
203. வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
204. ஐயறி வளித்த அருட்பெருஞ்ஜோதி
( உரைவிளக்கம்) இங்கு ஐயறிவு என்பது ஐந்தாகிய பொறி புலன் உணர்வு அல்ல. அந்த ஐயறிவு இயல்பாகவே விலங்கினங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது யாவரும் அறிந்ததே. அவ்வையறிவு மாக்களினும் சிறந்த உயிரினம் இந்த மக்களினமாம். இவர்களுக்கு ஐயறிவோடு ஆறாவதாக மனோபகுத்தறிவும் நியதிப்படி வழங்கப்பட்டுள்ளதும் இயல்பே. ஆகையால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம் வள்ளலார்க்கு அளித்துள்ள ஐயறிவு ஐம்புலன் உணர்வு அல்ல என்பது திண்ணம். எனவே, ஐயறிவு என்பதற்குரிய மெய்ப்பொருள் சிறந்த ஒன்றாக இருக்கவேண்டும் என அறியலாகும். ஐ என்ற ஓரெழுத்து ஒரு மொழி ஒப்பற்ற தனித்தலைமைக் கடவுளையே சுட்டவந்ததாய்க் கொள்ளலாகின்றாது. ஆகவே, உண்மைக் கடவுள் ஞானம் சாதாரணமான ஒன்றல்ல. சுத்த அருள் வண்ணமானது என்பதைக் குறிக்கவே, அருல் ஐயறிவு என்று குறிக்கப்பட்டுள்ளதாம்.
அருட்பெருஞ்ஜோதி வழங்கியுள்ள அருள் ஐயறிவு எவ்வளவு சி
றப்புடையது தெரியுமா? வையமும் வானமும் வாழ்த்துகின்ற பெருஞ்சிறப்புடையதாம். மண்ணும் விண்ணும் நம் வள்ளலை வாழ்த்துகின்றனவாகக் கூறுவது வெற்று உபசாரவாய்ச் சொல்லன்று. சத்திய வாசகமேயாகும். அப்படி இல்லாமலா திருவருட்பாவில், , சித்தர்களும் முத்தர்களும், தேவர்களும், மூவர்களும் தன்னைப்பற்றிப் பேசுவதாகவும், “ இன்னமுதம் அருத்தி ஏனை ஏழுலகம் போற்ற “ எனவும் உலகமெலாம்தான் பெற்ற அருட்பேற்றினைக் கண்டு அதிசயிப்பதாகவும் கூறி யுள்ளார். இவை யாவும் உண்மை ! உண்மை! அருளறிவால் ஆய்ந்து காணில் இந்த உண்மை நன்கு தெளிவாகும். அருட்பெருஞ்ஜோதி மெய்ஞ்ஞானத்தால், தன்னை அதுவாகவே கண்டு அகநின்ற அனகமாக ஒளிர்கின்றார் நம் வள்ளற்பெருமான் . இந்த ஒன்றாகிய் அருட்பெருஞ்ஜோதிபதிமயமாய்த் தானே எங்கணும் எவருமாய் இருக்கின்றதால், எந்தக் கட்வுளையோ, தெய்வத்தையோ, மற்று எவரையோ எங்கெங்கிருந்து யார் யார் வாழ்த்தினும் கூட இவரையே வாழ்த்துவதாகக் கொள்ளுவதில் உண்மை இருக்கின்றதாய் அறிகின்றோம். நம் பெருமான் ஆணவ அகங்காரம் முற்றும் நீத்த , தன்னைக் காட்டிக் கொள்ளாத, பெருங்குணம் படைத்தவரிவர். அப்படியிருக்க, இவர் இங்கு, வையமும் வானமும் தன்னை வாழ்த்திட வைத்துள்ள அருட்பெருஞ்ஜோதியை அல்லவா வாழ்த்துகின்றார் இந்த ஈரடிகளில் இவர் தன்னை வாழ்த்தும்படியோ, வணங்கும்படியோ, போற்றும்படியோ எவரையும் எக்காலத்தும் கேட்டுக்கொள்ளவேயில்லை, மாறாக இவர் தன்னை தெய்வ மாமக் கருதி சுர்றிக்கொண்டிருக்கும் உலகியல் அன்பர்களைக் கண்டு , “ இவர்கள் உண்மையை யுள்ளபடி தெரிந்து கொள்ளாதலால், அல்லவா, இப்படிப் போர்ரிச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர், என்று பரிதாபப்படுக்கின்றார்.
“ சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் நுமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடுங்கேட்பீர்
என்மார்க்கத் தெனைனுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாஞ்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர் போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்னானை என்னானை சார்ந்தறிமின் ஈண்டே”
என்றதால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் துதித்தலே யாவருக்கும் உரியதாம். கடவுளை வாழ்த்துகின்றதாலே அவருக்கு அனன்னியமாய் இருக்கும் நாமே அவ்வாழ்த்தும் வாழ்வும் பெறுகின்றோம் என்பது சத்தியம்.
தயாநிதி சரவணானந்தா
அகவல் உரைவிளக்கம்…..