கல்பட்டு சுவாமிகளை ஆட்கொள்ளல்
தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூர் வட்டத்தில் திருக்கோவலூரிலிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் திருநறுங்குன்றம் என்றோர் ஊர் உள்ளது. அங்கு சிறு குன்று ஒன்றுண்டு. அம்மலையில் இராமலிங்கம் என்றொரு சுவாமிகள் இருந்தார். இவர் கல்பட்டு இராமலிங்க சுவாமிகள் என்று வழங்கப்படுவர். தம்மைக் குருநாதனே வலிந்து வந்து ஆட்கொள்ள வேண்டும் என்றிருந்த இவரை நமது அடிகள் திருநறுங்குன்றத்திற்குப் போய் ஆட்கொண்டு தம்முடன் கருங்குழிக்கு அழைத்து வந்தார்கள். அட்சய ஆண்டு ஆடித்திங்கள் பத்தொன்பதாம் நாள் (2-08-1866) திருநறுங்குன்றம் இராமசாமி நயினார்க்கு வரைந்த திருமுகமொன்றில் கல்பட்டு சுவாமிகள் திரு நறுங்குன்றம் வந்திருப்பதைக் குறித்து அடிகள் உசாவுகின்றனர். இதனால் கல்பட்டு சுவாமிகளை அடிகள் ஆட்கொண்டது 1866-க்கு முன்னரே என்பது பெறப்படுகிறது. இக் கடிதத்தில் கல்பட்டு சுவாமிகளை அடிகள் சிவஞானவிருப்பினராகிய ராமலிங்க மூர்த்திகள் என்றும் தமது ராமலிங்க மூர்த்திகள் என்றும் குறிக்கின்றனர்.வடலூரில் சிறப்பான உபதேசங்களைச் சன்மார்க்க அன்பர்களுக்கு அருளுங் காலத்தில் அடிகள் இவரையும் அழைப்பதுண்டாம். ‘ சத்திய தருமச்சாலையில் பிரசங்கஞ் செய்கின்ற காலங்களில் கல்பட்டு ஐயாவுக்குப் பயன்படக்கூடிய விஷயம் நடக்கிறா சந்தர்ப்பங்களில் அவரைப் பிரசங்கத்திற்கு அழைப்பிப்பர். எனச் ச.மு.க பதிப்பு சரித்திரக் குறிப்புகளுட் கூறப்படுகிறது. அடிகளின் பிரசங்கங்களில் இவருக்குப் பயன்படக் கூடாத விஷயங்களும் இருக்கும் போலும். கல்பட்டு சுவாமிகளின் சமாதி தருமச் சாலைக்குக் கிழக்கே உள்ளது. இவரது முன் பின் வரலாறு முதலியன தெளிவாகத் தெரியவில்லை.
இராமலிங்க அடிகள் வரலாறு
தவத்திரு ஊரன் அடிகள்.
வள்ளலார் சுவாமிகள் அங்கேயே போய் ஆட்கொண்டுள்ளாரே ...