திருவருட்பா வசன பாகம் 2 தொடர்ச்சி
எல்லாமாகிய இயற்கை இன்பக் கடவுளே!
தந்தையென்பவனது சுக்கிலப் பையின்கண், யான் வந்தமைந்தகணப்போது தொடங்கி, தாயென்பவளது சோணிதப் பையின்கண், சென்றடைந்த கணப்போதிற்கு, முன்கணப்போதுவரையுமாக என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஒரு கோடி ஒன்பது லஷ்த் தறுபதினாயிரங் (1,09,60,000) கணப்போது பரியந்தம் எவ்வகைத் தடைகளும் வாராதபடி பகுதிப் பேரணுவிற் கிடந்த, எனது அகத்தினும், புறத்தினும், அருவாகியும், உருவாகியும் சலித்தன் முதலியவன்றி, அன்பொடும், அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருட்பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகிலொருவாறுஒரு கணப்போது பாதுகாத்தலிற் சலிப்படைந்தும், தளர்ச்சியடைந்தும், அருவருப்புற்றும், சுதந்தரமற்றும், பராக்கிலிருந்துத் தடைபடுகின்ற தந்தை முதலிய ஜீவர்கள் கருணைத் தன்மையை , ஒப்பென்று சொல்வதற்கு எவ்விதத்தினுஞ் சிறிதாயினும் மனந்துணியாமையால், அங்ஙனம் உபசரியாதவனாகி யிருக்கின்றேன் , ஆதலின் தேவரீர் திருவருட்பெருங்கருணையை யென்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!
அருட்பெருஞ்ஜோதி தனித்தலைமைக் கடவுளே!
தாயென்பவளது சோணிதப்பையின்கண், யான் வந்தமைந்த கணப்போதுட் தொடங்கி, இவ்வுலகிற் தோன்றிய கணப்போதிற்கு, முன் கணப்போது வரையுமாக என்னாலொருவாறு அளவிடப்பட்ட ஆறுகோடி நாற்பத்தெட்டு லஷ்ங் ( 6,48,00000) கணப்போது பரியந்தம் , எவ்வகைத் தடைகளும், எவ்வகை ஆபத்துக்களும் வாராதபடி பூதப்பேரணு வுருவிலும், பிண்டப்பெருவடிவிலும் கிடந்த எனதகத்தினும் புறத்தினும், அருவாகியும், உருவாகியும், சலித்தன முதலியவின்றிப் பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீர் திருவருட்பெருங்கருணைத் தன்மைக்கு இவ்வுலகில் ஒருவாறு ஒரு கணபோது பாதுகாத்தலிற் சலித்தும், , தளர்ந்தும் , அருவருத்தும், பரதந்திரித்தும், பராக்கடைந்தும் தடைபடுகின்ற , தாய் முதலிய ஜீவர் கருணைத் தன்மையை ஒப்பென்று சொல்வதற்கு , எவ்வ்கையின், எத்துணையும் மனந்துணியாமையால் அங்ஙனம் உபசரியாதவனாகியிருக்கின்றேன். ஆகலின், தேவரீரது திருவருட் பெருங்கருணையை என்னென்று கருதுவேன்!
யாவராலும் பிரித்தற்கொடு வாற்றாலுங் கூடாத பாசமென்னு மகாந்த காரத்தில், யான் அதுவென்னும் பேதந்தோற்றாது அருகிக் கலந்து அளவிறந்த காலம் முன்பின்னென்பதின்றி மூர்ச்சித்துக் கிடந்த என்னை, அம்மகாந்தகாரத்தினின்றும், ஓர் கணப் பொழுதினுள், அதிகாரணக் கிரியையால், அதிகாரணப் பகுதியுருவிற் பிரித்தெடுத்தருளிய தேவரீரது திருவருட் பேராற்றலை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்.
… தொடரும்.
Write a comment