DAEIOU - தயவு
கூட்ட நடவடிக்கைகள்

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம், பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திரக் கூட்ட நடவடிக்கைகள்
நாள் – 11.5.2008.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டது “தயவு” எனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி என்ற பல உரை நடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள் தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்” கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மாதந் தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவு நூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப் பூச நாளினை ஒட்டி, 11.5.2008ந் தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணி. கொடி வணக்கம்
திரு அருட்பாவில், சிற்சக்தி துதி (கொடி வணக்கம்) 10 பாடல்கள் அன்பர்களால் பாடப்பட்டு, தயவுக் கொடி ஏற்றப் பட்டது. தயவு நூல் அறக்கட்டளை அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்ச்சிக்குப் பின்னர், வந்திருந்த அன்பர்கள் அனைவரும், சத்திய ஞான தீபத்தின் முன் அமர்ந்து, திருவருட்பாவில் (1) திருவடிப் புகழ்ச்சி, (2) அருட்பெருஞ்ஜோதி அகவல் (3) அட்டகம் முதலானவற்றையும், சின்மயபுரம் என்ற சின்னாளப்பட்டி சன்மார்க்க அன்பர்கள் சுவாமி சரவணானந்தா அவர்கள் பெயரால் வழங்கிய குருநாதர் வாழ்த்துப் பாவினையும் பாடினர்.
பின்னர், சன்மார்க்க தியானம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் ராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகத்தில் பணி புரியும் சன்மார்க்க அன்பர் தயவு R. கோபால் அவர்கள் வள்ளல் பெருமான் அருளிய “பேருபதேசத்தை”ப் படித்து, தேவைப்பட்ட அன்பர்களுக்கு விளக்கமும் அளித்தார்.
இதன் பின்னர் திண்டுக்கல் சன்மார்க்க அன்பரும், சுவாமிகளிடம் அணுக்கத் தொண்டராக இருந்த, தயவுத்திரு விஸ்வநாதன் அவர்கள் சன்மார்க்கச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், கடந்த 6.4.2008ந் தேதியன்று தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் இரண்டாவது குரு மகா பூஜை நடைபெற்றது என்றும், இதனை அடுத்து, அடுத்த ஆண்டு 5.4.2009ந் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை அன்று, தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் மூன்றாவது குரு மகா பூஜை நடைபெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவரது உரையின் முக்கிய கருத்துக்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
எங்கும் நிறைந்த அனாதி நித்தியப் பரம்பொருளினை அருட்பெருஞ் ஜோதியாக, வள்ளல் பெருமானார் வெளிப்படுத்தினார்.
வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ஆழமான விதத்தில் தெரிவிக்கும் வகையில், திருவருட்பாவில் முக்கியமான பாக்களுக்கு அருளுரையும், சுமார் 6,000 தயவுப் பாக்களையும் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள் இயற்றி மனித குலத்துக்கு அருந் தொண்டாற்றினார். அவர் தம்மை “தயவு” வடிவமாகவே மாற்றிக் கொண்டு, அக்ஷ்ர பிரம்மமாக உள்ளார். திண்டுக்கல் பொன்னகரத்தில் அமைந்துள்ள இந்த மகா சமாதி ஒவ்வொருவருடைய சிரநடுச் சிற்றம்பலத்திலிருந்து தயா ஒளி விளக்காக விளங்கிக் கொண்டிருக்கிறது.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், - அருள் அனுபவத்தினை வள்ளல் பெருமான் - மூலம் வெளிப்படுத்தினார். தயவு அனுபவத்திற்கு திண்டுக்கல் சுவாமி அவர்கள் சான்றாக விளங்குகிறார். எனினும் ஒன்றேதான் மூன்றுமாக விளங்குகிறது.
திண்டுக்கல்லில் (1) அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயமும் (2) மலையடிவாரம் சன்மார்க்க சங்கமும் (3) பொன்னகரத்தில், பொன்னம்பலமாகவும் விளங்குகின்றது. இவற்றின் செயல்பாடுகள், திரிதேக சித்தியை விளக்கும் வகையில், ஒவ்வொருவரது - இல்லத்திலும் - உள்ளத்திலும் தயவு ஒளியினை, சிரநடு சிற்றம்பலத்தில் ஏற்றப்பட்டு, விளங்கி வருகிறது. சமீப காலத்தில், இளைஞர்கள் பலர் தம்மையும், தமது குடும்பத்தினர்கள் அனைவரையும், இந்த இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டு பெருமை சேர்க்கின்றனர். அதன் மூலம் சுத்த சன்மார்க்க நெறியினை நன்கு தெரிந்து கொண்டு, தமது வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.
சிற்சபை அனுபவத்தில் (1) திண்டுக்கல் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயம் வெள்ளி விழா கொண்டாடும் தருணத்தை சமீபித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் திண்டுக்கல், மலையடிவாரம் சங்கம், பொன்விழாவினைக் கொண்டாடியுள்ளது. இது பொற்சபை அனுபவமாகக் காணக் கிடைக்கிறது. வள்ளல் பெருமான், இதன் நடுவிலிருந்து கொண்டு, தாமே. இந்த சித்து விளையாட்டுக்களை நடத்துகிறேன் என்ற விதத்தில், பிரணவ நிலையில், பல் நிலையில் இருந்து செயல்படுத்திக் கொண்டுள்ளார்.
இதனையே திரு அருட்பாவில் - வள்ளல் பெருமான், சிற்சபையும் பொற்சபையும் சொந்தமெனதாச்சு என்று பாடி வைத்த பாடல் வரிகளால் நாம் உணரலாம்.
