DAEIOU - தயவு
24.7.2009 ராமநாதபுரம் Dt.ஆற்றாங்கரையில் நடைபெற்ற விழா.
24.7.2009-ராமநாதபுரம் Dt.ஆற்றாங்கரையில் சன்மார்க்க அன்பர்
(லேட்) திரு சோமசுந்தரம் அவர்களின் 48வது நாள் விழா.
ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தாலுகாவில் ஆற்றாங்கரை என்ற ஒரு கிராமம் உள்ளது. பெரும்பாலும், முஸ்லிம் சமுதாயத்தவர்களே இங்கு வசிக்கின்றனர். அவர்களுடன் ஏனைய ஜாதி, சமய, மதத்தைச் சார்ந்தவர்களும் இங்கு ஒற்றுமையாக வசிக்கின்றனர். கடற்கரையினை ஒட்டிய கிராமம் ஆதலாம், மீன் பிடி தொழில்தான் இங்கு பிரதானம்.
இந்த ஊரைச் சேர்ந்தவர் திருமதி காளியம்மாள். இந்த ஊரில் ஒரு முருகன் கோவில் கட்டி, ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடத்தினார். அவரது கணவர் பெயர் திரு சோமசுந்தரம். அவர்களுக்கு ஒரே மகன். திரு சோமசுந்தரம் தனது வாழ்நாளில் பெரும் பகுதியை மலேயா நாட்டில் கழித்தவர். நல்ல பக்திமான்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் ஆற்றாங்கரைக்கு திரும்பி வந்து தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
அவரை திருமதி காளியம்மாள், சைவத்திற்குக் கொண்டு வந்து, பின்னர், வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியிலும் ஈடுபடும் அளவுக்குக் கொண்டு வந்துவிட்டார்.
திருமதி காளியம்மாள்-சோமசுந்தரம் தம்பதிகள், கும்பாபிஷேகம் செய்த முருகன் ஆலயத்திற்கு வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் தலைவர் திரு (லேட்) ஜோதிமுருகன் ஐயா சென்றிருந்த வேளையில்,. அக் கோவிலுக்கு அருகாமையில் இருந்த ஒரு பாழடைந்த கல் மண்டபம் அவர் கண்ணில் தட்டுப்பட்டது.
ஏன் இந்தக் கட்டிடம் பாழடைந்து முட் செடிகளாக மண்டிக் கிடக்கிறது என விசாரித்த போது, அது, ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமான சத்திரம் எனவும், அந்தக் காலத்தில், ரோடு வசதியில்லாத காலங்களில், கடற்கரை ஓரமாக, ராமேஸ்வரத்துக்கு யாத்திரீகர்கள் செல்லும் போது, இந்த மண்டபம், யாத்திரை செல்வோர் தங்கிச் செல்லும் இடமாக இருந்தது எனத் தகவல் அவருக்குக் கிடைத்தது. திருமதி காளியம்மாள் குடும்பத்தினர், அவரிடம், இக் கட்டிடத்தை ராமநாதபுரம் ராஜா அவர்களிடம் கேட்டுப் பெற்றால், இங்கு ஞான சபையாக இதனை பயன்படுத்தலாம் எனச் சொல்லி உள்ளனர்.
அதன் பின், திரு ஜோதிமுருகன் அய்யா அவர்கள், ராமநாதபுரம் ராஜா குடும்பத்தினரை பல முறை கண்டு, அவர்களிடம் இது குறித்துப் பேசி, இறுதியில், அந்த மண்டபத்தை திரு ஜோதி முருகன் அய்யா அவர்களின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.
அதன் பின், அந்தக் கட்டிடத்தின் ரூபத்தையே திரு ஜோதிமுருகன் ஐயா அவர்கள், தன்னுடன் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் ஆர்வலர் ஆகியோருடன் துணையுடன், புனருத்தாரணம் செய்து, அதனை, சத்திய ஞான சபையாக மாற்றினார்.
இதுவரை கிட்டத்தட்ட 4 சுத்த சன்மார்க்க வாழ்வியல் முகாம்கள் அந்தக் கட்டிடத்தில் நடைபெற்றுள்ளன.
திரு சோமசுந்தரம் மற்றும் அவரது மனைவி திருமதி காளியம்மாள் ஆகியோர், திரு ஜோதிமுருகன் அவர்களுடன் சன்மார்க்க சங்கப் பணிகளில் ஈடுபட்டனர். அவ்வப்போது சன்மார்க்க நடவடிக்கைகளுக்கு, தம்மால் ஆன உதவி ஒத்தாசைகளையும் அவர்கள் நல்கி வந்தனர்.
திரு சோமசுந்தரத்துக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர், இதய நோய் (Heart attack) வந்து மிகவும் அவதிப் பட்டுள்ளார். தொடர்ந்து மருந்து உண்டு வந்துள்ளார். அவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் உயிர் அடக்கம் ஆனார்.
அவரது 48வது நாள் நினைவு விழா 24.7.2009 வெள்ளிக்கிழமை, ஆத்தாங்கரை சத்திய ஞான சபைக் கட்டிடத்தில் நடைபெற்றது.
காலையில், வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் தலைவர் திரு ராஜவீர் @ பழனி மற்றும் அவரது துணைவியார் திருமதி ஹரி லக்ஷ்மி ஆகியோர் தலைமையில் திரு அருட்பாவிலிருந்து அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது.
திரு சோமசுந்தரம் அவரது நற்பண்புகளையும், அவர் சுத்த சன்மார்க்க நெறிக்காக, திரு ஜோதிமுருகன் அவர்களுடன் சேர்ந்து உழைத்ததையும் அங்கு வந்திருந்த கீழ்க்கண்ட நபர்கள் மிகவும் சிலாகித்துப் பேசினர். திரு அருட்பா பாடல்கள் இசைக்கப்பட்டன.
  1. திரு ராமச்சந்திரன், தலைமை ஆசிரியர் (ஓய்வு),. புல்லங்குடி
  2. திரு சிவஞானம், அறந்தாங்கி
  3. திரு அருள் ஒளி விநாயகர் ஆலயப் பெரியவர், பெரிய பட்டினம்
  4. மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரை.14
  5. திருமதி குஞ்சம்மாள், மாவட்ட முன்சீப் கோர்ட்டின் முன்னாள் சிரஸ்ததார், ராமநாதபுரம்.
  6. திரு ஆறுமுகம், டிரைவர், ராமநாதபுரம்.
திரு சோமசுந்தரம் அவரது ஆத்மா சாந்தி அடைவதற்கும், அவர்களுக்கு மேம்பட்ட நிலை கிடைப்பதற்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அருள் செய்யவேண்டும் எனவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் நீடு வாழ்ந்து தம்மை மென் மேலும் சன்மார்க்கப் பணிகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அனைவரும் வாழ்த்திப் பேசினர்.
உற்றார் உறவினர், சன்மார்க்க சங்கத்தவர்கள் ஏழை எளியோர் ஆக கிட்டத்தட்ட 500 பேருக்கு அன்னதானப் பெருவிழா நடைபெற்றது.