Vallalar Universal Mission Trust   ramnad......
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம், சுவாமி சரவணானந்தா

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரைவிளக்கம்,

சுவாமி சரவணானந்தா

1. அருட்பெருஞ்ஜோதி

1. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

2. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) அருட்பெருஞ்ஜோதி என்ற சொல் பொருள் விளங்காத ஒன்றாக இல்லைபோல் தோன்றுகிறது. ஆனாலும் அதன் உண்மை விளக்கம் பெரிதும் பெருமையுடைத்தாகும். ஜோதி என்றால், நிறையொளியாம், பெருஞ்ஜோதியாவது, மிகப் பெரிதாய் நிறைவுற்றதாய் உள்ள பேரொளியாம், உலகம் கண்ட பெரிய ஜோதி விண்மணியாம் சூரியனே . வான் விளங்கு விண்மீன் ஒவ்வொன்றும் பெரிய பெரிய ஜோதி என்பது அறிவியல் அனுபவம். ஆனால் இந்த ஜோதிகள் எல்லாம் தோற்றக் காரணமான நிறைபெருஞ்ஜோதியை கேலக்ஸி” (galaxy) என்கின்றனர். இந்நிறை ஜோதிக்கும் இதுபோன்ற பல பேரொளி நிலைகட்கும் இடம் கொடுத்துள்ள அகண்ட பெருவெளி முற்றும் நீக்கமற நிறைந்து நின்று எல்லா ஜோதிகளின் தோற்ற ஒடுக்கங்களுக்கும் காரணமாயுள்ளதுதான் நமது அருட்பெருஞ்ஜோதி ஆகும். இந்த அருட்பெருஞ்ஜோதியாம் இறை ஒளி அளப்பரிய அகண்ட பெருவெளி எல்லாம் செறிந்து இயற்கையுண்மையாய் இருந்துகொண்டும், இயற்கை விளக்கத் தோற்றங்களாய் வெளிக்காட்டி மறைந்துகொண்டும், இயற்கை இன்பத்தை , முடிவில் நிறைமனித வடிவில் அனுபவ பூர்வமாய் வழங்கிக் கொண்டும் இருக்கின்றதாம். இவனது அனுபவத்தில் தான் இந்த அருட்பெருஞ்ஜோதியின் நிறை உண்மை விளக்கம் கண்டு கொள்ளப்படுகின்றது.

மேற்படி அருட்பெருஞ்ஜோதி நான்கு நிலை கொண்டதாய்க் குறிக்கப்படுகின்றது.

(புறத்தே)

1. வான் வெளி நிறை மின் காந்த ஒளி நிலை.

( வான் கலந்த பெருஞ்ஜோதி அக்கினி நிலை)

2. விண்மணியாம் ஞாயிறு ஜோதி நிலை

3. தண்மதி நிறைகளைச் சந்திர ஜோதிநிலை

4. தீபச்சுடர் விளக்கின் ஒளி நிலை

இவைபோன்று பக்குவ மனிதனின் அக அனுபத்தே நான்காய் விளங்கும் ஜோதி நிலையுளவாம். அவையாவன ( புறமிருந்து அகம் நோக்கிச் செல்லும்போது)

1. தேகேந்திரிய விளக்க ஒளிநிலை

2, மனோகரண விளக்க ஒளிநிலை

3. ஜீவ உணர்வு விளக்க ஒளிநிலை

4. ஆன்ம ஞான விளக்க ஒளிநிலை..

இந்த நானிலை அனுபவம் உண்டாகவேண்டு, சரியை, கிரியை, யோகம், ஞானம், என்ற நெறிகளை வகுத்து , அவற்றின் அடைவாக, சாலோக, சமீப, சாரூப, சாயுச்சிய, பதவி விளக்கங்களையும் வழங்கினர் ஆன்றோர். இந் நானிலை முடிவே, நான்கு கால் ஒன்றாவது போல் முழு நிலை அனுபவத்தைக் கூட்டி வைப்பதாய்க் கொள்ளப்பட்டதாம். இதனையே முடிவாகக் கொண்டதால் இறையொளி கண்ட ஒருவன் அவ்வொளியில் நாட்டம் வைத்துக் கலந்து மறைந்தே போனான். அப்பாடி மறைந்து ஒழியாது, வாழ்வு பெற்று விளங்கவே நம் அக அனக சுத்த சன்மார்க்க திருவருளால் வெளியாக்கப்பட்டுள்ளது.

சுத்த சன்மார்க்கி தயவோடு கூடிய சத்விசாரத்தால் அகம் விளங்கும் அருள் இறை ஒளியை ஆன்ம ஆலயமாகிய சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதியாகக் கண்டு கலந்து அதுவாகி நின்று அவ்வருட்பெருஞ்ஜோதியையே விரிவு செய்து ஜீவனிலும், கரணத்திலும், இந்திரிய தேகத்திலும் நிரம்பிடக்கொண்டு வாழ்வதால் அருட்பெருஞ்ஜோதியின் முழுநிலை அனுபவமும் பெற்று முடிவிலாதென்றும் விளங்கலாம் என்பது நம் வள்ளல் பெருமான் கண்ட உண்மையாகும். ஆகவே இந்தக் கடவுட் பேறு எய்தும்படி திருவாய் மலர்ந்து அருளப்பெற்ற இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலின் தொடக்கத்தே இந்த நான்கு அருட்பெருஞ்ஜோதியை காண்கின்றோம். அடுத்து வரும் அடிகளின் விளக்கத்தை ஆய்ந்து கொள்வோம்.

தொடரும்..

vallalarspace.com/vumt

KUMARESAN KRISHNAMURTHY
Dear Sir,
Agaval explanation of Sri Saravananantha swamigal, is a great work.
I kindly hereby request the space team to upload this entire agaval with vallalar.org, so that the viewers will get more benefit.
thank you
Saturday, January 16, 2010 at 23:50 pm by KUMARESAN KRISHNAMURTHY