அருட்பெருஞ்ஜோதியினை மூன்று சீராகப் பிரித்தோமென்றால் அருள் (த) பெரும் (ய) ஜோதி (வு) என – தயவு – ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனையே வேறு விதமாக உணர்ந்தோமானால், த – கடவுள், ய – மனிதன், வு – உலகம் ஆக விளங்கிக் கொண்டுள்ளது. தயவே எல்லாமாகிய பேராற்றலாகவும் உள்ளது. தயவைக் கொண்டு அருளின் முழுமையைப் பெற்று. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை நிறைவாக, நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிய வைத்துக் கொண்டு உலகியல் காரியப்பாடுகளைச் செயல்படுத்தி வர வேண்டும்.
மற்றும் தயவு என்ற ஒரே சொல்தான் இறைவனின் வடிவமாகவும், இறைத் தன்மையாகவும், - இரண்டாக உள்ளது. அதே சமயம், சர்க்கரையும் இனிப்பும் போல பிரிக்க முடியாத - ஒன்றாகவும் உள்ளது. மற்றும் இறைவனின் செயல்பாடுகள் அகம், புறம் எங்கும் வெளிப்படுவது போல் அகத்தில் “தய” ஆகவும், புறத்தில் “வு” ஆகவும் செயல்பட்டு, இரண்டையும் இணைக்கும்போது அனகமாக தயவு எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
திரிதேக சித்தி உண்மைகளும் ஒன்றான ஆண்டவரின் இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் என்ற மூன்று செயல்களும், த – ய – வு ஆகவும், அம்+பல்+அம் = அம்பலம் ஆகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
நாம் அனைவரும் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்கின்றோம். அதனையே அருட்பெருஞ் ஜோதியாக எண்ண வேண்டும். சன்மார்க்க அன்பர்கள். தயாநிதி சரவணானந்த சுவாமிகள் அருளிய – தயாவிளக்க மாலையினையும், அருட்பெருஞ்ஜோதி அகவலுடன் சேர்த்துப் படிக்க வேண்டும். சன்மார்க்க அன்பர்கள். சத் சங்கம் நடத்தி, தமக்குள் இருக்கும் சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு, அருள் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்த மாதப் பூசம் 8.6.2008 அன்று நடைபெறும். வள்ளல் பெருமானின், சுத்த சன்மார்க்கக் கொள்கைகள், தயவுப் பெருநெறியுடன் - இணைந்து, திண்டுக்கல்லிலிருந்து, தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் அருளால், அகில உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. திண்டுக்கல் தயவு அன்பர் திரு செந்தில் மருதையப்பன் மற்றும் சிங்கப்பூரில் உள்ள தயவு அன்பர் திரு சிவக்குமார் ஆகியோரின் சீரிய முயற்சியால் அகில உலகத்தையும் ஒரு சன்மார்க்கக் குடையின் கீழ் கொண்டு வரும் சன்மார்க்கத் தொண்டின் அடிப்படையில், வள்ளல் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளுடன். திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவுப் பாடல்களும், தயா விளக்க மாலைப் பாடல்களும் www.vallalarspace.com என்ற இணைய தளத்தில் இடம் பெற்று, சன்மார்க்கக் கருத்துக்கள், உலகளாவிய அளவில் பரவிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வள்ளல் பெருமானின் அருளும்,. திண்டுக்கல் தயாநிதி சரவணானந்த சுவாமிகளின் அருளும் பல்கிப் பெருக வேண்டும். சன்மார்க்க உலகம் இவர்களுக்கும் இவர்களைச் சார்ந்து, இணைய தள வேலைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள சென்னை - தயவு அன்பர் திரு சதீஷ் குமார் ஆகியோருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல்லைச் சேர்ந்த தயவு அன்பர், திரு K.R. கார்த்தி (Approved Guide, Directorate of Tourism, Govt. of Tamil Nadu) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். சுத்த சன்மார்க்கத்தில் முழுமையான ஈடுபாடு உள்ள அன்பரான இவர், சுவாமிகளின் தயவுக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். தொடர்ந்து, சன்மார்க்கப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். பொன்னகரத்தில் உள்ள தயவு ஆலயத்தில் நடைபெற்ற சத்விசார நிகழ்ச்சியில் இந்த அன்பர் கலந்து கொண்டார்.
அதன் பின்னர். அகில உலக க்ஷேமத்திற்காக, தயவுப் பிரார்த்தனை அனைத்து அன்பர்களாலும் மேற்கொள்ளப்பட்டது.
சின்னாளப்பட்டி, தயவு அன்பர் டாக்டர் திரு பி.வி. ஷண்முகம், சுவாமிகளின் தயவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுவாமிகளின் காலத்திலும் சரி, தற்போதும் சரி, தயவு விளக்கங்களை எளிமையான முறையில், அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் விதத்தில், புத்தக வடிவில் வெளியிட்டு. கலந்து கொண்ட - அனைத்து அன்பர்களுக்கும் இலவசமாக அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், வள்ளல் பெருமானால் இயற்றப்பட்ட “விண்ணப்பம்” அவரால் வாசிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி நிறைவுற்றவுடன், கோயம்புத்தூர் ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் தயவு அன்பர், திரு V.S. ராம்தாஸ் அவர்களின் குடும்பத்தினராலும், மற்றும் திண்டுக்கல் தயவு அன்பர் டாக்டர் மகாலக்ஷ்மி அவர்களின் குடும்பத்தினராலும் பசியாற்றும் அன்னதான உபயம் நிறைவேற்றப் பட்டது.
இறுதியில் அனைவருக்கும் நன்றி கூற, கூட்டம் இனிதே முடிவடைந்தது.