இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா இலங்கைப் பயணக் கட்டுரை.
இலங்கை வேம்பிராயில் சத்திய தருமச்சாலை மற்றும் சத்திய ஞான கோட்டம் துவக்க விழா பற்றிய இலங்கைப் பயணக் கட்டுரை.
=0=0=0=0=0=0=
வடலூரை அடுத்த மேட்டுக்குப்பத்தில் திருவானைக் கோவில் அன்பர் திரு ஷண் முகத்துக்குச் சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் இலங்கை வேம்பிராய்க்குக் கொண்டு செல்லப்படவுள்ள திரு நிலைக் கண்ணாடி வழிபாடு, 29.6.2010 அன்று துவங்கி ஒரு மண்டலம் (48 நாட்கள்) நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும், பாண்டிச்சேரி போன்ற இடங்களிலுமிருந்தும், பாரிஸிலிருந்தும் அன்பர்கள் அந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
வந்து கலந்து கொண்டு திரு அருட்பா முற்றோதல் பாடும் அன்பர்கள் தங்கவும், உணவுண்ணவும், திருவானைக் கோவில் வள்ளல் பெருமான் ஒளிநெறி இயக்க அன்பர் திரு ஷண்முகம் தமது வீட்டில் ஏற்பாடு செய்து கொடுத்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல மூத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அங்கு வந்து திரு அருட்பா முற்றோதலின் தமக்கு வாய்ப்பு ஏற்பட்ட நாட்களில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த திரு நிலைக் கண்ணாடியினை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்கு, திரு கேத்தீஸ்வரன், அவரது மனைவியார் திருமதி விஜயலக்ஷ்மி அம்மையார் மகன் தயானந்தன் ஆகியோர் மேட்டுக் குப்பத்திற்கு 13.8.2010 அன்றே வந்து விட்டனர். 14.8.2010 அன்று அதனை பேக்கிங் செய்யும் பணி, துவங்கியது. முழுமையான ஈடுபாட்டுடன் சென்னை அன்பர் திரு லக்ஷ்மணன் அவர்கள், அவருடன் திரு கேசவன் முதலானோர் செய்து முடித்தனர். பின்னர் திருநிலைக்கண்ணாடியானது, வள்ளற் பெருமான் வாழ்ந்த இடங்களான, மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் (சித்தி வளாகம்), வடலூர், ஞான சபை, தருமச்சாலை முதலான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு, திரு அருட்பா வழிபாடு செய்யப்பட்டு, திருச்சிக்கு, கொண்டு செல்லப்பட்டது.
திரு லக்ஷ்மணன், திரு கேத்தீஸ்வரன், மதுரை திரு ராமானுஜம் ஆகியோர் இந்த திருநிலைக்கண்ணாடி திருச்சிக்குக் கொண்டு செல்வதை மேற்பார்த்து, பின்னர், 15.8.2010 அன்று, திருச்சி விமான நிலையம் மூலமாக திரு லக்ஷ்மணன் திரு கேத்தீஸ்வரன் ஆகியோரால், இலங்கையில் உள்ள கொழும்பு விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அதனை அங்கிருந்து டெலிவரி எடுப்பதற்கு இரு நாட்கள் ஆகின.
அன்பர்கள் விமானக் கட்டணம் செலுத்தியவுடன் அவர்களுக்கு குறைந்த விலையில் பயணிக்கும் விமானம் தேர்வு செய்யப்பட்டது. 16.8.2010 மற்றும் 17.8.2010 ஆகிய நாட்களில் அன்பர்கள் இரு பிரிவாக சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கையில் கொழும்பு விமான நிலையம் அடைவதற்கு உரிய முயற்சிகள் சென்னையைச் சேர்ந்த திரு லக்ஷ்மணன் அவர்களால் மேற்கொள்ளப் பட்டது. 16.8.2010 அன்று இலங்கை சென்ற 30 அன்பர்களும், அதனை அடுத்து 17.8.2010 அன்று இலங்கை சென்ற அன்பர்களும், அங்கு சந்தித்துக் கொண்டனர். இதற்கிடையே, 17.8.2010 அன்று, திருநிலைக்கண்ணாடியும் கஸ்டம்ஸ் செக்கிங் முடிந்து, டெலிவரி எடுக்கப்பட்டது.
(தொடரும்)
002
003
004
005
015
014
017
029