அரஹர ஜா..பா ஜா ஜா..ஜீ வோ ஜா..பே ஜீ வோ...மந்திரத்தின் சக்தி.
Ramanujam
posted 30 months ago
13 Jul 2009 05:13:50 GMT 5:13:50 AM
1524 views
அரஹர ஜா..பா ஜா ஜா..ஜீ வோ ஜா..பே ஜீ வோ...மந்திரத்தின் சக்தி.
சிவகங்கையில் மெளன சித்தர் அருள் பீடத்தில்,
அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்மசாலை
துவக்க விழா
நாள் 10.7.2009.(வெள்ளிக் கிழமை)
சிவகங்கையில் பஸ் ஸ்டாண்டின் அருகே அமைந்துள்ள சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பெரிய நாயகி அம்மன் கோயில் நந்தவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக, அருட்பெருஞ்ஜோதி சத்திய தர்ம சாலை, (சாது) திரு விஜய குமார் மற்றும் திரு காளிதாஸ் ஆகியோரால் நடத்தப்பட்டு, ஏழை எளியோருக்கு, உள்ளூர்ப் பிரமுகர்கள், பொதுமக்கள் அளிக்கும் தொகையினைக் கொண்டு ஜீவகாருண்ய ஒழுக்கம் பராமரிக்கப்பட்டு வந்தது.
அந்த இடம் தேவஸ்தானத்துக்கு தேவைப்படுகின்றது என்றதால், வேறு இடத்தில் சத்திய தர்ம சாலையினை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பாதையில் மதுரை முக்கு ஜங்ஷன் என்ற இடத்தில், பல காலமாக ஒரு ஆலயம் பராமரிப்பின்றிக் கிடந்ததை, அன்பர்கள் விஜய குமாரும் காளிதாஸூம் கண்ணுற்றனர்.
அந்த ஆலயத்துக்குப் பாத்தியப்பட்ட குடும்பத்தினர்களை அணுகி, கடந்த 10.7.2009 (வெள்ளிக் கிழமை) அன்று, சத்திய தருமச் சாலையினை துவக்கி, விழா எடுத்தனர்.
காலை 7.00 மணி முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் படிக்கப்பட்டது.சன்மார்க்க அன்பர்கள் திரு ராமலிங்கம், திரு மருது பாண்டியன், திரு ராமானுஜம், வள்ளலார் ஆர்க் பவுண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டீ, ஆகிய, மதுரையிலிருந்து சென்றவர்களுடன்,. அன்பர் திரு காளிதாஸூம் பாடினார். மேலூரில் சன்மார்க்க சங்கத்தை நடத்தும் அன்பரும் வருகை புரிந்திருந்தார்.
சிவகங்கைகு அருகே 3 கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள முத்துப்பட்டி கிராமத்தில் சன்மார்க்க சங்கம் நடத்தும் திரு பிச்சை ஐயா (68 வயது) என்பவரும் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருந்தார். ஆலயத்தின் சொந்தக்காரர்களில், திரு ஷண்முக சுந்தரம் என்பவர் வந்திருந்தார்.
பின்னர், சுமார் 9.00 மணி அளவில், அன்னம் பாலிப்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் ஒலிபெருக்கி மூலம் அழைத்தனர். உணவு உண்பதற்கு வருகை தரும்படி அவர்கள் மைக்கில் கூவிக் கூவி அழைத்தனர்.
அன்றையதினம் சிவகங்கையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டிருந்தது. காரணம், பூச்சொரி திருவிழா அங்கு நடைபெற்றதுதான். எல்லாத் தெருக்களிலும், பூச்சொரி திருவிழாவை ஒட்டி, அன்னதான விசேஷம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மைக் மூலம் தெரிவிக்கப்பட்டதால் ஒன்றிரண்டு பேர் மட்டும் அன்னதானத்தில் பங்கேற்க வருகை தந்தனர்.
