Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.700.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

எழுபதாம் அதிகாரம்.

சுத்த இன்ப நிலை.

10

தயாபெருஞ் சோதிநிலை சச்சிதா னந்தம்

தியாகவாழ் வேற்றுத் திகழ்.

700


குறள் விளக்கம்.


தயவின் முதிர்ச்சியே தியாக உருக் கொள்வது. ஆன்ம நிலையத்திருந்து இத்தயாவொளி பெருகி அனுபவப்படத் தியாக வாழ்வு ஏற்க வேண்டியுள்ளது. இத்தயா ஒளி அனுபவமே முடிவில் சச்சிதானந்தப் பேரின்ப அனுபவமாக விளங்குவதாம்.


சத்து-சுத்த தேக நிலையையும், சித்து-ஞான தேக நிலையையும், ஆனந்தம்-பிரணவ தேக நிலையையும் உணர்த்துவன. இதுவே தயா பெருஞ்சோதிப் பேரின்ப வடிவம்.


சுத்த தயா சன்மார்க்கத்தின் குறிக்கோளாக உள்ள தயா பெருஞ்சோதிப் பேரின்ப வடிவைப் பெற்று என்றும் வாழ்வதுவே இங்கு சுத்த இன்ப நிலையாக வழங்கப்படுவது.


அகத்தே உள்ள, தயா பெருஞ்சோதி சக்தியே அனக முற்றுத் திகழும்போது, நாம் தியாக வண்ண வடிவொடு சச்சிதானந்தமாய் விளங்குவோம்.


=0=0=0=0=0


மூன்றாம் பிரிவாகிய இன்ப இயல் விளக்கக் குறிப்புடன் நிறைவுற்றது.


தயவுக் குறள் முற்றிற்று.


தயவு.

aruljeyenthi2000
தயவு குறளின் முதல் குறளிலிருந்து இறுதி குறள் வரை சுவாமிகள் சொல்லுவதுதயவு ஒன்றை தான்.வள்ளலாரை மேல் ஏற்றிய சுத்த சன்மார்க்கத்தின் மூலதனமும்,மிக பெரிய ஆன்ம லாபமும் தயவு தான்.தயவு என்பது தான் சுத்த சன்மார்க்கம்.திண்டுக்கல் தயவு பிரகாசர் வெளிபடுத்திய குறள்களில் சுத்த சன்மார்க்கம் ஒளிர்வதில் எந்த குறைவும் இல்லை.இத்தகைய குறள்கள் தயவு குறள்கள் தான்.இதனை அருட்பெருஞ்சோதி ஆண்டவர் இன்று வெளி ஆக்கி உள்ளார்.சன்மார்க்க சொல்லை முதலில் பயன்படுத்திய திருமூலர்,அந்த சன்மார்கத்தை சைவ நெறியில் கைகொண்ட மாணிக்க வாசகர்,அதனை சுத்த நெறியாக கண்ட வள்ளலார் இவர்களை எப்படி மறக்க முடியாதோ அப்படி சுவாமிகள் இன்று உள்ளது உள்ள படி வள்ளலார் சொன்ன உண்மை சுத்த சன்மார்க்க நெறியை தயவாக வெளிப்படுத்தி இருப்பதை மறக்க முடியாது.எல்லாம் ஆண்டவரின் திருவருள் ஆகிய தயவு தான்.வேறு ஒன்றும் இல்லை.
Sunday, February 27, 2011 at 02:04 am by aruljeyenthi2000