விடு நீறே
(தி.ம.இராமலிங்கம்)
கலி விருத்தம்
அருட் பெருஞ்ஜோதி அருள் செய்கையில்
குருவருள் எல்லாம் கூடி வருகையில்
மருள்நெறி எல்லாம் மருண் டோடுகையில்
திருநெறி மார்க்கத்தில் தீதாம் விடுநீறே. 1
சுத்த சன்மார்க்கம் சுகந் தருகையில்
நித்தம் நினைக்கும் நெஞ்சம் வருகையில்
சித்த மார்க்கமெலாம் சுருண்டோ டுகையில்
பித்த னெனப்படும் பதரை விடுநீறே. 2
ஞான சபையுள் ஞானம் வருகையில்
வானத்தின் மீதுமயில் வந்தா டுகையில்
கான மதமெல்லாம் குதித்தோ டுகையில்
ஈன சாம்பலை இகழ்ந்து விடுநீறே. 3
வடலூர் பூசம் வந்து பார்க்கையில்
மட மாதர் மயக்கம் தீர்கையில்
இடர் உலக இச்சை விடுகையில்
சுடலை மறக்க சினந்து விடுநீறே. 4
எமபயம் கடந்து எல்லாந் தானாகையில்
நமசிவாய மந்திர நிலை கடக்கையில்
சமயமத வழக்கெலாம் சட மாகையில்
கமலம் மலர்ந்து கூடவே விடுநீறே. 5
ஜீவ காருண்யம் ஜீவனில் இருக்கையில்
ஈவதெனும் மூன்றும் அவனுக்கு அளிக்கையில்
பாவமெனும் மரணம் படுகுழி வீழ்கையில்
சாவதெனும் பழி சாராது விடுநீறே. 6
சாகாக் கல்வியைசுத்த சன்மார்க்கம் அளிக்கையில்
வேகாக்காலை சன்மார்க்க விவேகம் தருகையில்
போகாப்புனலை சன்மார்க்க போகம் விழைகையில்
ஏகாதிபதி அப்பனை இசைந்து விடுநீறே. 7
எல்லா உயிரும் இன்புற்று இருக்கையில்
நல்லான் நடுவில் நெற்றிக்கண் திறக்கையில்
வல்லான் பூட்டை வள்ளல் திறக்கையில்
பொல்லான் பூசும் பூதியாம் விடுநீறே. 8
மாட விளக்கு மாண்புற எரிகையில்
நாட அதனையே நடனம் காணுகையில்
வேடம் போடும் வித்தை மறைகையில்
கூட வருவாரவர் கூடவே விடுநீறே. 9
பொது மார்க்கம் பாரினில் பரவுகையில்
இதுஅது எனஉரைப்பது அரிதா கையில்
மது மயக்கமாம் மதம் ஒழிகையில்
சது மறைகளும் சாய்ந்திட விடுநீறே. 10