ஒரு சராசரி குடும்பத்திற்குத் தேவையான அன்றாட உணவு, உடை, மற்றும் இருப்பிடமிருந்தால் போதுமானது. ஆனால் மாயைவயப்பட்ட மனிதன் மேலும் மேலும் தன்னுடைய தேவையை அதிகப்படுத்துகிறான்.
“போதும்” என்ற நிலையில் யார் வாழ்கிறார்களோ அவர்களை, இந்தச் சமுதாயம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும், இந்தக் காலத்தில் இப்படியொரு அப்பாவி என்றும், உலகத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவர்கள் என்றும், பட்டம் கட்டுகிறது. ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்த ஒரு குடிமகன் சத்தியத்தை உணர்ந்து இறை நினைவுடனும், குரு நினைவுடனும் வாழ்ந்து வருகிறான் என்றால், அவனை உற்றார்களும், உறவினர்களும், நண்பர்களும் பிழைக்கத் தெரியாமல் வாழ்ந்து வருகிறான் என்று கூறுகிறார்கள். அசத்திய வாழ்க்கையில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு எது சத்தியம்? எது அசத்தியம் என்றுப் புரிவதில்லை. காரணம் அவர்கள் அசத்தியத்தின் - மாயையின் பிடியில் இருக்கிறார்கள்.

தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற ஒருவன் பிற உயிர்களும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நினைப்பதில்லை. உலகில் இருக்கும் அனைத்து ஜீவ ராசிகளும் ஒரு காரியக் காரணத்திற்காகவே தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. வள்ளல் பெருமானார் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டாரோ, அதுபோல உலகில் இருக்கும் அனைத்தும் உயிர்களும், ஜீவராசிகளும், மனிதர்களும் தோற்றுவிக்கப்பட்டவர்கள் தான். இதனை நன்றாக உணர்ந்து, உணர்ந்து செம்பொருள் காண்பதே மனித நிலையில் இருந்து ஒருவன் செய்யக்கூடிய முயற்சியாகும்.

இதனையே வள்ளல் பெருமானார்:
உலகீர் சூதறிந்தீர்; வாதறிந்தீர்; தூய்மையறிந்திலிரே; என்றும்
கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே;
கற்றதெலாம் பொய்யே; நீர் களித்ததெலாம் வீணே;
உண்டதெலாம் மலமே உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர்! இது வரையும் உண்மையறிந்திலிரே...
என்கிறார். மேலும் இதனை மிகத் தெளிவாக:
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண் தகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்......
என்றும்,
”அனகமறிந்து அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம்” என்றும் கூறுகிறார்.

திருவள்ளுவர் இதனை:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
சாகாக்கல்வியைக் கற்று ( கற்க வேண்டியவற்றைக் கற்று) மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் மீண்டும் பிறவாத நிலையை அடைவார்கள்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு
பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமையை நீக்குவதற்கு செம்பொருளாகிய- சத்தியத்தை- மெய்ப்பொருளைக் காண வேண்டும்.
ஆகவே உலகியியலின் நிலையாமையை உணர்ந்து, சத்தியத்தை எங்கும், எதிலும் காண்பதே மனிதப்பிறவியின் நோக்கமாகும். சத்தியத்தை அறியாத வரைக்கும் மறுபிறவியும், இறப்பும் உண்டு. சத்தியத்தை உணருவதற்காகத் தான் இந்த மனிதப்பிறவி. வேறு எதற்காகவும் இல்லை. சத்திய வாழ்வு மூலமே அழியாத ஞான வடிவம் கிட்டும். இது சாதாரண வார்த்தை அல்ல; முத்தரெல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் வள்ளல் பெருமானார் உரைத்த வார்த்தை.

சத்தியத்தை உணர ஒரு படி மேல் எடுத்து வைத்தால் போதும், நாமே சத்தியத்தின் சாயல் என்பதை மிக விரைவில் உணரலாம். ஆகவே கால விரயம் செய்யாமல் சத்தியத்தை நோக்கி வாழ்க்கையைத் தொடருங்கள்...,உங்களுக்குள் இருக்கும் ஜோதியை- இறையை உணருவீர்கள்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

************