இந்தப் பிறப்பிலே யாராலும் மரணமிலாப் பெருவாழ்வைப் பெறமுடியாது. வள்ளலார்போல் ஞானப் பிறவி எடுத்திருக்கவேண்டும். திருமணம் செய்துகொண்டு சுக்கிலத்தை வீணாக்கிகொண்ட எவராலும் வள்ளலார் அடைந்த நிலையை அடையமுடியாது. இது பெரியவர்கள் பேசுகின்ற மேடைப் பேச்சு ஆகும். இந்த உடம்பு மல உடம்பு. பிணியினால் தாக்கப் படும் உடம்பு. இந்த உடம்பு புழுத்துப் போகும் உடம்பு. இந்த உடம்பால் மரணமிலாப் பெருவாழ்வை அடையவே முடியாது. சன்மார்கத்தில் உள்ளவர்கள் உட்பட எல்லா மக்களின் கருத்து இதுதான். வள்ளலார் கருத்து என்ன? அவருடைய அழியாத பாடலைக் கவனியுங்கள்;
பொத்திய மலப்பிணிப் புழுக் குரம்பைதான்
சித்தியல் சுத்த சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்தியமாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் ஜகத்துள்ளீர்களே( பாடல் எண் 1695 ஆறாம் திருமுறை தெய்வ நிலையங்கள் பதிப்பு)
புனைந்து உரையேன்,பொய் புகலேன் , சத்தியமே சொல்கின்றேன் என்றெல்லாம் கூறியுள்ள வள்ளலார் சொல்லை நாம் ஏற்பதா? அல்லது எந்த முயற்சியும் செய்யாமல் மரணமிலாப் பெரு வாழ்விலேயே நம்பிக்கை இல்லாத வர்கள் சொல்வதை ஏற்பதா?என் வாய் வீண் வார்த்தை சொல்லாது என்ற வள்ளலார் வாக்கை நம்புவதா வீண் பேச்சே பேசுபவர்கள் பேச்சை நம்புவதா? சிந்தியுங்கள். இந்த உடம்பு மல உடம்புதான்,பிணி காணும் உடம்புதான், புழுக்கின்ற உடம்புதான் ஆனால் சுத்த சன்மார்க்கம் இந்த உடம்பில் சேர்ந்தால் சத்தியமாக இந்த உடம்பு நித்திய தேகமாக மாறும் என்கிறார் வள்ளலார். அவர் வாக்கை நம்புவோம்.சுத்த சன்மார்கத்தில் அதி தீவிரமாக ஈடுபடுவோம் இந்த உடம்பை நித்திய தேகமாக மாற்றிக்கொள்வோம் பாடுபடும் உங்களோடு தயவு செய்து என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் நன்றி வந்தனம்