திண்டுக்கல் மாநகர் பெற்றெடுத்த சான்றோர். திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகள், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியினை அடியொற்றி பல திரு அருட்பாக்களுக்கு உரை விளக்கம் தந்து, சன்மார்க்கக் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றார். அவரது குரு திரு சபாபதி சுவாமிகள், திண்டுக்கல்லில் அவதரித்தவர். அவரிடம் சுவாமி சரவணானந்தா அவர்கள், பலகாலம் சென்று பயின்று, திரு அருட்பா ஊன்றிப் பயின்றதன் மூலம் ஆன்ம விளக்கம் பெற்றார்கள். மேட்டுக்குப்பம் தீஞ்சுவை நீரோடை அருகே திண்டுக்கல் சுவாமிகளுக்கு திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் காட்சி கிடைத்தது. கற்பூர மணம் கமழ்ந்து வந்த அந்தக் காட்சி, அவரது உள்ளத்தில் நிலைத்து விட்டது. திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானுக்கு, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் வழங்கப்பட்டது. அதேபோல், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தருக்கு தயவு என்ற மந்திர வார்த்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வழங்கப்பட்டது. அது முதல் தயா விளக்க மாலை, தயவுக் குறள் தயவுப் பெரு நெறி என்றெல்லாம், பல புத்தகங்களை திண்டுக்கல் சுவாமிகள் இயற்றும் பேறு பெற்றார். சுமார் 7,000 தயவு அடிப்படையிலான பாக்களை அவர் இயற்றினார்.
Write a comment