அவ் அன்புருவே முதிர்ந்து அருளுருவாகும். இவ்வுரு அமையும்போது திருவருள் முழுமையாகி அனுபவமாகும் என்பர். இது சிவதுரியம் எனப்படும் என்றும் அப்போது எங்கும் பேரொளி மயமாக இருக்கும் என்றும் கூறுவர். இதற்கு மேற்பட்டது இன்புருவம் ஆகும். ஆண்டவர்க்கு ஓர் உருவம் உண்டெனில் அது இன்புருவமே, யாகும். சச்சிதானந்தம் என்ற முப்பொருள் தன்மை உணர்வாலும் இறைவனை விளக்குவதில் வள்ளலார்க்கு ஈடுபாடு உண்டு. சத்தாகிச் சித்தாகி இன்பமாகி (மகா..3) என்பது போல் நித்தியப் பொருளாகியும் அறிவுவடிவதாகியும் இன்புருவாகியும் திகழும் இறைவனை தத்துவ அடிப்படையில் அவர் விளக்குவார். எனவே அருட்பெருஞ்ஜோதி என்னும் வடிவம் அன்புருவாய்த் தொடங்கி அருளுருவாய் வளர்ந்து இன்புருவாய் நிறைவதே என அவர் வாக்கால் அறிகின்றோம்.
எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே
கருணைக்கும் சோதிக்கும் உள்ள கருத்தொற்றுமையை இங்கே நாம் காணுகின்றோம். ஏனெனில் கருணையுள்ளா இடமே சோதி அல்லது சிவம் உள்ள இடம் எனத் தெளிவாகக் கூறுகின்றார், இறைவனைச் சோதி என்றதனால் அவன் நடமிடும் பொது உயிர்களே என உருவகப்படுத்துகின்றா.
உயிரெலாம் ஒருநீ திருநடம் புரியும்
ஒருதிருப் பொதுவென அறிந்தேன்
இதனை இன்னும் விளக்கமாகக் கூறும் இடமும் உண்டு
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கவேல் புரிந்திடவென்
சிந்தைமிக விழைந்த தாலோ திரு…6:121;2
இதிலிருந்து அருட் பெருஞ்ஜோதி என்ற தொடர்ப் பொருள் நமக்கு விளக்கமாகின்றாது. அருளே வள்ளலாரிடம் சோதியாக உருவகப்படுகின்றது உயிர்கள் எல்லாம் பொது வாக சிற்றம்பலமாக விளங்குகின்றன ஆங்கே சோதி வடிவான இறைவனின் நடம் என்பது அவனது அருட்செயல்களேயாகும். ஆங்குள்ள இறைவனும் அருட்சோதி வடிவினன். உயிர்கள் அருள்செய்து பழகி, அருள்மயமாகி அருளிற் கலப்பதையே வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற தொடரில் வைத்து விளக்கியுள்ளார்.