இராமலிங்க அடிகளார் சித்திவளாகத் தமர்ந்து அடியார்களுக்கு வழங்கிய போதனைகள், புத்த பகவான் போதிமரத்தடியிலமர்ந்து, தம் சீடர்களுக்கு வழங்கிய உபதேசங்களையே நினைவூட்டுகின்றன. இராமலிங்க அடிகளாரின் அமுத உரையை பருகுங்கால், நம் அகக்கண்களுக்கு அகத்தியர் – வான்மீகி போன்ற முனிவர்களெல்லாம் காட்சியளிக்கின்றனர். நம் போன்ற அனுபவம் பெற்ற ஒரு கவிஞர்,
“ அகத்தியனோ வான்மிகியோ ஆதிசேடன் தானோ
மகத்துவமாம் சம்பந்த வள்ளலோ – இகத்தில்
சச்சிதா னந்த்ததின் தண்ணளியோ என்னென்பேன்
மெச்சுமதி இராமலிங்க வேள்!
என்று பாடுகின்றார்.
தாயுமானவர், பட்டினத்தார், அருணகிரியார் போன்று அருளியலைப் போதிப்பதோடு நின்றாரல்லர் வள்ளலார். அவர் உலகியல் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளையும் தம்மை நாடி வந்த அன்பர்களுக்கு உபதேசித்தார். அந்த இரு வகைப் பணிகளிலும் ஈடுபடுமாறு தமக்கு ஆண்டவன் அருளியதாக…
“உலகியலோடு அருளியலும் ஒருங்கு அறியச் சிறியேன்
உணர்விலிருந்து உணர்த்தி எனது உயிர்க்குயிராய் விளங்கி…
என்ற வரிகளிலேஅறிவிக்கின்றார்.