Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-எண். 216.

தயவுக் குறள்

சுவாமி சரவணானந்தா.

இருபத்திரண்டாம் அத்தியாயம்.
அச்சம்

6.
ஆன்மாதான் னித்திய மானதால் அஞ்சலென்றார்
ஊன்மாறி லெங்குறுவா ரோ.
216

குறள் விளக்கம்
ஆன்மாதான் நித்தியமானது. அவ்வான்மாவே நமது உண்மை வடிவம், மித்தை (மாயா தோற்றம்) ஆன தேகாதி பிரபஞ்சத்தில் உண்டாகின்ற மாறுதலும் அழிவும் கண்டு அஞ்சுவது கூடாதென்று கூறுகின்றான் வேதாந்தி.
இந்த உயர் மனித தேக சம்பந்தத்தால் கண்ட அக உண்மை இவ்வுடல் பிரிந்து ஒழிந்தால் உடன் ஒழியும் என்றும், பிரிவற நின்றால்தான் அக அனுபவமும் நிலைக்கும் என்றும் அறிந்தால், இறப்படையக் கூடாதெனவும், இறப்பு வந்தால் தெய்வானுபவ வாழ்வு போய்விடுமே என்ற அச்சமும் உண்டாகும்.
ஆகவே, திருவருளால் வழங்கப் பெற்றுள்ள இத்தேகம் சிதைவுறுவது அஞ்சத்தக்க ஒன்றாகும். இறப்புக்கு அஞ்சி, இறைவன் அருள் ஒளி சேர்ந்து இறப்பை வென்று வாழ்வதே அறிவுடைமை. மற்றபடி அஞ்சாமை அறியாமையே.