Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
சாகாக் கல்வி-ஏமசித்தி-தத்துவநிக்கிரகம்- இறைநிலை அறிந்து இறைமயமாதல்



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சாகாக் கல்வி, ஏமசித்தி, தத்துவ நிக்கிரகம் மற்றும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்

அன்புடையீர்!

சுத்த சன்மார்க்க வாழ்வில் சாகாக் கல்வி, ஏமசித்தி, கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல், தத்துவ நிக்கிரகம் இவை நான்கும், பெறற்கரும் பேறாகப் பேசப்படுகின்றன. இவற்றைப் பற்றி திருமூலர், திருவள்ளுவர், மற்றும் வள்ளல் பெருமானார் கூறியிருக்கின்றனர். இதனுடைய விளக்கத்தை திண்டுக்கல் சரவணானந்தா சுவாமிகளும் கீழ் வருமாறு கூறுகின்றார்.

சாகாக் கல்வி: சாகாக் கல்வி ஆன்மக் கடவுள் உண்மையை, நம் உள் விளங்கும் வண்ணத்தை சத்விசாரத்தால் உணர்ந்து, அகத்தில் இருப்பதை அறிந்து கொள்ளுதல், இவ்வறிவால் உண்மையை அறிந்து நிற்றல் சாகாக் கல்வியின் பயனாம்.

ஏம சித்தி: ஏம சித்தியாவது தயா ஒளியை, ஆன்ம பீடத்தே கண்டு, கலந்து, தயவாகி நிற்பதாம். இந்த அக நிலையே பொன்மணி மேடையாகப் புகலப்படும். இவ்விடத்தில் இருந்தால், உள்ளம் தயவு ஒளியோடு சுத்த பொன் வண்ணமாய்த் திகழ்வதோடு, எந்தவித ஆபத்து விபத்துக்களாலும் தாக்கற்று விளங்கலாகும் ஆம்.

ஏமம் என்ற சொல்லுக்கு இதனால் இங்கு பொன் என்றும், பாதுகாப்பான காவல் நிலை என்றும் பொருள் பொருந்துவதாம்.

தத்துவ நிக்கிரகம் செய்தல்: தத்துவ நிக்கிரகம் செய்தல் என்பது அகத்தே தயவு மயமாய் இருந்து கொண்டு, தயவால் வாழ்ந்து வர உள்ளொளிப் பெருகும். அது பெருகப் பெருக ஜீவ தேகேந்திரியங்கள் எல்லாம் தயா ஒளியால் நிரம்பப் பெற்று யாவும் சுத்த தத்துவமாக மாற்றம் அடைகின்றது. அப்போது தான் அசுத்த அநித்திய தேகமே, சுத்த நித்திய வடிவமாக மாறி விடுகின்றதாம்.

கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்: தயா ஜீவ விளக்கத்தால் கடவுள் தயவும் மனித தயவும் உணர்ந்து அகத்தே தயவு நிலைப் பெற்று நின்றால், தயவின் உண்மை விளங்கும். கடவுள் தயவின் கூறு நம்மில் நிரம்பி செயல்படுத்திக் கொண்டுள்ளதை அறிவோம். இங்குக் கடவுள் தயவு அகண்ட உலகெங்கும் செயல்படுவதை அறிகின்றோம்.

திருக்குறளும் இதனையே:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ்வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ்வார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார்

- என்று கூறுகிறது.

திருமூலர் திருமந்திரத்திலும் மேற்கூறியக் கலைகள் கொடுக்கப்பட்டுள்ளது , எனவே இதனை ஓர் ஆய்வுக் கோணத்தில் அடுத்தப்பகுதியில் காண்போம்.

தொடரும்..

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி