மதுரை அருட்பா திரு ரெங்கநாதனின் மகனால் ரயில் விபத்தில் காப்பாற்றப்பட்ட செல்வன் பிரவீன்.
மதுரை மாநகரில் வள்ளலார் விழா என்றால் திரு அருட்பாவினை இசையுடன் பாடுவதற்கு அருட்பா திரு ரெங்கநாதன் ஆஜராகி விடுவார். அன்பர்கள், அவர் பாடும் திரு அருட்பாவினை மிகவும் ரசித்துக் கேட்பது வழக்கம். அவர் நடத்தும் சொற்[பொழிவு, மற்றும் திரு அருட்பா பாடல்களைக் கேட்டே சுத்த சன்மார்க்க நெறிக்கு வந்தவர்கள் அனேகம்.
அவரது மகன் திரு விவேகானந்தன் 34 வயதினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ரயில்வே துறையில், எர்ணாகுளத்தில் வேலை கிடைத்தது. ரயில்வே கேட் கீப்பர் உத்தியோகம். பணியில் சேர்ந்த முதல் நாளில், மதியம் வந்து கொண்டிருந்த ரயில் அருகே பள்ளியிலிருந்து திரும்பும் மாணவர்கள் ரயில்வே லைனன கடக்க முயற்சித்தனர். ரயில் சென்றபின் போகலாம் என்று அவர் சொன்னதைக் கேட்காமல், ரயில்வே லைனைக் கடந்தபோது, எர்ணாகுளத்தைச் சேர்ந்த திரு பிரவீன் என்ற மாணவன், தான் கொண்டு வந்த சைக்கிளுடன் மிக நெருங்கிச் சென்றதை உணர்ந்த விவேகானந்தன், உடனே அவனைக் காப்பாற்றுவதற்கு எத்தனித்த போது, இருவருமே ரயில்வே தண்டவாளத்திற்குள் விழுந்து விட்டனர். சைக்கிள் சிதைந்து விட்டது. இருவரும் ரயில்வே தண்டவாளத்தில் கிடக்கும்போது, இருவருக்கும் மேலே ரயில் ... தட .. தட... என ஓடிக் கொண்டிருந்தது.
சரி, நமக்கு இரண்டு கால்களும் ரயிலில் சிக்கி இருக்கும் என விவேகானந்தன் நினைத்தார். ஆனால் தெய்வாதீனமாக, திரு விவேகானந்தனும், அந்த மாணவன் செல்வன் திரு பிரவீனும் உயிர் தப்பினர். ஆனால், திரு விவேகானந்தனது இடது கை முறிந்து விட்டது. ஆபத்தை உணர்ந்த பக்கத்தில் இருந்த அனைவரும் அவர்களைத் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். திரு விவேகானந்தனது கை முறிவு தற்போது தேறி வருகிறது.
அவரது தகப்பனார் திரு அருட்பா ரெங்கநாதன் அவர்கள், தினந்தோறும் திரு அருட்பாக்களை பாடச் சொல்லி, தம் மக்களையும் பாடச் சொல்வது வழக்கம்.
பிரதி வாரம் தோறும் மதுரையில் அமைந்துள்ள இம்மையில் நன்மை தருவார் கோவிலில் திரு அருட்பா பாடி, அன்பர்களுடன் இறைவனின் புகழை அனைவருக்கும் பரப்பும் தொண்டினை அவர் செய்து வருகின்றார். அவர் ரயில்வே துறையிலிருந்து ஓய்வு பெற்றவர்.
இவ்விதம் ரயில்வேயில் விபத்து ஏற்பட்டு, தமது மகன் காப்பாற்றப்பட்டதும், திரு பிரவீனின் உறவினர்கள் 20 பேர் ஒரு வேனில் மதுரைக்கு வந்து, திரு விவேகானந்தனின் பெற்றோரை நேரில் சந்தித்து, அவரால் தான் தமது மகன் காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்துச் சென்றுள்ளனர்.
மதுரை அருட்பா திரு ரெங்கநாதன், தன் துணைவியாருடன்.
சமீபத்தில் திரு அருட்பா ரெங்கநாதனின் குடும்பத்தாரை எர்ணாகுளத்தில் உள்ள தமது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களும், அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் புகழை திரு அருட்பா ரெங்கநாதனிடமிருந்து கேட்டறிந்தனர்.
முதலில் கேட் கீப்பராக பணியில் சேர்ந்த திரு விவேகானந்தன், தற்போது, மேல் அதிகாரிகள் சிபாரிசின் பேரில் எர்ணாகுளம் ரயில்வே அலுவலகத்திலேயே பணி வழங்கப்
பெற்று அங்கு வசித்து வருகின்றார்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் பெருங்கருணை, அருட்பா திரு ரெங்கநாதனின் மகனைக் காப்பாற்றியது, திரு அருட் செயலே என வியக்காதவர்கள் இல்லை.