Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்-குறள் 191.

தயவுக் குறள்.

சுவாமி சரவணானந்தா.

இருபதாம் அதிகாரம்.

இளிவரல்.

191. உரை விளக்கம்.


1.

எளியாரைத் தூற்றி யிளிவரல் செய்து

ஒளியவித் தின்புறல் ஊறு.

191

குறள் விளக்கம்

அழுகையைப் போல அல்லாது, இவ்விளிவரல் உள்வருந்தச் செய்வதாலும் தயவுக்குத் தடையாதலாலும், இதுவும் நீக்கப்பட வேண்டி இவ்வதிகாரத்தில் விளக்கப்படுகின்றதாம்.

இளிவரல் என்பது பிறரை இகழ்ந்து, இழிவு படுத்தி, பழிப்பு கூறி மகிழ்தலும், பிறரால் அங்ஙனம் பழிக்கப்பட்டு சிறுமையுறுதலும் ஆகிய மன நிலையும் புறத் தாழ்வுமாம்.

செயலும், இயலும், பொருளும் குன்றினவர்களை வசை கூறி இகழ்ந்து, அவர்களின் உளம் வருந்தச் செய்து, ஒளி மங்கச் செய்து அதனால் மகிழ்ந்திருப்போன் ஊறுபடுவான்.

ஊறு என்பது வாழ்வுக்கு உண்டாகும் எல்லா விதமான தடைகள், பிறரை அன்பால் வாழ்விக்காதவர்கள், துன்பிழைப்பவர்கள், தாமே கெட்டு துன்புற்று அழிவர்.