அந்த ஆலயத்தில் இருந்த திரு ஷண்முக சுந்தரம் என்பவர் திடீரென்று "அரஹர ஜா..பா ஜா ஜா..ஜீ வோ ஜா..பே ஜீ வோ.." என்று மைக்கில் பலமுறை சொல்ல ஆரம்பித்தார். இது ஒரு மந்திர சக்தி வாய்ந்த சொல் போலும். இந்த மந்திரச் சொல்லை மைக்கின் மூலம் கேட்டவுடன், பல பெரியோர்களும், தாய்மார்களும், குழந்தைகளுடன், மள மள வென்று, அந்த ஆலயம் நோக்கிப் படையெடுத்து வந்தனர். வந்தவர்களுக்கெல்லாம் சுமார் 55 வயதிற்கு மேல்தான் இருக்கும்.
இந்த சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், அவருக்குத் தெரியவில்லை.
அடேயப்பா, இந்த வார்த்தையை 50 ஆண்டுகளுக்கு முன்னர் கேட்டிருக்கின்றோம். அப்போதெல்லாம், நல்லா குளோப் லைட்டெல்லாம் இங்கே போட்டிருக்கும். நாங்க குழந்தைகளாக இருந்தப்போ, அரஹர ஜா..பா ஜா ஜா..ஜீ வோ ஜா..பே ஜீ வோ.." இந்த வார்த்தையை இங்கே கேட்டு, இங்கு வந்து, இங்கே இருந்த சுவாமிகளிடம் பாடம் படித்திருக்கின்றோம். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றுதான் இந்த சொல்லைக் கேட்கின்றோம். என்று பழைய நினைவுகளில் மூழ்கி விட்டனர். அதன் பின்னர் உணவருந்தச் சென்றனர்.
இது குறித்து விசாரித்த போது, இந்த இடத்தில் ஒரு மெளன சுவாமிகள் வசித்து வந்துள்ளார். அவரது இயற்பெயர் குருநாதன் என்றனர். அவர், யாரிடமும் பேச மாட்டாராம். தனது எண்ணங்களை எழுத்து மூலம் தான் அவர் தெரிவிப்பாராம். தினசரி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து பொது மக்கள் தரும் அரிசி முதலியவற்றைக் கொண்டு, ஏழை எளியோர், ஆதரவற்றோருக்கு, அன்னதானப் பணியினை அவர் பார்த்து வந்துள்ளார். எனத் தெரிகின்றது. அதன் பின்னர், கும்ப கோணம் பகுதிக்குச் சென்றுவிட்டார்.
அங்கு அவர் மறையும் போது, தமக்கு, 4 இடங்களில் மடம் எழுப்ப வேண்டும் எனத் தெரிவித்ததாகவும், அந்த விதத்தில் அங்கிருந்து மண் எடுத்து வந்து, 1902ஆம் ஆண்டில் இந்த மடம் சிவகங்கையில் எழுப்பப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை தவிர, கும்பகோணம், ராமநாதபுரம் வட்டத்தில் தெற்குத் தரவை மற்றும் ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டின் எதிர்புறம், வாடிப்பட்டி ஆகிய இடங்களில் இந்த மெளன சித்தருக்கு ஆலயங்கள் எழுப்பப் பட்டுள்ளன. 1965 ஆம் ஆண்டு வரை சிவகங்கையில் வக்கீல் குமாஸ்தாவாக இருந்த திரு முத்திருளப்ப பிள்ளை தனது காலம் வரையில் அன்னதானம் செய்து வந்துள்ளார்.
இந்த மடத்திற்கு கடந்த 1966ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர், இன்று (10.7.2009) தான் இந்த மடத்தில் அந்தப் பழைய மந்திரச் சொல்லான அரஹர ஜா..பா ஜா ஜா..ஜீ வோ ஜா..பே ஜீ வோ.." என்ற சொல்லினை கேட்கின்றோம். என்று பலரும் பலவிதமாக தாங்கள் கேள்விப் பட்டதையும், தாங்கள் அந் நாளில் குழந்தைகளாக இருந்தபோது, இதே மடத்தில் பிரார்த்தனையில் கலந்து கொண்டதையும் நினைவு கூர்ந்தார்கள்.
இந்த மெளன சித்தர் அருள் பீடத்தில் சன்மார்க்க சங்கத்தில் தருமச் சாலை 10.7.2009 அன்று துவங்கப் பட்டுள்ளது.