Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திரு அருட்பாவில்...திருவடி நிலை (1)..உரை விளக்கம் சுவாமி சரவணானந்தா.
திரு அருட்பா

திருவடி நிலை -.1

=0=0=0=0=0=0=0=0=0=0=0=

உலகுபல் கோடி கோடிகள்
இடங்கொள் உலப்பிலா
அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட்
டத்த அவையெலாம்
புறத்தொரு சார்பில்
விலகுறா அணுவிற் கோடியில்
ஒருகூற்(று) இருந்தன
இருந்தென மிடைந்தே
இலகுபொற் பொதுவின் நடம்புரி
கருணை இணையடிச்
சமுகத்தோர் இடத்தே ..


=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=

(பொருள் விளக்கம்)

சுவாமி சரவணானந்தா.

நமது பேர் உலகம், நாம் வாழ்ந்ச்து வருகின்ற இந்தப் பூமிப் பகுதி மட்டும் அல்ல, நாம் காணுகின்ற சூரியனைச் சுற்றி வருகின்ற கோளங்களில் இப்பூமி ஒரு சிற்றுருண்டையே ஆகும்.

இத்தோடு இன்னும் பல கோளங்கள் சூரிய ஜோதி கோளத்தை வலம் செய்து கொண்டேயுள்ளன. இது போக, நாம் இரவில் காணுகின்ற விண்மீன் ஒவ்வொன்றும், அளவில் சிறிதும் பெருதுமாய் உள்ள நம் சூரியனைப் போன்ற ஜோதிக் கோளமேயாகும்.

இப்படித் தோன்றுகின்ற விண்மணிகள் ஆயிரம் ஆயிரமாக இருக்கின்றன என்றால், நெடுந்தூரம் காரணமாகச் சாதாரண கண்களுக்கும், கருவித் துணை கொண்ட கண்களுக்கும் புலனாகாத ஜோதி மணிகளும், அவை ஒவ்வொன்றினைச் சூழ பல கிரக கோளங்களும் எண்ண அடங்காதவை இருக்கின்றனவாக திருவருளால் இன்று உணர்த்தப்படுகின்றோம்.

ஆகவே, இம்மகா பிரபஞ்சமாகிய பேரண்டப் பெரும் பகுதியில் எத்தனை கோடி உலகங்கள் உள்ளன என்று கணக்கிட்டு நிச்சயித்துக் கூற முடியாதாம்.

இதுபோன்றே பல பெரிய அண்டவான் பகுதிகள் கொண்டு விளங்குவதுதான் அகண்டாண்ட பிரபஞ்சப் பெருவெளியாகும். ஆகையால் முழுப் பிரபஞ்சத்தின் அளவையும், அதன் உலகங்களின் எண்ணிக்கைத் தொகையையும் மனிதனால் எப்படிக் கருதிக் காணக்கூடும் ? ஒருகாலும் கூடாதென்பது தெளிவு.
இவ்வளவு எண்ணத் தொலையாத உலக கோடிகள் எல்லாம் புற வெளியிடத்தே விளங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வளவையும் நம் சிற்சபேசர் தனித் தலைமையோடிருந்து விளங்கச் செய்து கொண்டிருக்கின்றார் எனத் திருவருளால் உணர்த்தப்படுகின்றோம் இது சமயம்.

நமது சிற்சப, சிற்றணுமயமாயுள்ளதே. இதில் திகழுகின்ற பதியோ அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாகராவார். இந்த பதியின் திருவருளைப் பெற்ரு அவரோடு அத்துவிதமாயிருந்தால், அறிவரிய அண்ட கோடிகளின் உண்மையை நன்கு அறியக் கூடும் என்பது நம் வள்ளல் கண்டோதிய அனுபவமாம்.

ஆகவே நம் ஆன்ம சிற்றணுவில், அகண்டாண்ட உண்மை எல்லாம் அடங்கிக் கிடக்கின்றது என்று அறிந்து கொள்ள முடிகின்றதாம். சுத்த சன்மார்க்கப் பக்குவ ஆன்மாக்களின் சமுகத்திலே, கடவுளரின் இணையடிகள் வெளிப்பட்டு விளங்குகின்றனவாம். அங்குதான் சிற்சபை நடமும், பொற்சபை நடமும் கண்டு கொள்ளப்படுகின்றன. அதாவது அந்த ஆன்மாவின் கண் ஊன்றிய திருவடியாக அகவுண்மை பொருந்தியும், தூக்கிய திருவடியாக உலகெலாம் ஆள செயல் விளக்கம் கண்டும் கொள்ளப்படுகின்றனவாம்.

ஆகையால், இந்தச் சன்மார்க்கிகளின் ஆன்மப் பொதுவில்தான் ஆண்டவரின் திருவடிகள் விளங்குகின்றனவாகத் தெளிந்து கொள்ளுகின்றோம். இதுதான் திருவடி நிலை எனப் பேசப்படுவது. இதனையே இந்தப் பதிகத்தில் வள்ளற் பெருமான் நன்கு விரித்துக் கூறியுள்ளார்.

 

20140713_221310.jpg

20140713_221310.jpg

20140712_091618.jpg

20140712_091618.jpg