Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் - எண்.283.

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
இருபத்தொன்பதாம் அதிகாரம்.
மனோவுருவகம்.

3.
வெம்மைமுன் முற்றுருகும் வெண்ணையோ மென்மெழுகோ
வெண்பனியோ நெஞ்சம் விளம்பு.
283.

குறள் விளக்கம்.
அபக்குவ மனம், அன்பின்மையால் நெகிழ்ச்சியின்றி கடினமாக இருத்தல் இயற்கை. பக்குவ மனமோ, மெய்ஞ் ஞானத்தால் அல்லது அருள் உணர்வால் நெகிழ்ந்து, கசிந்து உருகுவது அனுபவம்.
இப்பக்குவ மனத் தன்மையைக் கொண்டே இம்மனம் சூட்டின் முன் உருகும் வெண்ணெய், மெழுகு, பனி இவைகளாக உருவகம் செய்யப்பட்டுள்ளதாம்.
ஞானம், இச்சை, கிரியை என்னும் திரிவித சக்தியின் முன், மனம் உருகும்.
1. வெண்ணெய் உருகினால் நல்ல நெய் கிடைக்கும். இதுபோல், உண்மையான ஞான சக்தியினால் மனம் உருகின் நேயம் (அன்பு, அல்லது நெய்) பெறலாகும்.
2. இச்சா சக்தியினால் மனம் உருகின் மாசுடைய கழிவுப் பொருள் சேரும். இது மெழுகுக்கு ஒப்பு கூறப்பட்டது.
3. கிரியா சக்தியாம் தயவுச் செயலினால் மனம் உருகும்போது, பனி மறைப்பு நீங்கி, இருந்த இடம் தெரியாது ஒழிவது போல், தெய்வத்திற்கும் மனிதனுக்கும் இடையிருந்த மாயா படலம் நீங்கி பதியோடு வாழும் உண்மை அனுபவம் விளங்கும்.
இதனால் மனத்தை வெண்ணெய், மெழுகு, பனி இவற்றோடு ஒப்பு நோக்க நேர்ந்ததாம்.