தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
அறுபத்தொன்பதாம் அதிகாரம்.
சுத்த சன்மார்க்கம்.
|
1 |
அந்தர சோதிபுரிக் காம்மார்க்க மேதுலகில் முந்தரு ளூர்தியால் முன்னு. |
681 |
குறள் விளக்கம்
உபவாச உண்மை அறிந்தவர்களே, உலக சமய மத மார்க்கங்களுக்கு அதீதமான சுத்த சன்மார்க்கத்தைத் தெரிந்து கொள்ளுவார்கள். இதில் பற்று வைத்து ஏற்று ஒழுகிப் பெரும் பயனும் பெறுவார்கள். ஆதலின் இந்த அதிகாரம் ஈண்டு இடம் பெற்றுள்ளது.
இவ்வுலகில் உள்ள ஓர் ஊருக்குச் சென்றடையப் பல்வேறு வழிகளை அமைத்துக் கொள்ளலாம். ஆனால், வான் கண்ணுள்ள ஞாயிறு போன்ற அதிக சூடும், மிக்க ஒளியும் உள்ள உலகத்திற்குச் சென்றடையவும் அங்கு தங்கி வாழவும், இவ்வுலக நெறிகளும், உபாய மார்க்கங்களும் சிறிதும் பயன்படா.
இது போன்றே சமய மத மார்க்கங்களால், தயா பெருஞ்சோதி பதியை அடைவதும் ஆகா. அருட்பெரு நெறியாகிய சுத்த சன்மார்க்கம் ஒன்றினாலேயே ஆகும். இவ் அருளே வானூர்தியாகக் கொண்டு அருட்பெருஞ் ஜோதி பதியை அடைந்து அவ்வொளியுருவாகியே அங்கு வாழலாம்.
மண்கண்ட மருளூர்தியால் மதி மண்டலம் ஏறினும், உடுச் சோதி நிலைக்கேறி உலையா இன்பில் வாழலாமோ ?
அந்தரம் = வானம்.