Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
தீட்சை-III
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

தீட்சை-III

சுந்தரர்

திருமுனைப்பாடி நாட்டைச் சேர்ந்த திருநாவலூரில், ஆதி சைவ குலத்தில் சுந்தரர் பிறந்தார். இவரது தந்தையார் சடையனார் , தாயார் இசைஞானியார் . மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்குவந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிபர் திடீரென மறைந்தாராம். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி" என்ற தனது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பின்னர் இறை தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப்பதிகங்கள் பாடி இறவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம். "நீள நினைந்தடியேன்" என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

இறைவனுடைய உதவி பெற்றே பரவையார், சங்கிலியார் என்ற இரு பெண்களை மணம் புரிந்ததாகக் கூறப்படுகிறது. அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். தனது 18 ஆவது வயதில் இவர் சிவனடி சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது.

இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும். இவர் பாடிய தேவாரங்கள் 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத்தொகை என்னும் நூலில் 63 நாயன்மார்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


அற்புதங்கள்

1. செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது

2. சிவன் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.

3. காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.

4. முதலை விழுங்கிய பிராமணப்பெண்ணை அம்முதலையின் வாயின்று அழைத்துக் கொடுத்தது.

5. வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.



தகவல் உதவி- அபிதான சிந்தாமணி


குறிப்பு:


இக்கட்டுரை சைவ சமயத்தை ஆதரித்தோ அல்லது பிற வழியை சார்ந்தோ எழுதப்படவில்லை. பரம்பொருள் குருவாக இருந்தால் சாகாகலை முதல் அனைத்து வித ஆற்றல்களையும் இறைவனிடமே கற்கலாம் என்ற நோக்கில் எழுதப்படுகிறது. பாமரனும் இறையுடன் எவ்வாறு தீட்சை பெறலாம் என்பதை வரும் நாட்களில் பார்ப்போம்.