Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண்.398

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பதாம் அதிகாரம்.
பரமான்மா.

8.
எண்ணில் பிறப்பும் இறைபரத் தொன்றவே
மண்ணினுட லேற்றோம் மறைந்து.
398

குறள் விளக்கம்.
நாம் நமது உண்மையை அறிந்து கொள்ளாமல் ஆன்மாவாய் உள் மறைந்திருந்து எத்தனை எத்தனையோ பிறவிகள் இவ்வுலகில் எடுத்துள்ளோம். நம் உண்மையை திருவருளால் அறிகின்ற இப்பொழுது, நாம் இதுவரை தாங்கிய மண்ணான பிறவிகளின் காரணமும், குறிக்கோளும் இவை இவையெனக் காண்கின்றோம்.
யாதெனில், பரமான்மாவை அறியவும், அருள் அடையவும். புற உடல் பற்றற்று பரமானந்த வாழ்வு எய்தற்கே என்ற உண்மையைத் தான் இன்று இப்பிறவியில் தெரிந்து கொள்கிறோம். இதனால், இவ்வளவு காலம் பிறந்து பிறந்து உளப்பண்பாடு அடையப் பெற்று, இறை பரத்தோடு ஒன்றப் போகின்றோம் நாம், என்ற உணர்வு தழைத்துள்ளதாம்.