Vallalar Universal Mission Trust   ramnad......
ஒளி உடல்

ஒளி உடல்

வள்ளல் பெருமானார் தம் திருமேனியைப் படமாக்கவோ, சிலையாக்கவோ அடிகள் யாரையும் அனுமதிப்பதிக்கவில்லை. அன்பர்கள் சிலர் கூடி , அடிகளாரைப் புகைப்படம் எடுக்க முயன்றனர். என்ன வியப்பு! எட்டு முறை முயன்றும் அவரது திருமேனியைபடமாக்க முடியவில்லையாம் இதனை அடிகளார் செய்த சித்தென்பதா? அவரது பொன் மேனியின் புதுமையென்பதா? பண்ணுருட்டியிலுள்ள மட்பதுமைத் தொழிலாளியொருவர், அடிகளார் பால் வைத்த பக்தியால், அவர் போன்று ஓர் உருவம் அமைத்து , அதற்கு பல வகையான நிறங்கள் தந்து அழகுபடுத்தி, அவரிடமே காட்டினார் பாவம்! அடிகளாரின் பாராட்டுதலை எதிர்பார்த்தார் தொழிலாளி, அவரோ, அதனைத் தம் கையால் வாங்கி, பொன்னான மேனி மண்ணானதே! என்று கூறிக் கொண்டே கைநழுவ விட்டுவிட்டார், மண்மேனி உடைந்தது!.

வீண் ஆடம்பர வாழ்க்கை நடத்த வேண்டாவென்று இல்லறத்தார்க்குப் போதித்து வந்தார், அடிகளார், மக்களிடமுள்ள நகைப் பைத்தியத்தைக் கேலி செய்து அடிகளார் தெரிவித்த கருத்து வருமாறு:

காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வரவிடுத்தவர் _ ஆணுக்கு கடுக்கனிடுதலும், பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா? என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பஷ்த்தில் காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா……

தெய்வத்திடம் உண்மையாகவே பக்தி கொண்டோர், தம்மை அணிகலன்களால் அழகு செய்து கொள்வதை ஒரு குற்றமாகவே கருதவர். எளிய வாழ்க்கையே இறைவழிபாடு.

தெய்வம் தெளிமின்’ என்றுரைத்த இளங்கோவடிகள். தெளிந்தோர்ப் பேணுமின்’ என்றும் கூறினார். இராமலிங்கர் , தெய்வம் தெளிந்த மெய்ஞ்ஞானியரைத் தேடியலைந்தார், அத்தகையோர்க்கு தொண்டு செய்விழைந்தார் இதனை,

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

தம்முயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என

சிந்தைமிக விழைந்த தாலோ!

என்று அவர் பாடியதால் அறிகிறோம். இந்தப் பாடலிலே, சாதி சமயம் ., இன்ன பிற வேற்றுமைகள் பாராட்டாதவராய்த் தம்முயிர்போலப் பிற உயிர்களையும் கருதி அன்பு செலுத்துபவராய், உதட்டளவில்லாமல் உள்ளத்தால் ஒருமைப்பாட்டினை விரும்புகின்றவராய் உள்ள உத்தமர் எவரோ, அவருடைய திருவுள்ளமே இறைவன் நடம்புரியும் இடம் என்றும் அத்தகைய வித்தகச் சித்தர்களுக்குத் தொண்டு புரியத் தம் உள்ளம் விரும்புவதாகவும் கூறுகின்றார்.

vallalarspace.com/vumt