(6) பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம்
பரமார்த்த முத்த மெளனம்
(பதவுரை) பரிசய அதீதம் – தொட்டு அறிய முடியா அளவு தூரமானது; சுயம் – இயற்கை வடிவாக இலங்குவது; சதோதயம் – உதயமாகி எப்பொழுதும் இலங்குவது; சதோதயம் – உதயமாகி எப்பொழுதும் ஒளிர்வது- வரம் – பரிபாகிகளை வரிப்பது; பரமார்த்த முக்த மெளனம் – பரம்பொருள் எனும் கட்டற்ற, சொலற்கரிய மோன சொரூபம் ஆனது(எ-று)
(விரிவுரை) ஆராதனையின் பெயரால் ஆயிரம் தழுவினாலும் அதற்கு அப்பால் ஆனது மெய்ப்பொருள், அந்நிலை “ பரிசய அதீதம்” எனப் பெற்றது, பரிசயம் பரிசித்தல்; தொடுதல், தடவுதல்; அதீதம் கடந்த நிலை.
தோன்றுதலும், இருத்தலும், தொலைதலும், எங்குமாகியிருக்கும் இயற்கை நிலை; எவர்க்கும் உள்ள செய்தி, தோற்றக் கேடுகள் இன்றி, என்றும் எங்கும் ஒருபடித்தா யிருத்தலின், ‘ சுயம் ‘ என்றார்.
“ ஜோதிஜோதிஜோதிசுயம்” என்பதும் இங்கு எண்ணத்தக்கதாகும்.
அ ஆ முன் உ ஊ வரின், இரண்டும் கெட்டு ஒ ஓ ஆகும் எனும் விதிப்படி சதா உதயம் என்பது சதோதயம் என்றாயது.
கதிரவ்ன் காலையில் உதயம் ஆவன், மாலையின் மேற்குக் கடலுள் மறைவன். இப்பிரகிருதி உலகில் , இது என்றும் எவரும் காணப்பெருவது. தியான யோகிகட்குப் பரசிவ சூரிய வித்தக தரிசனம், எங்கும் எப்போதும் விளைதலின், சதோதயம் என்றார்.
‘’ காலையில் நான் கண்ட ஜோதி – எல்லாக்
காட்சியும் நான்காணக் காட்டிய ஜோதி
ஞாலமும் வானுமாம் ஜோதி – என்னுள்
நானாகிக் தானாகி நண்ணிய ஜோதி”:
என்பதையிங்கெண்ணுதல் நலம்.
துன்மார்க்கம் கலவாத நன்மார்க்கத்தில் தெளிந்த நெறியினரைத் தேர்ந்து, இம்மை மறுமை யீவது ஆதலின், பரம் ‘ வரம் ‘ என்ப பெறுகிறது( வரம் . வரித்தல், தேர்ந்து கொள்ளல்)
சன்மார்க்கிகளை வரித்து, பரமார்த்த முக்த மோனத்தில் பயில்விப்பது அப்பரம்,
பரம அர்த்தம்- அதிரகஸ்ய அருட்செல்வம் ‘ (பரம – அதி நுட்பமான , அர்த்தம். அருள் திரு ( இதையே மெய்ப்பொருள் என்பர் மேலோர்; ( இத்திருவினை எய்தினர் வாளா இரார்’ வாக்காலும், மனத்தாலும் அதை மற்றவர்க்கு வழங்குவர்.
இயல்பில் பற்று இல்லாமல் , செயற்கையிலும் பந்தம் சேராமல் இருப்பது முக்திநிலை; விடுதலை மயமாக விளங்கும் நிலை, மனம் செயலற்று இருப்பதுவே மவுனம் என்பது, கருதி சொல்லும் செய்தி,
பரமார்த்த முக்த மெளனம் என்பதை, உணர்ந்து பத்து தரம் உச்சரித்தால், இனிய அந்நிலை நம்மில் எய்துவதை அறியலாம்.
திருவடிப்புகழ்ச்சி,
குகத்திரு இரசபதிஅடிகள் உரை..