சன்மார்கத்தில் சிற்சபை அனுபவம் முதலில் வருமா அல்லது பொற்சபை அனுபவம்
முதலில் வருமா?
நமது வள்ளல் பெருமானாரின் திரு அருட்பாவைக் கொண்டே இந்தக் கருத்தை
ஆய்வு செய்வோம்.
சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம்பிடி சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி
பொற்சபை புகுந்தோம் என்று சின்னம்பிடி புந்தி மகிழ்கின்றோம் என்று சின்னம்பிடி
(பாடல் எண் 2233 பக்கம் 427 ஆறாம் திருமுறை தெய்வ நிலைய வெளிஈடு வடலூர்)
இதன்படி சிற்சபை தான் முதலில் பொற்சபை பிறகே.
௨. சுத்தசிவ சன்மார்க்க நீதி ஜோதி போற்றியே
சுக வாழ்வளித்த சிற்றம்பலத்து ஜோதி போற்றியே
சுத்த சுடர் பொற்சபையில் ஆடும் ஜோதி போற்றியே
ஜோதி முழுதும் விளங்க விளங்கும் ஜோதி போற்றியே
(பாடல் எண் 1850 பக்கம் 378 ஆறாம் திருமுறை வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
இதிலும் முதலில் சிற்றம்பலத்து ஜோதி பிறகுதான் பொற்சபையில் ஆடும் ஜோதி)
இதன் அடியில் குறிக்கப்பட்டுள்ள பாடல்களைப் பாருங்கள்.
சிற்சபைக் கண்ணும் பொற்சபை க்கண்ணும் திரு நடம் புரியும் திரு நடராயா
எனக்கருள் புரிந்த நினக்கு அடியேன் கைம்மாற்றை அறிந்திலன் போற்றி நின் அருளே.(
(பாடல் எண் 1682 பக்கம் 354 ஆறாம் திருமுறை வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
அருட்பெருஞ்சோதி அபயம் அபயம் அருட்பெருஞ்சோதி அபயம்- அருட்பெருஞ்சோதி
அபயம் சிற்சோதி அபயம் பொற்சோதி அபயம் துணை
(பாடல் எண் 1597 பக்கம் 338 ஆறாம் திருமுறை வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
ஈனமெலாம் தீர்ந்தனவே இன்பமெலாம் எய்தினவே ஊனமெலாம் கைவிட்டு ஒழிந்தனவே
ஞானமுளோர் போற்றும் சிற்றம்பலத்தும் பொன்னம்பலத்தும் போற்றும்படிப் பெற்றபோது.
பாடல் எண் 1329 பக்கம் 279 ஆறாம் திருமுறை வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனதாச்சு தேவர்களும் மூவர்களும் பேசுவது என்பேச்சு
இச்சமய வாழ்வில் எனக்கென்னை இனி ஏச்சு என் பிறவித் துன்பமெலாம் இன்றோடு போச்சு
(பாடல் எண் 2243 பக்கம் எண் 428 ஆறாம் திருமுறை வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
அனுபவமாலை 54 வது பாடல் பெருன்ஜோதிதான் முதல் அனுபவம் என்றும், பொன்னொளி
அடுத்த அனுபவம் என்றும் இறைஒளியாகிய உள்ளொளி மூன்றாவது என்றும் விளக்குகின்றது.
ஈற்றறியேன் இருந்து இருந்து இங்கு அதிசயிப்பது என் நீ
என்கின்றாய் நீ எனைவிட்டு ஏகு தொறும் நான்தான்
காற்றறியாத் தீபம் போல் இருந்திடும் அத்தருணம்
கண்ட பரிசு என்புகல்வேன் அண்ட பகிரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலை பர நாதத்தே
தோன்றியது ஆங்கதன் நடுவே தோன்றியது ஒன்று அதுதான்
மாற்றறியாப் பொன் ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
வள்ளல் அருள் ஒளியோ ஈது அதிசயிக்கும் வகையே.
பாடல் எண் 2498 அனுபவமாலை பக்கம் எண் 461 ஆறாம் திருமுறை வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
திருக்கதவம் திறவாயோ என்ற பாடலிலும் முதல் பாடலில் திரு
அருளாம் பெருஞ்சோதி திருவுருக் காட்டாயோ என்றும் இரண்டாவது
பாடலில் மாற்றறியாப் பொன்னே நின் வடிவது காட்டாயோ என்றும்
மூன்றாவது பாடலில் திருஅருட் பேரொளியைக் கலந்தே என்றும் வள்ளலார்
பாடியுள்ளார். பெருஞ்சோதியும் பொன் ஒளியும் காட்சி பொருள்களே என்றும்
மூன்றாவதாகிய உள் ஒளியே உடலுடன் கலப்பது என்றும் தெரிகிறது.
ஆறாம் திருமுறை அனுபவ மாலை 12 வது பாடலில் அமுதம் உண்பது
சிற்சபையிலே என்று கூறப்பட்டுள்ளது.
அடியில் உள்ள பாடலைக் கவனியுங்கள்.
சிற்சபையில் அப்பனைக் கண்டுகொண்டேன்,தெள்ளமுதம் உள்ளம் தழைக்க
உண்டேன்,சித்திகள் பெற்றேன், பொற்சபை ஓங்கப் புரிந்து ஆடுதற்குப்
புகுந்தேன் என்கிறார். சிற்சபை அமுதம் உண்டபின்பே பொற்சபை அனுபவம்.
முடிவாக ஆணிப் பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் அற்புதக் காட்சியடி என்ற
கீர்த்தனையில் வரும் பாடல்கள் ;
அம்மையைக் கண்டேன் அவள் அருள் கொண்டேன் அமுதமும் உண்டேனடி
தாங்கும் அவள் அருளாலே நடராஜர் சந்நிதி கண்டேனடி
சந்நிதியில் சென்று நான் பெற்ற பேறு சாமி அறிவாரடி
(பாடல் எண்கள் 2208.2209 2210 ஆறாம் திருமுறை பக்கம் 423 வடலூர் தெய்வ நிலைய வெளியீடு)
சிற்சபையில் பேரொளி கண்டு, அமுதம் உண்டு, பொன்னொளி கண்டு பின்னர்தான்
உள்ளொளியுடன் கலக்கப்பெறவேண்டும் என்பதே வள்ளலார் தரும் அனுபவ நிலைகள்.
எனவே சிர்சபைதான் முதல் அனுபவம் பொற்சபை அதற்கு அடுத்ததே)
நல்லதொரு விளக்கம், சன்மார்க்க அன்பர்கள் யாவரும் இத்தகைய அனுபவத்தைப் பெற்று உள்ளொளியைத் தரிசனம் செய்வதற்கு இப்பாடல்கள் அனைத்தும் சிறந்த உதாரணங்கள்.
நன்றி
குமரேசன்