Vallalar Universal Mission Trust   ramnad......
82.நீ அது ஆயினை


163. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயத்

164. ஆயினை என்றருள் அருட்பெருஞ்ஜோதி

( உரைவிளக்கம்) கடவுள் அனுபசித்தி அடையும் வழிமுறை இதிற் கூறப்படுகின்றது. முதலில் சத்விசாரத்தால் கடவுள் உண்மையை உள்ளபடி அறியவேண்டும். அதாவது அக் கடவுள் உண்மை, எப்படி எங்கு விளங்குகின்றது என்பதை விசாரித்து அது நம் உள் விளங்குதலை அறிந்து கொள்ளல் முதற்படியாம். அடுத்து, அம்மெய்ப்பொருளை இடையறாது நினைந்து நினைந்து, முடிவில் நம்மை மறந்து அதில் கலந்து நிற்றல் இரண்டாம் நிலையாம். பின்பு அதுவே நாமாகி விளங்குநிலையே மூன்றாவதாகிய முடிந்தநிலையாம். முடிந்த குறிக்கோள் கடவுள் நிலைபெற்றுத் திகழ்வதேயாம். ஆதலின் இங்கு அந்நிலை பேற்றைக் குறிக்கவந்த நீ அது ஆயினை” என்றதையே தலைப்பாகக் கொடுக்கப்பட்டது.

இவ்விரண்டடிகளை இப்படி முறைப்படுத்திக் கொள்ளலாம். மெய்ப்பொருள் மேயினை, விளங்கினை ( நீயது) ஆயினை” என்று அருட்பெருஞ்ஜோதி உரைத்தது எனக் கொண்டு நோக்கலாம். மேயினை மேவினை என்பது விசாரித்துச் சென்று அடைதலாகும். இவ்விசாரணையால் , நாமும் கடவுளுமான ஆன்மாவைச் சிரநடு சிற்றம்பலத்தில் விளங்குவதாக அறிந்து, சிற்சபாத்துவாரமாகிய புருவநடு அடைந்து, நெற்றிக்கண் திறக்கப்பெற்று , அருள் ஒளி கண்டு நிற்றலாம். இவ்வளவும் மேவுதல் என்பதற்குப் பொருளாம். இப்படிப் புருவத்திடை நின்று, உள்ளொளியை நினைந்து நினைந்து நினைந்த நினப்பற்று அந்த உள்ளொளியோடு நாமும் கலந்து நிற்கும் நிலையே உண்மையில் நாம் விளங்கும் நிலையாம். இப்போது சிற்சபையில் விளங்கிக்கொண்டிருக்கின்றது. கடவுளாகவும் உள்ளது.அதுவே நாமாகவும் இருக்கின்றோம். அகத்தில் நாம் அதுவாக விளங்கிக்கொண்டிருக்கின்றோம். எனினும், புறத்தில் உடற்பற்று காரணமாக இன்ப துன்பத்தில் உழன்று கொண்டு உலகில் பிழைத்துக்கொண்டும் இருக்கின்றோம். இந்நிலை கட்ந்து அந்நிலை வாழ்வு சேர்தல் வேண்டும். இக்கரை கடந்திடில் அக்கரையே, இருப்பது சிதம்பரசக்கரையே ‘’ என்பது வள்ளலார் அனுபவம். அகங்கண்ட கடவுட் ஜோதியே நாமாகி அங்ஙனமிருந்து அருள்வாழ்வு வாழ வேண்டும். அப்போதுதான் நாம் அது ஆனதாகக் கொள்ள முடியும்

நம் அடிகளார் இப்படித்தான் அம் மெய்ப்பொருளை , மேவி விளங்கிநின்று, அதுவே தானானார். இப்படி ஆயினதாக யார் சொல்கிறார்கள் என்றால் , வேறு யாருமில்லை, அந்த அருட்பெருஞ்ஜோதியே தான் அருள்கின்றது. ஆம் அந்த அருட்பெருஞ்ஜோதியே, இப்படி மேயினை, மெய்ப்பொருள் விளங்கினை, நீயது ஆயினை, என்று அருள்கின்றதே இங்குக் குறிக்கப்பட்டுள்ளதாம்.

நீயது ஆயினை” என்பது அக அருள் அனுபவத்தில்தான் விளங்கும் உண்மையாகும். அது சுத்த சத் விசார சாதனை முற்றிசாத்திய முற்ற நிலையாகும். இம்முறையல்லாது, வேதநெறி பயில்வோர், தத்துவமசி” அது நீயாய் இருக்கிறாய் என்று பிறர்க்கு உபதேசிக்கின்றனர். அது நாமாய் இருப்பது இயற்கையுண்மையே, எனினும் அனுபவம் அல்ல, நாம் அதுவாக ஆகி விளங்குதல் வேண்டும். இம்முறை துவம்தத்சி” என்பர். நீ அதுவாம் அனுப்வம் உணர்த்த வந்தது இது. இது தேகப்ற்று கடந்து, அம்பலமுற்று , அருள்நிலை நின்று அனுபவத்தில் பெறும்போதுதான் நீயது ஆக” இருக்கின்ற உண்மை வாழ்வில் விளங்கும். இதனால் அருட்பெருஞ்ஜோதியின் அருள் பெற்று அதுவாகி வாழ வழிகாட்டுவது இவ்வடிகள் என்பது உண்மையாம்.

தயாநிதி சரவணானந்தா

அகவல் உரைவிளக்கம்.

vallalarspace.com/vumt