வாகனங்கள் கொடுப்பதாகக் கூறி வள்ளலார் நிறுவனங்களைக் குறி வைத்து நடத்தப்படும் ஏமாற்று வேலைகள்.
=0=0=0=0=0
ஆறு மாதத்துக்கு முன்…ஒரு நாள்.
மதுரையை சேர்ந்த வள்ளலார் நிறுவனம் ஒன்றிற்கு தொலைபேசிப்பு அழைப்பு வந்தது.?
ஹலோ சார்…நான் ஹைதராபாதிலிருந்து சுவாமிநாதன் பேசுறேன்.. டாடா ஸ்டீல் கம்பெனில….எங்க ப்ரொடக்க்ஷன் மேனேஜராக இருந்த திரு குருமூர்த்தி சார் ரிடயர் ஆகறபோது அவர், ஏதாவது ஒரு வள்ளலார் நிறுவனத்துக்கு, தான் சர்வீஸில் இருந்த போது உபயோகப்படுத்திய போர்டு ஐகான் 2008 மாடல் வண்டியைக் கொடுக்கணும்னு விரும்புனாரு. தவிரவும், அவர் ரிடயர் ஆகும்போது, அவருக்கு கம்பெனியிலிருந்து டெம்போ ட்ராவெலர் ஒண்ணும் கொடுத்திருக்காங்க. 12+1 சீட் உள்ளது. ரிடயர் ஆனவர் பெயர் குருமூர்த்தி. அவர் மகள் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக இத்தாலியில் இருக்காரு.
இவரு ரிடயர் ஆகி அங்கே போய்ட்டாரு. என்கிட்ட வள்ளலார் நிறுவனம் கிட்ட இந்த மாதிரி வண்டிகளை ஒப்படைக்கணும்னு பொறுப்பைக் கொடுத்திருக்கிறாரு. நீங்க நல்ல முறையில வள்ளலார் நிறுவனம் நடத்துறீங்க சார்.. இந்த விஷயத்தை அவர் என்கிட்டச் சொல்லி ஏற்கனவே 1 ½ மாதம் ஆச்சு. நான் டிலே பண்ணீட்டேன் சார். உடனே தொகை கட்டுங்க. ப்ரகாஷ் என்பவர் தான் எங்களது ப்ரொடக்க்ஷன் மேனேஜர். அவர் அக்கவுண்ட் சென்னையில் (அக்கவுண்ட் எண்.31033109589) ஸ்டேட் பேங்கில் உள்ளது. உடனே அவருக்கு நீங்கள் அனுப்புங்கள் இரண்டு நாளில் வண்டி வந்துரும் என்றார். அவர் சொன்ன இ.மெயிலை நிறுவனத் தலைவர் சரிபார்த்தபோது, சொன்ன செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இ.மெயில் வந்திருந்தது.
மதுரை மாநகரிலே வள்ளலார் நெறி பரப்பும் நிறுவனங்கள் பல இருந்தாலும், ஒரு வண்டி இருந்தால் நல்லது. தவிரவும், கிராமங்கள் தோறும், வள்ளலாரின் நெறி பரப்புவதற்கு இது போன்று வண்டிகள் கிடைத்தால் அதன் மூலம், சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு என்ற விதத்தில், வள்ளலார் நிறுவனத் தலைவர்., சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஸ்டேட் பேங்க் கணக்கில், தொகையினைச் செலுத்தினார்.
கிட்டத்தட்ட 6 நாட்கள் கழித்தும் எந்த வண்டியும் வந்தபாடில்லை. யார்டிலிருந்து கிளம்பி வந்து விட்டது. பெங்களூரிலிருந்து வர்றதால,…டிலே ஆகுது. என்றவர் அதன் பின்னர் வண்டி திருச்சி வந்துருச்சு சார். ஓரிரு நாட்களில் உங்களுக்கு மதுரையிலேயே வந்து வண்டியை ஒப்படைச்சுருவாங்க..என்றெல்லாம் சொன்னார். அதுவரை அடிக்கடி பேசிக்கொண்டிருந்த சுவாமிநாத ஐயர் என்ற நபர் அதன் பின்னர் தனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார். ஒர் சந்தர்ப்பத்தில் அவர் பேசியபோது, வள்ளலார் சம்பந்தப்பட்ட ஒரு நிறுவனம் நடத்தும் பொறுப்பில், ஏழை எளிய மக்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. உடனே வண்டியை அனுப்புங்க அல்லது கட்டிய பணத்தை அனுப்புங்க என என்று வள்ளலார் நிறுவனத் தலைவர், கடிந்து அவரிடம் பேச.,,அதன்பின் அந்த சுவாமிநாத ஐயர் என்ற ஆள் பேசவே இல்லையாம். ஒரு கட்டத்தில் இது இ.மெயில் மூலம் மேற்கொள்ளப்படும் பிராடு என்பது அவருக்குத் தெரிய ஆரம்பித்தது.
வேறு வழியில்லாத நிலையில், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரிடமும், வள்ளல் பெருமானிடமும், வள்ளலார் நிறுவனத்தை இப்படி செய்வதற்கு துணிந்து விட்டார்களே என்ற கோரிக்கை வைத்து, உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கையினை அவர் வைத்தார்.
மாதங்கள் பல கடந்தன. 12.8.2010 அன்றைய தினமலர் மதுரைப் பதிப்பு நாளிதழில், இ.மெயில் மூலம் மோசடி செய்த மதுரையைச் சேர்ந்த இஞ்சினியர் கைது. ஆசிரமங்களுக்கு வாகனங்கள் வழங்குவதாக, 100 ஆசிரமங்களுக்கு ‘இ.மெயில்’ அனுப்பி 6 லட்சம் ரூபாய் பெற்று செலவு செய்துள்ளார் என்ற தகவலின் பேரில் சென்னை மந்தை வெளியில் உள்ள ரமண கேந்திரம் எனும் ஆசிரமத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி பிரகாஷ் என்னும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரகாஷ் என்ற நபரை அந்த வள்ளலார் நிறுவனம் ஏமாற்றவில்லை. அவர்கள் யார் என்பதே அந் நிறுவனத்துக்குத் தெரியாது. ஆனால் இந்த பிரகாஷ் என்ற நபர் ஆன்மீகம் சார்ந்த 100ஆசிரமங்களுக்கு வாகனங்கள் அனுப்புவதாக இ.மெயில் அனுப்பி அதன் மூலம் மோசடியாக லட்சக் கணக்கில் பணத்தைப் பெற்று கையாடல் செய்த தகவல் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்கும்படி அந்த வள்ளலார் நிறுவனத் தலைவர் காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
ஏனைய நிறுவனங்கள் இது போன்ற நிகழ்வுகளில் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இந்த செய்தி, இந்த இணைய தளத்தில் வெளியிடப்படுகின்றது.