புலால் மறுத்தல்
புலாலுன்பதனைக் கண்டித்த அளவுக்கு இராமலிங்க அடிகள் வேறெதெனையும் கண்டித்ததில்லை. புலால் மறுத்தலை வற்புறுத்திய அளவுக்கு வேறெதெனையும் வற்புறுத்தியதில்லை. சாதி சமயம், முதலிய எல்லாவற்றாலும் ஒருமைப்பாட்டினை கண்ட இராமலிங்க அடிகள் புலையொழுக்கம் ஒன்றை மட்டுமே கருதி மக்களை இரு இனங்களாகப் பிரித்தனர். 1. அக இனம், 2. புற இனம், புலால் மறுத்தோர் அகவினத்தார். அஃதுண்போர் புறவினத்தார். “ உயிர்க்கொலையும் புலைப்பசியும் உடையவர்களெல்லாம் உறவினத்தாரல்லர், அவர் புற இனத்தார்; என இறைவனே தனக்கு அருளினான் என அறைவர்.
உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறுமோர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
நயப்புறுசன் மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம் ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே
மயர்ப்பறுமெய் த் தவர்போற்றப் பொதுவில் நடம் புரியும்
மா நடத்தென் அரசே என் மாலை அணிந்தருளே
அருள் விளக்கமாலை
புலாலுண்பவராகிய புறவினத்தாரை, அடிகள் தமது உடன் கூட்டத்திலும் சன்மார்க்க சங்கத்திலும் சேர்த்துக்கொண்டதே இல்லை. புலால் உண்ணும் மக்களை கண்டு மயங்கி உள்ளம் நடுங்கி ஆற்றாமல் எலும்பெல்லாம் கருக இளைத்தேன் என இறைவனிடம் விண்ணப்பிப்பார்.
புண்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில்
புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணி நான் எண்ணி
ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு
மயங்கி உள் நடுங்கி ஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த
இளைப்பையும் ஐயநீ அறிவாய்
பிள்ளைபெருவிண்ணப்பம்
நன்றி