DAEIOU - தயவு
7 திரைகள் / ஜோதி தரிசனம் காண்பித்தல் முதலியன... வள்ளற் பெருமான் காலத்தில் ஞான சபையில் உண்டா ?

சத்திய ஞான சபையில் வழிபாடு.

வடலூருக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு அன்பர் வந்திருந்தார் அவர் பெயர் திரு குணையன். ஒரு சில முறை தாம் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் காண்பதாகத் தெரிவித்தார்.

அவருக்குள் ஒரு கேள்வி பிறந்தது.

வடலூர் சத்திய ஞான சபையில் வள்ளல் பெருமான் காலத்தில் ஏற்பட்ட வழிபாட்டு முறைதான் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். பின் ஏன் அருட்பெருஞ் ஜோதிக்கே ஜோதி (தீபம்) காண்பிக்கின்றனர்.



அதேபோன்று மற்றொரு அன்பர் வெளி நாட்டில் ஒரு நிறுவனம் நடத்துகின்றார். அவர் 2 கேள்விகள் கேட்டிருந்தார்.

1. வள்ளற் பெருமான் காலத்தில் அருட்பெருஞ் ஜோதி அகண்ட தீபத்திற்கு ஜோதி தரிசன வழிபாடு காண்பிக்கப்பட்டதா ?

2. 7 திரைகளும் பெருமான் காலத்திலேயே இருந்தனவா ?

இது குறித்து கீழ்க்காணும் பதில்கள் தெரிவிக்கப்பட்டன.

சத்திய ஞான சபை

உத்தர ஞான சிதம்பரமாகிய வடலூரில் சத்திய தருமச் சாலைக்கு அணித்தாகச் சத்திய ஞான சபை அமைந்துள்ளது. 1871 பிரஜோற்பத்தி ஆண்டு ஆனித் திங்களில் சபை கட்டத் தொடங்கப் பெற்றது. சபை எண்கோண வடிவானது. தெற்கு நோக்கியது. சபையின் முன் மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும் மேற்புறம் சிற்சபையும் உள்ளன. கிழக்கு நோக்கிய வாயிலையுடைய சிற்சபை, தெற்கு நோக்கிய வாயிலையுடைய ஞான சபை, மேற்கு நோக்கிய வாயிலையுடைய பொற்சபை ஆகிய மூன்றும் அய்த எழுத்தைப் போன்றமைந்துள்ளன. பொற்சபையும், சிற்சபையும் சிதம்பரத்தில் முன்னரே உள்ளவை. ;பெருமான் புதிதாகக் கண்டது ஞானசபையே. எண்கோண வடிவான ஞான சபைக்குள் பன்னிருகால் மண்டபம் ஒன்றும் நாற்கால் மண்டபம் ஒன்றும் ஒன்றனுள் ஒன்றாக உல்ளன. நாற்கால் மண்டபத்தில் நடுவே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். அவ்வருட்பெருஞ் ஜோதியை மறைத்துக் கொண்டு ஏழு வெவ்வேறு நிறத் திரைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இத்திரைகள் அருட்பெருஞ் ஜோதி அகவலில் கூறப்படுகின்றன.


சபை கட்டப்பெற்ற காலத்தில் பெருமான் சித்தி வளாகத்திலிருந்தார். பெருமான் தம் கரத்தால் வரைந்தளித்த அமைப்புப் படத்தின்படியே அன்பர்கள் சபையைக் கட்டி முடித்தனர். பெருமானால் வரையப் பெற்ற அப்படம் இரண்டு மூன்று வருடத்திற்கு முன்னும் வடலூரில் காணப்பட்டது. இப்போது காணப்படவில்லை என ச.மு.க. பதிப்பு சரித்திரக் குறிப்பு (1924) கூறுகிறது. 1920-21 வரை அப்படம் வடலூரில் காணப்பட்டதென்பது தெரிகிறது. சபையில் வழிபாடு தொடங்கிய முதல் தைப்பூச விழாவன்றும் பெருமான் வடலூர்க்கு எழுந்தருளவில்லை. சபையைக் கட்டுவது முதல், சபையில் வழிபாடு தொடங்கிய முதற் பூச விழா வரை அனைத்தையும் மேட்டுக் குப்பத்திலிருந்தவாறே அன்பர்களைக் கொண்டு நடத்தச் செய்தனர்.

சபை வழிபாட்டு முறை.



ஞான சபையின் வழிபாட்டு முறை முற்றிலும் புதுமையானது. கோயில் வழிபாட்டு முறைகளின் வேறானது. வழிபாட்டிற்காகக் கூடுவோர் அனைவரும் சபைக்கு வெளியே வாயிற்புறத் தருகில் நின்று மெல்லெனத் துதி செய்தல் வேண்டும். புலாலுண்போராகிய புறவினத்தார் சபைக்குப் புறத்தே நின்று வழிபட வேண்டும். முன் மண்டபத்துள்ளேயும் அவர்கள் புகலாகாது. இதுவே சபைக்குரிய வழிபாடு. இது தவிர வேறு எதுவும் கூடாது சபையினுள் யாரும் புகலாகாது. சபையினுள் உள்ள அகண்டத்திற்குத் திரி முதலிய இடுதற்காகவும் சபையின் உட்புறத்தைச் சுத்தப்படுத்துவதற்காகவும் புலை கொலை நீத்தவராகவும் மூவாசைகளிலும் பற்றில்லாதவராயும் உள்ள யாராவது ஒருவர் வேண்டும்போது சபையினுள் புகலாம். அங்ஙனம் உட்புகுதற்கும் புறத்தே இருந்து வழிபடுதற்கும் சாதி முதலிய வேறுபாடில்லை. மத்தளம் முதலிய இசைக்கருவிகள் சோறு தேங்காய் பழம் முதலிய நைவேத்தியங்கள், தீப தூப முதலிய ஆராதனைகள் திருநீறு முதலிய பிரசாதங்கள் இன்னும் இவ்வகைகளில் சமயக் கோயில்களில் அனுட்டிக்கப்படுபவை யாவும் ஞான சபை வழிபாட்டிற்குப் புறம்பானவையாம்.

(ஆதாரம்...திரு ஊரன் அடிகள் அவர்கள் எழுதிய இராமலிங்க அடிகள் வரலாறு)