51. சண்முகர் வருகை
( 538 ) வாரும் வாரும்தெய்வ வடிவேல் முருகரே
வள்ளி மணாளரே வாரும்
புள்ளி மயிலோரே வாரும்
( 539 ) சங்கம் ஒலித்தது தாழ்கடல் விம்மிற்று
சண்முக நாதரே வாரும்
உண்மை வினோதரே வாரும்
( 540 ) பொழுது விடிந்தது பொற்கோழி கூவிற்று
பொன்னான வேலரே வாரும்
மின்னார்முந் நூலரே வாரும்
( 541 ) காகம் கரைந்தது காலையும் ஆயிற்று
கண்ணுதல் சேயரே வாரும்
ஒண்ணுதல் நேயரே வாரும்
( 542 ) செங்கதிர் தோன்றிற்றுத் தேவர்கள் சூழ்ந்தனர்
செங்கல்வ ராயரே வாரும்
எங்குரு நாதரே வாரும்
( 543 ) அருணன் உதித்தனன் அன்பர்கள் சூழ்ந்தனர்
ஆறுமுகத் தோரே வாரும்
மாறில்அகத் தோரே வாரும்
( 544 ) சூரியன் தோன்றினன் தொண்டர்கள் சூழ்ந்தனர்
சூரசங் காரரே வாரும்
வீரசிங் காரரே வாரும்
( 545 ) வீணை முரன்றது வேதியர் சூழ்ந்தனர்
வேலாயுதத் தோரே வாரும்
காலாயுதத் தோரே வாரும்
( 546 ) சேவல் ஒலித்தது சின்னம் பிடித்தனர்
தேவர்கள் தேவரே வாரும்
மூவர் முதல்வரே வாரும்
( 547 ) பத்தர்கள் சூழ்ந்தனர் பாடல் பயின்றனர்
பன்னிரு தோளரே வாரும்
பொன்மலர்த் தாளரே வாரும்
( 548 ) மாலை கொணர்ந்தனர் மஞ்சனம் போந்தது
மாமயில் வீரரே வாரும்
தீமையில் தீரரே வாரும்
( 549 ) தொண்டர்கள் நாடினர் தோத்திரம் பாடினர்
சுப்பிர மணியரே வாரும்
வைப்பின் அணியரே வாரும்
Sponsored by VallalarOrg Foundation
Mr. SenthilDas - Playback Singer
Mr.Sathish Varshan - Keyboard
Mr. Natraj - Flute
Mr.Kannan - Elec.Rythem Pad
Mr.Venkatesh - Tabala, Tavil.